எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

திருகோணமலையில் சிகிச்சை பெற்று வந்த சிலர் வவுனியாவுக்கு மாற்றம்

trincomali.jpgஇலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து
திருகோணமலை அரசினர் பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு என்று கொண்டு வரப்பட்டோரில் 175 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஞாயிறன்று மதியவேளை மூன்று பஸ் வண்டிகள் மூலம் அவர்கள் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ சேவைகளுக்கான இணைப்பாளர் டாக்டர் ஞானகுணாளன் தெரிவித்துள்ளார்.

52 நோயாளர்கள் மேலதிக சிகிச்சை பெறும் நோக்கில் கந்தளாய் அரசினர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேநேரம் திருகோணமலை அரசினர் பொதுமருத்தவமனையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டோருக்கு இரத்தம் தேவைப்படுவதாகவும் ஆதலால் மக்கள் இரத்த தானம் செய்ய வருமாறும் மருத்துவமனை வட்டாரம் கோரியுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளாகள் இந்தக் கோரிக்கைக்கு அமைவாக ஞாயிறன்று இரத்த தானம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களை பதிவு செய்யாத தொலை பேசிகளின் இணைப்பினை துண்டிப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரை.

cdma-t-p.jpgஉரிய விபரங்கள் சமர்ப்பிக்கப்படாத சிடிஎம்ஏ மற்றும் கையடக்க தொலைபேசிகளின் இணைப்பினை துண்டிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

சிடிஎம்ஏ மற்றும் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களின் விபரங்களை திரட்டுவதற்காக இலங்கை தொலைத் தொடர்பு ஆணைக்குழு வெளியிட்டிருந்த சுற்றறிக்கைக்கு அமைய எதிர்வரும் ஏப்பிரல் 30ம் திகதிக்கு முன்னர் தகவல்களை பதிவு செய்து கொள்ளாத தொலைபேசிகளின் இணைப்பினை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்’ – புதியஅமைப்பு

india_map_.jpgஇலங்கை யில் போர் நிறுத்தம் கொண்டு வரவும், அங்கிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கும் ‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்’ என்ற புதியஅமைப்பு ஒன்றே துவங்கியிருப்பதாக பாதிரியார் ஜெகத் கஸ்பார் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்தவும் பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் இடம் பெற்ற இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது.

இதைப் பார்த்து திமுக சார்பில் இலங்கைத் தமிழர்கள் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பும், அதற்கு ஒரு துணை அமைப்பும் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பாதிரியார் ஜெகத் கஸ்பார் ஒரு அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

இது குறித்து ஜெகத் கஸ்பார் கூறுகையில், இலங்கை தமிழர்களின் நலனுக்காக அரசியல் சுவடு இல்லாத ‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்’ என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளோம். இலங்கை தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட அனைவரின் களமாக இந்த அமைப்பு செயல்படும்.

இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்கள்

civilians.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பொதுப்பிரதேசத்திலும், விசுவமடு பிரதேசத்திலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள இராணுவ தலைமையகம், இந்த மோதல்களின் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலின்போது இராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் வெடிப்பொருட்களைக் கைப்பற்றியிருப்பதாகக் கூறியிருக்கின்றது.

இதனிடையே, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கு இதுவரையில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். பதினொரு பாடசாலைகள் உட்பட உயர் கல்வி நிலையங்கள் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகப் படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, வன்னிப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளி்ன் பிரதேசத்தில் தொடர்ந்து எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் பலர் கொல்லப்படுவதுடன் காயமடையவும் நேரிட்டுள்ளதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.சி.ஆர்.சி. வழித்துணையுடன் வன்னிக்கு கடல் வழியாக உணவுப் பொருட்களை அனுப்புவது குறித்து ஆராய்வு

ship.jpgவன்னிக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் கடல் மார்க்கமாக உணவுப் பொருட்களை அனுப்புவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. வன்னிக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கடந்த மாதம் 16 ஆம் திகதிக்குப் பின்னர் சுமார் ஒரு மாதமாக கொண்டு செல்லப்படாததால் இடம்பெயர்ந்த மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்து வருகின்றனர்.

முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விநியோகிக்கக் கூடிய பாதுகாப்பான இடங்கள் இல்லையெனவும் அரசு தரப்பு கூறிவந்தது. இதனால் சுமார் ஒரு மாதமாக உணவுப் பொருட்கள் எதுவும் அங்கு அனுப்பப்படவில்லை. இந்த நிலையில் அண்மையில் முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்பகுதியிலிருந்து யுத்தத்தால் படுகாயமடைந்த சுமார் 700 பொதுமக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இதனையடுத்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் கடல்மார்க்கமாக வன்னிக்கு உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பது பற்றி அரச உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. திருமலை துறைமுகத்திலிருந்து செஞ்சிலுவைச் சங்க கொடியினை தாங்கிய கப்பலில் ஏற்றப்பட்டு முல்லைத்தீவு புதுமாத்தளன் கடல் பகுதியில் உணவுப் பொருட்களை இறக்குவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை இறக்கி கரைக்கு கொண்டு செல்வதற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உதவியும் கோரப்படவுள்ளது.

வவுனியாவில் உள்ள உலக உணவுத்தாபனத்தின் களஞ்சியத்தில் வன்னிக்கு அனுப்புவதற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன. ஆனாலும் பொதுமக்கள் உள்ள பகுதிக்கு செல்ல வவுனியாவிலிருந்து 80 கிலோ மீற்றர் தூரத்தை கடக்கவேண்டியுள்ளது. புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதிகளிலேயே அதிகளவான பொதுமக்கள் உள்ளனர். தரை வழியாக அங்கு லொறிகளில் உணவுப் பொருட்களை அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கண்ணிவெடிகள் வீதிகளில் புதைக்கப்பட்டுள்ளதால் பெரும் ஆபத்தான பிரதேசமாகவுள்ளது. நிவாரணப் பொருட்களை எடுத்து செல்லும் ஐக்கிய நாடுகள் சபை பணியாளர்களுடைய பாதுகாப்பு முக்கியமாகக் கருதப்படுகின்றது. எனவே தான் கடல் மார்க்கமாக உணவுப் பொருட்களை அனுப்புவது பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

றுகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையை தடுத்த பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதல்

university-srilanka.jpgமாத்தறை மெத்தவத்தயில் அமைந்துள்ள றுகுணு பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர் ஒருவர் படுகாயமடைந்து மாத்தறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  புதிய மாணவர்களை பழைய சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்திய போது அதனை பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்ததாகவும் இதனையடுத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாகவும் புதிய மாணவர்கள் தெரிவித்தனர்.

எட்டுப் பாதுகாப்பு ஊழியர்கள் அவ்விடத்திற்கு வந்த போதிலும் சிரேஷ்ட மாணவர்கள் அவர்களைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய மாணவர்கள் ஆங்கில வகுப்புக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போதே இச்சம்பவம் இடம்பெற்றது.

இத்தகராறின் போது ஒரு பாதுகாப்பு ஊழியரின் தங்கச் சங்கிலியும் கையடக்கத் தொலைபேசியும் காணாமல் போயுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது. இச் சம்பவத்தையடுத்து புதிய மாணவர்களுக்கான ஆங்கில வகுப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து மாத்தறை பொலிஸார் பல்கலைக்கழகத்துக்கு வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.

றுகுணு பல்கலைக்கழக நிர்வாகமும் இது தொடர்பாக விசாரணைகளை நடத்திவருகிறது. பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சில சிரேஷ்ட மாணவர்கள் அதனைச் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில் உயர்கல்வி அமைச்சினால் பகிடிவதைகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் மோதல்கள் குறித்து உயர்மட்ட மாநாடும் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதத்திற்குள் இலங்கை தூதரகத்தை மூடா விட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்

vijayakanth.jpgஇலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் சூழ்நிலையில் இந்தியாவில் அந்நாட்டு தூதரகம் இருக்க கூடாது. அடுத்த மாதத்துக்குள் இலங்கை தூதரகத்தை மூட வேண்டும். இல்லையென்றால் படும் போராட்டம் வெடிக்கும் என்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

தேமுதிக கட்சி பிரமுகர் தட்சிணா மூர்த்தியின் மகளின் திருமணம் இன்று ராமநாதபுரத்தில் நடந்தது. அதில் கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்து மணமக்களை வாழ்த்தினார். அதன்பின்னர் இலவச கணினி பயிற்சி மையத்தையும் துவக்கி வைத்தார். பின்னர் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில்,

ஈழத்தமிழர்களுக்காக பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது நடிகர்கள் உண்ணாவிரதத்தை நடத்தினேன். நான் 1983 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கை தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.

கருணாநிதி இன்று அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று சொல்கிறார். ஈழத்தமிழர்களுக்காக எம்ஜிஆர் கருப்புச் சட்டை அணிய சொன்னபோது, கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்தாரா? அப்போது அவர் ஏன் அந்த ஒற்றுமையை காட்டவில்லை. இலங்கையில் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது மத்திய அரசும், சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இலங்கை அரசு கத்தி வைத்துள்ளது. புலிகளிடம் கேடயம் தான் உள்ளது. அதை வைத்து இலங்கையின் போரை புலிகள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில் கேடயத்தை போடு என்று சொன்னால் கத்தி வைத்திருப்பவன் சும்மா இருப்பானா?

இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒட்டு மொத்த உணர்வையும் காட்ட மிகப் பெரிய போராட்டம் தேவை. இதில் ஐநாவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தலையிட வேண்டும். அவர்களுக்கு தமிழர்கள் அனைவரும் தந்திகளும், எஸ்எம்எஸ்சும் அனுப்ப வேண்டும். இரண்டு நாளில் நான் அதற்கான முகவரியை தருவேன்.

வரும் 21ம் தேதி இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒபாமா தலையிட வேண்டும் என்று கோரி அமெரிக்க தூதரகத்தில் மனு கொடுக்க இருக்கிறேன். அப்போது இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கும்போது இங்கே இலங்கை தூதரகம் எதற்கு? இருநாடுகளுக்கிடையே சுமுக உறவு வேண்டும் என்பதற்காக தான் தூதரகம் வேண்டும். தமிழினம் அழியும் போது இங்கு சிங்களவன் ஏசி அறையில் சொகுசாக இருப்பது தேவையா? என்று எண்ணி பார்க்க வேண்டும். மார்ச் மாதத்திற்குள் இலங்கை தூதரகத்தை மூடா விட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்.

பதவியை துறந்தால் தனி ஈழம் கிடைக்குமா என்று முதலமைச்சர் கேட்கிறார். இதிலிருந்தே தனிஈழம் கிடைக்காது என்று அவர் எண்ணுகிறார் என்பது தெரிகிறது. 2 மாதத்தில் முடிய போகின்ற மத்திய அரசிலில் இருந்து நாங்கள் பதவி விலகினால் என்ன ஆகப்போகிறது என்று கேட்கிறார்கள்.

இலங்கை பிரச்சனையில் பிரதிபலன் எதிர்பாராமல் அன்றிலிருந்து பாடுபடுபவர் நெடுமாறன் ஒருவர் தான். அவரை நான் பாராட்டுகிறேன். மதிக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்ற இலங்கை பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார்கள்.

கருணாநிதி நான் உழைக்கவே பிறந்தவன் என்கிறார். ஜெயலலிதாவோ முற்றும் துறந்த துறவி என்கிறார். முற்றும் துறந்தவருக்கு முதல்வர் பதவி எதற்கு?

வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் துரித மின் விநியோகத் திட்டம் – உலக வங்கி உதவுகின்றது

electricitypowerlinesss.jpgவடக்கில் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் மின் விநியோக நடவடிக்கைகளை உலக வங்கியின் உதவியுடன் துரிதமாக மறுசீரமைக்க மின்வலு எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் மின் விநியோகத்திற்கான சகல அடித்தள வசதிகளும் மேப்படுத்தப்படும். சேதமாக்கப்பட்ட சகல மின் பிறப்பாக்கிகள் மற்றும் மின் கம்பங்கள் என்பன புதிதாக அமைக்கப்படும்.

தெற்காசிய வலய மின்சக்தி விவகார பிராந்திய முகாமையாளர்; சலமன் ஸஹீர் உட்பட உலக வங்கியின் பிரதிநிதிகள் இது தொடர்பில் மின்வலு எரிசக்தி அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

இத்திட்டத்தின்படி ஏ 9 மற்றும் ஏ 32 ஆகிய வீதிகளில் மின் விநியோக மறுசீரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்;பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகள் குழு திருமலை ஆஸ்பத்திரிக்கு நேற்று திடீர் விஜயம்

trincomali.jpgசுகாதார அமைச்சின் உயர் மட்டக் குழுவொன்று திடீர் விஜயமொன்றை மேற்கொ ண்டு நேற்று திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்தது.இங்கு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட இந்தக்குழு முல்லைத்தீவிலிருந்து கொண்டுவரப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கான மருந்து வசதிகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டது.

இதேநேரம் முல்லைத்தீவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களுக்கென இரண்டு லொறிகளில் கொண்டு வரப்பட்ட மருந்து வகைகளையும் மேற்படி குழு கையளித்தது. மேலும் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுமெனவும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.

நேற்றுக்காலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜித் மென்டிஸ், பாலிக்க மஹிபால, நிமல் ஜெயந்த, கி.மா. சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி என்.ஆர். ராஜின், சுகாதாரப் பணிப்பாளர் ளி. ஞாணகுணாளன், வைத்திய அதிகாரி திருமதி குணாளன் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் சிறார்கள் பாடசாலை செல்ல முடியாத நிலையில்

college1.jpgஉலகில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் உண்ண உணவின்றி 1500 சிறுவர்கள் பட்டினியால் மரணமடைகின்றனர் என்று விரிவுரையாளர் திருமதி சாரினா மாரசிங்க கூறினார்.

தென் மாகாண சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கரிட்டாஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். காலி கரிட்டாஸ் அமைப்பின் கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேசிய விரிவுரையாளர் மாரசிங்க;

“இலங்கையில் வறுமைக்கும் செல்வத்துக்கும் இடையில் மிக வேகமாக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவருவதால் இலங்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது. வடக்கு, கிழக்கில் போர் காரணமாக 65 ஆயிரம் சிறார்கள் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். எனினும் வடக்கு, கிழக்கில் 5000 ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளன என கல்விப்பகுதி தெரிவித்துள்ளது.

ஆனால், தென் பகுதிகளில் 11 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மேலதிகமாக பணிபுரிவதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் 58,528 அங்கவீனச் சிறுவர்கள் உள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் சிறார்களே பாடசாலைக்கு செல்கின்றனர். சுமார் 20 ஆயிரம் சிறுவர்கள் அநாதைகளாக உள்ளனர். அவர்களில் பலர் அநாதை இல்லங்களில் தங்கியுள்ளனர். அநாதை இல்லங்களின் அதிகாரிகள் அங்குள்ள சிறார்களின் பாதுகாப்பு மற்றும் விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

சிறுவர்களை அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தக் கூடாது. அது நிறுத்தப்படவேண்டும். சிறுவர்களுக்கான சிறந்த சூழலை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். நாட்டில் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் 72 இலட்சம் பேர் உள்ளனர்’ என்றார். வேறு சிலரும் உரையாற்றினார்கள்.