மியன்மார் அரச சமாதான மற்றும் அபிவிருத்திச் சபை ஒன்றியத்தின் தலைவரும், சிரேஷ்ட உயரதிகாரியுமான தன் சூவி இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று, மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் வருகை தருகின்ற தன் சூவியை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா தலைமையிலான வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்பர். இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.
எழுத்தாளர்கள்
எழுத்தாளர்கள்
யாழ் நகரிலிருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படக் கூடிய முந்திரிகை உட்பட்ட விவசாய விளைபொருட்களின் விலைகள் உயர்ந்தள்ளது. ஏ9 பாதை திறக்கப்பட்டதால் கொழும்புச் சந்தைக்கான வாய்ப்பினை யாழ் விவசாயிகள் பெற்றுள்ளனர். இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் விளையும் பொருட்களுக்கான சந்தை யாழ்ப்பாணத்திலேயே முடக்கப்பட்டதால் அவற்றின் விலை மிகுந்த வீழ்ச்சியைக் கண்டிருந்தது.
யுத்த காலத்தில் முந்திரிகை கிலோ 30 ரூபாவுக்கும் விற்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது கொழும்பிற்கு கொண்டு செல்லக் கூடியதாக இருப்பதால் முந்திரிகை கிலோ 200 ரூபாவிற்கு விற்கப்படுவதாகவும் யாழ் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். அதே போல் கொழும்பில் இருந்து பொருட்கள் ஏ9 பாதையூடாக வர ஆரம்பித்துள்ளதால் யாழ்ப்பாணத்தில் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதாகவும் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாகவும் அவ்வர்த்தகர் தெரிவித்தார்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வீதித் தடைகள் நீக்கப்பட்டு ஏ9 பாதை ழுழுமையாகத் திறக்கப்பட்டாலேயே முழுவீச்சான பொருளாதாரப் பயனை யாழ் மக்கள் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
”மடுமாதா அந்த அன்புக்குரிய மண்ணை காண்காணிக்க வேண்டும் என்று கேட்டு வணங்குகிறேன்” என போப் பெனடிக்ற் தனது பொது வழிபாட்டு தின முடிவில் தெரிவித்துள்ளார். இலங்கை நிலவரம் தொடர்பாக நவம்பர் 11ல் போப் பெயடிக்ற் குறிப்பிடுகையில் யுத்தம் முடிவடைந்து ஆறு மாதத்திற்குப் பின் இலங்கை வழமைநிலைக்குத் திரும்புவதாகவும் ஆனாலும் அங்கு செய்யப்படுவதற்கு நிறைய வேலைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முழுமையாக மனித உரிமைகளை மதித்து அரசியல் தீர்வை எட்டுவதை நோக்கி அனைத்துப் பிரஜைகளும் செயற்பட வேண்டும் என்றும் போப்பாண்டவர் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைக்கான மனிதத்துவ பொருளாதார தேவைகளை சர்வதேச சமூகம் வழங்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ள போப்பாண்டவர் அந்த மண்ணில் உள்ள அன்புக்குரிய மக்களை காக்கும் மடுமாதாவை தான் வணங்குவதாகத் தெரிவித்தார். http://www.catholicnewsagency.com/new.php?n=17663
வரும் ஜனவரிக்குள் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்ற உறுதியை இலங்கை அரசு வழங்கிய போதும் இன்னமும் இரண்டு லட்சம் மக்கள் வரை முகாம்களிலேயே தடுத்த வைக்கப்பட்டுள்ளனர். வெளியேற அனுமதிக்கப்பட்டவர்களும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர அனுமதிக்கப்படவில்லை. அரசாங்கம் தனது வாக்குறுதியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
யாழ் மற்றும் வவுனியா நகரங்களை அண்மித்துள்ள பகுதிகளில் வீட்டு வாடகை சடுதியாக உயர்ந்துள்ளது. அண்மைக் காலமாக வன்னி முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு வருவதால் இருப்பிடங்களுக்கான தேவை சடுதியாக அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் வீட்டு வாடகைகளும் உயர்ந்துள்ளது. யாழ், வவுனியா நகரங்களில் ஒரு வீட்டை வாடகைக்குப் பெறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை முன்கட்டணம் கேட்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ் நகரில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் நிலையில் அங்குள்ள வீடுகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உறவினர்களின் கவனிப்பில் விடப்பட்டு உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இருப்பிட நெருக்கடிக்கு இதுவும் காரணமாக அமைந்துள்ளது.
யாழ் மற்றும் வவுனியாவில் உறவினர்கள் உள்ளவர்கள் குறுகிய காலத்திற்கு தங்கள் உறவுகளுடன் தங்கியிருக்க முடியுமாயினும் ‘எவ்வளவு நாட்களுக்கு இப்படி மற்றயவர்களின் வீட்டில் இருக்க முடியும்’ என்கின்றனர். தற்போது பிறந்துள்ள கைக் குழந்தையுடன் யாழ் வந்துள்ள ரவி குடும்பத்தினர் தாங்கள் தனது சகோதரியுடன் இருப்பதாகவும் ஆனால் ஒரு வீடு பார்த்துச் செல்லவே விரும்புவதாகவும் கூறினார். கிளிநொச்சி வட்டக்கச்சியில் வாழ்ந்த இவர் அங்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதும் அங்கு சென்றுவிடுவோம் எனத் தெரிவித்தார். அரசாங்கம் உதவிப் பணமாக வழங்குவது வீட்டு வாடகைக்கே போதாத நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
வவுனியாவில் தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்று வாழும் மற்றுமொருவர் தெரிவிக்கையில் வாடகைக்கு வீடு எடுத்துச் செல்ல தங்களால் முடியாததால் தனது உறவினர் வீட்டு முற்றத்தில் ஒரு கொட்டிலைப் போட்டு இருக்கப் போவதாகத் தெரிவித்தார்.
இலங்கை அரசின் ‘வடக்கின் வசந்தம்’ திட்டம் பற்றிய விவரணம் வெளிவந்துள்ளது. வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய புள்ளி விபரங்களுடன் இது வெளியாகி உள்ளது. (முழுமையாகப் பார்வையிட http://www.np.gov.lk/pdf/development.pdf ) ‘கிழக்கின் உதயம்’ திட்டம் அறிவிக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. தற்போது 180 நாள் மட்டுப்படுத்தப்பட்ட ‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகின்றது.
வடக்கு, கிழக்கில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதும் உள்நாட்டு யுத்தத்திற்கான காரணிகள் நீக்கப்படவில்லை என்பதை உலக வங்கி ஒக்ரோபர் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமாக இருந்த இனமுரண்பாட்டுக்கு தீர்வு காணாதவரை நீண்டகால உறுதித்தன்மையை தக்க வைக்கவோ மூலதனத்தை கவரவோ முடியாது என உலக வங்கி அறிக்கை தெரிவித்து இருந்தது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதே ஏற்புடைய செயன்முறையாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அரிய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவிக்கும் உலக வங்கி அறிக்கை இச்சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய அரசியல் குற்றச்சாட்டுக்களை திருப்திப்படுத்துகின்ற தீர்வை முன் வைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி இருந்தது.
ஆனால் அடுத்த தேர்தல் முடியும் வரை அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கே இடமில்லை என ஆளும் கட்சி அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் அரசியல் தீர்வை பின்னடிக்கலாம் அல்லது கைவிடலாம் என்றளவில் அரசின் தற்போதைய நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் நம்புகின்றன. ஆனாலும் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கின்ற அளவுக்கு இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் பலமான நிலையில் இல்லை. இதனால் அந்த அபிவிருத்தியில் பங்கெடுப்பதற்கு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணியில் நின்ற உள்ளுராட்சி உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர். இந்த இணைவு எதிர்காலத்தில் இவ்வாறான பல இணைவுகள் ஏற்படப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறிவித்துள்ளது.
இவ்வாறான இணைவுகள் தமிழ் மக்களின் தனித்துவ அரசியலை தவிர்க்க முடியாமல் பலவீனப்படுத்தப் போகின்றது. இதைத் தடுக்கின்ற அல்லது மட்டுமப்படுத்துகின்ற அரசியல் பலம் காலத்திற்குக் காலம் தோண்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் வரையான தமிழ் தேசியத் தலைமைகளாலேயே அழிக்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் இத்தலைமைகள் தங்கள் போராட்டத்தினூடாக தமிழ் மக்களுக்கு வாழ்வுக்குப் பதிலாக அழிவையே வழங்கி உள்ளனர். தமிழ் தேசியத் தலைமைகளிடம் உள்ள அரசியல் வறட்சி அவர்களை தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தி உள்ளது. அதனை மிகத்திட்டமிட்ட முறையில் பயன்படுத்திக் கொள்ளும் அரசு தமிழ் தேசியத் தலைமைகளுக்கு மாற்றீடாக தனது தலைமையை முன்வைக்கின்றது.
வன்னி முகாம் மக்களை சென்று பார்ப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்கப்படவில்லை. அதற்காக அவர்கள் போராடவும் இல்லை. அவர்களில் சிலர் பல மாதங்களின் பின்னர் தற்போது தான் இலங்கைக்கே சென்றுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல கொழும்பு தமிழ் கட்சிகள் கூட அனுமதிக்கப்படவில்லை. ஆளும் அரசு தான் மட்டுமே அந்த மக்களில் அக்கறைகொண்டுள்ளதான தோற்றப்பாட்டை உருவாக்குகின்றது. தனக்குள்ள அனைத்து வழங்களையும் பயன்படுத்தி அதனை நிறுவ முற்பட்டுள்ளது. மே 18 வரை அரசியல் வன்முறைமூலம் தனது அரசியல் ஆதிக்கத்தை நிறுவிய அரசு தற்போது தமிழ் மக்கள் மீது கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவ முற்பட்டுள்ளது. வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டம் கூட தெற்கில் உள்ள அமைச்சர்களின் தலைமையிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 13 பேர் கொண்ட யாழ் அபிவிருத்தியில் மலையக அமைச்சர் ஒருவரே தமிழராக உள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய அடிப்படை ஜனநாயக விழுமியங்களையே இல்லாதொழித்த நிலையில் அரசு தனது கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு எவ்வித தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.
சினிமாப் படங்களில் எல்லாம் நடந்து முடிந்தபின் பொலிஸ் ஜீப் அல்லது கார் வருவது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மார்க்சிய அறிஞர்களும் வெளியே தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர். மே 18 வரை மௌனம் காத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மார்க்ஸிய அறிஞர்களும் வே பிரபாகரன் எரிக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடத்தில் புல்லும் முளைத்தபின் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள்’ என்ற தங்கள் அறிவியல் விலாசத்தை எடுத்துவிடுகின்றனர்.
மிகப் பெரும் அவலத்தைக் கடந்து வந்த மக்களுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக செல் தாக்குதல்களுக்குள்ளும் குண்டுவெடிப்புகளுக்குள்ளும் வாழ்ந்த மக்களுக்கும் வழங்குவதற்கு தமிழ் தேசியத் தலைமைகளிடம் எதுவும் இல்லை. மீண்டும் குண்டுகள் வெடிக்கும் என்று எச்சரிப்பதைத் தவிர. ஓரிரு குண்டுவெடிப்புகளைச் செய்து தங்கள் தேசியத் தலைமையைக் காப்பாற்றுவதன் மூலம் தங்கள் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு சில புலம்பெயர் சக்திகள் முனைகின்றன. இது ஏற்படுத்தப் போகும் அரசியல் விளைவு பற்றிய அக்கறையிலும் பார்க்க தங்கள் இருப்பை உறுதிப்படுத்தி தங்கள் பொருளாதார நலன்களைப் பேணிக் கொள்வதில் அவர்கள் மிகுந்த அக்கறையாக உள்ளனர். மாவீரர் தினத்தை குறிக்கும் வைகயில் ஓரிரு குண்டுவெடிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான அழுத்தங்களை புலம்பெயர் தமிழ் தேசிய ஆதரவு சக்திகள் வழங்கிவருவதை உணர முடிகிறது.
தமிழ் தேசியத்தின் பலம் இலங்கை அரசின் நேரடியான ஒடுக்குமுறையை வைத்தே கட்டமைக்கப்பட்டது. தமிழ் தேசியம் பலம்பெறுவதற்கு தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட வேண்டும், தமிழ் பெண்கள் நூற்றுக் கணக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இரத்தமும் சதையும் இல்லாமல் தமிழ் தேசியத்தால் நின்று பிடிக்க இயலாது. இதனையே மே 18க்குப் பின் காணக் கூடியதாக உள்ளது.
இலங்கை அரசு மேற்கொள்கின்ற நுண் அரசியலை மறைமுகமான இனச்சுத்திகரிப்பை கண்டுகொள்ளவோ எதிர்கொள்ளவோ தமிழ்த் தேசியம் தவறிவிட்டது. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் ‘வடக்கின் வசந்தம்’ பாலம் கட்டினால் ‘தமிழ் தேசியம்’ குண்டு வைத்து தகர்க்கும் என்பதுதான். அந்த மக்களுக்கு தோளோடு தோள் கொடுக்காமல் ஒப்புக்கு மாரடிக்கும் போராட்டங்களும், ஆபத்தில் மக்களுக்கு உதவாத கோசங்களும் அரசியல் வறட்சியின் வெளிப்பாடாகவே உள்ளது. ஊரில் சொல்வார்கள் ‘பத்துப் பிள்ளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக் காட்டினாள்’ என்று அது மாதிரியான நிலையிலேயே புலத்துப் போராட்டங்கள் அமைகின்றன.
பிரபல நாடகாசிரியரும், மேடை மற்றும் சினிமா நடிகருமான ஹென்றி ஜயசேன நேற்று காலமானார். அவருக்கு வயது 79. களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று மாலை உயிரிழந்தார்.
பிரபல திரைப்பட இயக்குநர் லெண்டர் ஜேம்ஸ் பீரிஸின் ‘கம்பெரலிய’ திரைப்படத்தில் பியல் என்ற பிரதான பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தமை இவருக்கு மிகுந்த புகழை பெற்றுத்தந்தது.
17 ஆயிரத்து 174 பட்டதாரிகள் அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்பட விருப்பதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது. இதில் 14 ஆயிரம் பேர் ‘ஜன சபா’ செயலாளர்களாகவும் 3 ஆயிரத்து 174 பேர் கலைப்பட்டதாரி ஆசிரியர்களாகவும் நியமனம் பெறவிருப்பதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
நிதியமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மூவாயிரத்து 174 கலைப்பட்டதாரி ஆசிரியர்களும் எதிர்வரும் ஜனவரி முதல் ஆசிரிய சேவையில் நியமனம் பெறவுள்ளனர். இதே வேளை ‘ஜன சபா’ செயலாளர்களை விரைவில் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.
‘ஜன சபா’ செயலாளர் பதவி குறித்து அமைச்சின் முகாமைச் சேவையாளர் எல். பி. ஜயம்பதி விளக்கமளிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளில் மிகவும் திறமைசாலிகளையே நாம் இந்தப் பதவியில் சேர்த்துக் கொள்ளவுள்ளோம். இவர்கள் செயலாளர்களாக மட்டுமின்றி அந்த பிரதேசத்துக்குரிய தலைவரைப் போன்றும் செயற்பட வேண்டும்.
பிரதேச செயலாளர் பிரிவின் உட்கடமைப்பு வசதிகள், பொருளாதாரம், விவசாயம், கலாசாரம், விளையாட்டு ஆகிய துறை களையும் மட்டுமின்றி போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதுடன் சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட சகல அம்சங்களையும் கையாளக் கூடியவராக இருக்க வேண்டும்.
‘ஜன சபா’ செயலாளர்களாக நியமிக் கப்படுவோருக்கு 15,250 ரூபா தொடக்கம் 25,965 ரூபா வரையிலான தொகை அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும். இவர்களது பதவி நிரந்தரமானது.
அத்துடன் ஓய்வூதியமும் கிடைக்கும் அரச ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளையும் இவர்கள் பெறமுடியும். சாதாரணமாக எட்டு மணித்தியாலங்கள் மட்டும சேவை புரிபவராகவன்றி 24 மணித் தியாலங்களும் பொதுமக்களின் தேவையை கருத்திற் கொண்டு செயற்படுபவர்களையே நாம் இப்பதவிக்காக எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதானால் அபிவிருத்தியை ஆரம்பிக்க வேண்டுமென மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டதற்கமைய கிராமங்களை கட்டியெழுப்புவதற்கு விசேடமாக இப்பதவியை பட்டதாரிகளுக்கு வழங்க தீர்மானித்திருப்பதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு அரசாங்க பல்கலைக் கழகங்களில் இருந்தும் பட்டம் பெற்ற 22 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இரு பாலாரும் இப்பதவிக்காக விண்ணப் பிக்கலாம். தெரிவு செய்யப்படுவோருக்கு தாம் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவிலேயே நியமனம் வழங்கப்படுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமாயின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் சேவையில் ஈடுபட படைவீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
அவசரகால சட்டத்தின் கீழ், நாட்டின் இயல்பு நிலையை சீராக பேணுவதற்கு அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் படை வீரர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையிலேயே முப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் நாணயக்கார கூறினார்.
தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பிரிகேடியர் மேற் கண்டவாறு கூறினார்.
இலங்கை மின்சார சபையின் இயந்திரங்களை இயக்குதல், பெட்ரோல் பெளசர்களை ஓட்டுதல் போன்ற சேவைகளை படையினர் முன்னெடுப்பர். இதற்கு முன்னரும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் படையினர் மேற்படி சேவைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். துறைமுக அதிகார சபை, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை ஆகியவற்றின் தொழிற் சங்கங்கள் சில ஒன்றிணைந்து சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை நேற்று முதல் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் தீவிரமடைந்ததையடுத்து நேற்று முதல் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
நேற்றுக் காலை இடம்பெற்ற மோதல்களில் ஐவர் காயமுற்றுள்ளதுடன் இவர்களில் மூவர் ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் மேலும் இருவர் களுபோவில வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக மாணவர் களுக்கிடையில் இடம்பெற்ற சச்சரவுகள் நேற்றுக் காலை உக்கிரமடைந்ததையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்தை மூடிவிடத் தீர்மானித்துள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரண கிரா மங்களுக்கு அவுஸ்திரேலியா, தென்னா பிரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட குழுவினர் நேற்றுக் காலை தனித்தனியாக விஜயம் செய்தனர்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள், மீள்குடியேற்றம் பற்றி நேரில் அவதானிக்கும் பொருட்டு இவர்களுடைய விஜயம் அமைந்திருந்ததென செட்டிகுளம் பிரதேச செயலக சிரேஷ்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்புபடை உயர் அதிகாரிகளும் சிவில் அதிகாரிகளும் நிலைமைகளை விளக்கினார்கள்.