எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு 59 லொறிகளில் உணவுப் பொருள்

aid-loryes1712.jpg
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேற்று 59 லொறிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. உலக உணவுத் திட்டத்தின் கீழ் இந்த உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரியொருவர் கூறினார். வவுனியா தேக்கங்காடு களஞ்சியத்திலிருந்து ஓமந்தை வரை இராணுவப் பாதுகாப்புடன் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

ஓமந்தையிலிருந்து சர்வதேச செஞ்சிலு வைச் சங்கத்தின் வழித்துணையுடன் இந்த லொறிகள் புதுக்குடியிருப்பு களஞ்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென வவுனியா மாவட்ட செயலாளர் கூறினார். இதற்கிடையில், வன்னியிலிருந்து வந்து பாதை மூடப்பட்டதனால் திரும்பி செல்ல முடியாது கடந்த ஒரு வார காலம் வவுனியாவில் தரித்து நின்ற சுமார் 300 பொது மக்களும் நேற்று நெடுங்கேணி வரை பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியின் அபிவிருத்தியை துரிதமாக முன்னெடுக்க அரசு திட்டமிட்டுள்ளது -லக்ஷ்மன் அபேவர்த்தன

laksman-yaappa.jpg
கிழக்கை விட கிளிநொச்சியை மிக துரிதமாக அபிவிருத்தி செய்ய அரசு உத்தேசித்துள்ளதாகவும் இது தொடர்பில் வடக்கு அரசியல் தலைவர்களுடன் அரசாங்கம் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து இந்தியா தலையிட வேண்டுமென வலியுறுத்த வேண்டிய அவசியம் மலேசியாவுக்கு இல்லை. எனவே, இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தேவையில்லை. இலங்கையில் நடப்பது பிரிவினை வாதம். காஸாவில் நடப்பது இன அழிப்பே. எனவே இரண்டும் வேறுபட்டது என்றும் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தேவையில்லையென மலேசிய வீடமைப்பு அமைச்சர் செய்யித் ஹமீட் அஸ்வர் மலேசிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் உலகம் நன்கு தெரிந்துகொண்டுள்ளது என்பதையே இது காட்டுகின்றது. கிழக்கிலும் பார்க்க கிளிநொச்சி அரசாங்கத்தினால் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும். அதற்கான சந்தர்ப்பம் படையினர் ஈட்டிய வெற்றியின் மூலம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் வடக்கிலுள்ள அரசியல் தலைவர்களுடன் அரசாங்கம் முதல் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் கலந்துகொண்டு இவ்விடயத்தைப் பாராட்டியதுடன் இந்திய நிவாரண உதவிப் பொருட்களை சரியாக விநியோகிப்பதற்காக நன்றி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வெற்றிக்குப் பின்னர் அரசாங்கம் படிப்படியாக வெற்றியை ஈட்டிவருகின்ற நிலையில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டிய எந்த அவசியமுமில்லை. எதிர்க்கட்சியினர் தமது அரசியல் லாபம் கருதி அரசு மீது பொய்க் குற்றம் சுமத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தர்மபுரத்தில் புலிகளின் முக்கிய நிலகீழ் முகாம் படையினரால் கண்டுபிடிப்பு

_army.jpgபடையினரால் விடுவிக்கப்பட்ட தர்மபுரம் பிரதேசத்திலுள்ள புலிகளின் பல முக்கிய முகாம்களை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தர்மபுரத்தை நேற்று முன்தினம் கைப்பற்றிய இராணுவத்தின் 58 வது படைப் பிரிவினர் அங்கிருந்து முன்னேறி மேற்கொண்ட தேடுதல்கள் மற்றும் படை நடவடிக்கைகளின் போதே இங்குள்ள முக்கிய முகாம்களைக் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 12 மணி நேரம் தர்மபுரம் பிரதேசம் முழுவதையும் சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் பாரிய தேடுதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பெருந்தொகையான குண்டுகளை தயாரிக்கும் பிரதேசம் ஒன்றை கைப்பற்றிய படையினர் அதற்கு அருகிலுள்ள பாரிய நிலக்கீழ் முகாம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலக்கீழ் முகாமிற்கு அடியில் மூன்று மாடிகள் நிர்மாணிக்கப் பட்டிருப்பதாகவும பிரிகேடியர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் தேடுதல் நடத்திய படையினர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புலிகளின் மற்றுமொரு பாரிய பயிற்சி முகாம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அந்த முகாமுக்கு அருகிலிருந்து துப்பாக்கி ரவைகள் பெருந்தொகையானவற்றை புதைத்து வைத்திருந்த கிடங்கு ஒன்றையும் பிடித்துள்ளனர்.

ட்ரக் வண்டி-01, மோட்டார் சைக்கிள்-01, உழவு இயந்திரம் –01, முச்சக்கரவண்டி –01 மற்றும் வாகனங்களையும் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். தற்பொழுது தர்மபுரத்திலிருந்து முல்லைத்தீவை நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்

கொழும்பில் மேனன் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பு

sivashankar.jpg
இலங்கைக்கு இருநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இன்று சனிக்கிழமை கண்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் அதேசமயம், நேற்று வெள்ளிக்கிழமை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் இருதரப்பு நலன்கள் சம்பந்தப்பட்ட விடயங்களுடன் வடக்கு போர் நிலவரம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா பிரிவு) ஆகிய கட்சி பிரமுகர்களுடன் மேனன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதேசமயம், நேற்று இரவு எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் மேனன் சந்திக்கவிருந்தார்.

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போது, வன்னிப்போர் நிலpவரம் குறித்து அறிந்து கொள்வதில் மேனன் அதிக ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. மக்கள் வெளியேற்றம் குறித்தும் வெளியேறும் மக்கள் கூறுவது என்ன என்பது பற்றியும் அறிந்துகொள்வதில் மேனன் அதிகம் கரிசனை காட்டியதாக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் கட்சிகளின் பிரதி நிதிகள் தெரிவித்தனர் சிவ்சங்கர் மேனனின் வருகை வழமையான இராஜதந்திர தொடர்பாடலின் ஓரங்கம் என்று கூறப்பட்டாலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறும் இலங்கை மோதலை முடிவுக்கு கொண்டுவர அழுத்தம் கொடுக்குமாறும் இந்திய மத்திய அரசாங்கத்திடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி உட்பட தமிழக கட்சிகள் பல வலியுறுத்தி வருவதன் பின்னணியாகவே மேனனின் வருகை அமைந்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இது இவ்வறிருக்க எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் ஜே.வி.பி. மேனனின் வருகையில் “உள்நோக்கம்’ இருப்பதாக சாடியுள்ளது.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்றதான அதிகாரப் பகிர்வுக்கு இலங்கை அரசாங்கம் செல்ல வேண்டுமென்ற அழுத்தத்தை சிவ்சங்கர் மேனன் கொடுக்கக் கூடுமென ஜே.வி.பி. எம்.பி. பிமல் இரட்நாயக்க கூறியுள்ளார்

வன்னியிலிருந்து வருபவர்களுக்கென விசேட பஸ் சேவை

ahathi.jpgவன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களை கொண்டு வருவதற்கென ஆறு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வன்னியில் இருந்து பெருந்திரளான மக்கள் வரத்தொடங்கியுள்ளதையடுத்தே இவ்வாறு பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் வவுனியா அரச அதிபருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு இ.போ.ச பிராந்திய முகாமையாளர் கணேசபிள்ளை கூறினார்.

வன்னியிலிருந்து வரும் மக்களை வவுனியாவில் உள்ள நலன்புரி முகாம்களுக்கு அழைத்து வருவதற்காக இந்த பஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருவதோடு தேவை ஏற்பட்டால் மேலும் பஸ்கள் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார். வன்னியில் இருந்து வரும் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அங்கிருந்து வவுனியாவில் உள்ள நலன்புரி முகாம்களுக்கு கொண்டு வரப்படுகின்றனர்.

எம்.ரி.வி. ஊடகவியலாளரை கைதுசெய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

ranil-2912.jpgஎம்.ரி.வி. ஊடகவியலாளர் செவோன் டானியலை கைது செய்ய பொலிஸார் முயற்சித்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஒரு அதிகாரியின் பேட்டியை மையமாக வைத்து ஒரு நபரைக் கைது செய்ய முயற்சிப்பது வரலாற்றில் இதுவே முதற்தடவையெனவும் சுட்டிக்காட்டினார். ஊடக சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லையென ஊடகநிறுவனங்களின் தலைவர்களிடம் ஜனாதிபதி உறுதியளித்து நான்கு மணிநேரம் கடப்பதற்குள் ஊடகங்கள்மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.                     

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகமான கேம்பிரிட்ஜ் ரெரஸில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது;

சிரச, எம்.ரி.வி.தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளரான செவோன் டானியலை பொலிஸார் வியாழக்கிழமை விசாரணைக்காக அழைப்பு விடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த செவ்வாய்க்கிழமை சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்று தொடர்பாகவே விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் செவோன் டானியல் பொலிஸாரின் கண்களுக்குப்படாமல் தற்போது மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அழைத்து ஊடகங்கள், ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக செயற்பட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் பாதுகாப்புச் செயலாளரின் பேட்டியை வைத்து செவோன் டானியலை விசாரணைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

இத்தகவல் வெளியானதையடுத்து ஜனாதிபதி செவோன் டானியலை கைது செய்யவோ விசாரணைக்குட்படுத்தவோ அவசியமில்லை என அறிவித்திருக்கின்றார். ஆனால், பொலிஸார் அதுபற்றி செவோனுக்கோ, அவரது ஊடக நிறுவனத்துக்கோ, குடும்பத்தினருக்கோ இதுவரையில் அறிவிக்கவில்லை. இதனால், அச்சம் கொண்ட நிலையில் செவோன் டானியல் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கின்றார். ஜனாதிபதியின் உத்தரவுக்குக் கூட பொலிஸார் அடிபணியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.

சிரச, எம்.ரி.வி.நிறுவனத்தை புலிகளின் குரல் என வர்ணிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் எவ்வாறு அதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது எனக்கேட்க விரும்புகின்றேன். சிரச நிறுவனம் தீ வைக்கப்பட்ட பின்னர் பொலிஸ் மா அதிபரும், ஊடக அமைச்சர்களிருவரும் அந்த இடத்துக்குச் சென்று செவோன் டானியலுடன் நிலைமைகளை கலந்துரையாடிய போது எதுவும் கூறாமலிருந்து விட்டு இப்போது செவோனை புலியெனக் கூறமுட்பட்டுள்ளனர். ஊடகங்கங்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும். அரசாங்கம் தொடர்ந்தும் ஊடகங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்க முற்பட்டால் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். இன்று தம்மை விமர்சிக்கும் ஊடகங்கள் மீது ஆளும் தரப்பினர் புலி முத்திரை குத்தும் ஒரு புதுக் கலாசாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

புதுவருடம் பிறந்தகையோடு ஊடக அடக்குமுறைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சிரச தீ வைப்பையடுத்து லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டுள்ளார். தற்போது செவோனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாளை என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை. பொலிஸ் தரப்பினர் சட்டத்தை தமது காலடியில் போட்டு மிதித்துச் செயற்படத் தொடங்கியுள்ளனர். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக தொலைக்காட்சிப் பேட்டியொன்றை மையமாக வைத்து ஒரு நபரை கைது செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி எதிர்காலம் குறித்து ஊடகத்துறையினர் பெரும் சந்தேகமும், அச்சமும் கொண்டுள்ளனர். இதனைத் தடுத்து நிறுத்த தாமதமின்றி அனைத்துச் சக்திகளும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை ரணில் விக்கிரமசிங்க இங்கு வலியுறுத்தினார்.

1069 பேர் படையினரிடம் நேற்று தஞ்சம்

displace.jpg
முல்லைத்தீவிலுள்ள புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 1069 சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பி இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருகை தரும் சிவிலியன்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக பெருமளவில் அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை நோக்கியே 1069 சிவிலியன்களும் வருகை தந்துள்ளனர். இவர்களில் 260 சிறுவர்கள், 204 சிறுமிகள், 354 ஆண்கள் மற்றும் 291 பெண்கள் அடங்குவர். யாழ். கொக்கிளாய் பிரதேசத்தை நோக்கி 234 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 80 சிறுவர்கள், 44 சிறுமிகள், 80 பெண்கள் மற்றும் 70 ஆண்கள் அடங்குவர்.

படையினர் அண்மையில் விடுவித்த கெவில் பிரதேசத்தை நோக்கி 190 சிவிலியன்கள் காலை 8.30 மணியளவில் வருகை தந்துள்ளனர். இவர்களில் 53 சிறுவர்கள், 39 சிறுமிகள், 51 பெண்கள் மற்றும் 47 ஆண்கள் அடங்குவர். வவுனியாவின் ஓமந்தைச் சோதனைச் சாவடியை நோக்கி மாலை 3.30 மணியளவில் 483 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 92 சிறுமிகள், 89 சிறுவர்கள், 178 ஆண்கள் மற்றும் 124 பெண்கள் அடங்குவர்.

கிளிநொச்சியின் புலியன் பொக்கரை பிரதேசத்தை நோக்கி 26 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 18 ஆண்கள், 04 பெண்கள், 03 சிறுவர்கள் மற்றும் சிறுமி ஒருவரும் அடங்குவர். இராமநாதபுரத்தை நோக்கி மேலும் 46 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். 15 சிறுவர்கள், 13 சிறுமிகள், 11 ஆண்கள் மற்றும் 10 சிறுமிகள் இவர்களில் அடங்குவர். புலியன்பொக்கரை பிரதேசத்தை நோக்கி மேலும் 87 சிவிலியன்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர். 20 சிறுவர்கள், 15 சிறுமிகள், 24 ஆண்கள் மற்றும் 19 பெண்களும் இவர்களில் அடங்குவர்.

புலிகளால் தமக்கு நாளுக்கு நாள் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதாகவும் இதனை அடுத்தே தாங்கள் வரத் தொடங்கியதாகவும் இந்த மக்கள் தெரிவித்ததாக குறிப்பிட்ட பிரிகேடியர், எதிர்வரும் நாட்களில் மேலும் பெருந்தொகையான சிவிலியன்கள் வருவதற்குத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரணைமடு குளமும் அண்மித்த பகுதியும் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில்- 6 வது விமான ஓடுபாதையும் நேற்று கண்டுபிடிப்பு:

_army.jpgபுலிகளின் மற்றுமொரு முக்கிய பிரதேசமான இரணைமடு குளக்கட்டையும் அதனை அண்மித்த பிரதேசம் முழுவதையும் பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதேவேளை, இரணைமடு குளத்திற்கு தென்கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள மற்றுமொரு விமான ஓடுபாதை ஒன்றையும் இராணுவத்தினர் நேற்றுக்காலை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் ஆறாவது விமான ஓடுபாதை இதுவென தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர், முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினரே இரணைமடு குளக்கட்டு பிரதேசம் முழுவதையும், அதற்கு அண்மித்த பிரதேசத்தில் அமைந்துள்ள விமான ஓடுபாதையையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமும், 200 மீற்றர் அகலமும் கொண்ட விமான ஓடுபாதையை படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இரணைமடு குளக்கட்டு அதன்வான் கதவுகளுடன் மூன்று கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதென தெரிவித்த பிரிகேடியர், இங்கிருந்து இருமுனைகள் ஊடாக இராணுவத்தினர் தமது முன்னேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இரணைமடு குளமும் அதன் சுற்றுப்புறங்களும் நீண்டகாலமாக புலிகள் வசம் இருந்துள்ளதுடன் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இந்தப் பகுதி விளங்கியுள்ளது. தற்பொழுது இந்த குளம் முற்றாக நீர் நிரம்பிக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரணைமடு குளத்திலிருந்து மேற்கு புறத்தை நோக்கி புலிகள் பாரிய மண் அரண்களை நிர்மாணித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். புலிகளின் ஆலோசகரான (காலஞ்சென்ற) அன்டன் பாலசிங்கம் வன்னிக்கு விஜயம் செய்தபோது இந்த குளத்தில்தான் அவர் பயணம் செய்த கடல் விமானம் தரையிறக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி- முல்லைத்தீவு மாவட்ட எல்லைகளை இணைக்கும் பிரதேசமாக இரணைமடு குளம் விளங்குவதாக தெரிவித்த பிரிகேடியர், இந்தப் பிரதேசத்தில் புலிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான மோதல்களுக்கு பின்னரே இரணைமடு குளத்தை பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு, விசுவமடு, ராமநாதபுரம் பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் 6 சடலங்கள், பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வாகனங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இல‌ங்கை ‌பிர‌ச்சனை‌யி‌ல் ம‌த்‌திய அரசை ந‌ம்பலா‌ம் : கருணாநிதி

karunanithi.jpgஇல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் நலமான முடிவுக்கு ம‌த்‌திய அரசை நாம் நம்பியிருக்கலாம் என்று முத‌ல்வர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர். இதுகு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கைப் பிரச்சனையில் கட‌ந்த ஐம்பதாண்டு காலமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்து விட்டேன், இன்னும் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கே விட்டு விடுகிறேன்.

இதனிடையே மத்திய அரசின் அயலுறவு‌ச் செயலர் சிவசங்கர் மேனன், இன்றைக்கு இலங்கை சென்றுள்ளதும் முக்கியமானதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும் -இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பதுதான் நலம் என்றும் – நலமான முடிவுக்கு இந்தியப் பேரரசை நாம் நம்பியிருக்கலாம் என்றும் கருதுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.  

இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தது! : த ஜெயபாலன்

Protest_01_16Jan09‘Who killed Lasantha? Mahinda Rajaparksa’s government killed Lasantha’ –  ‘யார் லசந்தாவைக் கொன்றது? மகிந்த அரசே கொன்றது’ என்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ஓங்கி ஒலிக்கப்பட்டது. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து ஜனவரி 16 மாலை 4:30 மணிக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக  இடம்பெற்ற கண்டனப் போராட்டத்திலேயே இலங்கை அரசின் மீதான கடுமையான கண்டனம் ஓங்கி ஒலிக்கப்பட்டது. இக்கண்டனப் போராட்டத்தை தேசம்நெற், கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல், எக்சைல் ஜேர்னலிஸ்ட் நெற்வேர்க் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. ஜனவரி 15 பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்திற்கும் தேசம்நெற் தனது முழுமையான ஆதரவை வழங்கி இருந்தது தெரிந்ததே.

சண்டே லீடர் அசிரியர் லசந்த விக்கிரமதுங்கா உட்பட இலங்கையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பாக சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்! ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்! யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்! தமிழ் சிங்கள் முஸ்லிம் மலையக மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்! சாதாரண மக்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்! ஏனைய சிறுபான்மை இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட வேண்டும்! என்பவற்றை முன் வைத்து இப்போராட்டம் நடாத்தப்பட்டது. இக்கண்டனப் போராட்டத்தில் தமிழர்கள் அல்லாத பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் கலந்துகொண்டு இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தங்கள் குரல்களை ஓங்கி ஒலித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இனங்களுக்கு இடையேயான நீதிக்கும் சமத்துவத்திற்குமான அமைப்பினரும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்கி இருந்தனர். ‘நாங்கள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் லண்டன் விஜயத்தைக் கண்டித்து இடம்பெற்ற போராட்டத்திற்கு தயாரிக்கப்பட்ட பதாகைகளை இப்போராட்டத்திற்கும் எடுத்து வந்தோம். அன்றும் சரி இன்றும் சரி மகிந்த அரசு தனது பாசிசப் போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறது’ என்று அவ்வமைப்பின் உறுப்பினர் சபா நாவலன் தெரிவித்தார். ‘ஆறு மாதங்களுக்கு முன் அந்த வசனங்களை எழுதும் போதிருந்த மகிந்த அரசின் ஒடுக்குமுறைகள் இன்னும் இன்னும் மிகுதியாகிச் சென்று இன்று லசந்த போன்றவர்களின் கொலைகளில் முடிந்து உள்ளது என்று தெரிவித்தார் சபா நாவலன்.

எஸ்எல்டிஎப் அமைப்பினரும் இக்கண்டனப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அங்கு வந்திருந்த எஸ்எல்டிஎப் முக்கியஸ்தர் ஒருவர் கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனலின் பனரை கழற்றி அநாகரீமாகச் செயற்பட்டதாக கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல் அமைப்பின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனை சொலிடாரிற்றி போர் பீஸ் அமைப்பின் ஆதரவாளர் ஒருவரும் உறுதிப்படுத்தினார்.

‘Stop! War on Journalists’ என்ற பிரசுரமும் அங்கு விநியோகிக்கப்பட்டது. எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, சுயாதீன ஊடக இயக்கம், சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம், எக்சைல் ஜேர்னலிஸ்ட் நெற்வேக் ஆகிய அமைப்புகள் இப்பிரசுரத்தை வெளியிட்டு இருந்தன.

ஜனவரி 08  கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெகிவளை – அத்துருகிரிய வீதியில்  காலை 10:30 மணியளவில் சண்டே லீடர் பிரதம ஆசிரியர்லசந்த விக்கிரமதுங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் கடுமையான காயமடைந்த அவர், களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் பிற்பகல் 2:00 மணியளவில் உயிரிழந்துள்ளார். அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து பிரதி புதன்கிழமை தோறும் வெளிவரும் “மோர்ணிங் லீடர்” வார ஏட்டின் ஆசிரியராகவும் லசந்த விக்கிரதுங்க இருந்தார்.

Protest_02_16Jan09சண்டேலீடர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மூலம் தனது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ச வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ‘மிக்’ விமான கொள்வனவில் முறைகேடு இடம்பெற்றதாக அவதூறான செய்திகள் வெளியிட்டதால் தனக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்த கோதபாய ராஜபக்ச லண்டே லிடர் வெளியீட்டாளர்களுக்கும் அதன் ஆசியிரயர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் எதிராக வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கில் கோதாபய ராஜபக்ஷ பற்றிய செய்திகளை வெளியிடக் கூடாதென “சண்டே லீடர்’ பத்திரிகைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களில், 50 க்கும் அதிகமான ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் நேரடியாக தமது கருத்துக்களுக்காக கொல்லப்பட்டமை ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக War of Words : Freedom of Expression in South Asia – May 2005 அறிக்கையில் Article 19 என்ற ஊடக உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு நாடுகளை பத்திரிகைச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தியுள்ளது. 167 நாடுகளைக் கொண்ட 2005ம் ஆண்டு வரிசைப்படுத்தலில் இலங்கை 115வது இடத்தில் உள்ளமை இலங்கையில் ஊடகங்களின் நிலையை விளங்கிக் கொள்ள உதவும்.

லசந்த விக்கிரமதுங்க தனது படுகொலைக்கு இரு வாரங்களுக்கு உள்ளாகவே மற்றுமொரு ஊடகவியலாளரான சோனாலி சமரசிங்கவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அண்மையில் சிறந்த ஊடகவியலாளருக்கான சர்வதேச விருது ஒன்றினை சோனாலி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசுக்கு எதிரான லசந்தாவின் எழுத்துக்களுக்கு இவரும் உறுதுணையாக இருந்தவர். இவர் இன்றைய மகிந்த அரசின் கடுமையான விமர்சகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லசந்தவின் மரணம் இலங்கை ஊடகவியலாளர் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. லசந்தவின் படுகொலைக்கு 24 மணிநேரத்திற்கு முன் ஜனவரி 6 அன்று மகாராஜா நிறுவனத்தின் சிரச தொலைக்காட்சி தாக்குதலுக்கு உள்ளானது. மேலும் கடந்த ஆண்டு சண்டே லீடர் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டதும் தெரிந்ததே.

லசந்தாவின் கொலைக்கான சூத்திரதாரியாக மகிந்த அரசு நோக்கியே விரல்கள் நீள்கின்றன. ஆனால் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடிய விதத்தில் செயற்படும் சக்திகளை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ஜனவரி 14 அன்று அலரி மாளிகையில் தன்னைச் சந்தித்த சட்டத்தரணிகளைக் கேட்டுள்ளார். இலங்கையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் அன்று ஜனாதிபதியைச் சந்தித்தனர். பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் இறுதிக் கட்டத்துக்கு படைத்தரப்பு முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் சில தீய சக்திகள் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சதித்திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக கூறியிருக்கும் ஜனாதிபதி எத்தகைய சவால்களுக்கும் முகங்கொடுக்ககூடிய பலம் அரசுக்கு இருப்பதாகவும்  மிரட்டல் தொனியில் குறிப்பிட்டு உள்ளார். இது மகிந்த அரசு தன் மீது வரும் விமர்சனங்களைத் எவ்வாறு திட்டமிட்ட முறையில் கையாளப் போகின்றது என்பதற்கு கட்டியம் கூறுவதாகவே உள்ளது.