எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி மிகவும் தெளிவாக உள்ளார் – டக்ளஸ் தேவானந்தா

விடுதலைப்புலிகளின் பிரச்சினை வேறு, தமிழ் மக்களின் பிரச்சினை வேறு என்பதை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளேன். ஏற்கனவே எமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைமைகள் இவ்விரு பிரச்சினைகளையும் வெவ்வேறாக்கிப் பார்ப்பதற்கு தவறிவிட்டன என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புலிகளின் பிரச்சினையை வேறாகவும் தமிழ் மக்களது பிரச்சினையை வேறாகவும் பார்த்து வருவதால் தமிழ் மக்கள் தொடர்பில் அவர் மிகவும் தெளிவாக உள்ளார். எனவே எமது மக்களது எதிர்காலம் குறித்து எவ்வித தயக்கமும் இருக்கத் தேவையில்லை என்று சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சரும் வடமாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை ஞாயிற்றுக்கிழமை சென்று சந்தித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததாக அமைச்சின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா; இந்த மக்கள் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தங்க வைக்கப்பட்டிருப்பது தற்காலிக ஏற்பாடாகும். விரைவில் இந்நிலைமையில் மாற்றங்கள் ஏற்படும். இம்மக்களின் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நாலாயிரம் மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். எனவே தற்காலிகமாக இங்கு தங்கியுள்ள மக்களின் நலன்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கூடிய விரைவில் இம்மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் இம்மக்களுக்குகென கூட்டுறவு சங்கக்கடை ஒன்றை திறப்பதற்கும் உறவினர்கள் அவர்களை சந்திப்பதற்கும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்போருக்கு கற்கைகளுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அரச பணிபுரிபவர்கள் தங்களது பணிகளை மேற்கொள்வதற்கும் மக்களுக்கான தொலைபேசி வசதிகளை செய்து கொடுப்பதற்கும் விளையாட்டு மைதான வசதிகளை விஸ்தரித்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர்த்து ஒரே இடத்தில் தங்கவைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததுடன் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் வரை நம்பிக்கையுடனும் மனமகிழ்ச்சியுடனும் இருக்கும்படியும் இம்மக்களைக் கேட்டுக்கொண்டார

ஓர் இனத்தை அழித்துவிட்டு இன்னொரு இனம் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை – அமைச்சர் ஜயரட்ன தெரிவிப்பு

election_.jpgஅரசாங்கம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டை மீட்க யுத்தத்தை முன்னெடுக்கின்றதே தவிர, தமிழ் மக்களை அழிப்பதற்கல்ல என்று பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.ஜயரட்ன குறிப்பிட்டார். கம்பளை, தெல்பிடியில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

ஓர் இனத்தை அழித்து விட்டு மற்றுமோர் இனம் நிம்மதியுடன் வாழ்ந்ததாக சரித்திரத்தில் கிடையாது. அரசு தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் புரியவில்லை. நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து காப்பாற்றவே யுத்தம் செய்கின்றது. மாகாண சபைத் தேர்தலில் சிறுபான்மை மக்கள் வழங்கும் ஆதரவு அரசின் சக்தியை உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் பலப்படுத்தும். எனவே சிறுபான்மை மக்கள் அரசை பலப்படுத்த முன்வர வேண்டும்.  இலங்கை சகல இன மக்களும் வாழும் நாடாகும். எனவே சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதம் இன்றி இந்நாடு சகல இனங்களுக்கும் சொந்தமானதாகும்.

அழகாக பேசவும், மக்களை தூண்டிவிடவும் ஜே.வி.பி.யினரால் மாத்திரமே முடியும்- சமல் ராஜபக்ஷ

எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் பயங்கரவாதிகளுடன் யுத்தம் செய்தல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடல் மற்றும் “நாட்டைக்காட்டிக்கொடுக்கும் கைங்கரியங்களில் ஈடுபடுதல் போன்ற காரணங்களுக்காக முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன’என்று நீர்ப்பாசனம், துறைமுகம் மற்றும் விமான தேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாவுலவேமெடில்ல குளத்தின் நீர்ப்பாசன திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததாவது;

பயங்கரவாதிகள் மாவில் ஆற்று நீரை மூடிக் கொண்டிருந்ததுபோல இந்த வேமெடில்ல குளத்து நீரை விவசாயிகளுக்குத் திறந்து விடாமல் மூடிக்கொண்டிருக்க அனுமதிக்க முடியாது. இக்குளத்தின் நிர்மாணப் பணிகள் 2001 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது முதல் தமது நிலங்கள், வீடு வாசல்களை இழந்த வேவெல தம்புள்ள மற்றும் நாவுல பிரதேச செயலகப்பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மாற்று நிலங்களும், இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 225 குடும்பங்களுக்கும் 582 காணித்துண்டுகள் விரைவில் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.மதிப்பீட்டுத் திணைக்களப்பிரிவில் ஏறுபட்டுள்ள கால தாமதத்தினால் உரிய நேரத்தில் காணிகளையோ இழப்பீட்டுத் தொகைகளையோ வழங்க முடியாமல் போயுள்ளது.

எவருக்கும் எவ்வித குற்றங் குறைகளை செய்வதற்கோ, தீங்குகள் செய்வதற்கோ மகிந்த ராஜபக்ஷ ஒருபோதும் ஆயத்தமில்லை. அதனால்தான் அவர் பதவிக்கு வந்ததும் தன்மீதுதாக்குதல்களை மேற்கொண்ட தமது கடமைகளுக்கு செய்தவர்களையும் அனைத்துக் குழுக்களையும் இடையூறு ஒன்றிணைத்து புதிய ஸ்ரீலங்காவை கட்டயெழுப்புவதற்கு ரணில் விக்கிரமசிங்கஹ உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.கட்டியெழுப்பும் பணியில் இணைத்துக் கொள்வதில் ஜனாதிபதி வெற்றி பெற்றுள்ளார். ஏனைய கட்சிகள் இன்று பிளவுபட்டு சிதைந்துபோயுள்ளன. வேமெடில்ல நீர்த்தேக்கத்திற்கு இன்று முதல் “ரீ.பீ,தென்னக்கோன் குளம்’ எனப் பெயரிடப்படுகிறது.

காலஞ்சென்ற ரீ.பீ.தென்னக்கோன் தம்புள்ள தொகுதி மக்களுக்கு செய்த தேவையை நினைவு கூரும் முகமாக இப்பெயரில் இக்குளம் இன்று முதல் அழைக்கப்படும். இக்குளத்து நீரின் மூலம் 6650 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பதில் நாம் பெருமை அடைகிறோம். பயங்கரவாதிகளிடமிருந்து எமது நாட்டை இன்னும் சில தினங்களில் மீட்டுக்கொள்வோம். கிழக்கை நாம் விடுவித்த கையோடு ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகமொன்றை அமைக்கும் பணிகளை ஆரம்பித்தோம். கொழும்புத் துறைமுகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக வருடக்கணக்கில் பேச்சுவார்த்தைகளை அப்போது அதிகாரத்திலிருந்தவர்கள் நடத்தினார்கள். வருடாந்தம் திட்டங்களை வகுத்தனர். செயல்வடிவம் பெறவில்லை. ஆனால், ஜனாதிபதியின் ஆலோசனையின்பேரில் கொழும்புத் துறைமுகத்தை விரிவு படுத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யுத்தம் செய்வதுடன் அபிவிருத்திப் பணிகளையும் அரசாங்கம் முன்னெடுத்துச்செல்கிறது என்பதை நீங்கள் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம். பிரபாகரனால் நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடுபாதைகளில் எமது விமானங்கள் தரித்து நிற்கும் நாள் வெகு தொலைவிலில்லை’ என்று கூறினார்

மூவின மக்களும் சுதந்திரமாக வாழவேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சிக்கு வரவேண்டும் – ரணில் விக்கிரமசிங்க

இந் நாட்டில் இன,மத,பேதமில்லாமல் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டுமானால், ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சிக்கு வரவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நகரில் நடைபெற்ற ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; நாட்டு மக்களையும் நாட்டையும் பாதுகாப்பது ஜனாதிபதியின் கடமையாகும். மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக உள்ள இந்த மூன்று வருடகாலத்தில் அவர் மக்களுக்கு என்ன செய்துள்ளார்? 48 ஆயிரம் பேருக்கு ஒருவேளை உணவு வழங்குவதாக கூறுகிறார். தற்பொழுது யுத்தம் நிறைவு பெற்றுவருவதால் மூன்று வேளையும் அவர் உணவை வழங்கவேண்டும். நாடு அபிவிருத்தியடைந்துள்ளதென்று மேடைகளில் கூறி வருகிறார்கள். ஆனால், இந்நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை மாத்திரம்தான் அபிவிருத்தியடைந்திருக்கின்றது.

இந்த அரசாங்கம் யுத்தத்தைக் காரணம் காட்டி தங்களது இயலாமையை மறைத்து வருகின்றது. யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் யுத்தம் நிறைவடைந்து விட்டதாகவும் கூறிவருகின்றனர். அப்படியானால் மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசாங்கம் வழங்க வேண்டும். யுத்தம் முடிந்துவிட்டது என்று கூறிய அரசாங்கம் இப்போது மக்களிடம் சிக்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டில் நாளுக்கு நாள் மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துச் செல்கின்றன. இதைப்பற்றிப் பேசினால், யுத்தம் நிறைவு பெறும்வரை பொறுத்திருக்கும்படி கூறுகின்றனர். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கும்படி கேட்டால் யுத்தம் முடியும்வரை வயிற்றை இறுக்கி கட்டிவைத்திருக்கும்படி கூறுகின்றனர். ஆனால் அமைச்சர்களுக்கு மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாவால் சம்பளத்தை அதிகரித்துள்ளனர். வீட்டு வாடகை என்று கூறி ஒரு மாதத்திற்கு ஒரு இலட்சம் ரூபா பெற்றுக் கொள்கின்றார்கள். எல்லா அமைச்சர்களும் தங்களது சொந்த வீட்டில் அல்லது அரசாங்க வீடுகளில் தங்கியிருக்கின்றார்கள்.

இன்று இந்நாட்டில் பல ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. சுற்றுலாத்துறையும் மரக்கறி உற்பத்தியும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்பொழுது யுத்தத்தை நிறைவு செய்வதற்காக மத்திய மாகாணசபையை தரும்படி கேட்கின்றார்கள். தேயிலை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு பெருந்தோட்ட, சிறுதோட்ட தேயிலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு மானியம் வழங்க நிதி இல்லையென்று கூறியவர்கள், ஜனாதிபதியின் சகோதரரான கோதாபய ராஜபக்ஷவின் விமான சேவைக்கு கோடிக் கணக்கான ரூபாவை வழங்கியுள்ளார்கள்.

இந்நாட்டில் பிரதான தொழிலான தேயிலை உற்பத்திக்கு உதவி செய்ய முடியாதென கூறியுள்ளார்கள். இந்தியாவும் இந்தோனேசியாவும் தேயிலை தொழிலுக்கு உதவிசெய்துள்ளன. கடந்த வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அமைச்சர் சந்திரசேகரன் என்னைச் சந்தித்து கூட்டு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்து வரவு செலவுத் திட்டத்தில் தோட்ட தொழிலாளர்களுக்குச் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்த்து வாக்களிக்கப்போவதாக கூறினார்.

ஆனால். இரண்டு நாட்களுக்கு பின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார் இச் செயல் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகும். தோட்டத் தொழிலாளர்களின் பிரதான உணவான கோதுமை மாவின் விலை உயர்வை எதிர்த்து நாங்கள் பாராளுமன்றத்தில் பேசிய பொழுது ஆறுமுகம் தொண்டமானும், சந்திரசேகரனும் வாய் திறக்காமல் இருந்தார்கள். இன்று வடமாகாணத்தைப் பிடிப்பதற்காக மத்திய மாகாணத்தில் அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு கூறுகின்றார்கள். அத்தோடு பெருந்தோட்ட இளைஞர்களை கைது செய்வதற்கும் அரசாங்கத்திற்கு வாக்களிக்கும்படி கூறுவார்கள்.

இன்று வெளிமாவட்டங்களுக்கு தொழிலுக்காகச் சென்ற பல மலையக இளைஞர்களை வெள்ளை வானில் கடத்தியுள்ளார்கள். அவர்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தவர்கள் அல்ல. மலையக இளைஞர்கள் கொழும்பிலோ அல்லது வேறு மாவட்டங்களிலோ தொழில் செய்ய முடியாத நிலையில் அவர்கள் வேலை இல்லாமல் தோட்டப் பகுதியிலே முடங்கிக் கிடக்கின்றார்கள். இந்த இளைஞர்கள் தனி நாடு கேட்கவில்லை. இந்த நாட்டை பிரிக்க விடமாட்டோம். எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றே கூறிவருகின்றார்கள்.

கோதாய ராஜபக்ஷ இந்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் உரிமை இல்லை என்று கூறுகின்ற பொழுது ஆறுமுகம் தொண்டமானும், சந்திரசேகரனும் ஏன் வாய்திறந்து பேசாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழ் மக்களைப் பற்றி பேசுவதற்கு உரிமை இல்லாததால் மௌனிகளாக இருக்கின்றார்கள். இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற நோக்கிலேயே ஐ.தே.க.செயல்பட்டு வருகின்றது. எனவே, எதிர்வரும் தேர்தல்களில் ஐ.தே.கட்சியை மக்கள் வெற்றிபெறச் செய்யவேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் ஐ.தே.க.பிரதித் தலைவர் கருஜயசூரிய, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உட்பட உறுப்பினர்களும் உரையாற்றினார்கள்.

பதிவு செய்யப்படாத மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சங்கம் கோரிக்கை

நாடு முழுவதும் பதிவு செய்யப்படாது இயங்கிவரும் மருந்து விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, கிராமப் புறங்களில் இயங்கி வரும் இவ்வாறான மருந்து விற்பனை நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற் கொண்ட ஆய்வில், 1981 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க சட்டத்திற்கிணங்க, மருந்துகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் கீழ், 2300 மருந்து விற்பனை நிலையங்கள் மாத்திரம் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய தகைமைகளைக் கொண்டிராத மருந்துக் கலவையாளர்கள் பணிபுரியும் மருந்து விற்பனை நிலையங்கள் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார திணைக்களத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டுள்ள மருந்து விற்பனை நிலையங்களில், உரிய தகைமைகளை கொண்ட மருந்துக் கலவையாளர் ஒருவராவது மருந்து விற்பனையின் போது பணிபுரிவது கட்டாய மெனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்சமயம் மருந்து விற்பனைக்கான உரிய தொழிற்தகைமைகளை கொண்டுள்ள 6800 மருந்தாளர்கள் இலங்கையில் உள்ளனர். உரிய அனுபவம், தகைமைகளைக் கொண்டிராத மருந்தாளர்கள் தவறான மருந்துகளை விநியோகிப்பதால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நோயாளர்கள் இதனால் மரணத்தையும் எதிர் நோக்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கில் சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் இன்று வவுனியா அரச அதிபரிடம் கையளிப்பு

cm.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு கிழக்கு மாகாணத்தில் சேகரிக்கப்பட்ட உலர்உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் ஒரு தொகுதியை இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா அரச அதிபர் ஊடாக கிழக்கு மாகாணமுதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கையளிக்கவிருக்கிறார்.

இதற்காக வவுனியா சென்றுள்ள முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வவுனியா மாவட்டச் செயலகத்தில் வவுனியா அரசாங்க அதிபரைச் சந்திப்பதுடன் நலன்புரி முகாமுக்கும் விஜயம் செய்து வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து நிவாரணப்பொருட்களைக் கையளிப்பார் என்று முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கையளிக்கப்படவிருக்கும் முதலாவது தொகுதி உலர்உணவு நிவாரணம் சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியானது. இடம்பெயர்ந்து வரும் வன்னி மக்களுக்கு வழங்குவதற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் அமைப்புகள், ரி.எம். வி.பி. கிளைகள் மூலம் முதலமைச்சரின் வழிகாட்டலில் உலர் உணவுப்பொருட்கள் வீடுவீடாகச்சென்று சேகரிக்கப்பட்டு வந்தன. அவற்றின் ஒரு தொகுதியே இன்று வவுனியாவில் கையளிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கோர்ட் முன் தீக்குளிக்க காங். வக்கீல் முயற்சி

 நாகர்கோவில் கோர்ட் முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க வக்கீல் ஒருவர் முயன்றதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் கோர்ட் வாளகத்தின் முன் வக்கீல் ஒருவர் பெட்ரோல் நிரம்பிய பாட்டில் ஒன்றுடன் வந்தார்.

பின்னர் அவர் இலங்கை தமிழர் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக அறிவித்தார். இதையடுத்து கோர்ட் வளாகத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பறித்தனர். விசாரணையில் அவர் நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல் கோசல்ராம் என்றும் அவர் ஒரு காங்கிரஸ் பிரமுகர் என்பது தெரிய வந்தது

விசுவமடு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்கா 500 பொதுமக்கள் கொல்லப்பட்ட போது கண்டனம் தெரிவிக்காதது ஏன்?- செல்வம் அடைக்கலநாதன்

selvam.jpgசிறி லங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவமடு பகுதியில் நேற்று நடைபெற்ற குண்டுத் தாக்குதலுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 500-க்கும் அதிகமானோர் காயப்பட்ட போதும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் உண்மை நிலைமை என்னவென்று யாருக்கும் தெரியாது. அத்துடன் அப்பிரதேசத்தில் போர் தீவிரமாக நடைபெறுகின்றது. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைத்தரப்பும் கூறுகின்ற கதைகளை கேட்டு எப்படி கண்டனம் தெரிவிக்க முடியும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று விடுதலைப் புலிகளிடம் வேண்டுகோள் விடுத்து கண்டனம் தெரிவித்த கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் வாழும் அகதிகள் தொடர்பான முழு விபரங்களும் வெளியிடப்படவேண்டும்:ஆனந்த சங்கரி

sangari.jpgஇடம் பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் தொடர்பான முழு விபரங்களையும் வெளியிடுவதன் மூலம் அது அவர்களின் உறவினர்களின் பதட்டத்தையும், அச்சத்தையும் போக்குவதுடன் அவர்களுக்கு வேண்டிய சில தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வன்னியில் விடுதலைப் புலிகளிடமிருந்து உயிரை பயணம் வைத்து தப்பி ஓடி வவுனியா பிரதேசத்துக்குள் வந்துள்ள இடம் பெயர்ந்த மக்களைப் பற்றிய அறிய மிக ஆவலாக அவர்களின் உறவினர்கள் பிற நாடுகளிலிருந்து பல தொலைபேசி அழைப்புக்கள் நேற்றும் இன்றும் வந்து கொண்டிருக்கின்றன. முதலில் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்பதையும். அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதையும் அறிய விரும்புகின்றனர். அப்பாவி மக்களை விடுவிக்குமாறு சர்வதேச அமைப்புக்களாகிய ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் கூட்டுத் தலைமை நாடுகள் மற்றும் அமெரிக்கா கனடா, பிரித்தானியா இந்தியா போன்ற நாடுகளும் விடுதலைப் புலிகளை வேண்டியுள்ளன. தமிழ்நாடோ, தமிழ் தேசிய கூட்டணியினரோ விடுதலைப் புலிகளிடம் இத்தகைய வேண்டுகோள்களை விடுக்காதது துரதர்pஷ்டமே. அதைவிடுத்து அவர்கள் இன்றும் வெளியிட்டுள்ள முட்டாள்தனமான அறிக்கை அதிர்ச்சியைத் தருகிறது.

நான் தங்களிடம் மூன்று கோரிக்கைகளை விடுக்க விரும்புகிறேன். முதலாவதாக யார் யார் இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ளார்களோ அவர்களின் பெயர் விபரம், தற்போது தங்க வைக்கப்பட்டள்ள இடம் போன்ற விபரம் அடங்கிய பட்டியலை வெளியிட வேண்டும். அது அவர்களின் உறவினர்களின் பதட்டத்தையும், அச்சத்தையும் போக்குவதுடன் அவர்களுக்கு வேண்டிய சில தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும்.

இரண்டாவதாக, வந்துள்ளவர்களில் முதியோர், சிறு பிள்ளைகள், நோய்வாய்ப்பட்டுள்ளோரை வவுனியாவில் உள்ள அவர்களின் உறவினர்கள் ஏற்பார்களேயானால் அவர்களை அனுமதிப்பதோடு எஞ்சியவர்களை உரிய விசாரணையின் பின் அவர்களின் பெற்றோரிடம் கையளிக்கலாம். எனது வேண்டுகோள்களுக்கு ஆதரவாக இரு சம்பவங்களை குறிப்பிட விரும்புகின்றேன். எனக்குத் தெரிந்த கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் இரு கால்களும் அற்ற நிலையில் மன்னார் வைத்தியசாலையில் நினைவிழந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் குடும்பத்தினர் பற்றிய செய்தி எதுவும் தெரியாத நிலை உறவினரை தேடித் தருமாறு என்னைத் தொந்தரவு செய்கின்றனர். மற்றுமோர் சம்பவத்தில் ஓர் பெண்மணி ஒரு காலில் படுகாயப்பட்டு அவரின் தாயார் அவரை மன்னார் வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கின்றார். மறுநாள் வவுனியா வந்த அவர் கணவர் வவுனியா வைத்தியசாலையில் தன் மகன் ஒருவரை பராமரிக்கின்றார். இவர்களை அவர்களின் உறவுக்காரர்கள் அவர்களை தம்முடன் தம் வீட்டில் வைத்திருக்க சம்மதம் தெரிவிக்கின்றனர்.

எனது மூன்றாவது வேண்டுகோள் உள்ளுர் பொது அமைப்புக்கள், அரசியற்கட்சிகள், கிராம முன்னேற்ற சங்கங்கள், சனசமூக நிலையங்களைச் சேர்ந்தவர்களை அகதிகள் சந்தித்து உதவ அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அனுமதிப்பதால் விடுதலைப் புலிகள் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அவர்களின் பொய்ப்பிரச்சாரம் இளைஞர்களை மற்றவர் அறியாத இடத்துக்கு மாற்றப்படுவதாகவும், பெண்கள் காணாமல் போகிறார்கள் என்றும் பொது மக்கள் சிறைக்கைதிகள் போல் நடத்தப்படுகிறார்கள் என்றும் வழங்கப்படும் உணவின் தரம் மிகக் குறைவாக இருப்பதாகவும் இதுபோன்ற இன்னும் பலவாகும். நாளுக்குநாள் முகாமுக்குள் வந்து சேரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இத்தகைய தொண்டர்களின் உதவி மிக பிரயோசனமானதாக இருக்கும்

பாக்கு நீரிணையில் இந்திய போர்க் கப்பல்கள்!

boats-1002-2.jpgஇலங்கையில் யுத்தம் தீவிரமடைந்து வரும் வேளையில் இராமேஸ்வரம் கடல்பகுதியில் புலிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் விமானப்படையினரின் போர் விமானங்களும் போர்க்கப்பலும் தீவிர கண்காணிபபில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்தியச் செயதிகள் தெரிவிக்கின்றன.

அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுருவலாம் எனக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இராமநாதபுரம் கடல் பகுதியின் மாவட்டக் கடலோரப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான 4 போர்க்கப்பல்கள் 500 க்கும் மேற்பட்ட கமாண்டோ படைவீரர்களுடன் தீவிரமாக பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றன.

இராமேஸ்வரம் தனுஷ்கோடி, பாம்பன் மண்டபம் ஆகிய பாககு நீரிணை  கடல்பகுதியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான் போர்க்கப்பல்கள் ரோந்தில் ஈடுபட்டுள்ளன

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் தூத்துக்குடியில் உள்ள கடலோர காவல் படைக்குசொந்தமான போர்க்கப்பல் ஒன்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய கடற்படை ஹெலிகொப்டர்  இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்றும் கடலில் தாழ்வாகப் பறந்து கண்காணித்து வருகிறது மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான தரையிலும் நீரிலும் அதிவேகமாக செல்லக்கூடிய 2 ஹோவர்கிராப்ட் ஐசி 181 183 ஆகியவையும் 24 மணிநேரமும் கடலில் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றன

கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களின் அடையாள அட்டைகள் படகுகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இதுதவிர கியூப்பிரிவு பொலிஸார் கடலோரப்பகுதியில் ரோந்து சென்று இலங்கையில் இருந்து யாரும் தப்பிவருகிறார்களா இலங்கைக்கு பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா என்று கண்காணித்து விசாரணை நடத்திவருகின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.