எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

எனது கணவருக்கு செய்த பாவத்தின் பழியை பொன்சேகா அனுபவிக்கிறார் – மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி

mrs-pannipitiya.jpgசரத் பொன்சேகா எனது கணவரை நியாயமற்ற வகையில் இராணுவத்திலிருந்து ஒதுக்கியபோது மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு பெண்ணாக தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்தேன். அதற்காக ஒவ்வொருவரிடமும் முறையிடப் போகவில்லை. பெண்கள் அமைப்புக்களின் ஆதரவைத்திரட்ட முனையவில்லை. கடவுளிடம் மட்டுமே முறையிட்டேன்.

ஆனால், எனது கணவருக்கும் ஏனையோருக்கும் செய்த பாவத்தையும் பழியையும் இன்று சரத் பொன்சேகாவும் அவரது மனைவி அனோமாவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாகவிருந்த இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி அச்சினி இரோமா தெரிவித்துள்ளார்.

எனது கணவரும் சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்தவர்தான். அநாமதேய அவதூறு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு எனது கணவரை இராணுவத்திலிருந்து விலக்கினார். சரத் பொன்சேகாவின் மனைவியுடன் மிகவும் நெருங்கிய உறவுகளை நான் வைத்திருந்த போதும் எனது கணவருக்கு இவ்வாறு நடந்தது.

ஆனால் இன்று சரத் பொன்சேகாவுக்கு இப்படி நடந்தவுடன் அவரது மனைவி ஒவ்வொருவரிடமும் முறையிடுவதும் பெண்கள் அமைப்புக்களை ஆதரவு வழங்கக்கோரி அழைப்பு விடுப்பதுமாக இருக்கிறார். முன்செய்த பாவங்கள் பலித்துக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா இன்று தண்டனை பெறும் போது அவரது பிள்ளைகள் பெரியவர்களாக இருக்கிறார்கள். எனது கணவர் விலக்கப்படும் போது எனது மூத்த பிள்ளைக்கு 12 வயது. ஏனைய இரண்டு பிள்ளைகளும் 4 வயதையும், 5 வயதையும் உடையவர்களாக இருந்தனர். கணவர் கைது செய்யப்பட்ட போது இந்தக் குழந்தைகளுடன் தனிமைப்படுத்தப் பட்டேன்.

குழந்தைகளுடன் வீதியிலிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு உதவியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அவரது மனிதாபிமானம், காருண்யம் என்பவற்றால்தான் அதிக பெரும்பான்மை வாக்குகளால் வென்று மீண்டும் ஜனாதிபதியாகி இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தைப் பற்றி பிழையான தகவலை பரப்பி வருகிறார் கோர்டன் வைஸ் – அரசாங்கம் கூறுகிறது

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தைப்பற்றி கொழும்பிலுள்ள ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் பிழையான தகவலைப் பரப்புவதாக அரசாங்கம் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.”அது முற்றுமுழுதாக பிழையான தகவல்” என்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல டெய்லிமிரலுக்கு கூறியுள்ளார்.

கடந்த வருடம் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள்கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்று ஏ.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்ததன் மூலம் சர்ச்சையை கோர்டன் வைஸ் கிளறிவிட்டிருக்கிறார்.

இந்த மாதிரியாக அதிக தொகையில் பொது மக்களின் மரணங்கள் சம்பவித்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் போதிய விபரங்கள் அந்தத் தருணத்திலும் அதற்கு பின்னரான மாதங்களிலும் வழங்கப்பட்டிருந்ததாக ஹுலுகல்ல கூறியுள்ளார்.பொதுமக்களை புலிகள் எவ்வாறு இம்சித்தனர் என்பது பற்றி ஒளிநாடா மூலம் பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கக்கூடியதாக இருந்தது. பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை நாம் எவ்வாறு உறுதிப்படுத்தினோம் என்பதையும் ஒளிநாடா மூலம் காண்பிக்கக் கூடியதாக இருந்தது எனவும் ஹுலுகல்ல கூறியுள்ளார்.

நம்பகமான வட்டாரங்களிலிருந்து தான் தகவலைப் பெற்றிருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் மோதல் வலயத்திற்குள் பிரசன்னமாகி இருந்தது என்றும் கோர்டன் வைஸ் கூறியிருந்தார். அத்துடன் அந்த வட்டாரங்கள் தமிழ் பொதுமக்களோ அல்லது மோதலில் ஈடுபட்டவர்களோ அல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த 8 மாதங்களில் எந்தவொரு அமைப்புகளும் இவ்விதம் தெரிவித்திருக்கவில்லை என்று ஹுலுகல்ல தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பகுதிகளுக்கு பல வெளிநாட்டு, உள்ளூர் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆதலால் இதில் ஏதாவது உண்மை இருந்தால் எவரும் இதனைப் பற்றி கதைப்பதற்கு 8 மாதங்கள் வரை காத்திருக்க முடியாது. எந்தவொரு அமைப்பிடமிருந்தும் எனக்கு இந்த மாதிரியான எந்தவொரு முறைப்பாடும் கிடைத்திருக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் வைஸ் தெரிவித்த சகலவற்றையும் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவும் நிராகரித்துள்ளார். கோர்டன் வைஸ் முன்னரும் இந்த மாதிரியான தவறான அறிக்கைகளை விடுத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதிரியான தவறான அறிக்கைகளை விடுத்த சிலரில் அவரும் ஒருவர். இவற்றை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம். நாட்டிற்கு வெளியே அனுப்பப்பட்ட சிலரில் அவரும் ஒருவர் என்று ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

ரூ. 285 மில். பெறுமதியான இயந்திர உபகரணங்கள் சீனாவினால் கையளிப்பு

china.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா பகுதிகளில் வீதி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவென சீன அரசு 285 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திர உபகரணங்களை நேற்று வழங்கியது. இலங்கையிலுள்ள சீனத் தூதுவர், பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்காவிடம் இவற்றை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பெக்கோ இயந்திரங்கள், மோட்டார் கிறேடர்கள், புல்டோசர்கள் என்பன இவற்றில் அடங்குகின்றன. கொழும்பு காலிமுகத் திடலில் கையளிப்பு வைபவம் நடைபெற்றது. சீன நாணயப்படி 17 மில்லியன் யுவான்கள் என கணக்கிடப்பட்டுள்ளதுடன் இவை சீன அரசு அன்பளிப்பாகவே வழங்குகிறது என தேச நிர்மாண அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி தெரிவித்தார்.

நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மேலும் 5 மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் இயந்திரங்களும் கொண்டு வரப்படவுள்ளன.

ஐக்கிய நாடுகள் மேலும் 5 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்குகிறது என்றும் செயலர் குமாரசிறி தெரிவித்தார்.

போர்க்குற்ற விசாரணைக்கு ஐ.நா. மீண்டும் வலியுறுத்தல் தேசியமட்ட விசாரணையில் நம்பிக்கை இல்லை; நவநீதம்பிள்ளை

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுயாதீனமான சர்வதேசமட்ட விசாரணைக்கு ஐ.நா. மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறது.அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த தேசியமட்ட விசாரணைகள் இதுவரை உரிய இலக்குகளை எட்டவில்லை என்பதில் தனது அலுவலகம் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அளித்த உறுதிமொழிக்கு அமைவாக விடயங்கள் இடம்பெறுவது குறித்து பான் கீ மூன் தீவிர உறுதிப்பாட்டுடன் இருப்பதாகவும் நவநீதம்பிள்ளை கூறியதாக பி.பி.சி. செய்திச்சேவை தெரிவித்தது.ஜெனீவாவில் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவை அண்மையில் தான் சந்தித்ததையும் நவநீதம்பிள்ளை உறுதிப்படுத்தியுள்ளார்.

“தேர்தல் முடிவுறும் வரை ஒவ்வொருவரும் காத்திருந்ததாகத் தென்படுகிறது. ஆதலால் அதனை நான் அவருக்கு ஞாபகப்படுத்தியிருந்தேன் என்றும் நவநீதம்பிள்ளை தெரிவித்திருக்கிறார்.”மனித உரிமைகளுக்கான தனித்துவமான அமைச்சு அலுவலகத்தை இலங்கை கொண்டுள்ளது. மனித உரிமைகள் விவகார அமைச்சர் தனது அரசாங்கத்துடன் பேச வேண்டும் என்ற பொறுப்பு இருப்பதாகத் தான் நினைத்தேன். மோதலுக்குப் பின்னரான உரிமைகள்,வன்முறைகள் பற்றி மட்டுமல்லாமல் தேர்தலுக்குப் பின்னரான உரிமைகளுடன் தொடர்புடைய வன்முறைகள் பற்றிப் பேசவேண்டிய பொறுப்பு இருப்பதாக நான் கருதினேன்” என்றும் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க்குற்ற விவகாரத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உரிய முறையில் தீர்வு காணப்படவில்லை என்பது தொடர்பாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும் நவநீதம்பிள்ளை மற்றொரு நாட்டின் உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கங்கள் நடவடிக்கையெடுப்பதற்கு இதுவொரு முக்கியமானதொன்று என்று கூறியுள்ளார்.

போர்க்குற்றங்களை நிராகரித்திருக்கும் அரசாங்கம் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் இடமளிக்கப் போவதில்லையெனக் கூறியுள்ளது.

அந்த மாதிரியான விசாரணைக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விசாரணைக்கான காரணம் எதுவும் இல்லை எனவும் கூறியிருந்தார். அதேவேளை, சர்வதேச விசாரணையில்தான் சாட்சியமளிப்பார் என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

சரத் பொன்சேகாவை விடுவிக்க பெளத்த பீடாதிபதிகள் கோரிக்கை

sarath.jpgஇலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிரணி ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமாகிய சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு நாட்டில் உள்ள நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன ஆகிய பௌத்தபீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்திருக்கின்றார்கள்.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் நிச்சயமற்ற நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக வரும் 18 ஆம் திகதி கண்டியில் மாநாடு ஒன்றிற்கு நான்கு பௌத்த பீடாதிபதிகளும் அழைப்பு விடுத்திருக்கும் நிலையிலேயே சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னின்று செயற்பட்ட சரத் பொன்சேகாவுக்கும்,  ஜனாதிபதிக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடானது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கின்றது என்பதையும் பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசம்: விமானத்தை தாக்கியழிக்கும் ஆயுதங்கள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசத்தில் புலிகளால் முன்னர் புதைத்து வைக்கப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப் பட்டுள்ளன.

புலிகளுடன் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர் நடவடிக்கையின் போது புலிகளின் பிராந்திய தளபதியாக இருந்த 34 வயதுடைய மோகன் என்றழைக்கப்படும் மகேந்திரராஜா வழங்கிய தகவலுக்கிணங்க விமானத்தை தாக்கியழிக்கும் ஆயுதங்கள், கைக்குண்டுகள், ஸ்னைப்பர் ரக ஆயுதங்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிடப்பட்ட புலி முக்கியஸ்தர் கொழும்பில் புலனாய்வு பொலிஸாரின் விசாரணையில் தொடர்ந்தும் இருக்கிறார். நாவற்காடு வைத்தியசாலையில் கடமையாற்றிய சிங்கள வைத்தியரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இவருக்கு தொடர்பிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத் துள்ளது.

மாத்தளை: சத்துணவு நஞ்சாகிய விவகாரம்: பாடசாலைக்கு உணவு வழங்கிய கொந்தராத்துக்காரர் கைது

சத்துணவு நஞ்சாகி 10 வயது மாணவி பலியாகி 129 மாணவர்கள் சுகவீனமடைந்தது தொடர்பாக பாடசாலைக்கு உணவு வழங்கிய கொந்தராத்துக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை, பலாபக்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் சத்துணவு உட்கொண்ட மாணவர்களில் தனஞ்சனி கமகே என்ற 10 வயது மாணவி மரணமடைந்தார். மேலும், 129 மாணவர்கள் சுகவீனமடைந்து மாத்தளை ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டனர்.

கொந்தராத்துக்காரரால் பாடசாலை மாணவர்களுக்கென வழங்கப்பட்ட சத்துணவு நஞ்சாகியதாலேயே இந்த சம்பவம் நடத்திருக்கிறதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே கொந்தராத்துக்காரர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர். ஏனையவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவர்களையும் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென மாத்தளை ஆஸ்பத்திரி அத்தியட்சகர் டாக்டர் கே. டபிள்யூ. எஸ். குமாரவன்ச தெரிவித்தார். எவருக்கும் உயிராபத்தில்லை யெனவும் அவர் கூறினார்.

மேற்படி பாடசாலை உட்பட தொம்பவெல மற்றும் கவட்டயாமுன பாடசாலைகளில் கல்வி கற்கும் கீழ் பிரிவு மாணவர்களே மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

போஷாக்கு உணவாக வழங்கப்பட்ட நூடில்ஸ் முட்டை, சொதி என்பனவுடன் மாணவர்களின் வாந்தி மற்றும் மலம் என்பன மேலதிக ஆய்வுகளுக்காக உடனடியாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி கே. டப். எஸ். குமாரவன்ஸ மேலும் தெரிவிக்கின்றார். இது சம்பந்தமான பொலிஸ் விசாரணை மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி திலக் அபேசிரிவர்தனவின் பணிப்புரையின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜயம்பதா பண்டார மேற்கொண்டுள்ளார்.

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு: கண்டி மேயர் அலுவிகார பதவியிலிருந்து நீக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிப் பொறுப்பிலுள்ள கண்டி மாநகர சபையின் மேயர் எல். பி. அலுவிகாரவை பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக அப்பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

மேயர் எல். பி. அலுவிகார தொடர்பாகக் கிடைத்த பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் பின்னரே அவரை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்கத் தீர்மானித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்தும் இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று, இதற்கு முன்னர் உடபலாத்த பிரதேச சபைத் தலைவர் – பாத்ததும்பர நகர சபைத் தலைவர், கங்க வட்ட கோறளை பிரதேச சபைத் தலைவர்களும் இவ்வாறான மோசடிக் குற்றச் சாட்டுக்களின் பேரில் அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. என்றும் முதமலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்தார்.

இந்திய திஹிணி வலையமைப்பில் இணைய இலங்கை வங்கி திட்டம் – ‘டாடா’ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

இந்தியாவில் உள்ள சகல வங்கிகளினதும் ஏ.ரி.எம். (திஹிணி) வலையமைப்புடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பாக ‘டாடா’ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வங்கியின் தலைவர் கூறினார். இந்தியாவில் உள்ள பத் தாயிரத்திற்கும் அதிகமான ஏ.ரி.எம். வலையமைப்புகளுடன் இலங்கை வங்கி இணைந்துகொள்வதன் மூலம், இலங்கையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் எந்தவொரு வங்கியின் ஏ.ரி.எம். இயந்திரத்திலும் பணத்தை மீளப்பெற முடியும் என கலாநிதி காமினி விக்கிரமசிங்க கூறினார்.

இந்தியாவின் சென்னை மாநகரத்தில் மட்டுமே தற்போது இலங்கை வங்கியின் கிளை இயங்கி வருகிறது. அதனால் இலங்கை வங்கியின் ஏ.ரி.எம். அட்டைகளைப் பயன்படுத்தி சென்னையில் மட்டுமே பணத்தை மீளப்பெற முடிகிறது.

வட்டுக்கோட்டை தீர்மான மீள்ளுறுதி (re-validation) வாக்கெடுப்பும், நாடு கடந்த அரசும் : எஸ் ஆர் எம் நிஸ்தார்

vaddukoddai_referendumவட்டுக்கோட்டை தீர்மானம் என்பது இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் இணைத்து அதில் வாழும் தமிழர்களுக்கு இறைமை கொண்ட ஒரு தனி ஆட்சி பிரதேசத்தை தமிழீழமாக உருவாக்குவதாகும். அதேபோல் புலிகளின் தமிழ் ஈழத்திற்கான கடைசி ஆயுத போராட்ட பரிசோதனை 18 மே இல் தோல்வியில் முடிய ஆரம்பிக்கப்பட்டதே நாடு கடந்த தமிழ்ஈழ அரசு எனும் அஹிம்சை போராட்ட பரிசோதனையாகும்.

நாடுகடந்த அரசு/தஞ்ச அரசு/புகலிட அரசு என்பதை Government in Exile என்று ஆங்கிலத்தில் கூறுவர். ஆனால் அத்தகைய அரசுக்கான வியாக்கியானம் புலம் பெயர் நாடுகளில் நடைபெற்ற(?) தேர்தல் மூலம் ஏற்படுத்தப்போகும் நாடு கடந்த அரசுக்கு (Transnational Government) கொடுக்கும் வியாக்கியானத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதும், பின்னய அரசு இதுவரை எங்கும் இல்லாத ஒரு பரிசோதனை என்பதும் நோக்கப்பட வேண்டியவை.

இதைவிடவும் புலன் பெயர் நாடுகளில் பேசப்படும் நாடு கடந்த அரசு தொடர்பாக ஏற்பட்டுள்ள தெளிவின்மையை ஒரு பக்கம் வைத்து விட்டு அத்தகைய அரசு ஒன்றிற்கு அடித்தளமாக அமைந்துள்ள வட்டுக்கோட்டை தீர்மானம் பக்கம் நம் பார்வையை முதலில் செலுத்துவோமானால் அதிலும் பல தெளிவின்மை காணப்படுவதை காணலாம்.

இந்த வகையில் வட்டுக்கோட்டை தீர்மான மீளுறுதி வாக்கெடுப்பின் அடுத்தகட்ட நடவடிகை என்ன என்பது அதன் ஏற்பாட்டாளர்களுக்கே தெரியாமல் இருக்கும்போது அல்லது இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும்போது, இது நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கான முன்முயற்சி என்பதாகவே கொள்ள வேண்டியுள்ளது. எனவே இவை இரண்டையும் ஒப்பிட்டு அவற்றின் தெளிவின்மைகளையும் கூடவே அதனோடு பிணைந்துள்ள ஏனைய விடயங்களையும் பார்க்க வேண்டியது இங்கு அவசியமாகின்றது.

இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது பிரிந்து செல்லும் விருப்பத்தை வெளியிடுவதும், இந்த நாடுகடந்த அரசு அந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையை கொண்டதும் முதல் விடயம். வட்டுக்கோட்டை தீர்மானத்தின் தெளிவின்மை இரண்டாம் விடயம். நாடு கடந்த அரசை அமைப்பதற்கான செயற்குழு வெளியிட்டுள்ள விளக்கக்கோவை மூன்றாம் விடயம். வடக்கும், கிழக்கும் இணைந்த பிரதேசமாக இருக்க வடக்கு, கிழக்கு மக்களின் விருப்பு என்ன என்பதை உறுதிபடுத்த எந்தவித முனைப்புகளும் இதுவரை எடுக்கப்படவில்லை, இது நான்காம் விடயம். அப்படி இணைய விரும்பினும் அந்த பிரதேசம் இலங்கையில் இருந்து பிரிந்து செல்லும் தனி நாடாக கொள்வதா இல்லையா என்பது ஐந்தாவது விடயம். நாட்டில் உள்ள தமிழ் அரசியல் (மொத்த வியாபாரிகள்) வாதிகளுக்கும், புலம் பெயர் நாடுகளில் அரசியல் (பெட்டிக்கடை) நடத்துபவர்களுக்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் ஆறாவது விடயம். இலங்கை இறையாண்மையை ஏற்று 26ந் திகதி ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், அதே நேரம் இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னும் பின்னும் இலங்கை இறையாண்மையை ஏற்காமல் பிரிந்து செல்ல வெளிநாட்டில் வாழும் தமிழரிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்புகள் ஏழாவது விடயம், இப்படி முற்றுபெறாத பட்டியல் ஒன்று உள்ள நிலையில், மேற்சொன்ன விடயங்கள் வட்டுக்கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு ஏற்பாட்டுக் குழுவினருக்கும், நாடு கடந்த தமிழீழ அரசின் அமைப்பாளர்களுக்கும் முன்னுள்ள விடைதெரியாத கேள்விகளும் கூட.

முதலில் வட்டுக்கோட்டை தீர்மானதை எடுத்துக்கொண்டால் அதில் “தமிழர்” என்ற பதம் “தமிழ் பேசுவோர்”, அதாவது தமிழ் பேசும் “தமிழர்”ரும், தமிழ் பேசும் “சோனகர்”( சமய ரிதியில் 99% முஸ்லீம்கள்)களும் என்று பொருள் கொடுப்பதாக கொள்ள முடியாதுள்ளது. காரணம் 1977 பொது தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி (T.U.L.F) 19 தொகுதிகளில் வெற்றி பெற தமிழர் விடுதலை கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்ட முஸ்லிம் ஐக்கிய முன்னணி 4 தொகுதிகளில் தோல்வி கண்டது. இந்த 4 தொகுதிகளிலும் முஸ்லிம் வாக்காளர்களே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தும் முஸ்லிம் ஐக்கிய முன்னணியை தோற்கடித்தனர். ஆதாவது தமிழீழ கோரிக்கையை நிராகரித்தனர். காரணம் இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் அவர்களை பற்றி பேசவில்லை என்பதனாலேயே. அத்துடன் இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் பேசுவோருக்கே என்றால் நான்கு தொகுதிகளில் முஸ்லீம் ஐக்கிய முன்னணி தனியாக போட்டியிட்டிருக்கத் தேவையுமில்லை என்பதையும் அவதானிக்க வேண்டும்.

மேலும் மேலே சொன்னது போன்று “தமிழ் ஈழம்” என்ற (கற்பனை) பிரதேசத்துக்குள் வாழும் சோனகர் இனம், தமிழரின் பிரிந்து செல்லும் கருத்தை நிராகரிக்க தமிழருக்கும், சோனகர்களுக்கும் இடையே அரசியல் ரீதியான விரிசல் மெல்ல ஏற்பட தொடங்கியது. பிற்பட்ட காலத்தில் சோனகர் மீதான தமிழ் புலிகளின் தொடர்ச்சியான அடாவடித்தனம், உதாரணமாக 1990 காத்தாங்குடி பள்ளிவாசல் படுகொலை, அதே ஆண்டின் சோனகருக்கெதிரான இன சுத்திகரிப்பு, அதன் பின்னான நில ஆக்கிரமிப்பு அதன் அடிப்படையில் கிழக்கில் உருவான முஸ்லிம் ஆயுதகுழு போன்ற நிலமைகள் தமிழ், சோனகர் இடையிலான அரசியலில் விரிசலை மேலும் கூர்மைப்படுத்தி 2003ம் ஆண்டில் தென் கிழக்கு பல்கலைகழகத்தில் செய்யப்பட்ட “ஒலுவில் தீர்மானம்” (இது ஏட்டிக்குப்போட்டி என்பது வேறு விடயம்) வரை சென்றது.

போதாக்குறையாக, புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ( ISGA ) பிரேரணையில் சோனகர் முற்றாக நிராகரிக்கப்பட்டமை, சுனாமிக்குப் பின்னான மீள்கட்டுமான ஒப்பந்தத்தில் ( P-TOM ) புலிகளினால் சோனகர் ஓரங்கட்டப்பட்டமை என்ற புலிகளின் திட்டமிட்ட செயற்பாடுகள் சோனகர்களை தமிழ் அரசியலில் இருந்து மேலும் தூரப்படுத்தியது.

இருப்பினும் கடைசி கட்ட போரட்ட காலத்தில் சண்டையிட்ட இரு தரப்பினராலும் பலியிடப்பட்ட தமிழர் தொடர்பாக சோனகர் மட்டில்லா கவலையும், மீதமிருந்த தமிழர் தொடர்பாக கருணையுடன் கூடிய பொறுப்புணர்வுடன் நடந்தமை, தம் மீதான புலிகளின் கடந்த கால மிலேச்சத்தனதை தற்காலிகமாக மறந்தமையையும், தாம் தழிழருக்கு எதிர்ப்பானவர் அல்லர் என்பதையும் காட்டுகின்றது. ஆனாலும் தமது அரசியல் உரிமை, இருப்புரிமை என்ற கேள்விகள் எழும்போது மறந்த விடயங்களை மீட்டிப்பார்ப்பதும், அதை நிகழ்கால, எதிர்கால அரசியலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் அந்த அடிப்படையில் தமது அரசியல் போக்கை தீர்மானிப்பதும் அவர்களுக்குள்ள ஜனநாயக உரிமை. அதை அவர்கள் கைவிடவேண்டும் என எதிர்பார்ப்பது அவர்கள் உரிமையில் தலையிடுவதான முயற்சி.

எனவே, வடக்கும், கிழக்கும் இணைந்த நிலப்பரப்பு சம்பந்தமாக பேசப்படும்போது அல்லது ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது அந்நிலத்தில் வாழும் சோனகர்களை கவனத்தில் எடுக்காது விடுவதென்பது, சிங்கள அரசு தமிழரை இரண்டாந்தர பிரஜைகளாக அல்லது அவர்கள் இலங்கையரே இல்லை என்ற ரீதியில் அரசியல் நடத்தியதை ஒத்த செயலாகும். உரிமை மறுப்பாகும்.

ஆகவே உத்தேச தமிழீழ பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மக்களிடம், சுமார் 35 வருடங்களின் பின், அதாவது ஒரு தலை முறை இடைவெளிக்குப்பின், வாக்கெடுப்பு நடத்தாமல் வெளிநாடுகளில் வாழும் தமிழ் பேசும் வெளி நாட்டாரிடமும், இனி வெளிநாட்டாராகப் போகும் தமிழரிடையேயும் நடத்ப்படும் வாக்கெடுப்பு அங்கு வாழும் மக்களின் அரசியல் அபிலாசையை பிரதிபலிக்காது. அந்த மக்கள் இன்னும் பிரிவினையை வரவேற்கிறார்களா என்பது பற்றி சிறிதும் அக்கறைப்படாமல் அவசர அவசரமாக வெளிநாடுகளில் தேர்தல் வைப்பதென்பது விழைவுகளை பற்றி அக்கறைப்படாத விடயமாகவே படுகின்றது.

அடுத்து இந்த நாடு கடந்த தமிழீழ அரசிற்கான விளக்கக் கோவை. இந்த விளக்கக்கோவையில் சுமார் 60 முறைகள் தமிழர், தமிழ் மக்கள், ஈழத்தமிழர் என்ற பதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதைவிட அதிலுள்ள பின்வரும் கூற்றும் சற்று கவனிக்கத்தக்கது. அதாவது, ” தமிழரிடையே மட்டுமன்றி தமது நாடுகளில் உள்ள பொதுச் சமூகத்தின் ( Civil Society) ஆதரவையும் இவ்வரசை அமைக்கும் திட்டத்திற்குத் திரட்டும். மேலும் தத்தமது நாடுகளின் அரசியல் தலைவர்களதும் அரசுகளதும் ஆதரவை இந் நாடுகடந்த அரசு அமைக்கும் முயற்சிக்கும் திரட்டும் செயற்பாடுகளிலும் இச் செயற்குழு ஈடுபடும். இஸ்லாமியர்கள், இந்திய அறிவாளிகள் ஆகியோரை உள்வாங்கி மதியுரை குழு விரிவுபடுத்தப்படும். முழு விளக்க கோவையிலும் ஒரே ஒரு தடவையே “இஸ்லாமியர்” என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது. அதுவும் வெளிநாட்டில் உள்ள இஸ்லாமியரையே இது சுட்டுகின்றது என்பதில் எந்த குழப்பமும் இல்லை. ஆகவே உத்தேச தமிழீழத்தில் அந்த பிரதேசத்தின் உரித்தாளர்களில் ஒரு பகுதியினர் முற்றாக புறக்கணிக்கப் பட்டுள்ளனர். மேலும் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் சேர்க்கப்பட்டு, பின் நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இந்த பிரதேசம் இனி சட்டத்துக்கு புறம்பான முறையில் இணைக்க அதன் ஒரு பகுதி மக்களை புறந்தள்ளியும், மற்றைய பகுதிக்கு அவர்களின் அனுமதி இல்லாமலே பினாமி(proxy) வாக்கு போட்டும் நடத்தப்படும் மீள்ளுறுதி வாக்கெடுப்பு எந்த நாட்டு சட்டத்துக்குட்பட்டது என்பதை அறிய முடியாதுள்ளது.

இந்த நாடுகடந்த அரசு சர்வதேச சட்டத்துக்கு (International Law) தெரியாத விடயம். சர்வதேச சட்ட பரபிற்குள் இந்த அரசு வரவில்லை என்பதற்காக நடைமுறையில் இருக்கும் சட்ட ஏற்பாடுகளை, உள்ளூர், சர்வதேச சட்டவிதி முறைகளை மீறமுடியும் என்ற பொருளுமில்லை. எனவே அரசியல் அறிவு சற்று குறைந்தவர்களுக்கும், சட்டத் துறையில் அனுபவம் இல்லாதோருக்கும் இதுபற்றி விளக்க வேண்டியது இந்த அமைப்பாளர்களின் தலையாய கடமை. ஏனெனில் இதுவரை காலமும் வெளிப்படைத் தன்மையில்லாத அரசியலில் அடைந்தது ஏமாற்றமும், தோல்வியுமே. இனியும் இருட்டறை அரசியல் நடத்த யாரும் அனுமதிக்கப்படலாகாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த சிறுபான்மையினரும் பகிஸ்கரித்திருந்தால் அதை பிரிந்து போவதற்கான ஒரு சமிக்ஞையாக கொண்டிருக்க இடமிருந்திருக்கும். இந்த வட்டுக்கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு பரப்புரை ஊடகங்கள் ஜனாதிபதி தேர்தலில் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வதற்குப் பதிலாக (சொல்லி இருந்தாலும் மக்கள் கேட்டிருப்பார்கள் என்பது சந்தேகமே), சரத் பொன்சேக்காவுக்கு வாக்களிக்கத் தூண்டிய அதே நேரத்தில் வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடாத்தியது ஒன்றுடன் ஒன்று ஒட்டிச் செல்லாத இரண்டு விடயங்கள். எனவே இந்த வட்டுக்கோட்டை தீர்மான மீள்வாக்கெடுப்பு ஏற்பாட்டுக் குழு இதற்கு விளக்கமளிக்க வேண்டும்.

மே 18 க்கு பின் TNA இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேற்பாளரை ஆதரித்தது. மறு புறத்தில் TNAயில் இருந்து பிரிந்து சென்று தனித்து போட்டியிட்டார் ஒருவர். இந்த இரு பிரிவினரும் அடுத்த பொதுத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டனர். இனியும் அப்படித்தான் செயல்படப் போகிறார்கள். அவர்களின் அரசியல் வியாபாரத்துக்கு அதுதான் ஒத்துப்போகும் வழி. இதைவிடவும் கிழக்கில் கருணா, பிள்ளையான் என்ற இரண்டு சக்திகள் மீதமுள்ள தமிழருடன் ஒன்றிணைவர் என்பதும் பகற்கனவு. எதிர்வரும் பொதுத் தேர்தலில் TNAயும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து செயல்படப் போவதாக சொல்லப்படுகின்றது. என்ன அடிப்படையில் இந்த இணைவு என்பது இதுவரை சொல்லப்படவில்லை. இதை விடவும் டக்ளஸ் தேவானந்தா, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாக்கும் அரசியலில் அனுபவம் இல்லாத புது முகங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்க இருக்கின்றனர். இந்த நிலைமைகள் எல்லாம் எப்படி வட்டுக்கோட்டை தீர்மானத்துடன் அல்லது நாடுகடந்த அரசுடன் ஒத்துப்போகும் என்பது புரியாத புதிர்.

மேலுள்ள விடயங்களை நோக்கும் போது இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான மீள் உறுதி வாக்கெடுப்பானது எமக்கு “இசையணி தேர்வு” ஒன்றையே ஞாபமூட்டுகிறது. இதற்கும் அப்பால் சென்றால், இது தமிழ் பாடசாலை நிர்வாக குழு தேர்தல் போன்றது. அதையும் தாண்டிச் சென்றால் ஒரு கோயில் நிர்வாக குழு தேர்தலுக்கு ஒப்பானது. அதையும் தாண்டினால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றுக்கு ஒப்பானது. இப்படி தமது ஜனநாயக உரிமையை கட்டுப்படுத்தாமல், தமது வாக்களிக்கும் (அடங்கா ஆசையை) உரிமையை ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் காட்ட வெளிக்கிட்டு மூக்குடைந்த நம்மவர் மீண்டும் ஒருமுறை இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வாக்ளிக்க சென்றதை பார்க்கும் போது, அல்லது இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பை பார்த்த வெளிநாட்டு அரசியல்வாதிகளும், ராஜதந்திரிகளும், இலங்கை அரசாங்கம் இந்த வட்டுக்கோட்டை தீர்மான வாக்கெடுப்பு குழுவினரிடம் தான் தேர்தல் ஒன்றை எவ்வாறு நடத்துவதென்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற I.B.C வானொலியின் பிரச்சாரம் மிகவும் ரசிக்கக் கூடிய நகைச் சுவையாகவே எமக்குப்படுகின்றது.

ஆக வடக்கையும், கிழக்கையும் ஒரு இணைந்த பிரதேசமாக கொள்ள அப்பகுதி மக்கள் முதலில் இணைய வேண்டும். அப்படி இணைய வேண்டுமாயின் முதலில் ஒரு தனித்துவமான இனம் அதன் “சோனகர்” என்ற இனப்பெயரால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அந்த இனத்துக்கு “தமிழ் பேசும் இஸ்லாமியர்” அல்லது “தமிழ் பேசும் முஸ்லீம்” அல்லது கலாச்சார குழு என்றெல்லாம் பெயர் சூட்டி அல்லது அவர்களும் “தமிழர்” என்ற வசதி கருதிய அரசியல் கழுத்தறுப்புக்கு இடமளிக்கக் கூடாது. இது தமிழ் தரப்பால் தனியே செய்யப்பட்டாலும் சரி முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் உடன்பாட்டால் செய்யப்பட்டாலும் சரி இது மொத்த தமிழ் பேசுவோராலும் நிராகரிக்க வேண்டும். இந்த இரண்டு இனங்களுக்கும் இடையே அரசியல் ரீதியான ஒருமைப்பாடு ஏற்பட வேண்டுமாயின் அது முதலில் ஒரு குறைந்தபட்ச புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான வேலைதிட்டம் ஒன்றினால்தான் முடியும் என்பது எனது நிலைப்பாடு. அதுவரையும் இந்த வட்டுக்கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு, நாடு கடந்த அரசு என்ற (விளையாட்டு)விடயங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை.