எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

சிகிச்சை பெறுவதற்காக வாகனத்தில் பயணித்தவர்கள் வழியில் விபத்துக்குள்ளாகினர். ஒருவர் உயிரிழந்தார்.

வைத்திய சிகிச்சைக்காக கொழும்பு சென்று கொண்டிருந்தவர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். ஏழு பேர் படுகாயமடைந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து ‘ஹயஸ்’ வான் ஒன்றில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இவர்களின் வாகனம் நேற்றுக்காலை 5.30 மணியளவில் சிலாபம் பகுதியில் லொறி ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இதில் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த எஸ்.மரியாம்பிள்ளை (வயது 76) என்பவர் உயிரிழந்தார். அவரது மனைவி அந்தோனியம்மா (வயது 66) உட்பட ஏழு பேர் படுகாயமுற்றனர். படுகாயமடைந்த அனைவரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியை அண்டிய பகுதிகளுக்கு மின்சார விநியோகம் வழங்கப்படுகின்றது.

கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளுக்கு தற்போது மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இரணைமடுச்சந்தி, பாரதிபுரம், தொண்டமான்நகர், கிளிநொச்சி நகர்ப்பகுதி, திருநகர், கணேசபுரம். பரந்தன் ஆகிய பகுதிகளுக்கே மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. ஏனைய பகுதிகளுக்கு மின்சார இணைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மீள்குடியேறிய மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், ஏ-9 பாதையின் இருபுறமும் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் முதலானவற்றிற்கே தற்போது மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.  அழிவடைந்த, சேதமுற்ற பொதுமக்களின் வீடுகள் மீளமைக்கப்படாத நிலையில் உள்ளபோது,  அம்மக்களுக்கான மின்சார விநியோகத்தை வழங்குவது என்பது இயலாத விடயம் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஜனாதிபதி தலைமையில் ஆய்வுக் கூட்டம்; கிளிநொச்சியில் விசேட ஏற்பாடுகள்

p.jpgகிளிநொச் சியில் எதிர்வரும் 14ஆம் திகதி புதன்கிழமை நடத்தப்படவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாணத்துக்கான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்துக்கென அம்மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 44 அமைச்சர்களும் அன்றைய தினம் கிளிநொச்சி வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அன்றைய தினமே அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஆராயும் கூட்டமும் நடை பெறவிருப்பதனால் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட மற்றும் முக்கிய அதிகாரிகளும் கிளிநொச்சி வரவிருப்பதாக ஆளுநர் சுட்டிக் காட்டினார். வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுவந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் அவற்றை விரைவுபடுத்தக் கூடிய வழிமுறைகள் தொடர்பாக ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.

இவற்றைத் தொடர்ந்து அன்றைய தினம் ஜனாதிபதி கிளிநொச்சியில் வைத்து பொது மக்களுக்காக விசேட உரையொன்றையும் நிகழ்த்தவிருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அபிவிருத்திக் கூட்டம் ஆகியவற்றில் பங்கு பற்றுவதற்காக கொழும்பிலிருந்து வரும் விசேட அதிதிகளுக்கான தங்குமிட வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

அத்துடன் 13ஆம் திகதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தலைமையில் பரந்தன் மற்றும் கிளிநொச்சியில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கிளைகள் திறந்து வைக்கப்பட விருப்பதுடன் 14 ஆம் திகதி நீதிமன்ற கட்டடத்துக்கான அடிக்கல் நடும் வைபவம் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் நடைபெற விருப்பதாகவும் அதற்காக அமைச்சின் அதிகாரிகள் பலர் அங்கு வருகைதரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அமரர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரனின் 21வது நினைவு தினம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், இலங்கையின் வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து செயலாற்றிய அமரர் அமிர்தலிங்கம் மற்றும் முன்னாள் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் யோகேஸ்வரன் ஆகியோரின் 21வது நினைவுதினம் நாளையாகும். இதனையிட்டு த.வி.கூ. யாழ். மாவட்ட தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10.00 மணியளவில் கூட்டம் இடம்பெறும்.

டெங்குவினால் பாதிப்பு; பெண் டாக்டர் மரணம்

mosquito.jpgபதுளை வைத்தியசாலை டாக்டர் ஒருவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் பதுளை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று (11) மாலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் அதிதீவிர பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த இவர், லக்மாலி விஜேநாயக்க (வயது 31) எனவும் திருமணமாகாவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் பதுளை மாகாண வைத்திய சாலையில் 23 வது சிறுவர் வார்ட்டில் டாக்டராகப் பணிபுரிந்தவர். இவர் நோயாளிகளுடன் மிகவும் காருண்யமாக நடந்து கொண்டு அனைவரினதும் பெரு மதிப்பைப் பெற்று வந்தமையும் குறிப்பி டத்தக்கது.

சில நாட்களுக்கு முன் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட இவரே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். (10) நேற்று முன்தினம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இவர் அதிதீவிர சிக்சசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலணை வைத்தியசாலையில் மருத்துவமாது தூக்கில் சடலமாக மீட்பு. வைத்தியசாலை பொறுப்பதிகாரி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்!

வேலணை அரசினர் வைத்தியசாலையில் குடும்பநல மாதவாகப் பணியாற்றிய பெண்ணொருவர் கயிற்றில் சுருக்கிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுக் (July 10 2010) காலை 7.30 மணியளவில் வைத்தியசாலையில், இவரது தங்கும் அறையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. வேலணை வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த கைதடி தெற்கைச் சேர்ந்த சரவணை தர்சிகா (வயது 27) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் வேலணைப் பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது:  வேலணை அரசினர் வைத்தியசாலை பிரசவ விடுதியில்  பணியாற்றிய குடும்பநல உத்தியோகத்தர் விடுமுறையில் சென்றதையடுத்து பதில் கடமையாற்றும் பணிக்காக தர்சிகா வேலணைக்குச் சென்றார். நேற்று முன்தினம் இரவுக் கடமையில் இருந்த போது அவர் கையடக்கத் தொலைபேசியில் உரையாடியதைக் குற்றம் சாட்டி வைத்தியசாலையின் பொறுபதிகாரி டொக்ரர் பிரியந்த செனவிரட்ண என்பவர் கோபத்தில் பல தடைவைகள் சத்தமிட்டு அவரைத் திட்டியதோடு, அவரது கையக்கத் தொலைபேசியையும் பறித்துள்ளார்.

இதனால் பயந்துபோன தர்சிகா மயக்கமுற்றுள்ளார். அவருக்கு சக ஊழியர்கள் முதலுதவி சிகிச்சையளித்துள்ளனர். பின்னர் நேற்று அதிகாலை அப்பெண் தனது கடமையை ஆரம்பித்த போதும் குறிப்பட்ட வைத்திய அதிகாரி அவரை மேலும் திட்டியுள்ளார். தனது கையடக்கத் தொலைபேசியைத் தருமாறு தர்சிகா கேட்டபோது, அதனைக் கொடுப்பதற்கு அதிகாரி மறுத்துள்ளார்.

இதனையடுத்து நேற்றுக்காலை சில மணிநேரம் தர்சிகாவைக் காணவில்லை என வைத்தியசாலைப் பணியாளர்கள் தேடியுள்ளனர். பின்னர் அவரது விடுதி யன்னலைத் திறந்து பார்த்தபோது. மின்விசிறியில் தொடுக்கப்பட்ட கயிற்றில் சீருடையணிந்த நிலையில் சடலமாக  தர்சிகா தொங்குவதைப் பணியாளர்கள் கண்டுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து. ஊர்காவற்றுறை பதில் நீதவான் யாழ்.பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்  டொக்ரர் கேதீஸ்வரன், மற்றும் ஊர்காவற்றுறைப் பொலிஸார் நேரில் சம்பவ இடத்திற்குச் சென்று விசாணைகளை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைகளுக்காக பின்னர் சடலம் யாழ்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நான்கு மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியசாலைக் கட்டப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரைத் தாக்கியதாகவும், அதனால் அக்கட்டடப்பணி இடைநிறுத்தப்பட்டதாகவும், இதனையடுத்து யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேரில் சென்று சமரசம் செய்ததாகவும் கூறப்படுகின்றது.

புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிப்பு.

University of Jaffnaபுனர்வாழ்வு முகாமில் ஒரு வருடமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (10-07-2010) விடுவிக்கப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கபட்டிருந்தவர்களில் குறிப்பிட்ட ஏழு பேரே விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு ஆண்களும், மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.

Gunasegara D E W_Ministerநேற்று தெல்லிப்பழை பிரதேசச் செயலகத்தில் புனர்வாழ்வு மற்றும், மறுசீரமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் சேவையின் போதே புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.யூ. குணசேகரவால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இம்மாணவர்கள் ஏழு பேரும், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் போரினால் பாதிக்கப்பட்டு சொத்துக்களை இழந்த பத்துப்பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன.

தெல்லிப்பழை பிரதேசச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் டி.யூ, குணசேகர உரையாற்றுகையில் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது சுலபமானது அல்ல அவைப் படிப்படியாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கூறினார். 40ஆயிரம் பேரே இன்னமும் மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சிப் பகுதிகளில் கள்வர்களின் தொல்லை அதிகரித்து வருகின்றது.

மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள கிளிநொச்சிப் பகுதிகளில் கள்வர்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.  சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்துள்ள நிலையில் தங்கள் காணிகளில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ள இம்மக்களின் நகை. பணம் போன்றவற்றை இரவு வேளைகளில் சென்று அபகரித்துச் செல்லும் கள்வர்களால் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளிநொச்சி உதயநகர் மேற்கில் வசிக்கும் ஒருவருடயை வீட்டினுள் புகுந்த கள்வர்கள் அவரிடமிருந்த பணம். நகை. மற்றும் சில பொருட்களை களவாடிச் சென்றுள்ளனர். இறுதிக்கட்டப் போரில் காயமுற்றதால் நடமாடமுடியாத நிலையில் உள்ள அவரது விட்டிலேயே இக்கொள்ளளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கதவுகள். யன்னல்களற்ற வீட்டில் அவரும் அவரது குடும்பத்தினரும் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் கள்வர்கள் வீட்டினுள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

மீள்குயேற்றப்பட்டுள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் தங்கியுள்ளதால் கள்வர்களின் செயற்பாடுகளுக்கு அது இலகுவாகவுள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தை விமல் வீரவன்ஸ முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதியிடம் 4 கோரிக்கைகள்.

ww-pr.jpgதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸவின் நான்கு கோரிக்கைகள் நிறைவேற்றுவார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதிமொழி வழங்கியதையடுத்தே சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை விமல் வீரவன்ஸ முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றார். இத்தகவலை தேசிய சுதந்திர முன்னணி உறுதிப்படுத்தி உள்ளது.

அந்த நிபந்தனைகள் வருமாறு:-

1. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவை எக்காரணத்தை கொண்டும் இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது.

2. ஐ.நா நிபுணர் குழு சம்பந்தமாக விசாரணை நடத்த உள்நாட்டு நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.

3. ஐ.நாவின் எந்த நிபந்தனைகளுக்கும் உடன்பட்டு ஐ.நா நிபுணர் குழுவை விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது.

4. ஐக்கிய நாடுகள் சபையுடன் பேசி, நிபுணர்கள் குழுவை நீக்க வேண்டும்.

வீரவன்ஸவின் தாயார் மரணம்

funeral-flowers.gifநேற்று இரவு விமல் வீரவன்ஸவின் தாயார் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர தகவல் தெரிவித்துள்ளார்.