எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வன்னியில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு இரண்டு பாதைகளைத் திறப்பதற்கு முடிவு.

navy_rg.jpgவன்னியில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக அரசு இரண்டு பாதைகளைத் திறப்பதற்கு முடிவுசெய்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த திட்டத்திற்கு செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் உதவியை அரசு நாடியிருக்கிறது என பெயர் குறிப்பிட விரும்பாத அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என “ரொய்ட்டர்” செய்திச் சேவை தகவல் வெளியிட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் பிரகாரம் சாலைப் பகுதியூடான ஒரு பாதையையும், முல்லைத் தீவு நகரப் பகுதியூடான ஒரு பாதையையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தை ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழுவே தீர்மானித்தது எனவும், இத்திட்டம் உண்மையென அரச அதிகாரி மற்றும் இரு இராணுவ அதிகாரிகள் ஆகியோர் உறுதிப்படுத்தியிருக்கின்றனர் என “ரொய்ட்டர்” தெரிவித்திருக்கிறது. இதேவேளை, இத்திட்டம் குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும், எனினும் இது தொடர்பில் அரச தரப்பிலிருந்து எந்தவிதத் தகவலும் வெளிவரவில்லை எனவும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு கூறியுள்ளது.அத்துடன், இத்திட்டத்திற்கு இரு தரப்பும் இணங்கினால், மக்கள் தாமாக வெளியேறும் பட்சத்தில் தாங்கள் உதவத் தயார் என்றும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தெரிவித்தது.

கொழும்பில் ஆனந்த விகடன் விற்பனையாளர் ஸ்ரீதர்சிங் கைது

vkadan.jpgஇலங்கையில் இயங்கும் பிரபல தமிழ் புத்தகக் கடைகளின் உரிமையாளரும் விகடன் விற்பனைப் பிரதிநிதியுமான ஸ்ரீதர்சிங் நேற்று இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டார். விடுகலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி மற்றும் அவர் தலைமையில் இயங்கும் புலிகளின் விமானப் படை, அது சமீபத்தில் கொழும்பில் நடத்திய அதிரடித் தாக்குதல் குறித்த செய்திகள் ஆனந்த விகடனில் விரிவாக வெளியாகியுள்ளது. இந்த இதழ்களை அவர் விற்பனை செய்ததால் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்கிசை காவல் நிலையத்தில் அவரை அடைத்துவைத்துள்ளனர்.

‘ஆனந்த விகடன்’ வார இதழை யாழ்ப்பாணத்தில் உள்ள ‘பூபாலசிங்கம்’ புத்தகசாலைக்கும் மற்றும் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்புவதற்கான கட்டுக்களை இரத்மலானை விமான நிலையத்திற்கு அனுப்பியபோது, அதனை சோதனையிட்ட காவல்துறையினர், அதில் பிரசுரமாகியிருந்த வான் தாக்குதல் குறித்த கட்டுரைகள் மற்றும் படங்கள் இருப்பதைக் கண்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர், வியாழக்கிழமை மாலை விகடன் கொழும்பு விற்பனைப் பிரதிநிதியான ஸ்ரீதர்சிங்கின் வெள்ளவத்தை வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர் கல்கிசை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றதாக ஸ்ரீதர்சிங்கின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் ‘ஆனந்த விகடன்’ வார இதழை ‘பூபாலசிங்கம்’ புத்தகசாலை தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

உண்ணாவிரதப் போராட்டம் – 9ம் தேதிக்கு மாற்றினார் ஜெயலலிதா.

05-jayalalitha.jpg இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிற 10ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்று திடீரென அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது போராட்டத்தை 9ம் தேதியே மேற்கொள்ளப் போவதாக தற்போது அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கை தமிழர்களுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் அ.தி.மு.க. சார்பில் 10-ந் தேதி நடைபெறுவதாக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்து விட்ட நிலையில் மேற்படி உண்ணாவிரத அறப்போராட்டம் 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொழும்பில் சத்திர சிகிச்சை

pak-2nd-test.jpg
மருத்துவமனையில் இலங்கை கிரிக்கெட் வீரர் பரணவிதாரண பாகிஸ்தானின் லாகூர் நகரில் இனந்தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்து தாயகம் திரும்பியுள்ள இலங்கைக் கிரிக்கெட் வீரர்களுக்கு கொழும்பில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அவர்களின் உடல்நிலை தேறிவருவதாகவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலின்போது இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜயவர்த்தன, உபதலைவர் குமார் சங்கக்கார, ஆரம்பத் துடுப்பாட்டவீரர் தரங்க பரணவிதாரண, மத்திய வரிசைத் துடுப்பாட்டவீரர்களான திலான் சமரவீர, வேகப்பந்து வீச்சாளர்களான திலின துஷார, சுரங்க லக்மால், சுழல்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் ஆகியோருடன், அணியின் துணைப் பயிற்றுவிப்பாளர் பால் ஃபர்பிரீஸ் போன்றோர் காயம்பட்டிருந்தனர்.

புதனன்று நாடு திரும்பிய இவர்களில் நால்வர் தனியார் மருத்துவமனை ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தனர். தாக்குதலின் பின்னர் உடல் உளரீதியாக சோர்வடைந்திருந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தத்தமது பழைய நிலைக்குத் திரும்பிவருகிறார்கள் என்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரீ.எம்.வி.பி ஆயுதப்பிரிவு கலைப்பு

tmvp2.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரீ. எம். வீ. பி) ஆயுதப் பிரிவு உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியிருக்கும் ஆயுதங்கள் நாளை மட்டக்களப்பில் வைத்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுமென ரீ. எம். வீ. பி. கட்சியின் பேச்சாளர் ஆஷாத் மெளலானா தெரிவித்தார். முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கட்சியின் உயர்பீட செயற்குழுக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சரின் தலைமையிலான மாகாணசபைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரீ. எம். வி. பி. ஆயுதப்பிரிவு உறுப்பினர்களாக இருந்தவர்களின் எதிர்காலம் தொடர்பில் ஐ. ஓ. எம். நிறுவனத்துடனும் பாதுகாப்பு அமைச்சுடனும் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு, நிதி உதவிகள் மூலம் சிறந்த எதிர்காலம் உத்தரவாதப் படுத்தப்பட்டிருக்கிறது.

அரச பாதுகாப்புப் படையினருடன் இணைய விரும்புபவர்களும் இதில் இணைந்துகொள்ள முடியும். கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஏனைய சட்ட விரோத ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை அரசாங்கம் விரைவில் களையுமென தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறினார்.

புலிகளுக்கு பெரும் ஆளணிப்பற்றாக்குறை; சூசை, பொட்டு உட்பட சிரேஷ்ட தலைவர்கள் களத்தில்

uthaya_nanayakara_.jpgபுலிகளின் பிடியில் எஞ்சியுள்ள 45 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை முழுமையாக மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் மூன்று படைப்பிரிவுகளும், அதிரடி படை அணியும் பல முனைகளில் வேகமாக முன்னேறிவருவதாக அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்புப் படையினரின் கடுமையான தாக்குதல்களையும், படை நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் கள நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், கடற் புலிகளின் தலைவர் சூசை கடல் வழி நடவடிக்கைகளிலும், லோரன்ஸ், பொட்டு அம்மான் மற்றும் விதுஷன் ஆகியோர் உட்பட சிரேஷ்ட தலைவர்கள் தரைவழி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனரென்று புலனாய்வு தகவல்கள் குறிப்பிடுவதாகவும் அவர்தெரிவித்தார்.

ஏ-35 வீதியின் வடக்கே அதாவது புதுக்குடியிருப்புச் சந்திக்கு வடக்காக இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவும், ஏ-35 வீதியின் தெற்கே அதாவது புதுக்குடியிருப்பு சந்திக்கு தெற்காக இராணுவத்தின் 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான படைப் பிரிவும் புலிகளின் இலக்குகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வேகமாக முன்னேறி வரு கின்றனர்.

இந்த இரு படைப் பிரிவுகளுக்கும் உதவியாக இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சாலையை மற்றும் புதுமாத்தளன் வட பகுதியை கைப்பற்றிய இராணுவத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படைப்பிரிவின் புதுமாத்தளன் தென்பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

கிழக்கு கடலோரமாக முன்னேறும் படையினரின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு புலிகள் பாதுகாப்பு மதில்களை அமைத்து வருகின்ற போதிலும் பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதல்கள் மூலம் அதனை தகர்த்து வருகின்றனர் என்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலய பகுதியிலிருந்து புலிகள் இராணுவத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தம்மிடமிருந்த சகல கோட்டைகளையும் பிரதான நகர்களையும் முற்றாக இழந்து குறுகிய காட்டுப் பகுதிக்குள் முடக்கிவிடப்பட்டுள்ள புலிகள் தற்பொழுது ஆளணி பற்றாக்குறையை எதிர் நோக்கியுள்ளமை அவர்களின் சிரேஷ்ட தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளமையை காண்பிப்பதாகவும் மேலும் தெரிவிக்கிறது.

இதேவேளை புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலின் போதும் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஜெயலலிதா உண்ணாவிரதம்: இலங்கை எம்.பி. கருத்து

05-jayalalitha.jpg
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரும் 10ம் தேதி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து இலங்கை தமிழ் எம்.பி.சிவாஜிலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருச்சி உழவர்சந்தையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம், – இலங்கையில் தமிழர்களை காப்பற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளதாக தெரிவித்தார் .

அவருடைய அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த போராட்டம் இலங்கை தமிழர் பிரச்சினையில் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமையும். இதன்மூலமாக மத்திய,மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படும்’ என்றும் தெரிவித்தார்.

யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து மக்களை மீளக்குடியமர்த்துவதே அரசின் இலக்கு

anura_priyadarshana_yapa.jpgவன்னியில் யுத்தத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் போதே உண்மையான சந்தோசத்தை அவர்கள் அடைவார்கள். இதனை இலக்காகக் கொண்டே அரசாங்கம் செயற்படுகிறது என ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார்.

புலிகளின் பிடிக்குள்ளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களுக்கு நூற்றுக்கு நூறு வீதம் இல்லையென்றாலும் எமது முழு சக்தியையும் பிரயோகித்து அவர்களுக்குரிய பாதுகாப்பு, உணவு, இருப்பிட வசதி, அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து வருகிறது எனவும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள் குழுவினர் அரச அதிகாரிகளின் வழிகாட்டலுடன் சென்று நேரில் நிவாரணக் கிராமங்களை பார்வையிட்டனர். வெகுவாகப் பாராட்டியும் உள்ளனர். ஆனால் ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அங்கு மக்கள் வசதியின்றியும் உண்ண உணவின்றியும், மலசலம் கழிக்கக் கூட வசதியில்லாத நிலை இருப்பதாக கூறியிருக்கிறாரே என செய்தியாளர் ஒருவர் கேட்டதுடன் இம்மக்களை எவ்வளவு காலம் நிவாரணக் கிராமங்களில் வைத்திருக்கப் போகிர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார். அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை வழங்குவதுடன் தேவையான உணவு, உடை இருப்பிட வசதிகளையும் எம்மால் இயன்றளவு வழங்குகிறோம். சில குறைபாடுகள் இருக்கலாம். அவர்கள் தமது வீடுகளில் அனுபவித்த வசதிகளை பெற்றுக் கொடுத்துவிட முடியாது தான். அதற்காக ஹியுமன் ரைட்ஸ் வொட்ச் நபர் கூறியது அனைத்தையும் ஏற்க முடியாது. அவற்றை நான் நிராகரிக்கிறேன். ஒரேயடியாக 2000 பேர் எமது நிவாரணக் கிராமங்களுக்கு வரும் போது 100 வீதமான வசதியை ஒரே தடவையில் வழங்கிவிட முடியாது. ஒவ்வொருவருக்கும் தாம் எதிர்பார்க்கின்ற வசதிகளை 100 வீதம் வழங்கவும் முடியாது.

எனவே தான் இறுதிக்கட்ட யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் அகற்றப்பட்டு விட்டதற்கான சான்றிதழ்கள் பெறப்பட்டதும் உடனடியாக அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள். அப்போது தான் அவர்கள் உண்மையான சந்தோசத்தை அடைவார்கள். சுமார் 30 வருடங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தவாறு யுத்தம் தான் ஒரேவழி என்ற மனநிலைக்குள் இருந்தவர்கள் எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்து கொண்ருக்கிறார்கள்.

இவர்களை ஒவ்வொருவராக சோதனையிட்டுத் தான் எடுக்கின்றோம். இதில் கூட சிக்கல்கள் உள்ளன. மனித வெடிகுண்டுடன் கூட வந்தது நாம் அனைவரும் அறிந்த விடயம்தானே என்றும் குறிப்பிட்டார். அத்துடன், புலிகள் இந்த மக்களை மந்தைகள் போல் அங்கும் இங்குமாக அழைத்து திரிந்த போது அடிப்படை வசதிகள் கிடைத்ததா? எந்த சர்வதேச அமைப்பு இவற்றை கண்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

இரண்டு இலங்கையர்களுக்கு சவூதியில் தூக்குத் தண்டனை மேன்முறையீடு நிராகரிப்பு

saudi-arabia.jpgதூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகள் இருவரின் மேன்முறையீட்டை சவூதி அரேபிய நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இதன் படி வெகுவிரைவில் இவர்களின் தூக்குத் தண்டனை நிறை வேற்றப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

ஜோடா பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் புகுந்து பணம் கொள்ளையிட்டது, வீட்டு உரிமையாளரை கொலை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஹலீமா காதர் மற்றும் பண்டாரநாயக்க ஆகிய இருவருக்கும் சவூதி அரேபியாவின் ஜோடா நீதிமன்றம் 6 மாதங்களுக்கு முன் தூக்குத் தண்டனை விதித்திருந்தது. தண்டனை அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் இருவரும் மேன்முறையீடு செய்திருந்தனர். இதற்கு சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரம் தேவையான உதவிகளை வழங்கியிருந்தது.

மேன்முறையீட்டை ஆராய்ந்த சவூதி அரேபியா ஜோடா நீதிமன்றம் மேன்முறையீட்டை நிராகரித்ததோடு தண்டனையை நிறைவேற்றுமாறும் உத்தரவிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று முதல் புத்த பகவானின் புனித தந்த தரிசனம்

kandy.jpgநாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சாந்தியும் நிரந்தர சமாதானமும் சுபீட்சமும் நிலை பெற வேண்டி கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் இன்று (6) மதியம் 1.00 மணி முதல் புத்த பெருமானின் புனித தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையும் புத்த பெருமானின் தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.

மதியம் 1.00 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் பக்தர்கள் இதனை பார்வையிட முடியும் என ஸ்ரீதலதா மாளிகையின் தியவதன நிலமே தெரிவித்தார். இதனை பார்வையிட நாடு முழுவதிலுமிருந்து 10 இலட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 2000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்களின் புனித மாளிகை வளாகத்தையும் நகரத்தையும் அசுத்தப்படுத்தா வண்ணம் சூழல் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசேடமாக ஸ்ரீதலதா மாளிகை அமையப் பெற்றுள்ள பகுதிகளிலும் சில குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மதுபான சாலைகள் போன்ற மற்றும் இறைச்சிக் கடைகள் போன்றனவற்றை மூடுவதற்கு ஏலவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்ரீதலதா மாளிகை அருகிலும் அதனை அண்மித்துள்ள பிரதேசங்களிலும் உள்ள அரச காரியாலயங்கள் மற்றும் பெளத்த விகாரைகளில் பெளத்த கொடிகளை பறக்கவிடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இறைமை, நிரந்தர சமாதானம் ஏற்பட மற்றும் மல்வத்த மகா நாயக்க ஆகியோர்களினது ஆலோசனையின் பேரில் ஸ்ரீதலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் திலங்க தேவ பண்டார இதனை ஏற்பாடு செய்துள்ளார்.