எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

காற்று, மழையினால் நாட்டின் சில பகுதிகளில் கடும் சேதம் – நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அரசு பணிப்பு

021009monsoon-rains.jpgநாட்டின் சில பகுதிகளில் கடும் காற்று மற்றும் மழை காரணமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 500 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் நேற்று தெரிவித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான வசதிகளை உடனுக்குடன் வழங்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்டீன் நேற்று தெரிவித்தார்.

சேதமடைந்த வீடுகள் தொடர்பாக மதிப்பீடு செய்து துரிதமாக கையளிக்குமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அமைச்சின் செயலாளர் பணிப்புரை வழங்கியுள்ளார். கடும்காற்று காரணமாக புத்தளம் நகரமே கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுமார் 442 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு 1070 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

இதேவேளை வெள்ளம் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர கம்பஹா, இரத்திபுரி, களுத்துறை, காலி, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலும் காற்று மழை காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட புத்தளம் பகுதிகளை நேற்று (4) நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சின் செயலாளர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை மரம் வீழ்ந்ததால் கொல்லப்பட்ட காலியைச் சேர்ந்த ஐயவரினதும் இறுதிக் கிரியைகளுக்காக 15 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் நகரில் கடைகள் உட்பட 442 வீடுகள் சேதமடைந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. புத்தளம் கிழக்கில் 218 வீடுகளும், மரைக்கார் வீதியில் 53 வீடுகளும் பழைய ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் 41 வீடுகளும் பெரிய குடியிருப்பு வீதியில் 133 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக புத்தளம் பிரதேச செயலாளர் கூறினார்.

கண்டியில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பலத்த காற்றின் காரணமாக மரக்கிளைகள், மரங்கள் விழுந்துள்ளதால் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதோடு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

கடும் காற்று காரணமாக கண்டி பகுதியில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள், மாட்டுப் பட்டிகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

சீரற்ற மழை காரணமாக மரக்கறி பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் மழையுடன் கூடிய காற்றின் காரணமாக தெல் தோட்டை பிரதேசத்தில் 24 வீடுகளும் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் மூன்று லயன்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெல்தோட்டை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதனால் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தெல்தோட்டை கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மாத்தளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய கடும் காற்று காரணமாக பாரிய மரங்கள் பல சரிந்து வீழ்ந்துள்ளன.

பல மரங்கள் மின்சார கம்பங்களில் வீழ்ந்துள்ளதால் மாத்தளை மாவட்டத்தில் பல இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு துரிதமாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடும் காற்று காரணமாக கலவான தமிழ் வித்தியாலய கட்டடத்தின் மீது மரம் ஒன்று சாய்ந்து வீழ்ந்ததில் பாடசாலை கட்டடம் சேதமடைந்துள்ளது.

379 குடும்பங்களை வவுனியாவில் மீளக்குடியமர்த்த துரித நடவடிக்கை – அமைச்சர் ரிஷாட்

badi000000.jpgவவுனியா மாவட்டம் சாளம்பைக் குளத்தில் 379 குடும்பங்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்குமாறு மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சாளம்பைக் குளத்திலிருந்து கடந்த 90 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த 400 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள இக்கிரிகொல்லாவை என்ற இடத்தில் தற்காலிகமாக தங்கி வாழ்கின்றனர்.

இவர்களுள் முதற்கட்டமாக 21 குடும்பங்கள் அண்மையில் சாளம்பைக் குளத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். இக்கிரிகொல்லாவையில் தங்கியிருக்கும் ஏனைய 379 குடும்பங்களையும் அடுத்த மாதத்திற்கு முன்னதாக அவர்களது சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்துவதே அமைச்சரின் விருப்பமாகும். அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் முகமாக அமைச்சர் தலைமையில் விசேட கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசம்பந்தர், பிரதேச செயலாளர், பொலிஸ் அதிகாரிகள் உட்பட மீள்குடியேற்றத்துடன் சம்பந்தப்பட்ட பல அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

இதேவேளை இக்கிரிகொல்லாவையில் தற்போது இடம்பெயர்ந்து வசித்து வரும் மக்கள் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று முதல் தடவையாக தமது சொந்த இடமான சாளம்பைக்குளத்துக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தின்போது சாளம்பைக்குளத்திலிருக்கும் 10 குடிதண்ணீர் கிணறுகளையும் சுத்திகரிக்குமாறும் மின்சார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் ரிசாட் மேலதிக அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

படையினருக்கு எதிராக குற்றம் சுமத்தும் நாடுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்குமா? – ஜனாதிபதி கேள்வி

290909mahinda.jpgஇலங் கையின் பாதுகாப்பு படையினருக்கு எதிராகப் பாலியல் குற்றம் சுமத்தும் நாடுகள் அக்குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் நிரூபிக்குமா என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கேள்வி எழுப்பினார். எமது பாதுகாப்பு படையினர் ஒருபோதும் பாலியல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அல்லர்.  இது உறுதியான விடயம். அதனால் இக்குற்றச்சாட்டைச் சுமத்தும் நாடுகள் அதனை விபரமான ஆதாரங்களுடன் வெளியிடவேண்டும் என்று சவால்விடுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாத்தறை நகரில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய ஜனாதிபதி;  எமது படையினர் பாலியல் மோசடியில் ஈடுபடவில்லையெனவும் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் படையினர் மீது குற்றஞ் சுமத்த பொருத்தமற்றது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

நாட்டை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் நம் நாட்டைப் பற்றிய தவறான கூற்றுக்களை சர்வதேச நாடுகள் வெளியிடும் இவ்வேளையில் தென் மாகாண மக்கள் தம் வாக்குப் பலத்தின் மூலம் இதற்குப் பதிலலிக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். முப்பது வருடகால பயங்கரவாதம் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியது.  சகல மக்களினதும் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அதன் விளைவுகளை எவரும் மறந்து விடக்கூடாது. நாம் குறுகிய இரண்டரை வருடகாலத்தில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதி சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளோம்.

கடந்த காலங்களை மறந்தவர்களே இந்த அமைதிச் சூழ்நிலைக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் அநாவசியமான பிரச்சினைகளை கிளப்பி வருகின்றனர். மக்கள் இவர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. படையினரினால் எவ்வித பாலியல் மோசடியும் நடத்தப்படவில்லை. எமது படையினர் மனிதாபிமானமாகவே சகல சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டு வந்துள்ளனர்.

தமது உயிரை பணயம் வைத்து நாட்டைப் பாதுகாத்த படைவீரர்கள் பெண்களை பாலியல் மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டை இன்று சில சக்திகள் முன்வைத்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராக அரசாங்கத்துடனும் படையினருடனும் எமது நாட்டு மக்கள் உள்ளனர் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை யுண்டு. நாடு முழுவதிலும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தற்போது நடைபெறுகின்றன. ஒரே சமயத்தில் ஐந்து துறைமுகங்களின் நிர்மாணப் பணிகள் நடைபெறுகின்றன. மின்சாரம், கல்வி, சுகாதாரத் துறையில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன.

கிழக்கிலும் தெற்கிலும் அபிவிருத்திப் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் அபிவிருத்திப் பயணத்தை மேலும் வலுப்படுத்த தென் மாகாண மக்கள் இத் தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களித்து தமது பூரண ஆதரவை வழங்க வேண்டும். வெற்றிலைக்கு வாக்களிக்கும் அதேவேளை மூன்று விருப்பு வாக்குகளிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஆப்ரிக்காவுக்கு குப்பையான ஆன்மிக சிந்தனைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக போப் பெனடிக்ட் எச்சரிக்கை

051009pope.jpgஆப்ரிக் காவில் வேறுவகையான காலனித்துவம் உருவாகி வருவதாக போப் பெனடிக்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்ரிக்க பிஷப்புகளின் மூன்று வார கால மாநாட்டை ஆரம்பித்து வைத்த போப் பெனடிக்ட் அவர்கள், அரசியல் காலனித்துவம் முடிவடைந்து விட்டாலும், வளர்ச்சியடைந்த நாடுகள் குப்பைக்கு ஈடான ஆன்மிக சிந்தனைகளை ஆப்ரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறியுள்ளார். அத்தோடு மத அடிப்படைவாதத்திற்கு எதிராகவும் அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ரோமின் செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் விசேஷ பிரார்த்தனையுடன் இந்த மாநாட்டை போப் பெனடிக்ட் ஆரம்பித்து வைத்தார். இந்த மாநாட்டில் ஆப்ரிக்காவின் சமுதாய மற்றும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து ஆராயப்படும்.

புதையுண்ட இந்தோனேசியா கிராமம்- அனைவரும் பலி

01-indonesia.jpgகடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்தோனேசியாவில் ஒரு கிராமமே சேற்றில் புதைந்து, மக்கள் அனைவரும்பலியாயிருப்பது தெரியவந்துள்ளது. இந்தோனேசியாவை கடந்த வாரம் மிகப்பெரிய நிலநடுக்கம் தாக்கியது. இதனால் சுமத்ரா தீவு பகுதியே ஆட்டம் கண்டது. கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை இடிந்து விழுந்ததில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகிவிட்டனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இவர்களுடன் ஜப்பானிய குழுவினரும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமத்ரா தீவு தலைநகர் படாங் பகுதியில் இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்ட மீட்பு குழுவினர் அடுத்ததாக அங்கிருந்து 2 கிமீ தூரத்தில் இருக்கும் லுபக் லாவே உட்பட மேலும் 2 கிராமங்களில் மீட்பு பணிகளுக்காக சென்றனர். இந்த மூன்று கிராமங்களுக்கும் அருகில் ஒரு எரிமலை உள்ளது. அங்கு சென்ற மீட்பு படையினர் லுபக் லாவே என்ற கிராமமே ஒரு பெரிய சேற்றில் புதையுண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அந்த கிராமத்தில் இருந்த 200 பேரும் பலியாகிவிட்டனர். மேலும், நிலநடுக்கத்தன்று நடந்த திருமணத்தில் பங்கேற்க வந்த சுமார் 40க்கும் மேற்பட்ட மக்களும் இறந்துவிட்டனர். சேற்றின் மீது வேரோடு பிடுங்கப்பட்டு புதையுண்ட சில மரங்களின் பாகங்கள், சில பொம்மைகள் ஆகியவை மிதக்கின்றன. இது குறித்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் பாபி ஹெரியன்டோ என்பவர் கூறுகையில், நாங்கள் மூன்று அடி ஆழத்துக்கு சேறுகளை நீக்கிவிட்டு இந்த உடல்களை மீட்டோம். இதற்கு சுமார் மூன்று மணி நேரம் தேவைபட்டது. தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்

இது போல் சுமத்ரா தீவில் மேலும் சில இடங்களில் சேற்றுசரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு சேதம் சிறியளவில் தான் இருக்கிறது. பயப்பட தேவையில்லை என்றார்.

கிளிநொச்சி இராணுவ தலைமை வளவுக்குள் இடம்பெற்றது விபத்தே! இராணுவப் பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpgநேற்றுக் காலை கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினரின் 58 வது படைப்பிரிவின் முகாமில் பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சியில் நேற்றுக்காலை இராணுவ தலைமை அலுவலக வளவுக்குள் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் ஒரு விபத்தென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

இக் குண்டுவெடிப்பால் கிளிநொச்சி அதிர்ந்ததாகக் கூறப்படுகிறது. புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்த கன்டேனர் வாகனத்தில் திடீரென ஏற்பட்ட தீயினாலேயே இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது ஒரு விபத்தெனவும் இதனால் எந்தவொரு உயிர் ஆபத்தோ சேதமோ ஏற்படவில்லையெனவும் பிரிகேடியர் மேலும் கூறினார்.

தென்னிந்தியாவில் மழையால் 200 க்கும் அதிகமானவர்கள் பலி

051009andhra.jpgதென்னிந் தியாவில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இதுவரையில் 200 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தாங்கள் எண்ணுவதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிராமங்கள் முற்றாக அடித்து செல்லப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கானவர்கள் வீடின்றி தவித்து வருகின்றனர். ஆந்திர பிரதேசத்தில் மட்டும் சுமார் இரண்டரை லட்சம் பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

பெருமளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியிருப்பதால் பயிர்கள் நாசமாகியுள்ளன. மீட்கட்டமைப்புக்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் தேவையாக இருக்கும் என மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக குடியிருப்பு தினம் இன்று

260909house_new.jpgஉலக குடியிருப்பு தினம் இன்று (திங்கட்கிழமை) சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

“எமது நகரத்தின் எதிர்காலத்தைத் திட்டமிடுவோம்” என்ற தொனிப் பொருளில் இந்த வருடத்திற்கான உலக குடியிருப்பு தினம் நினைவு கூரப்படுகின்றது.

இலங்கையில் குடியிருப்பு தினத்தை அனுஷ்டிப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சு மேற்கொண்டுள்ளது.

உலக  குடியிருப்பு தினத்தின் நிமித்தம் வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சு நடாத்திய கட்டுரை மற்றும் சித்திரம் வரைதல் தமிழ் மொழி மூலப் போட்டிகளில் வவுனியா, நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள பாடசாலை மாணவ, மாணவிகளே முதலாம், இரண்டாம் மூன்றாம் இடங்களை வெற்றிபெற்றுள்ளனர்.

இவர்களுக்கான பரிசில்கள் உலக குடியிருப்பு தினமான இன்று 5ம் திகதி வழங்கப்படவிருக்கின்றது.

உலக குடியிருப்பு தினத்தின் தேசிய மாநாடு நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் அமைச்சர்கள் பேரியல் அஷ்ரஃப், தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் இன்று நடைபெறுகின்றது.

இவ்வைபவத்தில் மேற்படி மாணவ, மாணவிகளுக்குப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. தமிழ் மொழி மூலக் கட்டுரைப் போட்டியில் கனிஷ்ட பிரிவில் தர்மபுரம் நலன்புரி நிலையத்தைச் சேர்ந்த பிரிமேகன் அபிலாஷா முதலாமிடத்தையும் சிரேஷ்ட பிரிவில் தர்மபுரம் நலன்புரி நிலையத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் அனித்தா முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு பத்தாயிரம் ரூபாவும் வெற்றிக் கிண்ணமும் சான்றிதழும் வழங்கப்படும்.

வெளிநாடுகளுக்கு படகு மூலம் ஆட்களை அனுப்பிய மூவர் கைது

வெளி நாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் ஆட்களை அனுப்பி வந்ததாகக் கூறப்படும் மூவர் நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே சிலாபத்தில் வைத்து இம் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

தபால் நிலையங்களில் வாக்காளர் அட்டைகள்

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கு இன்று (5) முதல் தேர்தல் தினம் வரை தபால் நிலையங்களினூடாக வாக்காளர் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது. வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த 23 ஆம் திகதி முதல் அக்டோபர் 2 ஆம் திகதி வரை இடம்பெற்றன.