எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மழையினால் அவதியுறும் மீள்குடியமர்த்தப்பட்ட வன்னி மக்கள்!

Rainy_Dayவடக்கில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக வன்னியில் மீள்குடியமர்ந்த மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். வீடுகள் அழிவுற்ற நிலையில் தங்கள் காணிகளில் கூடாரங்களை அமைத்து வசித்து வருபவர்களும், கூரைகள் கதவுகளற்ற நிலையில் சேதங்களுடன் காணப்படும் சுவர்களுக்குள் தங்கியிருக்கும் மக்களும் இம்மழை காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தற்போது இடைக்காலத்தில் பெய்யும் மழையினால் இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் மாதங்களில் பருவ மழை பெய்யத்தொடங்கும் இப்பாதிப்புகள் அதிகமாகவிருக்கும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அழிவுற்ற வீடுகளுக்கு பதிலாக புதிதாக வீடுகளை அமைக்கு பணிகளும் சேதமுற்ற வீடுகளை புனரமைப்பதற்கான உதவிகளும் மிகவும் தாமதமாகி வருகின்றமையினால்  மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் தங்கள் சிறு பிள்ளைகளோடு என்ன செய்வதென்று தெரியாமலுள்ளனர்.

பலர் கடன்பட்டு அல்லது தங்கள் நகைகளை விற்று வீடுகளைப் புனரமைக்கின்ற போது அவ்வாறு புனரமைக்கப் படுகின்ற வீடுகளுக்கு உதவிகள் வழங்கப்பட மாட்டாது என உதவி புரியும் நிறுவன உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் காதல் தோல்வி- தமிழ் மாணவி தற்கொலை

fasebook.jpgலண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவருடன் பேஸ்புக் மூலம் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட வத்தளைத் தமிழ் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வத்தளைப் பிரதேத்தைச் சேர்ந்த 16 வயதுப் பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தமிழ்ப் பாடசாலை ஒன்றில் குறித்த மாணவி 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமான 19 வயது இளைஞர் ஒருவருடன் இணையம் ஊடாக காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட குறித்த மாணவி இறுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதல் தோல்வியில் ஏற்பட்ட விரக்தி நிலைமையே இந்தத் தற்கொலைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சி ஆதரவாளர் தீக்குளிப்பு சம்பவம் தொடர்பில் சஜித் பிரேமதாஸவிடம் விசாரணை

sajith-premadasa.jpgகட்சி ஆதரவாளர் தீக்குளித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். கட்சித் தலைமையகத்திற்கு முன்னால் றியன்சீ அல்கம என்ற கட்சியின் ஆதரவாளர் தமக்கு தாமே தீ மூட்டி உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார்.

மிரிஹான பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தற்கொலைச் சம்பவம் குறித்து சஜித் பிரேமதாஸவிடம் மிரிஹான பொலிஸார் ஒன்றரை மணித்தியாலம் வாக்கு மூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

89,000 விதவைகளுக்கு மீள் எழுச்சித் திட்டம் – இந்தியா 250 மில்லியன் ரூபா நன்கொடை

hisbullh.jpgவடக்கு, கிழக்கிலுள்ள 89 ஆயிரம் விதவைகளுக்காக விசேட மீள் எழுச்சி திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டத்தின் முதற் கட்டத்திற்கென 250 மில்லியன் ரூபாய் நிதியை நன் கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளதாக சிறுவர் மேம்பாட்டு, மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இது தொடர்பாக இலங்கை க்கும், இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப் பட்டதுடன், இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்பட இருக்கின்ற இந்த மீள் எழுச்சி திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள் ளதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கில் மொத்தமாக 89 ஆயிரம் விதவைகள் அடையாளங் காணப்பட்டுள்ள னர். இவர்களில் 49 ஆயிரம் விதவைகள் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர். 40 ஆயிரம் விதவைகள் வட மாகாணத்திலும் உள்ளனர். இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 25 ஆயிரம் விதவைகள் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் இதனை மையமாகக் கொண்டே முதற்கட்ட செயற்பாடுகளை மட்டக்களப்பி லிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப் படவுள்ள விதவைகளுக்கு தையல், விவ சாய, கணனி போன்ற துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் சுயதொழில் ஊக்குவிப்பு முயற்சித் திட்டத்தின் கீழ் ஆடு, மாடு, விவசாய உபகரணங்கள், தையல் இயந்திரங்கள் உட்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது என்றார். இந்த மீள் எழுச்சித் திட்டத்தை மேலும் விஸ்தரித்து, சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தும் வகையில் ஆராயும் பொருட்டு அடுத்த மாதம் தான் புதுடில்லி பயணமாகவு ள்ளதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கண்டி ரந்தோலி பெரஹெரவை ஜனாதிபதி பார்வையிடுவார்

கண்டி எஸல பெரஹரவின் இறுதி ஊர்வலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிடுவார். பெரஹெர இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது. கண்டி எஸல பெரஹர ஆரம்ப காலம் தொட்டு பெரஹரவின் இறுதி ரந்தோலி பெரஹர ஊர்வலத்தை நாட்டின் தலைவர் பார்வையிடுவது சம்பிரதாயமாக இருந்து வருகின்றது.

அதற்கமையவே ஜனாதிபதியும் கண்டியில் அமைக்கப்பட்டுள்ள விசேட மேடையிலிருந்து ஊர்வலத்தை பார்வையிடுவார். ஜனாதிபதியுடன் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ – மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கா மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டு ரந்தோலி இறுதி பெரஹர ஊர்வலத்தைப் பார்வையிடுவார்கள்.

வவுனியா நிவாரண கிராமங்களில் – 5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை

year5.jpgவவுனியா நிவாரண கிராமங்களிலிருந்து 689 மாணவர்கள் 5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றினார்கள். வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆறு நிலையங்களில் இவர்களுக்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு மாணவர்கள் பரீட்சை எழுதுவதையே படத்தில் காண்கிறீர்கள். வட மாகாணத்தில் மொத்தம் 18, 237 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.

இரு வாரங்களில் அரசியலமைப்பு திருத்தத்தை சமர்ப்பிக்க அரசு ஏற்பாடு

அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முற்பகுதியில் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஆளுந்தரப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.எனினும் எவ்வாறான திருத்தங்கள் அரசியலமைப்புக்குக் கொண்டுவரப்படப்போகின்றன என்பது பற்றிய விடயங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறிருப்பினும் அரசியலமைப்புத்திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சில சுற்றுப் பேச்சுகளை நடத்தியிருந்தனர்.அது மட்டுமல்லாது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கி அதற்குப் பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை நடைமுறைக்குக் கொண்டுவரப்போவதாகக் கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளுங்கட்சி அறிவித்திருந்தது.

அதுவும் எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு இருந்தால் இதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை இந்த வருடத்திற்குள்ளேயே கொண்டு வந்து விட முடியுமென்றும் அங்கு தெரிவிக்கப்பட்டது.எவ்வாறிருப்பினும் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஆட்சி முறையைக் கொண்டு வருவது பற்றிய பேச்சுகள் தற்போது நிறைவடைந்திருக்கின்றன.

அதுமட்டுமல்லாது அண்மையில் எதிரணியில் இருந்து இரு எம்.பி.க்கள் ஆளுந்தரப்பிற்குத் தாவியதால் அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்திருக்கிறது.இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே அடுத்த மாத முற்பகுதியில் அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான முஸ்தீபுகளில் அரசாங்கம் இறங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் போது அதை நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் திரட்டிக்கொள்வதற்கான முயற்சிகளிலும் அரசாங்கம் இறங்கியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றங்களில் புர்கா, ஹிஜாப் அணிய அவுஸ்திரேலிய நீதிமன்றம் தடை உத்தரவு

girls.jpgமுஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க வரும்போது புர்கா,ஹிஜாப் ஆகிய ஆடைகளை அணியக்கூடாதென அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை அவுஸ்திரேலியாவை பொறுத்த வரை இதுவே முதற் தடவையாகும். பாகிஸ்தானைச் சேர்ந்த தன்சிமா 36 என்ற பெண் ஏழு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறியவர்.

அண்மையில் இப்பெண் நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க வருகையில் புர்கா ஆடை அணிந்துகொண்டு வந்தார். இதை அகற்றிவிட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அப்பெண் தர்மசங்கடமான நிலைக்குள்ளானார்.

இவ்வாறானதொரு தடை அவுஸ்திரேலியாவில் பிறப்பிக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். இப்பெண் சார்பாக வாதாடிய சட்டத்தரணி இதை நிராகரித்தார். 17 வயது முதல் தன்சிமா புர்கா அணிந்து வருகிறார். இதை முஸ்லிம் பெண்கள் கெளரவமான ஆடையாகக் கருதுகின்றனர். எனவே நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமானதல்ல எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த நீதிபதி, புர்கா மத ஆடையல்ல. அது கலாசார ஆடையே. சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் புர்கா ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் நீதிமன்ற வளாகமும் ஒன்று. முகத்தை முற்றாக மூடிய நிலையில் சாட்சியமளிக்கப்படுகையில் முகத்தின் அபிநயத்தை கண்டுகொள்ள முடியாதுள்ளது. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் புர்கா ஹிஜாப் களையப்படவேண்டுமென்றார். இவ்விடயம் அவுஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

ரோம் இலங்கை தூதரகத்தில் நிதி மோசடி; இரு அதிகாரிகள் கொழும்புக்கு

4 ரோமிலுள்ள இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக இரண்டு அதிகாரிகளும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதுவர் ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். தாம் தூதரகத்தில் நிதி தொடர்பான பிரிவில் பணியாற்றியதுடன் மேலும் ஒரு அதிகாரியும் தம்முடன் பணிபுரிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி அதிகாரி தவறான முறையில் நிதியினைக் கையாண்டுள்ளதுடன் ஒரு சமயம் அவர் வெளியார் ஒருவருக்கு வட்டி க்குப் பணம் வழங்கியதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இது தொடர்பான உள்ளக விசாரணையின் போது அவர் இதுபற்றி தெரிவித்துள்ள தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

cricket.jpgஇங்கி லாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் ஆட்டத்தில் முகமது அமிர், சயீத் அஜ்மல் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. இங்கிலாந்து வீரர் அலாஸ்டர் குக்கின் சதம் விழலுக்கு இறைத்த நீரானது. முன்னதாக இங்கிலாந்து பாகிஸ்தான் தங்களது முதல் இன்னிங்ஸில் முறையே 233 மற்றும் 308 ஓட்டங்கள் எடுத்திருந்தன.

இந்நிலையில், வெள்ளிக் கிழமை தனது இரண்டாவது இன்னிங் ஸைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 222 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் அலாஸ்டர் குக் மட்டும் சிறப்பாக ஆடி 110 ஓட்டங்களை குவித் தார். பீட்டர்சன் (23), டிராட் (36) ஆகியோர் குறிப்பிடும் படியான ஓட்டங்களை எடுத்தனர்.

கொலிங்வுட் (3), மோர்கன் (5), பிரையார் (5), ஸ்வான் (6), பிராட் (6) என வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தது அந்த அணிக்கு சோதனையாக முடிந்தது.

148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தனது 2 வது இன்னிங்ஸைத் தொடங்கியது பாகிஸ்தான். அந்த அணியின் சல்மான் பட் (56), இம்ரான் பர்கத் (33), முகமது யூசுப் (33) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 41.4 வது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது பாகிஸ்தான்.

இதை அடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் தனது முதல் வெற்றியைப் பெற்றது அந்த அணி (1 – 2). 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்ட பாகிஸ்தான் பந்து வீச்சாளர் முகமது அமிர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் 4 வது நாளிலேயே பாகிஸ்தான் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.