யாழ். குடாநாட்டின் அபிவிருத்திப் பணிகள் அனைத்தையும் ஆரம்பித்து வைத்துவிட்டு வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள மக்கள் மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுக்கவிருப்பதால் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் தங்களது முழுமையான பங்களிப்புகளை வழங்க முன்வர வேண்டும். சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ். மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்களை அண்மையில் சந்தித்து சமூக மட்டத்திலான பல்வேறு வேலைத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது, எம்மக்களின் நலன்சார்ந்து உழைப்பதற்கு எமக்குக் கிடைத்த பல்வேறு அரிய சந்தர்ப்பங்களை தமிழ்த் தரப்பு அரசியல் தலைவர்களும், ஆயுதமேந்திய இயக்கங்களும் ஒழுங்குற பயன்படுத்தத் தவறியதால், இன்று எம்மக்களுக்கு இவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இனி மேலும் நாம் இந்த வரலாற்றுத் தவறுகளை செய்யக் கூடாது. நொந்து, நொடிந்து போயிருக்கும் எமது சமூகத்தை தூக்கி நிறுத்துவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் பங்களிப்புகளை வழங்க முன்வர வேண்டும்.
தத்தமது தனிப்பட்ட வளர்ச்சியினை மாத்திரம் கருத்திற் கொள்ளாமல், அனைவரும் எமது சமூக மேம்பாடு கருதி சிந்தித்து செயற்பட முன்வர வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்தினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவர், சுமார் இரண்டு தசாப்த காலத்திற்கும் மேல் இடம்பெற்ற யுத்தம் காரணமாகவும் இயற்கை காரணமாகவும் ஏற்பட்டுள்ள அழிவுகளை இருவருட காலத்திற்குள் மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இதற்கு அனைத்துத் தரப்பினரதும் பங்களிப்புகள் அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின்போது சமூக சேவைகள் உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய புதிய வேலைத் திட்டங்கள் போன்றவை தொடர்பிலான திட்ட அறிக்கைகள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன. இந்த அறிக்கைகளை ஆராய்ந்து, இவற்றில் அடங்கியிருக்கும் விடயங்கள் குறித்து மீளக் கலந்துரையாடி உரிய வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.