ஜெயபாலன் த

ஜெயபாலன் த

யாழ் பெருங்குடி மக்கள் கொரோனாவை உள்ளுக்கு விட்டு அடிக்கத் தயார்?

யாழ்ப்பாணத்தில் நீண்ட ஊரடங்கு உத்தரவுக்குப் பின் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. மதுபானக் கடைகளில் நீண்ட வரிசையில் பெருங்குடி மக்கள் காத்துக் கிடந்தனர். சனிரைஸர் என்று சொல்லப்படும் கிருமிகொல்லி சோப்பில் 60 முதல் 70 வீதம் வரை அல்ககோல் உள்ளது. அதனால் வைரஸ் கிருமிகளை வெளியே இருந்து அழிப்பதிலும் பார்க்க போர்த் தந்திரமாக உள்ளுக்கு விட்டு அடிக்கலாம் என சில யாழ் பெரும்குடி மக்கள் நம்புகின்றனர் போல் தெரிகின்றது.

ரஸ்சியர்கள் சிலரும் இவ்வாறு தான் நம்பினர் என்பதையும் கவனிக்கவும். ஆனால் அமெரிக்கர்கள் பெரும் ஆயுதங்களை வாங்குவதற்காக துப்பாக்கி விற்கும் கடைகளில் பெரு வரிசையில் காத்து நின்றனர். வைரஸ்களை துப்பாக்கிச் சூட்டில் கொல்ல நினைக்கிறார்களோ என்னவோ.

ஒவ்வொரு மக்கள் குழுவும் வைரஸ்க்கு எதிராக பல முனைகளில் போராடுகின்றனர். இதனை குறைத்து மதிப்பிடக்கூடாது.???

இலங்கையில் மீண்டும் தன்னிறைவுப் பொருளாதாரம்?

கோவிட்-19 உலக அரசியல் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த இருக்கின்றது. இலங்கைளில் மீண்டும் தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கு இது வழிகோலி இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகின்ற தானியங்கள் மரக்கறிகளை குறைப்பதற்கு அரசு முயற்சி எடுத்துள்ளது. இந்த வகையில் 17 தானியங்கள் மரக்கறிகளின் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கினற்து. மேலும் பரசிட்டமோல் மற்றும் தொற்று மற்றும் தொற்றா நோய்க்கான மருந்துகளின் உங்பத்தியையும் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கின்றது.

சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களின் பொற்காலமாக கருதப்பட்டது அரசில் ரீதியாக அல்ல பொருளாதார ரீதியில் 1970க்கள். இலங்கையின் தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கைகளால் தமிழ் விவசாயிகள் பெருமளவில் நன்மை அடைந்தனர். அக்காலத்தில் உருவாக்கப்பட்ட விவசாய முயற்சிகளாலேயே வன்னியயை நோக்கி யாழிலிருந்து மக்கள் பெயர்ந்தனர். படித்த வாலிபர் திட்டத்தில் கல்லெறிந்து பிடித்த காணிகளையே கஜேந்திர குமார் பொன்னம்பலம் போன்ற நிலச்சுவந்தர்கள் இன்றும் கிறுக்குப் பிடியில் வைத்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணிப்பதிவை கணணி மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் இதனால் தான். இன்றைன தமிழர் விடுதலைக் கூட்டணியின் சொத்தும் அது தான்.

முடிவெடுக்கத் தெரியாதவர்கள் கையில் அதிகாரம் ஆபத்தானது!

முடிவெடுத்தல் என்பது சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் மிக முக்கியமான அம்சம். துரதிஸ்ட வசமாக சொந்த வாழ்விலும் சரி பொதுவாழ்விலும் சரி முடிவுகள் எடுப்பதில் கவனமும் நேரமும் செலுத்தப்படுவதில்லை. தவறான முடிவுகளுக்கு செலுத்தப்படுகின்ற விலை மிக அதிகமானது பெருமளவு சமயங்களில் ஈடுசெய்ய முடியாதது. முடிவெடுப்பதில் மிக முக்கியமான அம்சம் முடிவெடுக்கப்பட வேண்டிய அம்சம் தொடர்பான நேர்த்தியான தகவல்களைத் திரட்டுவது. இதில் விடப்படுகின்ற தவறுகள் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் இழப்புகளை ஏற்படுத்தும்.

பிரித்தானியாவும் அமெரிக்காவும் சரியான தகவல்களை குறித்த காலகட்டத்தில் சேகரித்து சரியான முடிவுகளை எடுக்காததால் கொரோனாவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டிய மக்களை கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கில் பலி கொடுக்கின்றனர்.

இலங்கையில் 2019 ஈஸ்ரர் ஞாயிறு அன்று யார் குண்டு வைப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் அக்குண்டுகள் எங்கே வைக்கப்பட உள்ளன என்றும் அது யாரால் வைக்கப்பட உள்ளது என்றும் குறிப்பான தகவல்களை வழங்கியும் அப்போதைய மைத்திரி – ரணில் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டாட்சி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களைப் பயங்கரவாதிகளின் குண்டுக்குப் பலியாக்கினர்.

1988இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் வட கிழக்கு இணைந்த மாகாண சபையை வழங்கியது. புலிகளுடன் கூத்தடித்த கூட்டமைப்பும் அதனை நிராகரித்தது. 20 வருடங்களுக்குப் பின் எல்லாம் மண் கவ்விய பின் பிரிந்த வடக்கு கிழக்கில் மிச்சம் இருக்கிறதை பிடுங்கிறதுக்கு போட்டி. அதிலும் பத்து ஆண்டுகள் ஓடிவிட்டது. எத்தினை ஆயிரம் உயிர்கள் பலிகொள்ளப்பட்டு விட்டது.

தகவல் ஆயுதம்! தகவல் செல்வம்!! தகவல் அதிகாரம்!!!

மழை பெய்தால் நிலம் நனையும் ….

ஆனால் நிலம் நனைந்திருப்பதால் மழை பெய்தது என்று எழுதுகின்ற சமூகவலைத் தள யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 21ம் நூற்றாண்டை தகவல் தொழில்நுட்ப யுகமாக எதிர்பார்த்தோம். ஆனால் அது தகவல் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும் என எதிர்பார்க்கவில்லை. தங்போதைய உலகத் தலைவர்களே நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டு பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகின்ற போது இணையத்தள தகவல் காவிகள் / காவாலிகள் அதனை பரப்பிக்கொண்டிருப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது.

தகவலை ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகாரத்துக்கு வந்து செல்வத்தை திரட்டுபவர்கள் தான் அரசியல்வாதிகளாக இன்று உள்ளனர். டொனாலட் ட்ரம் பொறிஸ் ஜோன்சன் நரேந்திர மோடி …. இந்தப்பட்டியல் மிக நீளமானது.

நாங்கள் தகவல்களைப் பரிமாறுகின்ற போது அது ஏற்படுத்தும் தாக்கங்களை மேம்போக்காக குறித்த நேர சிற்றின்ப பொழுதுபோக்காகச் செய்வது நீண்டகாலத்தில் எவ்வளவு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தப் போகின்றது என்பது பற்றி கரிசனை கொள்வதில்லை. உண்மையற்ற தகவல்கள் தவறான தகவல்கள் பிழையான தகவல்கள் உண்மையை வலுவிழக்கச் செய்யும் உண்மையை நம்பகமற்றதாக்கும் தவறான முடிவுகளை எடுப்பதற்கு வழிகோலும். அதனால் தகவல்களை அலசி ஆராய்ந்து அதன் நம்பகத் தன்மையை உறதிப்படுத்திய பின் பரிமாறுங்கள்.

பிரித்தானியா ஊடகங்கள் எழுப்பி இருக்க வேண்டிய கேள்விகள்!

ஏன் மருத்துவ சேவை பலவீனமாக இருந்தது?
அவ்வாறு பலவீனமாக இருந்ததுதான் கூடுதல் மரணங்கள் சம்பவிக்கக் காரணமா?
சீனாவில் வூஹான் மாநிலம் ஜனவரி 23இல் முற்றாக மூடப்பட்டது. ஜனவரி 31இல் உலக சுகாதார ஸ்தாபனம் அபாய எச்சரிக்கையை அறிவித்தும் ஏன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை?
உலனின் செல்வத்தின் 50 வீதத்தை தன்னாட்டில் வைத்துள்ள அமெரிக்காவில் ஏன் இவ்வளவு தொகையான அழிவு அதுவும் சிறுபான்மையின மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது?
அமெரிக்காவின சிஐஏ பிரித்தானியாவின் எம்ஐ5, எம்ஐ6 மற்றும் இஸ்ரேல் மொசாட் போன்ற உளவு ஸ்தாபனங்கள் இவ்வளவு அழிவை ஏற்படுத்தும் உயிர்க்கொல்லி பரவும்வரை என்ன செய்து கொண்டிருந்தன?
இவ்வாறான அமைப்புகள் எதிர்காலத்தில் அவசியமா?
ஒரே ஒரு தடவை பயன்படுத்தப்பட்ட அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டுகளுக்கு தொடர்ந்தும் முதலீடு செய்வதா இல்லையேல் முகக்கவசங்களில் முதலீடு செய்வதா?
பொருளாதார வளர்ச்சிக்காக எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கலாம் என அரசுகள் கருதுகின்றன?

இப்படிப் பல முக்கிய கேவிகள் கேட்கப்பட வேண்டிய காலம் இது. ஆனால் ….

தற்போதைய ஆயிரக் கணக்கில் மக்களைப் பலிகொள்கின்ற இந்தக் கட்டத்தில் கூட, தங்களை நடுநிலை ஊடகங்களாக உண்மைகளை வெளிக்கொணரும் ஊடகங்களாகக் காட்டும் மேற்கு நாட்டு ஊடகங்கள் தங்களுடைய அரசாங்கங்களை நோக்கி முக்கியமான கேள்விகளை எழுப்ப மறுத்துவருகின்றன. மாறாக கொரோனாவால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பிரசுரிப்பதும் அரசுகளின் அறிவித்தல்களை வெளியிடுவதிலுமே உள்ளன. மேலும் வீழ்ந்து போன பொருளாதாரத்தை எழுப்ப வேண்டும் என்ற அக்கறையைத் தான் இந்த ஊடகங்களும் வெளியிடுகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

Front_Cover_UoJ_A_View‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள யாழ் பல்கலைக்கழகம் பற்றி நான் (த ஜெயபாலன்) எழுதிய முன்னுரை இங்கு பதிவிடப்படுகிறது. தேசம்நெற் இல் யாழப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக நான் எழுதிய நான்கு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் இலங்கையில் வெளிவந்துள்ளது. இந்நூலுக்கான அணிந்துரையாக தேசம்நெற் வாசகர்களின் கருத்துக்கள் சில நூலின் இறுதியில் பதிவிடப்பட்டு உள்ளது.

இந்த நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

._._._._._.

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான மே 18, 2009 வரையான தமிழீழ விடுதலைப் போராட்டம், அம்மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மாறாக உரிமைகள் பறிக்கப்படுகின்ற நிலையையே ஏற்படுத்தியது. மேலும் முப்பது ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது பல பத்து ஆண்டுகளுக்குத் தமிழ் மக்களைப் பின்நோக்கித் தள்ளியுள்ளது.

பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் சீராக இயங்கினால் மாணவர்கள் இளைஞர்கள் போராட வர மாட்டார்கள் என்பதனை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்றுக்கொண்டனர். இவற்றின் விளைவாகவும் தொடர்ச்சியான யுத்தம் காரணமாகவும் தமிழ்ப் பிரதேசங்களின் கல்விநிலை வீழ்ச்சியடைந்தமை எதிர்வுகூறப்பட்ட ஒன்றே.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்த முரண்நகை என்னவென்றால், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், அந்த சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு வாய்பாக அமையக் கூடிய கல்வியைத் தொடர்ச்சியாக நிராகரித்தது. அடிப்படை அறிவும் அடிப்படைச் சிந்தனைத் தெளிவுமற்ற  மாணவர்கள், இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு அணி சேர்க்கப்பட்டனர்.

கல்விக் கட்டமைப்புகள் ஆயுதம் தாங்கியவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கல்விச் சமூகத்தின் உள்ளுணர்வு சிதைக்கப்பட்டு ஆயுதங்களின் கீழ் கல்வி தனது அவசியத்தினை இழந்தது. ஆனால் இன்றோ தமிழ் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொளவதற்கென இருந்த கல்வி வளத்தையும் சிதைத்துவிட்டு ஆயுதங்கள் மௌனமாகிவிட்டன.  இவை மௌனமாக்கப்பட வேண்டியவையே. ஆனால் இந்த ஆயுதங்களால் ஆளப்பட்ட தமிழ் மக்களும் மௌனமாக்கப்பட்டு விட்டனர்.

இலங்கையிலும் சரி, பிரித்தானியாவிலும் சரி, உலகின் எப்பாகத்திலானாலும் சரி ஒரு பெரும்பான்மைச் சமூகத்தினுள் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகம் தன்னை தற்காத்துக்கொள்ளவும் தனது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மிகக் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. இப்போராட்டமானது பலவகைப்பட்டதானாலும் ஒரு சமூகம் கல்வியில் உயர்நிலையை அடைகின்ற போது அச்சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்கின்ற பலத்தினைப் பெறுகின்றது. பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை அம்சமாக தற்போது கல்வி அமைந்துள்ளது. கல்வியும் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அதன் இராணுவ பலத்தைக் கட்டி அமைக்க செலவிடப்பட்ட வளங்களை தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளர்ச்சியை நோக்கித் திருப்பியிருந்தால் இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் நிலை இவ்வளவு கீழ் நிலைக்குச் சென்றிருக்க மாட்டாது. இலங்கைத் தமிழ் சமூகம் இன்று அறிவியல் வறுமையாலும் உள்ளுணர்வின் வரட்சியாலும் மிகவும் பாதிக்கப்படுகின்றது.

இதனை மாற்றி அமைப்பதற்கு தமிழ்ச்சமூகம் தன்னை மீண்டும் தற்காத்துக் கொள்ளும் நிலையை எய்துவதற்கும் தனது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் அச்சமூகம் தனது கல்விநிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும். அது பொருளாதார மீட்சியையும் உறுதிப்படுத்தும்.

Front_Cover_UoJ_A_Viewதமிழ் மக்கள் தங்கள் கல்விநிலையை உயர்த்திக்கொள்ளக் கல்விக் கட்டமைப்புகள் சீரமைக்கப்பட வேண்டும். கல்விக் கட்டமைப்புகள் சீரமைக்கப்படுவது என்பது கல்லும் சீமெந்துக் கலவையும் கொண்ட கட்டடங்களையல்ல. அகநிலை கட்டமைப்புகள் மறு சீரமைக்கப்பட வேண்டும்.

இதனை தமிழ் சமூகத்தின் உயர்ந்த கல்வி ஸ்தாபனமாக விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிப்பதே பொருத்தமானதாக அமையும். தமிழீழ விடுதலைப் போராட்டம் சீரழித்த கல்விக் கட்டமைப்புகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முக்கியமானது. இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அதன் எல்லா அம்சங்களிலுமே கீழ்நிலையிலேயே உள்ளது. அதற்கு புறக் காரணிகளிலும் பார்க்க அகக்காரணிகளே பெரும்பாலும் காரணமாக உள்ளதனை இந்நூலில் உள்ள கட்டுரைகளில் காணலாம்.

பிரித்தானியா போன்ற நாடுகளில் ஒரு மாணவன் அல்லது மாணவி பல்கலைக்கழகம் செல்வது என்பது பெரும்பாலும் அம்மாணவனுடையதோ அல்லது மாணவியினுடையதோ தெரிவாகவுள்ளது. ஒவ்வொரு மாணவனுக்கும் அதற்கான வாய்ப்பு பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை.  பல்கலைக்கழகம் செல்வது என்பது மாணவ,  மாணவியரின் கனவு.  மிகக் கடுமையான போட்டியினூடாக மிகக் குறைந்த விகிதமான மாணவ, மாணவிகளே பல்கலைக்கழகம் செல்கின்றனர்.  அதற்கு இம்மாணவ,  மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு மிக உயர்ந்ததாக உள்ளது.

இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சென்றோர் எதிர்கொண்ட பிரச்சினைகளே இந்நூலை உருவாக்கக் காரணமானது. இலங்கைத் தமிழ்ச் சமூகமானது அதன் வரலாற்றில் மிக இக்கட்டான காலகட்டம் ஒன்றில் சிக்கியுள்ளது. இந்நிலையில் இச்சமூகத்தின் உயர்ந்த கல்வி ஸ்தாபனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது  தற்போதைய அதன் கீழான நிலையில் இருந்து மீட்டெடுக்கப்பட வேண்டியது மிக அவசியமானது.

அதற்கான ஒரு வாய்ப்பாக யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு  நவம்பர் 2010ல் இடம்பெற இருக்கின்றது.  புதிய உப வேந்தரைத் தெரிவு செய்யும் தகைமையுடைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கவுன்சில் அங்கத்தவர்கள் இத்தெரிவை மிகவும் பொறுப்புடன் மேற்கொள்ளவேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்குப் பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை அவரது தகைமையின் அடிப்படையில் மட்டும் தெரிவு செய்ய வேண்டும் என்று தமிழ்க் கல்விச் சமூகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

த ஜெயபாலன்
ஆசிரியர், தேசம்நெற்.
நவம்பர் 09, 2010.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

முன்னாள் ஜரிவி ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டார்!

Sundar_Journalistஇவ்வாரம் இலங்கை சென்றிருந்த ஊடகவியலாளர் கார்திகேயன் திருலோகசுந்தர் (சுந்தர்) கொழும்பில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளார். விமான நிலையத்தில் இலங்கைப் புலனாய்ப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் நேற்று மாலை (நவம்பர் 18 2010) விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

சுந்தர் ஈரிபிசி வானொலியில் பணியாற்றி வந்தவர். அதன்பின் தீபம் தொலைக்காட்சியில் சிறிதுகாலம் பணியாற்றியவர். மார்ச் 19 2008ல் சுந்தரை வேலை நீக்கும் கடிதத்தை தீபம் தொலைக்காட்சி வழங்கியது. இதற்கு முன்னர் தீபம் தொலைக்காட்சிக்கும் சுந்தருக்கும் இடையே குற்றச்சாட்டுகளும் முரண்பாடுகளும் வாக்குவாதமும் ஏற்பட்டு இருந்தமை லண்டன் குரல் இதழ் 23 (மார்ச் – ஏப்ரல் 2008) ல் வெளிவந்திருந்தது.

அதன்பின்னர் சுந்தர் ரிரிஎன் – ஜரிவி தொலைக்காட்சியில் பணியாற்றி இருந்தார். தற்போது ஜிரிவி இன் முக்கிய நிகழச்சித் தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி வழங்குனராகவும் உள்ள தினேஸ்குமாரும் தீபம் தொலைக்காட்சியில் இருந்தே ரிரிஎன் – ஜிரிவி தொலைக்காட்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிரிவி இலும் சுந்தர் நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஜிரிவி இல் சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் சிலர் அத்தொலைக்காட்சியில் இருந்து விலகிய போது சுந்தரும் அதன் காரணமாக வெளியேறினார். அதன் பின்னர் தற்போது வடக்கின் வசந்தத்தில் யாழ்ப்பாணத்தில் ஹொட்டல் கட்டிவருகின்ற ஆணிவேர் படத் தயாரிப்பாளர் திலகராஜாவின் உணவகம் ஒன்றில் முகாமையாளராகக் கடமையாற்றினார்.

இலங்கைக்கு தனது தாயை பார்க்க சென்ற பொழுதே விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். ஜிரிவி இல் பணியாற்றியது தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. இருப்பினும் இவர் நீண்ட காலத்திற்கு முன்னரேயே ஜிரிவி யை விட்டு வெளியேறியதும் மற்றும் அரசுசார்பானவர்கள் மத்தியில் இருந்து வந்த வேண்டுகோள்களை அடுத்தும் இவர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

பல்கலைக்கழகம் முதல் மருத்துவமனை வரை தொடரும் துஸ்பிரயோகங்கள் : மாணவியின் சாட்சியம் : த ஜெயபாலன்

”பெண்கள் மேலதிகாரிகளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்” என்றும் ”யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தற்கொலை, தற்கொலை முயற்சிகள் அதிகரித்து உள்ளது” என்றும் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அண்மைய நிகழ்வுகளில் சுட்டிக்காட்டி இருந்தார். ஏற்கனவே இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், மற்றும் தற்போது இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களின் பின்னணியில், பல்கலைக்கழக விரிவுரையாளர்களே உள்ளதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டி உள்ளார்.

நீண்ட காலம் இலங்கையில் நிலவிய யுத்த சூழலை தங்களது துஸ்பிரயோகங்களுக்கான விளைநிலமாகப் பயன்படுத்திய பாதகர்கள் தற்போது ஏற்பட்டுள்ள யுத்தமற்ற சூழலில் வெளிச்சத்திற்கு வந்துகொண்டுள்ளனர். தேசம்நெற் இல் வெளியான கட்டுரைகளை அடுத்து பாதிக்கப்பட்ட சிலர் வெவ்வேறு வழிகளில் எம்மை மறைமுகமாக அணுகி உள்ளனர். அவர்கள் தங்களை இனம் காட்டமுடியாத நிலையில், அவர்களது வாக்கு மூலத்தை சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இருப்பினும் இவற்றைக் கடந்து உறுதியான சாட்சியங்களுடன் மாணவி ஒருவர் முன்வந்துள்ளார். அதிபர் இமெல்டா சுகுமார் வெளிப்படுத்தியது எமது சமூகத்தில் மறைந்து குவிந்து கிடக்கின்ற சீரழிவின் ஒரு பகுதியே என்பதனை அந்த மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியானது உறுதிப்படுத்துகிறது.

பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் இளம்பெண்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து விசேடமாகக் கவனிக்கும் மருத்துவர்கள் – மாணவியின் சாட்சியம்

1984ல் இலங்கையின் மத்திய மலைநாட்டில் கண்டியில் பிறந்த பெண் இவர். இவரின் பெற்றோர் தமிழும் சிங்களமும் என்பதால் சிங்களத்திலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார். மலையகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் உழைப்பிற்காக கொழும்புக்குச் சென்று வாழ்ந்தனர். கபொத சாதாரண தரத்தில் (O/L) படித்துக் கொண்டிருந்த காலம் அது. இளமையில் வறுமை இருந்த போதும் அம்மாணவியின் அழகில் வறுமை இருக்கவில்லை. துரதிஸ்ட வசமாக மிகுந்த நோய்வாய்ப்பட்டார். அடிக்கடி மயக்கம் ஏற்படும். கடுமையான வலி ஏற்படும். அதனால் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அம்மாணவியைப் பரிசோதித்ததில் அவர் இதயம் தொடர்பான நோயுடையவராகவும் அது சிக்கலானதாகவும் விசேட நிபுணத்துவம் பெற்ற ஒருவரின் கீழ் பார்க்கப்பட வேண்டியதாகவும் இருந்தது. அதனால் இலங்கையில் மிகவும் பிரபல்யமான மருத்துவ நிபுணரின் கீழ் பதிவு செய்யப்பட்டார்.

இவருடைய இதய நோயக்கு சிகிச்சை அளிக்க வந்தவர் இதயமற்ற ஒரு மருத்துவ நிபுணர் என்பதை அம்மாணவி வெகுவிரைவிலேயே அறிந்துகொண்டார். இந்த மருத்துவ நிபுணர் யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல்யம் வாய்ந்த பத்திரிகை ஆசிரியரினதும் பிரபல்யமான கல்லூரியினது அதிபரினதும் புதல்வர். யாழ் வைத்தியசாலையின் தலைமை வைத்தியராக இருந்தவர். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் விரிவுரையாளராக இருந்தவர். தற்போது பிரித்தானிய பல்கலைக்கழகம் ஒன்றிற்கு தெற்கு ஆசியாவில் உள்ள குறிப்பான நோய்கள் பற்றி கருத்துப் பரிமாற்றத்திற்கு வருபவர்.

மாணவியைப் பரிசோதித்ததில் அவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாணவிக்கு ஏற்பட்ட இதய நோய்க்கான சிகிச்சை என்பது இலங்கையில் சாதாரணமான ஒரு விடயமல்ல. இலங்கை முழுவதிலும் உள்ள இதயநோய் சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டிய நோயாளிகள் அனைவருமே கொழும்பு பொது மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப்படுவர். பணவசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அங்கே உடனடியாகச் சிகிச்சையை முடித்துக்கொள்வர். ஆனால் வசதி அற்றவர்கள் பொது மருத்துவமனையில் மாதங்களாக வருடங்களாக காத்திருக்க வேண்டி ஏற்படும்.

காரணம் இவ்வாறான நிபுணர்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவ மனைகளிலேயே பணி செய்கின்றனர். தனியார் மருத்துவமனையில், பொது மருத்துவமனையில் ஒரு சிகிச்சைக்கு வழங்கப்படும் நிதியைவிடப் பல மடங்கு அதிகம் வழங்கப்படுகிறது. அதனால் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இவர்கள் பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். (இவ்வாறு தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவது சட்டத்திற்குப் புறம்பானது அல்ல.) இலங்கை முழுவதும் இருந்து இவ்வாறான சிகிச்சைக்கு வரும் பல நூற்றுக் கணக்காண இந்த மாணவியைப் போன்ற ஏழைக் குடும்பப் பின்னணியில் வருவோர் மாதங்களாக வருடங்களாக கொழும்பு மருத்தவமனையில் காத்துக் கிடக்கின்றனர்.

இவ்வாறு 1999ம் ஆண்டில் கொழும்புப் பொது மருத்துவமனையில் இம்மாணவி அனுமதிக்கப்பட்டார். நோய் சிக்கலானதாக இருந்தமையால் 2001 முதல் குறிப்பிட்ட மருத்துவ நிபுணரின் கீழ் இந்த மாணவி பதிவுசெய்யப்பட்டார். முதற் சந்திப்பில் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவ, மாணவிகளுடன் அந்த மருத்துவ நிபுணர் அந்த மாணவியை முதற் தடவையாகப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்த பார்வையிடல்களின் போது மாணவி மீது தனிப்பட்ட அக்கறை ஆரம்பமானது. நிரையாக அடுக்கப்பட்ட கட்டில்கள் ஒரு திரையினால் மட்டும் மறைக்கப்பட்ட நிலையில் நிபுணர் பிரிசோதணை என்ற பெயரில் தகாத தொடுகைகளில் ஈடுபட்டு உள்ளார். ஒரு வைத்திய நிபுணரின் பரிசோதணையின் எல்லைகளைக் கடந்த இந்தச் செய்கைகளை இளம் மாணவி உணர்ந்து கொள்ள நீண்ட காலம் எடுக்கவில்லை. அந்த மருத்துவ நிபுணர் இந்த மாணவியை தன்னுடைய இச்சைகளுக்கு உட்படுத்த ஆரம்பித்தார்.

இச்சம்பவம் இடம்பெறுவதற்கு பத்து வருடங்களுக்கு முன் இந்த மருத்துவ நிபுணர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய பிரதித் தலைவராக இருந்த மாத்தையாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். பிரேமதாசா அரசாங்கத்துடனும் நெருக்கமாக இருந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா அரசாங்கத்துக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இவர் முக்கிய பங்கெடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இப்பேச்சுவார்தை முறிவடைந்த போது இம்மருத்துவ நிபுணர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனைச் சந்தித்து பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முற்பட்டு இருந்தார். அப்போது வே பிரபாகரன், ”நீங்கள் வைத்தியத்தைப் பாருங்கள். நான் அரசியலைப் பார்க்கிறேன்’ என்று தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்திருந்தது. மேலும் மாத்தையா தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதுடன் இந்த மருத்துவ நிபுணரும் கொழும்பு வந்துவிட்டார்.

இவ்வாறு அரசியல் செல்வாக்கும் பண பலமும் தொழிற் திறமையும் உடைய ஒருவர் இவ்வாறான குற்றத்தைப் புரிகின்ற போது பாதிக்கப்படுபவர்கள் அதனை எதிர்க்கின்ற தடுக்கின்ற ஆற்றலைக் கொண்டிருப்பதில்லை என்பதை சரியாகக் கணித்தே அந்தக் குற்றத்தை இழைக்கின்றனர். மலையகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தன்னுடலின் மீது ஒரு மருத்துவரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையை தன் பெற்றோரிடமே எடுத்துச் சொல்ல முடியாத நிலையில் தனக்குள்ளேயே புளுங்கவே முடிந்தது.

நாட்கள் நகர நகர அந்த மாணவியின் உள்ளமும் பாதிப்படைந்தது. 2002ல் அந்த மருத்துவ நிபுணர் மாணவியை மாதத்தில் ஒரு தடவை பார்வையிட நேரம் வழங்கப்பட்டது. மாணவியை பரிசோதணைக்கு முன் குளித்துவிட்டு இருக்குமாறும் அணியும் ஆடைகள் பற்றியும் கட்டளையிட்டுள்ளார் மருத்துவ நிபுணர். மருத்துவ நிபுணரை சந்திக்கும் நாள் நெருங்கும் போதெல்லாம் அந்த மாணவி பயத்தினால் மயங்கி வீழ்ந்தால். தனக்கிருந்த நோயின் வலியிலும் பார்க்க அந்த நோயைக் குணமாக்க வந்த மருத்துவ நிபுணர் அப்பெண்ணின் உடல்மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறை அவருக்கு அதிக வலியையும் உளைச்சலையும் கொடுத்தது.

மாணவியின் பெற்றோரோ மருத்துவ நிபுணர் தங்கள் மகளைத் தனிப்பட்ட முறையில் கவனித்து சிகிச்சை அளிக்கின்றார் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர். மனித இயல்புகளையும் நடவடிக்கைகளையும் மிகுந்த நிபுணத்துவத்துடன் அறிந்திருந்த அந்த மருத்துவ நிபுணர், பெற்றோருடன் மிக நட்பான உறவை ஏற்படுத்திக் கொண்டார். அந்த மாணவியை அப்பலோ தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கவும் முன்வந்தார். தங்களிடம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வசதியில்லை என்பதனை அவர்கள் தெரிவித்த போது, குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் அங்கு பார்வையிட அழைத்து வருமாறும் அதற்கான செலவை தானே செலுத்தவும் முன்வந்தார். பெற்றோரைப் பொறுத்தவரை அந்த மருத்துவ நிபுணர் கடவுளுக்கே சமமானவர் ஆனார்.

ஆனால் அந்த மாணவியின் வலியோ உச்சத்திற்கு சென்றது. வெறும் திரை மறைவிலேயே தன்னுடல் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட மருத்துவ நிபுணர், தனியார் மருத்துவமனையின் மூடிய அறையில், தன்னை என்ன பாடுபடுத்துவார் என்பதை அம்மாணவி ஊகித்துக் கொள்ள அதிகநேரம் ஆகவில்லை. அம்மாணவியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு தனிப்பட்ட முறையில் விசேட கவனிப்பை மருத்துவ நிபுணர் வழங்குகிறார் என்று காத்திருக்க, உள்ளே மருத்துவ நிபுணர் முழுஅளவிலான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார். இவ்வாறு ஒரிரு தடவைகள் அல்ல பலமுறை அம்மாணவி அவஸ்தைக்கு உள்ளானாள். ஒவ்வொரு தடவையுமே பெற்றோர் அவளுக்கு சிகிச்சை இடம்பெறுகிறது என்று எண்ணி மருத்துவ நிபுணருக்கு தங்கள் வேண்டுதலைச் செய்து கொண்டிருந்தனர்.

பெண்ணுடைய சம்மதம் இன்றி பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை செலுத்துவது மட்டும் தான் பாலியல் பலாத்காரம் என்ற முன்னைய வரையறைகள் அடிப்படையில் அந்த மருத்துவ நிபுணர் செய்தது பாலியல் பலாத்காரம் அல்ல. ஆனால் பெண்ணுடைய சம்மதம் இன்றி அவளுடலை ஆக்கிரமிப்பதும் அவளுடலை வன்முறை செய்வதும் பாலியல் பலாத்காரம் என்ற தற்போதைய வரையறைகளை இந்த மருத்துவ நிபுணர் மிகமோசமாக மீறியுள்ளார். அதிலும் ஒரு மருத்துவராக தொழில் நேர்மையுடன் தொழிலுணர்வுடன் செயற்பட வேண்டிய ஒருவர், அம்மாணவியின் கையறுநிலை, ஏழ்மை இவற்றைப் பயன்படுத்தி மிகத் திட்டமிட்டு தன்னுடையை இச்சைக்கான இரையைத் தேர்வுசெய்துள்ளார்.

அந்த மாணவியை தன்னுடைய பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திய அந்த மருத்துவ நிபுணர், அவருடைய மருத்துவ கண்காணிப்பில் இருந்த நான்கு ஆண்டுகளில், அம்மாணவியினுடைய நோய்க்கு குறைந்தபட்ச சிகிச்சையைக் கூட அளிக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் அந்த மாணவியைப் பார்வையிட வரும்போதும் தனது காமத்தைத் தீர்த்துக் கொண்டதற்கு அப்பால் அம்மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. தன்மீதான வன்முறையை நிறுத்தும்படி அம்மாணவி பலதடவை மன்றாடிய போதும், மருத்துவ நிபுணர் தன் வன்முறையை நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த நிபுணர், அந்த மாணவியை தனது இச்சைக்கு பயன்படுத்துகிறார் என்று அறிந்து கொண்ட அம்மாணவியைப் பார்வையிடும் சிங்கள மருத்துவரும், அம்மாணவி மீது தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அந்த மாணவி அதற்கு சம்மதிக்காதபோது அவர் தனது இச்சையை நிறுத்திக் கொண்டார்.

பெற்றோர் அந்த மருத்துவ நிபுணரை கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்துள்ளனர். அந்த மாணவி உண்மையைக் கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள சமூகக் கட்டமைப்பும் சமூகச் சூழலும் இடம்கொடுக்காது. இந்த வன்முறையில் இருந்து தன்னுடலைக் காப்பாற்ற அதனை அழிப்பதே ஒரேவழியென்ற முடிவுக்கு அந்த மாணவி வருகின்றாள். மாதங்களாக, வருடங்களாக தன்னுடல் மீது மேற்கொள்ளப்பட்ட அத்துமீறலை தாங்க முடியாத அந்த மாணவி ஒரிரு தடவை தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். மரணம் சாத்தியப்படவில்லை.

தன்னைக் காப்பாற்ற இலங்கையை விட்டு வெளியேறுவதே அவருக்கு அடுத்த உபாயமாக இருந்தது. தங்களுக்கு இருந்த சொத்துக்களை விற்று ஒருவகையில் படிப்பதற்கு என்ற போர்வையில் லண்டன் வந்து சேர்ந்தார், அந்த மாணவி. 2001ல் ஆரம்பித்தது 2005ல் லண்டன் வந்ததுடன் அதற்கு முற்றுப்புள்ளி என்றே நினைத்திருந்தார். ஆனால் மருத்துவ நிபுணர் விடவில்லை. பெற்றோரிடம் அந்த மாணவியின் தொலைபேசியைப் பெற்றுக்கொண்ட அந்த மருத்துவர் கற்கைகளுக்காக பிரித்தானியா வரும் ஒவ்வொரு தடவையும் இந்த மாணவியை முயற்சித்துள்ளார். ஆனால் மீண்டும் தன்னுடல் மீது இந்த மருத்துவ நிபுணர் வன்முறையில் ஈடுபடாதவாறு அவரை அந்த மாணவி தவிர்த்துள்ளார்.

இலங்கையில் இருந்த போது அந்த மாணவியின் உடல்மீது மேற்கொண்ட பாலியல் வன்முறையை இப்போது வார்த்தைகளில் தவளவிட்டார், அந்த மருத்துவ நிபுணர். அந்த மாணவி தொலைபேசியைத் துண்டிக்கும் பட்சத்தில் அவரின் பெற்றோரிடம் முறையிட்டு மீண்டும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வார். தொலைபேசியில் மாணவியுடன் கதைத்தபடி சிற்றின்பத்தில் திளைத்தார்.

இந்த மாணவி மருத்துவ நிபுணரைத் துண்டிக்க முயலும் ஒவ்வொரு தடவையும் அவரின் தாயார் அவரை நன்றி மறந்து செயற்படுவதாகவும், எதிர்காலத்தில் அப்படிச் செய்தால், தான் தற்கொலை செய்வேன் என்றும் தனது மகளை மிரட்டியுள்ளார். மிகவும் பலவீனமான உளவியல் தன்மையுடைய இப்பெண் யாரையும் எளிதில் நம்பக் கூடியவர். அவருடைய உளவியலையும் குடும்பத்தின் நிலையையும் ஏழ்மையையும் மிக அவதானமாகக் கைக்கொண்டு தன்இச்சையை அம்மருத்துவ நிபுணர் தொடர்கின்றார்.

இந்த நிலையில் அந்த மாணவிக்கு இருந்த சிறு வேலையும் இல்லாது போக வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் வீட்டில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். அப்போது தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை செலுத்த முடியாத நிலையில் தேசம்நெற் ஆசிரியர் என்றும் அறியாத நிலையிலேயே எமது உதவியை நாடினார். அதிலிருந்தே அந்த மாணவியினுடைய கடந்த காலம் பற்றியதும் தொடர்வதுமான கசப்பான சம்பவம் எமக்குத் தெரியவந்தது.

இச்சம்பவம் தெரிய வந்ததும் ஆதாரத்தைப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டோம். இந்தப் பின்னணியை அறியாத அந்த மருத்துவர் அன்றும் ஒருநாள் தொடர்புகொண்டார். அவர் தனது வார்த்தைகளால் பாலியல்வல்லுறவு கொண்டு சிற்றின்பத்தில் திளைத்தது முழுமையாகப் பதிவு செய்யப்பட்டது. இந்தப்பதிவில் அவர் பல வருடங்களாக அந்த மாணவியை தன்னுடைய பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொண்டது பற்றிய குறிப்புகளும் பதிவாகியது. இதே போன்று மற்றுமொருநாளும் இவருடைய இந்த காமுகத்தனம் பதிவாக்கப்பட்டு அவர் கடந்த மாதம் (ஒக்ரோபர்) இறுதிப்பகுதியில் எச்சரிக்கப்பட்டார்.

பதிவு செய்யப்பட்ட உரையாடல் முற்றுமுழுதான பாலியல் பிரயோகங்களைக் கொண்டிருப்பதால் அதன் ஒலியையோ எழுத்துருவையோ இங்கு பதிவு செய்வதை தவிர்க்கிறேன்.

இன்றுள்ள சமூகக் கட்டமைப்பில் தனக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையை தன் அடையாளத்துடன் அப்பெண் வெளியே கொண்டுவர அஞ்சுகின்றார். அரசியல் செல்வாக்கும், செல்வச் செழிப்பும், தொழிற்திறமையும் கொண்ட ஒரு சமூகப் பிரபல்யம் பெற்ற மருத்துவ நிபுணரை கூலி வேலை செய்கின்ற குடும்பத்தில் இருந்து வந்த ஒரு இளம்பெண் சட்டப்படியும் சமூகக் கட்டமைப்பிலும் எதிர்கொள்வது என்பது சாத்தியமானதாக இல்லை. அதனால் அந்த மாணவியின் மட்டுமல்ல பல நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்ட மாணவிகளின், பெண்களின் நிலை இவ்வாறு தான் உள்ளது. அதனால் யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களும் இவ்வாறான மருத்துவர்களும் தொடர்ந்தும் தங்கள் வன்முறைகளை பெண்கள் மீது கட்டவிழ்த்து விடுகின்றனர். முத்தையா யோகேஸ்வரி என்ற 13 வயதே நிரம்பிய வேலைக்கு அமர்த்தப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய விரிவுரையாளர் தங்கராசா கணேசலிங்கம் தற்போதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ளார். ஆனால் இதனை வெளிக்கொண்டுவந்த இளம் பெண் முத்தையா யோகேஸ்வரி தற்போது உயிருடன் இல்லை என்றே தெரியவருகின்றது.

யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியையே இடமாற்றுகின்ற அரசியல் பலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு இருந்தது. ஆனால் முத்தையா யோகேஸ்வரியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய தங்கராசா கணேசலிங்கம் இன்னமும் யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர். தங்கராசா கணேசலிங்கம் தவறு செய்திருக்கலாம் அல்லது நிரபராதியாக இருக்கலாம். ஆனால் ஒரு பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் பல்கலைக் கவுன்சிலின் எந்தவொரு விசாரணையும் இன்றி எப்படி மீண்டும் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்? சிவச்சந்திரன் போன்ற பெண்ணிலை வாதியைக் கொண்டுள்ள பல்கலைக்கழகக் கவுன்சில் எப்படி பெண்கள் மீதான இந்த பாலியல் துஸ்பிரயோகங்களை தொடர்ந்தும் அனுமதிக்கிறது?

பல்கலைக்கழகமும் தமிழ் அரசியல் தலைமைகளும் தவறான முன்னுதாரணங்களை அமைப்பதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தவறான நபர்களை பொறுப்பான பதவிகளில் நியமிப்பவர்களும் அந்தத் தவறுகளுக்கு பொறுப்பாகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சில தேசம்நெற்க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில சாட்சியங்களை தேசம்நெற் இல் எதிர்பார்க்கலாம்.

(குறிப்பு: தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொண்டுவர விரும்புபவர்கள் தேசம்நெற் உடன் அனாமதேயமாகவும் தொடர்பு கொள்ளலாம்.)

அண்மையில் யாழ் பல்கலைக்கழகம் பற்றி அங்கு பட்டப்படிப்பை முடித்த மாணவனுடன் உரையாடிய போது, சில பெண்கள் விரிவுரையாளர்களிடம் தங்களை இழந்து திறமைச் சித்திபெறத் தயாராக இருப்பதாகவும் அதனால் விரிவுரையாளர்களை பேராசிரியர்களைத் தவறு சொல்வதில் அர்த்தமில்லை என்றார். ஒரு விரிவுரையாளருடைய ஒரு பேராசிரியருடைய கடமை தொழில் பொறுப்பு என்பனவற்றை கவனத்திற்கொள்ளாமல் பாதிக்கப்படுகின்ற மாணவிகள் மீதே குற்றம் சுமத்துகின்ற ஒரு போக்கே உள்ளது. இது ஆணாதிக்க சமூக்க கட்டமைப்பின் ஒரு பிரதிபலிப்பே. பட்டப்படிப்பிற்கு செல்கின்ற மாணவிகளுடைய நிலை இப்படி இருக்கும் போது கண்டியில் கூலித் தொழிலாளிகளின் குடும்பத்தில் இருந்து கொழும்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற 14 வயதான இளம்பெண், அரசியல் செல்வாக்கும், செல்வச் செழிப்பும், தொழிற்திறமையும் கூடிய ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டால் பெற்றோரிடமே சென்று முறையிட்டால் நம்ப மாட்டார்கள் என்ற நிலையில் எங்கு சென்று முறையிட முடியும்?

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்.

K Thevathasanசினிமாத் துறையில் மிகுந்த ஆர்வம் உடையவரும் இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவரும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்தவருமான கனகசபை தேவதாசன் இன்று (நவம்பர் 15 2010 முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். நியூ மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் 2008 யூனில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களுக்கு மோலாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தேவதாசன் தனக்கு விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் இல்லையேல் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கின்றார். இதே கோரிக்கைகளுக்காக முன்னரும் உண்ணாவிரதம் இருந்து உறுதிமொழி வழங்கப்பட்டதையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். தற்போது அந்த உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில் தேவதாசன் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றார்.

இந்த உண்ணாவிரதம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

”2008யூன் மாதம் தொடக்கம் சுமார் 15 மாதகாலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) விசாரணைக்கு பூரணமாக ஒத்துழைத்தேன். தமிழீழ விடுலைப்புலிகள் இயக்கத்துடனான எனது தொடர்பை ஒத்துக்கொண்டு 26-08-2009ல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தேன். எனக்கு எதிரான வழக்கில் நான் எதிர்த்து வழக்காடப் போவதில்லை என்றும் இவ்வாக்கு மூலத்தில் உறுதியளித்தேன். அப்படி இருந்தும் என்மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் தாமதம் காட்டப்படுவதன் காரணம் என்ன?” எனக் கேட்டு நவம்பர் 21 2009ல் அப்போதைய நீதியமைச்சர் மகிந்த மொறகொடவுக்கு  தேவதாசன் கடிதம் எழுதி இருந்தார்.

தேவதாசன் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவ்வித நீதி விசாரணையும் இன்றி காலவரையறையற்று தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் 20 வருடங்களாக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை வெற்றி கொண்ட அரசு சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலைப் புலிகளை நியாயமான முறையில் விடுதலை செய்து வருகின்றது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் அடங்குகின்றனர். ஆனால் விரும்பியோ விரும்பாமலோ தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டு இருந்த ஒருவரை தொடர்ந்தும் நீதி விசாரணையின்றி காலவரையறையின்றி தடுத்து வைத்திருப்பது எவ்வாறு நீதியாகும் என தமிழ் மக்களிடையே கேள்வி எழுகின்றது. தேவதாசன் மட்டுமல்ல பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பய்ங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறான நியாயமான நடவடிக்கைகள மட்டுமே தமிழ் மக்களிடம் அரச மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் என்பது தமிழ் அரசியல் ஆர்வலர்களுடைய கருத்தாக உள்ளது.

கனகசபை தேவதாசன் தடுத்து வைக்கப்பட்டு உள்ளது தொடர்பான முன்னைய பதிவு:

சிறையில் இருந்து க தேவதாசன்: சிறைக்கு வெளியே மக்களுக்காகப் போராடியவர் சிறைக்குள் தனக்கான போராட்டத்தை ஆரம்பிக்கிறார்!

‘தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு இந்தியாவும் ஒரு காரணம். ஆனால் இந்தியா மட்டும் காரணம் அல்ல’ லண்டன் கூட்டத்தில் இந்திய ராஜதந்திரி கலாநிதி சந்திரசேகரன்

Audience”தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு இந்தியாவும் ஒரு காரணம். ஆனால் இந்தியா மட்டும் காரணம் அல்ல” என இந்திய ராஜதந்திரி கலாநிதி சந்திரசேகரன் லண்டனில் நேற்று (நவம்பர் 10, 2010) நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ”இலங்கைக்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டது துரதிஸ்டமானது. ஒப்பந்தத்தில் இந்தியா தனது நலன்களை முன்னிலைப்படுத்தியது தவறு. ஒப்பந்தம் இலங்கை அரசுக்கும் தமிழ் தரப்பிற்கும் இடையேயே மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும்” என்று கலாநிதி சந்திரசேகரன் இந்தியா விட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டினார்.

‘இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் பரிமாணம்’ என்ற தலைப்பில் கலாநிதி சந்திரசேகரன் பிரித்தானியாவில் இயங்கும் இலங்கை அமைப்புகளின் பிரதிநிதிகளின் மத்தியில் சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். தேசம்நெற் – ASATiC இணைந்து ஏற்பாடு செய்த இக்கூட்டத்திற்கு ASATiC செயலாளர் ரவி சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார்.

”கடந்த காலங்களில் இந்தியாவில் உள்ள வெவ்வேறு ஏஜென்சிகள் தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கியது பயிற்சி அளித்தது” எனத் தெரிவித்த கலாநிதி சந்திரசேகரன் ”இந்தியா ஒருபோதும் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவில்லை” எனவும் தெரிவித்தார். ”புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்னமும் பலமாக உள்ளனர். அவர்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டால் மீண்டும் ஒரு போராட்டத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்” என எச்சரித்த கலாநிதி சந்திரசேகரன், இலங்கை அரசு அரசியல் தீர்வை முன்வைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

Audienceபிரித்தானியாவில் இயங்கும் தமிழ், முஸ்லீம், சிங்கள அமைப்புகளின் பிரதிநிதிகளும் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகப் பிரதிநிதியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் தயாபரன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். தமிழ் அமைப்புகளில் அரவிந்தன் – தமிழர் விடுதலைக் கூட்டணி, சம்பந்தன் – ரெலோ, தயா – புளொட், கிருஸ்ணன் – ரிஎம்விபி, நேசன் – ஈரோஸ் (ஒரு பிரிவு), கனெக்ஸ் – ஈரோஸ், ஆர் ஜெயதேவன் – ஏபிஆர்எஸ்எல், ராம்ராஜ் – ரிபிசி வானொலி, நஜா மொகமட் – ஸ்ரீலங்கா இஸ்லாமிக் போறம், முன்னாள் ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் ஜனா, ரான்ஸ் குளோபல் நிர்மலன், நேர்டோ வாசு ஆகிய அமைப்பினரும் பன்முகப்பட்ட அரசியல் ஆர்வலர்களும் இக்கலந்துரையாடல்களில் பங்கேற்றுக் கொண்டனர்.

Ravi_Sundaralingam_and_Chandrasekaran_Drஇலங்கையில் உயிர்நீத்த அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குமான மௌன அஞ்சலியைத் தொடர்ந்து ரவி சுந்தரலிங்கம் தனது தலைமை உரையை வழங்கினார். இலங்கை மீதான இந்தியாவின் ஈடுபாட்டினையும் இந்தியாவின் பொறுப்புணர்வினையும் மேலோட்டமாகச் சுட்டிக்காட்டி கலாநிதி சந்திரசேகரனுடைய சிறப்புரைக்கு ஆரம்பப் புள்ளிகளை இட்டுச் சென்றார் ரவி சுந்தரலிங்கம். அவர் தனது உரையில்,

”தமிழீழ விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது. அதில் தமிழ் மக்கள் பாரிய இழப்பைச் சந்தித்தனர். முள்ளிவாய்க்கால் முடிவுக்கு இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது. அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பங்களாதேஸ் பிரிக்கப்பட்டது போன்று தமிழீழம் பிரித்துக் கொடுக்கப்படும் எனக் கூறிவந்தனர். ஆனால் இந்திய அரசு என்பது ஒரு போதும் அரசுக்கு எதிரான அரசு இல்லை என்பதனை இடதுசாரிக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட நாம் நம்பவில்லை.

இந்தியா ஒரு போதும் பிரிவினைவாதத்தை ஏற்றுக்கொள்ளாது என்பதனை அப்போது இலங்கை விடயத்தில் நெருக்கமாக ஈடுபட்டிருந்த கலாநிதி சந்திரசேகரனும் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருந்தார். அப்படி இருக்க, இந்தியா துரோகம் இழைத்துவிட்டதாக கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இலங்கையின் கட்டமைப்பிற்குள் போராடவும் தீர்வை எட்டவுமே இந்தியா தீர்க்கமாக இருந்தது. ஆனால் தமிழ் தலைமைகள் அதனைத் தவறாகப் புரிந்து, இந்த நிலைக்கு வந்துள்ளோம். நாங்கள் மனிதர்களாக அனைத்து சமூகத்தவர்களும் இணைந்தே செயற்பட வேண்டும். இதனை விளங்கிக் கொள்ளாததனால் தமிழர்கள் மிகப் பெரும் விலையைக் கொடுத்துள்ளனர்.

இந்தியா தமிழர்களுக்கு சாதகமாகச் செயற்பட வேண்டும் என்று கோருவதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழர்களானால் என்ன, சிங்களவர்களானால் என்ன இரு சமூகங்களுமே இந்தியாவில் இருந்தே வந்தனர். இரு சமூகங்களுக்கும் இந்திய வரலாற்றுத் தொடர்பு உள்ளது. தமிழ்நாட்டிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதனால் மட்டும் இந்தியா தமிழர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. சிங்களவர்களும் இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்க முடியும்.

இன்று சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களை வெற்றிகொண்டுள்ளனர் என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் இலங்கை அரசுக்கு ஏதிராக 30 ஆண்டுகள் போரிட்டு உள்ளனர். இன்று அவர்கள் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர் என்பதே உண்மை. ஆனால் வெற்றி பெற்ற சிங்கள அரசு எவ்வளவு தூரம் நியாயமானதாகவும் பெருந்தன்மையாகவும் உள்ளது என்பதைப் பொறுத்தே இலங்கையின் எதிர்காலம் தங்கி உள்ளது” என ரவி சுந்தரலிங்கம் தன் தலைமை உரையை முடித்துக் கொண்டார்.

Chandraseharan_Drஅதனைத் தொடர்ந்து நிகழ்வின் பிரதம பேச்சாளர் கலாநிதி சந்திரசேகரன், ‘இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் பரிமாணம்’ என்ற தலைப்பில் உரையாற்றியார். அதனைத் தொடர்ந்து இரு மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற கேள்வி நேரத்தில் பங்கெடுத்துக் கொண்டு இலங்கை – இந்திய உறவு, இந்திய – சீன உறவு, இந்திய – சர்வதேச உறவு, இலங்கை – சீன உறவு, இலங்கை – சர்வதேச உறவு எனச் சிக்கலான அரசியல் சூழல் பற்றி முன்வைக்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். 1980 முதல் 1991 வரை இந்திய அரச கட்டமைப்பில் அங்கம் வகித்த கலாநிதி சந்திரசேகரன் தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர்கள் அனைவரையும் தான் சந்தித்ததாகத் தெரிவித்தார். இச்சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த பலர் கலாநிதி சந்திரசேகரனை அப்போது தாங்கள் சந்தித்துக் கொண்டதை குறிப்பிட்டுக் காட்டினர்.

கலாநிதி சந்திரசேகரனின் உரையிலும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கேள்வி நேரத்திலும் அவர் குறிப்பிட்ட விடயங்களின் சாரம்சம்:

”தமிழர்களுடைய பிரச்சினைக்கு இலங்கையின் ஒற்றையாட்சிக்கு உள்ளேயே தீர்வு என்பதை இந்தியா எப்போதும் தெளிவாகவே கூறி வந்தது. இதனை தமிழ் தலைவர்களிடமும் இந்தியா தெரிவித்து இருந்தது. இங்கு என்னைத் தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள், எப்போதாவது நான் இதற்கு மாறாகக் கூறி இருந்தால் நீங்கள் என்னைக் கேளுங்கள்.

1982ல் பாண்டி பஜாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சுட்டு சம்பவம். முதல் இலங்கை தொடர்பான இந்திய வெளிவிவகாரக் கொள்கை பல்வேறு பிரிமாணங்களைக் கொண்டு உள்ளது. ஆரம்பத்தில் இந்தியா கூடுதலாகத் தலையிடவில்லை. உள்நாட்டு விடயமாகவே கருதியது.   

1981ல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை. 1982ல் இடம்பெற்ற சிறு சிறு கலவரங்கள். ஆனால் 1983ல் இடம்பெற்ற கலவரத்தை அந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. 1983 கலவரம் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தமிழர்களையும் பாதித்தது.

அதனைத் தொடர்ந்து 1983 யூலைக்குப் பின் இலங்கை இதனை வெளியே கொண்டு சென்றது. திருகோணமலைத் துறைமுகம், வொய்ஸ் ஒப் அமெரிக்கா, இஸரேல் என இலங்கையில் வெளித்தலையீடுகள் தலை காட்டியது. அதனால் இந்தியா இலங்கை விடயத்தில் சற்று கடும்போக்கைக் கடைப்பிடித்தது. அதுவரை தமிழ் நாட்டில் கூட இலங்கை அரசுக்கு சார்பான நிலையே இருந்தது. இந்தியாவில் கைது செய்யப்பட்ட குட்டிமணி இலங்கையிடம் கையளிக்கப்பட்டார். இலங்கை மீதான இந்தியாவின் கடும் போக்கு அது இலங்கை மீது ஆளுமை செலுத்த வேண்டும் என்ற நோக்கிலோ அல்லது இலங்கையை இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கிலோ செய்யப்படவில்லை.

1983 யூலைக் கலவரம் தமிழர்களுடைய பிரச்சினையை இலங்கை அரசு இராணுவ ரீதியாக தீர்க்க முற்பட்டதற்கான ஆரம்பமாகவே இந்தியா பார்த்தது. அதனால் தமிழர் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு அல்ல அரசியல் தீர்வு என்பதை வலியுறுத்துவதே இந்தியாவின் நோக்கமாக இருந்தது.

ஆனால் இந்திய அமைதிகாக்கும் படையின் தலையீடு துரதிஸ்டமானது. முழுமையுமே தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டது. இந்தியா இராணுவ ரீதியில் தலையிட்டு இருக்கக் கூடாது. மோசமான நிகழ்வுகள் நடைபெற்று விட்டது.

மத்தியஸ்தம் வகிக்க வந்த இந்தியா தனது நலன்களை முன்னிலைப்படுத்தியது தவறு. ஒப்பந்தம் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இலங்கை அரசுக்கும் தமிழ் தரப்பினர்க்கும் இடையில் இடம்பெற்று இருக்க வேண்டுமேயொழிய, இலங்கை அரசுக்கும் – இந்திய அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கக் கூடாது.

இந்த ஒப்பந்தம் பற்றி அப்போது என்னுடன் ஆலோசிக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தம் பற்றி நான் அறிந்திருக்கவும் இல்லை. இதில் எல்ரிரிஈ யை மட்டும் முன்னிலைப்படுத்தியதும் தவறு. அவர்கள் மட்டும் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லை.

ஆனால் இவ்வளவு நிகழ்வுகளுக்குபி பின் அண்மையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் ரிஎன்ஏ தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனத் தெரிவித்து இருந்தார். அதனை யாரும் மறுக்கக் கூட இல்லை. (ரவி சுந்தரலிங்கம் குறுக்கிட்டு அதனைக் கண்டித்து எழுதியதைச் சுட்டிக்காட்டினார்.) இவ்வாறான சிந்தனை மாற வேண்டும்.

இந்தியா இலங்கையை விட்டு வெளியேறும் போது எல்ரிரிஈ யை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது. தவறுகள் எல்லாத் தரப்பிலும் உள்ளது. இந்தியாவை மட்டும் குறைகூற முடியாது. தமிழ் தலைவர்களுக்கும் பொறுப்பு உண்டு.

ஆனால் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின் பென்டூலம் மற்றப் பக்கத்திற்கு ஆடத் தொடங்கி விட்டது.

சீனா பெரு வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. சீனா அளவிற்கு இல்லாவிட்டாலும் இந்தியாவின் பொருளாதாரமும் 8 வீதம் முதல் 9 வீதம் வளர்ச்சி அடைகிறது. இந்தியா விரிவடைகின்றது. ஏனைய நாடுகளுக்கும் இந்தியா வாயில்களைத் திறந்து விடுகின்றது. இந்தியாவின் வளர்ச்சி அதன் அயல் நாடுகளுக்கும் சாதகமானதாகவே அமையும். ஏனெனில் இந்தியாவின் பாதுகாப்பு அதன் அயல்நாடுகளிலும் தங்கி உள்ளது. அதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பயனை அயல்நாடுகளும் அனுபவிக்க வேணடும். அயல்நாடுகள் சுயாதீனமாகவே இயங்கும். அயல்நாடுகளில் வெளியார் வந்து பொருளாதார மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அதே சமயம் இதற்கு சில எல்லைகளும் உண்டு. இந்தியாவின் அயல்நாட்டில் வெளியார் ஒரு இராணுவத்தளம் அமைப்பதை இந்தியா அனுமதிக்காது. ஆகவே அயல்நாடுகளின் சுயாதீனத்தில் ஒரு சமநிலை பேணப்படும். 

இதற்கு நேபாள் சிறந்த உதாரணம். ஒரு நிலைக்கு மேல் இந்தியாவை மீறிச் செல்ல முடியவில்லை.

இலங்கையை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் உதவி வடக்கு – கிழக்குக்கு மட்டும் தான் இருக்க வேண்டியதில்லை. இலங்கை முழுவதற்குமே உதவியைப் பகிரவே விரும்புகிறது. வடக்கு – கிழக்கு இப்போது மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் தற்போது வடக்கு – கிழக்கிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது. தெற்கிலும் கூட மிகவும் கஸ்டமான நிலையில் வாழும் சிங்கள மக்கள் உள்ளனர்.

மீள் உறவு, மீள் கட்டுமானம், மக்களைப் பலப்படுத்தல், அரசியல் தீர்வு என்று நான்கு விடயங்கள் முக்கியமானதாக உள்ளது. இதில் அரசாங்கம் மீள் கட்டுமானத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றது. நீங்கள் அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். இதில் எதற்கு முன்னுரிமை என்பதில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளது. அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹில்லரி கிளிங்டன் மீள்கட்டுமானமும் அரசியல் தீர்வும் சமாந்தரமாகச் செல்ல வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இது விடயத்தில் இலங்கை அரசு அரசியல் தீர்வைக் கைவிட முடியாது. அதற்கு சிறிது காலம் எடுக்கலாம். அதனால் தமிழர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

இலங்கை விவகாரத்தை தமிழ்நாடு அரசே தீர்மானிப்பதாகக் கருதப்படுகிறது. அது அப்படியல்ல. அதற்காக தமிழ்நாட்டு அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று நான் சொல்லவில்லை. இந்தியாவில் உள்ளது ஒரு கூட்டரசாங்கம். அதில் மாநிலக் கட்சிகளும் பங்கேற்றுள்ளன. ஆனால் அவர்களுடைய மத்திய அரசின் முடிவுகளில் மாநில அரசுக்கு மட்டுப்படுத்தப்பட்ட குரலே உள்ளது. அது மட்டுமல்ல தமிழ்நாடு இந்தியாவிலேயே நான்காவது பெரிய வளர்ச்சியடைந்துவரும் மாநிலம். அதன் முக்கிய கவனம் தகவற் தொழில்நுட்பத்திலும் தொழில் உருவாக்கத்திலேமே அதிகம் உள்ளது. இலங்கை விவகாரம் தமிழ்நாட்டுக்கு முக்கியமான ஒரு விடயமல்ல” என கலாநிதி சந்திரசேகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

Audienceஅதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நீண்ட கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் குறிப்பிட்ட விடயங்கள்,

”தற்போது இந்தியாவில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவோ, சீனாவில் உள்ள டேவிட் கமரூனோ இலங்கை விவகாரம் பற்றிப் பேசினால் நல்லது. ஆனால் அவர்கள் அது பற்றி பேசுவார்கள் என நான் நினைக்கவில்லை.

இந்தியா தொடர்ந்தும் இலங்கை அரசை அரசியல் தீர்வுக்கு, அதிகாரப் பரவலாக்கத்திற்கு வற்புறுத்தி வருகின்றது. அது 13 திருத்தச் சட்டம்+ + + என்பதாகவே உள்ளது. வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்களிடையேயே பெருமளவில் பேசப்படவில்லை. இப்போதுள்ள நிலையில் அது சாத்தியமானதாக இல்லை.

இந்தியா மீண்டும் தமிழ் தேசியத்தை ஆயுதம் ஏந்த வைக்கும் நிலை இப்போது இல்லை. தொழில்நுட்பம், விஞ்ஞானம் மிகவும் மாற்றமடைந்துவிட்டது. அன்று இருந்த உலகம் இன்று இல்லை. இந்தியா ஒரு போதும் தமிழ் இயக்கங்களுக்கு அரசியல் விரிவுரை எடுக்கவில்லை. இந்தியா தமிழீழம் பெற்றுத் தரும் எனவும் கூறவில்லை. இந்த இயக்கங்களின் கைகளில் இருந்த ஆயுதங்கள் ஆபத்தானதாகிப் போன போது, இந்தியா இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்தது.

நடந்த தவறுகளுக்கு எல்லோருக்கும் பொறுப்பு இருக்கின்றது. உங்களுக்கும் பொறுப்பு இருக்கின்றது. மாத்தையாவுக்கு இந்திய புலனாய்வுத்துறையுடன் தொடர்பு இருப்பதாகக் கூறிக் கொலை செய்தீர்கள். மாத்தையாவுக்கும் இந்திய உளவுத்துறைக்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. அதற்கு ஆதாரம் இருந்தால் அதனை நான் பார்க்க விரும்புகிறேன். இப்படிப் பல சம்பவங்கள் நடந்துள்ளது. பலரை இந்திய முகவர் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அவர்களுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பே இருந்திருக்காது.

தமிழ் இயக்கங்களுக்குள் நாங்கள் ஈரோஸ் உடன் நெருக்கமாக இருந்தோம். புலிகளுக்கு மாற்றாக வருவார்கள் என்று கருதினோம். ஈரோஸில் கண்னியமான பலர் இருந்தனர். ஆனால் அது மட்டும் போதாது. அவர்களிடம் இராணுவ பலம், கட்டுப்பாடு  இருக்கவில்லை. அவர்களும் புலிகளிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டி வந்தது.

எல்ரிரிஈ முற்றாக முறியடிக்கப்பட்ட நிலையிலும் இலங்கையின் வடக்கு கிழக்கில் மூன்று பெரும் இராணுவப் படைப்பிரிவுகள் நிலை கொண்டுள்ளது. இது மிகவும் அதிகமானதே. ஆனால் இவ்விடயத்தில் இந்தியா எதுவும் கூற முடியாது. இது இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பானது. இதே நிலைமை இந்தியாவின் காஸ்மீரில் உள்ளது. ஆனால் இன்னமும் அங்கு ஆயுத வன்முறை இடம்பெற்றுக்கொண்டு உள்ளது. ஆனால் எந்த நாடு ஆனாலும் அதன் இராணுவம் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக அரசாங்கம் செயற்பட முடியாது.

எல்ரிரிஈ முற்றாக முறியடிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் மோசமான நிலையிலேயே சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இதனை அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியாவையும் சீனாவையும் பயன்படுத்துவது இந்தியாவுக்கும் தெரியும். எல்லாவற்றுக்கும் ஒரு சிவப்புக் கோடு உள்ளது. அதனைத் தாண்ட முடியாது. அது ராஜபக்சவுக்கும் தெரியும். அது மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்பு ஈழத்தை அனுமதிக்காது என்பதும் ராஜபக்சவுக்குத் தெரியும். நீங்கள் இந்தியாவின் உதவி இல்லாமல் ஈழத்தை அமைக்க வழிதேடிப் பாருங்கள்.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தற்போதுள்ள முரண்பாடு ஒரு பெரும் பிரச்சினையாக இன்று இல்லை. இரு நாடுகளுமே இதனை சுமுகமாகவே அணுகுகின்றன. இந்த முரண்பாட்டை அயல்நாடுகள் பயன்படுத்த முற்படுவதால் சீன – இந்திய உறவு மோசமான நிலைக்குச் செல்லலாம். ஆனால் வளர்ச்சி அடையும் இந்திய பொருளாதாரம் எல்லைகளைக் கடக்கின்றது. அது சீனாவுக்கும் செல்கின்றது. அதனால் இந்த உறவுகள் பாதிப்படைவது அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார விருத்திக்கு உகந்தது அல்ல என்பது உணரப்பட்டு உள்ளது. ஆகவே எதிர்காலத்தில் முதலீட்டைப் பாதுகாப்பதும் லாபத்தைப் பெருக்குவதுமே எதிர்கால உறவுகளைத் தீர்மானிப்பதில் முக்கிய அம்சமாக இருக்கும்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் தலையிடுவதையோ ஐநா தலையிடுவதையோ இந்தியா தடுக்க முடியாது. இந்தியா ஐநா சாசனத்தில் கையெழுத்திட்ட ஒரு நாடு. ஐநா அமைதிகாக்கும் படைக்கு இந்தியா தனது இராணுவத்தை வழங்கி வருகிறது. இலங்கையில் நோர்வே மத்தியஸ்தம் செய்தது. நேபாள் வந்த ஐநா இந்திய விடயங்களில் தலையீடு செய்தது. ஐநா பல விடயங்களிலும் தேவையற்று மூக்கை நுழைக்கிறது. அதனை இந்தியா அனுமதிக்காது. இலங்கையில் ஐநா தலையீட்டை இந்தியா விரும்பாது.

மனித உரிமைகளைப் பயன்படுத்தி நாடுகளை மேலான்மை செய்வதையும் இந்தியா அனுமதிக்கப் போவதில்லை. மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போர்க் குற்றங்களைக் கொண்டு வருவது எல்லாம் நடக்கப் போவதில்லை. அவ்வாறான விடயங்களை இந்தியா எதிர்க்கும். இந்தியாவுக்கும் இதே பிரச்சினைகள் போர்க் குற்றச்சாட்டுகள் காஸ்மீரில் உண்டு. இந்தியா எப்படி இதனை ஆதரிக்கும்? இதனையே தான அமெரிக்கா குவாண்டனமோ பேயில், ஈராக்கில் செய்கின்றது.

இலங்கையின் குடிப்பரம்பல் என்பது உறுதியானதாக இல்லை. வடக்கு – கிழக்கில் இருந்து மக்கள் வெளியேறுகின்றனர். நீங்கள் இங்கு வாழ்கிறீர்கள். எப்படி குடிப்பரம்பலை ஒரே நிலையில் பேண முடியும். வரதராஜப் பெருமாள் அண்மையில் குறிப்பிட்டார் ‘கடைசி யாழ்ப்பாணத் தமிழன் இலங்கையை விட்டு வெளியேறும் போது தமிழர் பிரச்சினை தீர்ந்துவிடும்’ என்று.

நீங்கள் மீண்டும் உங்கள் நாட்டிற்கே செல்ல வேண்டும். ஆனால் இலங்கையில் இன்னமும் அந்நிலை தோன்றவில்லை. சிங்கள மக்களும் வெளிநாடு செல்லவே விரும்புகின்றனர். ஆனால் இந்தியாவில் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர். இலங்கையில் அவ்வாறான நிலை ஏற்பட பொருளாதாரம் முன்னேற வேண்டும். அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் நடந்து முடிந்த போரினால் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. வெளிநாட்டு கட்டமைப்புகள் அவ்வாறே உள்ளன. ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த ‘அடிடா’ அரசியலை விடவேண்டும். முரண்பாட்டு அரசியலை இனித் தொடர முடியாது. இவர்கள் இரு தரப்பு எல்ரிரிஈ யையும் கைவிட வேண்டும். புதிய சிந்தனையுடன் செயற்பட வேண்டும். இலங்கைக்குச் சென்று நிலைமைகளைப் பார்த்துவர வேண்டும். வடக்கு – கிழக்கு மற்றும் வறுமையில் வாடும் தென்பகுதி மக்களுக்கும் உதவ வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்னமும் பலமாக உள்ளனர். அவர்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டால் மீண்டும் ஒரு போராட்டத்தை ஏற்படுத்தக் கூடிய வல்லமை உடையவர்கள். அந்நிலை ஏற்படாமல் இலங்கை அரசு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். அதனையே இந்தியா வலியுறுத்துகிறது’ என கலாநிதி சந்திரசேகரன் சபையில் இருந்துவந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கையில் சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான அறிக்கை ஆவணி 02 குறைந்தபட்ச புரிந்துணர்வுக் குழுவின் உறுப்பினர் நிஸ்தார் மொகமட்டினால் கலாநிதி சந்திரசேகரனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இதன் போது கருத்து வெளியிட்ட நிஸ்தார் மொகமட், ”இலங்கையின் பல்லின சமூகம் என்பதனை வெறுமனே மொழிவாரியான தமிழ் – சிங்கள சமூகங்கள் என்று பார்க்கும் நிலை முடிவுக்கு வரவேண்டும்” என வலியுறுத்தினார். ”முஸ்லீம்கள் முற்றாக தனித்துவமான ஒரு தேசிய இனம்” என்பதனை அவர் வலியுறுத்திக் கொண்டார்.

இறுதியாக தேசம்நெற் ஆசிரியர் ரி சோதிலிங்கம் நன்றியுரை வழங்க நிகழ்வு முடிவுற்றது. இந்நிகழ்வில் பன்முகப்பட்ட அரசியலாளர்களும் ஒரே அரங்கில் கூடி ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் எதிரான உரையாடலை கண்ணியமான முறையில் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரிதிநிதி முன்னிலையில் இலங்கை அரசு தொடர்பான காட்டமான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள தீபாவளி நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பை உயர்ஸ்தானிகர் அலுவலகப் பிரதிநிதி விடுத்த போது தன்னை இலங்கையராக கருதும் நிலையை இலங்கை அரசு இன்னமும் ஏற்படுத்தவில்லை என ராஜன் என்பவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான பல்வேறு கருத்துப் பரிமாற்றத்துடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.

._._._._._.

தெற்காசிய ஆய்வுக் குழுவின் இயக்குநர் கலாநிதி சந்திரசேகரனுடனான சந்திப்பு

Chandrasekaran_Drதெற்காசிய ஆய்வுக் குழு –  South Asia Analytical Group – SAAG இன் இயக்குநரான கலாநிதி சந்திரசேகரன் உடனான கலந்துரையாடல் ஒன்று நவம்பர் 10 மாலை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ‘இலங்கை தொடர்பான இந்திய வெளிநாட்டுக் கொள்கைகளின் பரிமாணம்’ என்ற தலைப்பில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேசம்நெற் இணையமும் Accademy of Science and Arts for Tamils in Ceylon – ASATiC உம் இணைந்து இச்சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.

கலாநிதி சந்திரசேகரன் தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு மிக நெருக்கமானவர். தற்போதும் அவரை இயக்குநராகக் கொண்டுள்ள தெற்காசிய ஆய்வுக் குழு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் ஆளுமையுடைய வெளிநாட்டுக் கொள்கையைப் பிரதிபலிக்கின்ற ஒரு ஆய்வு நிறுவனமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இனப்பிரச்சினை அதன் பின்னணி பற்றி மிக ஆழமான அனுபவத்தைக் கொண்டவர் கலாநிதி சந்திரசேகரன். அதேசமயம் இந்திய வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் நெருக்கமானவர். இந்த வகையில் அவருடனான இச்சந்திப்பு இலங்கை தொடர்பான இந்திய வெளிநாட்டுக் கொள்கையை விளங்கிக் கொள்ளவும் இலங்கை – இந்திய உறவைப் விளங்கிக் கொள்ளவும் உதவும்.

கலாநிதி சந்திரசேகரன் 2007ல் ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் ரட்னசபாபதியின் லண்டனில் நடைபெற்ற நினைவு மாநாட்டில் கலந்துகொண்டவர். அத்துடன் வன்னி யுத்தம் வேகமடைந்து கொண்டிருந்த காலப்பகுதியில் சர்வதேச மாநாடு ஒன்றுக்காக செல்கையில் லண்டன் வந்து சில சந்திப்புக்களையும் மேற்கொண்டிருந்தார்.

அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளது பலவீனம் அரசியல் தீர்வு 13வது திருத்தச் சட்டத்தை ஒட்டியது வடக்கு கிழக்கு அண்மைய எதிர்காலத்தில் இணைக்கப்படமாட்டாது போன்ற எதிர்வுகூறலை வெளியிட்டும் இருந்தார். இவை தேசம்நெற் இல் பிரசுரிக்கப்பட்டும் இருந்தது.

இச்சந்திப்பு சிறிய உரையைத் தொடர்ந்து ஒரு கேள்வி நேரமாகவே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தேசம்நெற் உடன் தொடர்பு கொள்ளவும்.

கலாநிதி சந்திரசேகரனிடம் கேள்விகள் உள்ளவர்கள் அவற்றைப் இங்கு பதிவிடும்பட்சத்தில் அதற்கான அவரின் பதில்களைப் பெற முயற்சிக்கப்படும்.