எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

புலிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘அரசியல் முள்ளிவாய்க்கால்’! வியூகம் அமைக்கின்றார் ஆர் சம்பந்தன். : த ஜெயபாலன்

Sampanthan_Rதமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் பற்றிய முடிவை இறுதிக் கட்டத்திலேயே அறிவிக்க உள்ளது. 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை. இறுதிக் கட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதன் மூலம் ஆசனங்கள் வழங்கப்படாதவர்கள் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியில் இறங்கிவிடாமல் தடுக்கவே அக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இரகசியமாக வைத்திருப்பதாக தேசம்நெற்றுக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இம்முறை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனங்கள் வழங்கப்பட மாட்டாது என அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர் சம்பந்தன் லண்டனில் தெரிவித்து இருந்தார். இச்செய்தி முதன்முறையாக பெப்ரவரி 10ல் தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. புலிகளால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை! லண்டனில் ஆர் சம்பந்தன் : த ஜெயபாலன் இதே தகவலை எம் கெ சிவாஜலிங்கமும் பெப்ரவரி 17ல் தி ஐலண்ட் பத்திரிகைக்குத் தெரிவித்து இருந்தார். http://www.island.lk/2010/02/17/news30.html

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யார் போட்டியிடுவது என்பது இறுதி நேரத்திலேயே வெளியிடப்பட இருக்கின்றது. இதன் மூலம் விடுதலைப் புலிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் ஏனைய கட்சிகளுடன் பேசி ஆசனங்களைப் பெற்றுக் கொள்வது கடினமாக்கப்படும் மேலும் சுயேட்சையாக நிற்பது பற்றிய முடிவுகளை எடுப்பதற்கும் கால அவகாசம் இருக்காது. இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘அரசியல் முள்ளிவாய்கால்’ கட்ட ஆர் சம்பந்தன் குழு தயாராகி வருவது தெரியவருகின்றது.

ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலகட்டத்தில் அவரினால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரானவர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பாக மாறிய போதும் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலேயே அங்கம்வகித்தார். ஜனாதிபதித் தேர்தலில் கூட ஆர் சம்பந்தனுக்காக எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வாக்களித்தவர்.

தற்போது ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்க்கால்’இல் முதல் களப்பலியாகி உள்ளார் தங்கேஸ்வரி கதிர்காமநாதன். அவரைத் தொடர்ந்து கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்), சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல) மற்றும் எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா, விநோதரலிங்கம் சுப்பிரமணியம் ஆகியோர் ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்கால்’ இல் பலியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டாலும் வெல்லப்படக் கூடிய ஆசனங்கள் இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

தங்கேஸ்வரி கதிர்காமநாதன் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் மறுக்கப்படவுள்ள மற்றுமொருவர் பத்மினி சிதம்பரநாதன். பத்மினி சிதம்பரநாதனுக்கும் ஆசனம் மறுக்கப்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு பெண் வேட்பாளர்கள் யாரும் இருக்கின்றார்களா என்பது சந்தேகமே.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் வெல்லப்படக் கூடிய தொகுதிகளில் நிறுத்தப்படுவார்கள் என தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தங்கேஸ்வரி கதிர்காமநாதன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட முடிவெடுத்து உள்ளார். எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா ஆகியோர் விக்கிரமபாகு கருணாரட்னவின் என்எஸ்எஸ்பி கட்சியில் போட்டியிடுவது பற்றி பேசிவருகின்றனர்.

இவை ஒருபுறமிருக்க முன்னால் ஈபிடிபி உறுப்பினரும் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தனின் ஆலோசகருமான கலாநிதி விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளதாகத் தெரியவருகின்றது. கலாநிதி விக்கினேஸ்வரன் ஆர் சம்பந்தனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடக் கூடிய மற்றுமொருவர் ஓய்வுபெற்ற நீதிபதி விக்கினேஸ்வரன் எனத் தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை ஆதரித்தவர். இவரது கருத்துக்களே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலம் சேர்த்து இருந்தது.

கடந்த தேர்தல் போலல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பாராளுமன்றத் தேர்தலில் கடுமையான போட்டியை பலவீனமான நிலையில் எதிர்கொள்ள உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்கின்ற சக்திகள் இல்லாத காரணத்தினால் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியாக மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக அரசியல் இப்பாராளுமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

கிளிநொச்சியில் மக்கள் மீள் குடியேற்றம்

தொடர்ந்து நடைபெறும் மீள்குடியேற்றத்தின் ஒரு கட்டமாக நேற்றைய தினம் ஆனந்தபுரம் தெற்கும் வடக்கிலும், நாளை மறுநாள் தொண்டைமாநகர் பிரதேசத்திலும் மீள்குடியேற்றங்கள் நடைபெறகின்றன. மீள்குடியேறும் மக்களுக்கு UN உதவிப் பொருட்களும் சில அன்றாட உதவிப் பொருட்கள் அரசினாலும் கொடுக்கப்படுகின்றது. அரச இராணுவத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் அவரவர்களின் சொந்த இடங்கள் சென்று பார்வையிட அனுமதித்தும் பின்னர் அவர்களை தமது சொந்த இடங்களில் குடியேறவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இப்படியாக குடியேறியவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியபோது தாம் தமது வீட்டுக்கு வந்து சேர்ந்தது தமக்கு மகிழ்ச்சியாக உள்ளபோதும் தமது பிள்ளைகளை புலிகள் பலவந்தமாக இழுத்துப்போய் பலிகொடுத்ததை தம்மால் மறக்க மடியாமல் இருப்பதாகவும் கூறினார். தமது அயலில் உள்ள தாய் தனது வீட்டுக்கு வந்ததும் பலிகொடுத்த தன் குழந்தையை நினைத்து அழுததாகவும் அவர் கூறினார்..

இராணுவத்தினர் வசம் உள்ள யுத்தகாலங்களில் விட்டுப்போன வாகனங்கள் இராணுவத்தினரால் பொது மக்களுக்கு விற்கப்படுவதாகவும் மீள்குடியேறியவர்கள் தெரிவித்தனர்.

ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார்

sridar.jpgஇலங் கையின் பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா சுகயீனம் காரணமாக இன்று காலை 8.00 மணியளவில் கொழும்பில் காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 47.  நாடகக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர், ‘மிமிக்ரி’, மற்றும் ஓவியம் என ஒட்டு மொத்தக் கலைத்துறையில் ஈடுபட்டு, தன்னை முழுமையாகக் கலைத் தாய்க்கு அர்ப்பணித்த ஸ்ரீதர் பிச்சையப்பா. 
1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி பிறந்தவர்

இவரது பூதவுடல் தற்போது அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை 2.00 மணியளவில் மாதம்பிட்டிய மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் லொக்கு பண்டார ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துள்ளார்

lokku_bandara.jpgஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருந்து கடந்த நாடாளுமன்றத் தோ்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக  தெரிவாகி பாராளுமன்ற சபாநாயகராக செயற்பட்ட  வி.ஜெ.மு.லொக்குபண்டார அவர்கள் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்டார்.  பண்டாரவளை நகரில்  இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டிலேயே ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆறாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான லொக்கு பண்டார இந்த முடிவை எடுத்துள்ளார்.

தங்கேஸ்வரி கதிர்காமநாதன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளார்

thangeswary.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் போட்டியிடவுள்ளதாக தேசம்நெற் க்குத் தெரிவித்தார். தங்கேஸ்வரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட நாடியிருந்ததாகவும்,  இறுதிநேரத்தில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது விடயமாக தேசம்நெற் தங்கேஸ்வரியுடன் தொடர்புகொண்டு வினவியபோது தான் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதாக உறுதிப்படுத்தினார். இன்று இது விடயமாக ஜனாதிபதியை சந்தித்து நேரடியாகக் கதைத்ததாகவும் தெரிய வருகின்றது.

அரசியல் பேரணிகளை நடத்த பொலிஸார் தடைவிதிப்பு!

police_logo.jpgபொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் தினம் முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரையில் அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களோ அல்லது பேரணிகளையோ நடத்தக் கூடாது எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வது தொடர்பிலும் சில விதிமுறைகளை வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டுமென பிரதிக் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் போது குறித்த வேட்பாளரும், அவரது உதவியாளரும் மட்டுமே பிரசன்னமாக முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேவையற்ற முரண்பாடுகள் மற்றும் மோதல்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்றே நாடாளுமன்றத் தேர்தலையும் அமைதியான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் நபர்கள் குறித்து புலனாய்வூப் பிரிவினரும் தகவல்களைத் திரட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

பயிற்றப்படாத, ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் திட்டம் இன்று ஆரம்பம்!

sri-lankan-school-teacher-01.jpgபயிற்றப் படாத, சகல ஆசிரியர்களுக்கும் விஷேட பயிற்சி அளித்து அவர்களின் சேவையை மேம்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் 42 மத்திய நிலையங்களில் இந்த ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

நாட்டிலுள்ள  அரசாங்கப் பாடசாலைகளில் கடமையாற்றும்; பட்டதாரியல்லாத பயிற்றப்படாத, சகல ஆசிரியர்களையூம் பயிற்றுவிக்கும் இந்த விஷேட திட்டம் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விப் பிரிவும் தேசிய கல்வி நிறுவகத்தின் நிறுவன அபிவிருத்திப் பிரிவும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

வார இறுதி நாட்களில் இப்பயிற்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ் மொழி மூலம் 18 மத்திய நிலையங்களும் சிங்கள மொழி மூலம் 17 மத்திய நிலையங்களும் ஆங்கில மொழி மூலம் 7 மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

இவற்றில் கடமைபுரிய பகுதி நேர அடிப்படையில் வருகை தரும் விரவுரையாளர்களாக சுமார் 200 பேர் வரை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கமர்த்தப் படவுள்ளனர்.

இப்பாடநெறி இரு வருடங்களைக் கொண்டது. முதலாம் வருடம் அளவீடும் மதிப்பீடும், கல்வி உளவியல், வகுப்பறை முகாமைத்துவம் முதலான பாடப் பரப்புகளைக் கொண்டிருக்கும்

தேர்தல் கடமைகளில் 3 இலட்சம் உத்தியோகத்தர்கள்!

election-commisone.jpgஎதிர்வரும் பொதுத் தேர்தல் கடமைகளில் 3 இலட்சம் அரசாங்க உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த உத்தேசிப்பதாக தேர்தல் செயலகம் தெரிவிக்கின்றுது.

இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்றவர்களின் விபரங்களை தேர்தல் தலைமை செயலகத்துக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்கா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளைக் கேட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது 2 இலட்சத்து 50 ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டனர்.

தேர்தலில் வெற்றிபெறும் கட்சி அபேட்சகர்களின் விருப்பு வாக்குகள் முதலில் எண்ணப்படும் என்றும் ஏனைய வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் பின்னர் எண்ணப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக எரிபொருள் குழாய் மாற்றியமைப்பு!

fawzi.jpgகாலன்னாவை எண்ணெய் சுத்தேகரிப்பு நிலையத்தில் இருந்து குழாய் மூலம் எரிபொருள் விநியோகிப்பதற்கான திட்டத்தின் கீழ் மாற்றுக் குழாய்கள் பொருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். 18.7 மில்லியன் அமெரிக்க டொலர் இதற்கு செலவிடப்படவுள்ளது. மேலும் இத்திட்டத்தக்கு சர்வதேச விலைமனுக் கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பௌசி சமர்பித்த மற்றுமொரு அமைச்சரவைப் பத்திரத்துக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு தறைமுக விஸ்தரிப்பு வேலை காரணமாக நிருக்கடியால் செல்லும் எரிபொருள் விநியோகக் குழாய் இடமாற்றப்படவுள்ளது. அதற்கு 432 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளதுடன் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி வழங்குகிறது.

வேட்புமனு ஏற்கும் பணி ஆரம்பம்: அரசியல் கட்சியொன்று, இரு சுயேச்சைகள் நேற்று வேட்புமனுத் தாக்கல்

parliament.jpgபொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்ட முதலாவது தினமான நேற்று இரண்டு சுயேச்சைக் குழுக்களும்,  ஒரு அரசியல் கட்சியும் வேட்பு மனுவை தாக்கல் செய்தன.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவொன்று நேற்றுக் காலை வேட்புமனுவை தாக்கல் செய்தது. கச்சி மொஹமது மொஹமது ஜுனைதீன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.  நுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு சுயேச்சைக் குழு வேட்புமனுவை தாக்கல் செய்தது என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான ‘ஜனசெத பெரமுன’ கட்சி நேற்றுக்காலை நான்கு மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தது. புத்தளம், கம்பஹா, குருணாகல், கொழும்பு மாவட்டங்களில் நேற்றுக் காலை சுபவேளை 9.30 மணியளவில் வேட்பு மனுவை ‘ஜனசெத பெரமுன’ தாக்கல் செய்தது.

வேட்புமனு தாக்கல் நேற்று 19ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்றுக்காலை 9 மணிமுதல் 4 மணிவரை வேட்புமனுக்களை ஏற்கக் கச்சேரிகள் தயார் நிலையில் இருந்தன. ஆயினும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.

பொலன்னறுவை, திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களில் வேட்புமனு ஏற்பதற்காக தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆயத்தமாக இருந்தபோதும் எவரும் கட்டுப்பணம் செலுத்தவோ, வேட்புமனு தாக்கல் செய்யவோ வரவில்லை. இறுதி நேரத்திலேயே பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்புமனுவை தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டும் என்றும் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். பெரும்பாலும் 25ம், 26ம் திகதிகளில் முக்கிய கட்சிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐ. ம. சு. மு. 25ம், 26ம் திகதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரீ. எம். வி. பி), மலையக மக்கள் முன்னணி, ஐ. தே. கட்சி உட்பட முக்கிய கட்சிகள் 24, 25, 26ம் திகதிகளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யுமென கட்சி வட்டாரங்கள் கூறின. ஆயினும், கட்சிகள் இன்னும் பேரம் பேசும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டாகப் போட்டியிடுவதா என்பதில் முடி வெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றன.

அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் நேற்றும் ஐ. ம. சு. மு.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.  ஆயினும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. ஈ. பி. டி. பியும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் முடிவுகள் எதுவும் தெரியவில்லை.

இன்னும், சில கட்சிகள் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவதென தெரியாத நிலையில் திண்டாடுகின்றன. இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னரே வேட்பு மனுத் தாக்கல் சூடு பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவின் தலைவர் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன் என்பவரின் தலைமையில் இச் சுயேச்சைக் குழு வேட்பு மனுப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

இச் சுயேச்சைக் குழுவில் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன், அபூபக்கர் அமீர் ஹம்சா ஜெளபர்கான் சமீன், மீராசாகிபு இஸ்ஸதீன், முஹமத் செய்யத் அலவி சபீர் யூசுப் லெவ்வை பள்ளித்தம்பி, முகம்மட் இப்றாகீம் முகம்மட் இர்பான் முகைதீன் பாவா முபாறக் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.