சில இந்து மத ஆலயங்கள் முற்றாக வருமானம் ஈட்டும் வியாபார நோக்கங்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் தனி நபர்களாலும் குழுக்களாலும் வியாபார நோக்கங்களுக்காக ஆலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. தனிநபர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆலயங்கள் தனிநபர்களின் வர்த்தக நிறுவனங்கள் போன்றே செயற்படுகின்றன. அவற்றின் வருமானங்கள் தனிநபர்களையே சென்றடைகின்றது. ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலயம் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் என்பன அரசியல் நோக்கங்களுக்கு வருமானத்தைப் பெறும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது. இவற்றில் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் அரசியல் பிளவுக்குள் சென்ற போது அதனை ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகம் ந சீவரட்ணம் கைப்பற்றுவதற்கு எடுத்த முயற்சி பலனளிக்கவல்லை. இது நீதிமன்றம் வரை சென்று ரூற்றிங் முத்தமாரி அம்மன் ஆலயத்திற்கு பல்லாயிரம் பவுண்கள் நஸ்டம் ஏற்பட்டது.
ஆலயங்கள் ஆன்மீகத்தையும் மனஅமைதிக்கான சூழலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பணத்தினைக் குறியாகக் கொண்டு செயற்படுகின்ற தன்மை பரவலாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகின்ற விடயம். பல்வேறு கஸ்டங்கள் மத்தியிலும் ஆலயம் செல்பவர்கள் இறைவனுடன் தங்கள் கஸ்டங்களைப் பகிர்ந்துகொண்டு மனநிறைவை வேண்டிச் செல்கின்றனர். ஆனால் ஆலயத்தில் உள்ள அர்ச்சகர்களும் நிர்வாகிகளும் மனுக் காட்டைக் கொடுத்து என்ன மீல் வேண்டும் என்பது போல அர்சனை விலைப் பட்டியலை வழங்கி செலவான அர்ச்சனைகளைச் செய்ய அடியார்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு தனது பிறந்ததினத்தன்று வழிபட்டுவிட்டு வரச் சென்ற பெண்ணுக்கு அர்ச்சகர் 30 பவுண்களுக்கு அர்ச்சனை செய்வதற்கு அழுத்தம் கொடுத்து மறுக்க முடியாமல் அப்பெண் 30 பவுண்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வந்துள்ளார். மிகுந்த கஸ்டத்தில் வாழ்கின்ற அப்பெண் அன்று ஆலயத்திற்குச் சென்றது அவருக்கு பெரும் பணச் செலவை ஏற்படுத்தி இருந்தது. அப்பெண் இதனை தனது நண்பிக்கு போன் எடுத்துக் குறைப்பட்டுள்ளார்.
அதே என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் அர்ச்சகர்கள் தங்கள் ஆலயத்திற்கு வந்த வழிபட்டால் பல்வேறு நோய்கள் நீங்கும், மகப்பேறு கிடைக்கும், பரீட்சையில் சித்தியடையலாம் என்பது போன்ற அறிவிப்புக்களையும் விளம்பரங்களையும் மேற்கொண்டு வந்துள்ளனர். கீழே பெப்ரவரி 28 மாசி மகத் திருவிழா தொடர்பாக என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் வெளியிட்ட தூண்டுப் பிரசுரம் இவ்வாறு சொல்கின்றது:
‘வட இலண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் திருவருள் துணைநிற்க மார்க்கண்டேய முனிவர்களால் அருளிச் செய்யப்பட்ட தேவி மகாத்மியம் என்னும் 700 சுலோகங்களை அம்பிகையின் திருவருள் வேண்டி யார் பாராயணம் செய்கிறார்களோ அவர்களின் துன்பங்கள் நீங்கி, நோயற்ற வாழ்வும், ஐஸ்வரியமும், உயர் பதவிகளும் பெறவும், கிரக பீடைகள் நீங்கவும், புத்திர சௌபாக்கியமும், பரீட்சையில் சித்தி பெறவும், சீக்கிரம் விவாகம் நடந்தேறவும், கவலைகளும் கஸ்டங்களும் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும். எனவே அடியார்கள், என்பீல்ட் நாகபூசணி அம்பாள் திருவருள் வேண்டி வெள்ளி தோறும் ஆலயத்திற்கு வருகை தந்து கீழ்காணும் சுலோகங்களை 9 தடவைகள் பாராயணம் செய்து பாலாபிசேகம் செய்து அர்ச்சனை வழிபாடு ஆற்றி நல்வாழ்வு வாழப் பிரார்த்திக்கின்றோம்.’
என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் துண்டுப் பிரசுரம்
இந்தப் பால் குடம் ஒன்றின் விலை 10 பவுண்கள். அர்ச்சனை வேறு விலைகளில் உள்ளது. பெரும்பாலும் ஆலயங்கள் எல்லாமே தாங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு உதவுகின்றோம் என்ற போர்வையிலேயே வழிபாடுகளை நடாத்துவதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த வழிபாடுகளால் ஈட்டப்படும் வருமானம் ஊருக்கு செலவு செய்யப்படும் விபரங்கள் பற்றிய வெளிப்படையான கணக்கு விபரங்களை ஆலயங்கள் வெளியிடுவதில்லை. அதனால் அவ்வாலயங்கள் பற்றிய நம்பகத் தனமை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
தவறான விளம்பரங்களைச் செய்து பலவீனமான நிலைப்பட்டவர்களிடம் பணம் பறிக்கின்ற விடயம் இந்துமதத்திற்கு மட்டுமான பிரச்சினையல்ல. வௌ;வேறு மதநிறுவனங்களும் இதனைச் செய்கின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள சமூகப் பத்திரிகைகளில் இவற்றுக்கான விளம்பரங்களுக்கு குறையிருப்பது இல்லை. ஆனால் இவை பிரித்தானிய வர்த்தக மதிப்பீட்டு முகவரகத்தின் விதிமுறைகளுக்கு அமைவதில்லை. இதுதொடர்பாக வர்த்தக மதிப்பீட்டு முகவரகம் பிபிசி க்கு தெரிவிக்கையில் இப்பிரச்சினை பரவலாகக் காணப்படுவதாகவும் அதன் பாதிப்பின் ஆழம் அளவிடமுடியாததாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தீங்கு ஏற்படும் என்ற பயத்தினாலும் சிலர் வெட்கம் காரணமாகவும் முறையிடுவதில்லை என அவர்கள் தெரிவித்து இருந்தனர்.