விஸ்வா

விஸ்வா

யாழ்.மாவட்டத்தின் கல்விநிலையை மேம்படுத்த ‘அமெரிக்கன் கோனர்’ அமைக்கப்படும்! – அமெரிக்கத் தூதுவர்

Patricia_A_Butenisயாழ்ப்பாண மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த ‘அமெரிக்கன் கோனர்’ எனப்படும் அமெரிக்க நிறுவனம் விரைவில் அமைக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றிசியா புட்டெனிஸ் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று (09-06-2010) யாழ். வந்துள்ள இவர் யாழ். அரச அதிபர் கே.கணேஸிடம் இதனைத் தெரிவித்தார். நேற்று அமெரிக்கத் தூதுவர் யாழ். அரச அதிபரை அவரது யாழ். செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். 

Ganesh_GA_Jaffnaஇது குறித்து அரசாங்க அதிபர் கே.கணேஸ் தெரிவிக்கையில்: மீள்குடியேற்றம், அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம், யாழ்.நிலவரங்கள், யாழ்.பல்கலைக்கழகச் செயற்பாடுகள், உட்பட பலவேறு விடயங்கள் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்தில் கல்வி நடவடிக்கைளை மேம்படுத்தும் வகையில் அமெரிக்க நிலையம் (அமெரிக்கன் கோனர்) ஒன்றை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் கூறினார்.

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் பற்றிசியா புட்டெனிஸ் நேற்று மாலை யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாசலுக்குச் சென்று முஸ்லிம் மக்களின் நிலமைகள் தொடர்பாக ஆராய்ந்தார். தொடர்ந்து யாழ். மறை மாவட்ட ஆயர் வண. தோமஸ் சௌத்தரநாயகம் அடிகளாரை சந்தித்து கலந்துரையாடினார். இன்று யாழ்.மாவட்டத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் கையைத் துண்டித்து அவரது நகைகள் கொள்ளை. மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நெடுங்கேணியில் சம்பவம்!

நெடுங்கேணியில் மீளக்குடியமர்ந்த பெண்ணொருவரின் கைகள் வெட்டித் துண்டிக்கப்பட்டு அவரது நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்றிரவு (Jun 09 2010) இந்த பீதியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மையில் மீள் குடியமர்த்தப்பட்ட நெடுங்கேணிப் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவருக்கே இந்நிலை ஏற்பட்டது.

சொந்த இடத்தில் மீளக்குடியமர்ந்த இப்பெண்ணும் அவரது கணவரும் தங்கள் பாதுகாப்பிற்காக அயலில் தெரிந்த ஒருவரின் விட்டிற்குச் சென்று தங்குவது வழக்கம். சம்பவதினம் அவ்வாறு தமது கொட்டிலில் இருந்து சற்றுத் தொலைவிலிருந்த வீட்டிற்கு பாய், தலையணையுடன் சென்ற போது பற்றைகள் மிகுந்த ஓரிடத்தில் அவர்களை வழிமறித்த சிலர் பெண்ணின் கையிலிருந்த மோதிரத்தையும், அவர் அணிந்திருந்த காப்புகளையும் கழற்ற முற்பட்டனர். பெண்ணும், அவரது கணவரும் கூக்குரலிட்ட போது அப்பெண்ணின் விரல்களை கத்தியால் வெட்டித் துண்டித்து மோதிரத்தை அபகரித்ததுடன், அவரது கைகளை முழங்கைக்கு கிழாக வெட்டி காப்புகளையும் அபகரித்துள்ளனர். அதே சமயம் அப்பெண்ணின் கணவர் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. அதனால், அவரும் காயமடைந்துள்ளார். அப்பெண் அணிந்திரந்த நகைகளுடன் தலையணைக்குள் மறைவாக வைத்து எடுத்துச்செல்லப்பட்ட நகைகளும் கொள்ளையர்களால் பறித்துச் செல்லப்பட்டன.

நெடுங்கேணி நாவலர் வீதியைச் சேர்ந்த ராசலிங்கம் விக்னேஸ்வரி, வயது 52. அவரது கணவர் ராசலிங்கம் வயது 64 ஆகியோருக்கே இந்நிலை ஏற்பட்டது. இவ்விருவரும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, கொள்ளையர்கள் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததான தகவல் பல சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு விசுவமடுவில் இரு குடும்பப் பெண்கள் மீது இராணுவத்தினர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டமை நிரூபிக்கப் படுமானால், சந்தேக நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.பி.பி. சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வன்னியில் மீள்குடியேறும் மக்கள் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

images-snakes.jpgவன்னியில் மீள் குடியமர்த்தப்படும் மக்களுக்கு பாம்புகள் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளன. பற்றைக் காடுகளாக இருக்கும் குடியிருப்புக்களில் பாம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. வீடுகள் அழிவுற்ற நிலையில்  தற்காலிக குடில்களை அமைத்து வாழும் மக்களின் குடில்களுக்குள்ளும் சில வேளைகளில் பாம்புகள் நுழைந்து விடுகின்றன. சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி நகரில் ஏ-9 பாதைக்கு அண்மையாகவுள்ள கடையொன்றின் உரிமையாளர் தனது கட்டத்தைப் பார்க்கச் சென்ற போது அவரை பாம்பு தீண்டியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதால் அவசர சிகிச்சைகளின் பின்னர் உயிர் தப்பினார்.

தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள தார்மபுரம், விசுவமடு பகுதிகளிலும் பாம்பின் தொல்லை அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை, பளை பகுதியில் மீள்குடியமர்த்தபட்ட மக்களும் பாம்பக்கடிக்கு இலக்காகி வருகின்றனர். இப்பகுதிகளிலும் நிரந்தர வீடுகள் இல்லாததால் தற்காலிக கொட்டில்களிலேயே மக்கள் குடியிருக்கின்றனர். இக்கொட்டில்களில் இரவு வேளைகளில் பாம்புகள் புகுந்து தீண்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. பளைப்பகுதியிலிருந்து பலர் பாம்பினால் கடியுண்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதாக அவ்வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை, தர்மபுரம, விசுவமடு பகுதிகளின் காணிகளிலுள்ள தென்னை மற்றும், பயன்தரும் மரங்களை காட்டு யானைகள் நாசம் செய்துள்ளதாக அப்பகுதிகளில் மீள்குடியேறும் மக்கள் தெரிவிக்கன்றனர்.

Related News:

பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு – ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்

பாம்புக்கடியால் இலங்கையில் 33 ஆயிரம் பேர் பாதிப்பு

‘2015 ஆண்டுக்கிடையில் யாழ் அபிவிருத்தியில் முழுமை பெற வேண்டும்!’ – யாழ் அரசாங்க அதிபர்

Ganesh_GA_Jaffnaயாழ்.மாவட்டம் 2015ஆம் ஆண்டுக்கிடையில் அதன் அபிவிருத்தியில் பாரிய மாற்றத்தைப் பெற வேண்டும் எனவும்,  அதற்கான திட்டங்களை தயாரித்து திறம்பட செயற்படுமாறும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே. கணேஸ் திணைக்கள தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். யாழ் செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் திணைக்களத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுகையிலேயெ அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

யாழ்.மாவட்டம்  சகல தறைகளிலும் வளாச்சியடைய வேண்டும், கல்வி சுகாதாரம், போக்குவரத்து விவசாயம், எனப் பல்வேறு துறைகளையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை  இன்றுள்ளது இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

வன்னியில் மீண்டும் மலேரியா நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

malaria_mosquito_headவன்னியில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவி வருகின்றது. கடந்த சில தினங்களாக 15இற்கும் மேற்பட்டோர் மலேரியா நோய் இனங்காணப்பட்டு சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர். பல வருடங்களுக்கு முன்னர் தீவிர மலேரியா நோய்  பிரதேசமாக கிளிநொச்சி காணப்பட்டது ஆனால், சுமார் 10 வருடங்களாக இந்நோய்ப் பரவல் முற்றாக ஒழிக்கப்பட்டிருந்தது.

போரின் பின்,  மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அந்நோய்த் தொற்றினால் பொதுமக்கள்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொக்காவில் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தொலைத்தொடர்பு கோபுர வேலைகளுக்காக தென்பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களிடமே முதலில் இந்நோய் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து மலேரியா நோய்த் தடுப்பு மற்றும், விழிப்பு நடவடிக்கைகளில் மலேரியா தடுப்புப் பிரிவினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனங்கிளப்பில் குண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர்! மூவர் படுகாயம்!

தென்மராட்சி தனங்கிளப்பு சுண்டிக்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் நேற்று (June 7 2010) மாலை 5:15 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் தனங்கிளப்பைச் சேர்ந்தவரும், பண்டத்தரிப்பில் வசித்தவருமான கனகசபை பிரகாஸ் (வயது 29) சாவகச்சேரியில் வசித்தவரும் மந்திகை வைத்தியசாலை ஊழியருமான சுப்பிரமணியம் பொன்சேகர் (வயது38) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

தனங்கிளப்பு பகுதியில்  மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதியில் மக்களின் நலன் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இன்று காலை சுண்டிக்களம் பிள்ளையார் கோவிலடியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அப்பகுதி மக்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தனர். குப்பைகளை ஓரிடத்தில் குவித்து எரித்தபோது திடீரென குண்டு வெடித்தது. இதன்போது கனகசபை பிரகாஸ் என்பவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

தலைமைகளின் தவறுகளுக்காக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வகாணும் விடயத்தை பின் தள்ளிவிட வேண்டாம்! : ஈபிடிபி

Douglas_D_and_Rajaparksa_MJune 7 2010 தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்ததன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சியின் சிறப்புப் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மாலை 6 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13வது அரசியல் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு, அதிலிருந்து தொடங்கி அதை மேலும் செழுமைப் படுத்தி ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும், சமவுரிமையும் உள்ள அரசியல் ஏற்பாட்டை நோக்கி செல்வதன் ஊடாகவே அரசயிலுரிமைப் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்படுவது சாத்தியமாகும் என ஈ.பி.டி.பி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இதுவரை காலமும்  கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் தலைமைகள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை. இத்தலைமைகளின் தவறான வழிநடத்தல்களுக்காக தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்குத் தீர்வகாணும் விடயத்தை ஒரு போதும் பின் தள்ளிவிட வேண்டாம் எனவும். சகல தரப்பினராலும் ஏற்கக் கூடிய தீர்வுத்திட்ட யோசனையையே தாம் முன்வைத்து வருவதாகவும், தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காகவே அரசாங்கத்துடன் ஈ.பி.டி.பி உறவுக்கரம் கொடுத்து வருவதாகவும் ஜனாதிபதியிடம் இப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்திருந்த ஈ..பி.டி.பி யின் விஷேட பிரதிகள் தமிழ் மக்களின் அரசிலுரிமை பிரச்சினை குறித்து எமது நட்பு நாடாகிய இந்தியா உட்பட சர்வதேச சமூகம் மற்றும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருக்கும் யோசனைகளையே தாம் வலியுறுத்தி வருவதாகவும் அரசியல் தீர்வை நடை முறைப்படுத்துகின்ற சமகாலத்தில் தமிழ் மக்களின் உடனடி அவசியப் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்களிடம் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இச்சந்திப்பின்போது ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் தலைமையில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா பசில் ராஜபக்ஷ ஜீ.எல்.பீரிஸ் மைத்திரிபால சிறிசேன பௌசி ஆகியோரும் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார். பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஈ.பி.டி.பி.யின் சர்வதேச அமைப்பாளர் மித்திரன் நிர்வாகச் செயலாளர் புரட்சிமணி அமைச்சரின் இணைப்பதிகாரி ராஜ்குமார். யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் ஈ.பி.டி.பி யின் விஷேட பிரதிநிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி – கூட்டமைப்பு சந்திப்பு தோல்வியில் முடிவடைந்தது!!!

TNA_Government_08June10தமிழ் தேசியக்கூட்டமைப்பு – ஜனாதிபதி சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளது! : விஸ்வா

நேற்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கப்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. நேற்று (07-06-2010) மாலை அலரி மாளிகையில் இச்சந்திப்பு நடைபெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியமர்த்தல் ஆகியவிடயங்களுடன், இனப்பிரச்சினைக்கான நிரந்தர திர்வு, அரசியல் அமைப்பு சீர்திருத்தம் போன்ற விடயங்கள் கலந்துரையாடலின் போது கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டன.  இவற்றிற்கு சாதகமான பதில்கள் எவற்றையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை.

போர் காரணமாக நிர்மூலமாக்கப்பட்டுள்ள பொது மக்களின் ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுத்தல் தொடர்பாக கேட்டபோது, இவற்றைக் கட்டிக்கொடுக்க அரசாங்கத்திடம் பணமில்லை எனவும், இரண்டு நெல் அறுவடைகளின் பின்னர் மக்களே தங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்வர் எனவும், விவசாயத்திற்கான உதவிகளை அரசாங்கம் வழங்கும் எனவும் அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவது பற்றிப் பேசப்பட்ட போது, ஏற்கனவே இருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட போதும் அவர்களில் ஒருவர் மாத்தறைப் பகுதியில் உளவு வேலைகளில் ஈடுபட்டு வந்தார் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

லண்டனில் உள்ள அமைப்புகள் சில தற்போது ஆட்சேர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும். இந்நிலையில் பொது மன்னிப்பு வழங்கி அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் அவர்களும் குறிப்பிட்ட அமைப்புக்களில் இணைந்து நாட்டுக்கு எதிராக  செயற்படும் நிலை எற்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்தல் உள்ளிட்ட ஏனைய விடயங்களுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை கூறவில்லை. இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் விடயங்கள் பேசப்பட்ட போது, விடுதலைப்புலிகள் கேட்டவற்றை கேட்கக்கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இவை தொடர்பான விபரங்களை பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட்ட ஏனைய உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

இதே வேளை, இப்பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமானதாக அமைந்ததாகவும், ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தின் பின்னர் மீண்டும் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்தை நடத்த விரும்பவதாக தம்மிடம் கூறியதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டமைப்பின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி முதலில் ஜனாதிபதிடம் பேசியதாகவும், அதன் பின்பே அரசியல் விடயங்கள் பேசப்பட்டன என்றும், தாங்கள் கலந்துரையாடிய விடயங்களுக்கு எந்தவொரு இணக்கப்பாடான பதிலையும் ஜனாதிபதி வழங்கவில்லை எனவும், பேச்சக்கள் தோல்வியிலேயே முடிவடைந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

TNA_Government_08June10கூட்டமைப்பும் ஜனாதிபதியும் உடன்பட்ட விடயங்கள் : வி அருட்செல்வன்

வடக்கு மக்களின் பிரச்சினைகளில் பலவற்றுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் தீர்வைப் பெற்றுத் தர முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று மாலை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. நீண்ட நேரம் மிகவும் சுமுகமாக நடந்த இந்தச் சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

வட பகுதி மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நடமாடும் கச்சேரி முறையொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன்மூலம் திருமண, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை விரைவில் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், தற்போது தடுப்புக் காவலில் உள்ளவர்களில் நீதிமன்ற செயற்பாடுகளின் மூலம் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்களை சமூக வாழ்வில் ஈடுபடுத்தும் திட்டமொன்றை விரைவில் நடைமுறைப்படுத்தவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த பயங்கரவாத சம்பவ காலத்தில் சாதாரண மக்களால் கைவிட்டுச் செல்லப் பட்ட துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உரிமையை உறுதிசெய்து அவற்றின் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் திட்டமும் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு இந்த சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார். மீள்குடியேற்ற நடவடிக்கை முறையாகவும் திட்டமிடப்பட்ட வகையிலும், கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின்னர் பாதுகாப் பான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும், இதனால் வட பகுதி மக்களின் நிலை தொடர்பாக கண்டறி வதற்காக பாராளுமன்றத்துக்கு தெரிவான புதிய உறுப்பினர்கள் குழுவொன்றை அங்கு அனுப்பிவைத்ததாகவும், இந்த குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி கூட்டமைப்புப் பிரதிநிதிகளுக்குப் பதிலளித்தார்.

அத்துடன் வட பகுதி மக்களை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அறுவடை பெற்றுக் கொள்ளும் வரை அந்த மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதிகளின் தேவை நிறைவேறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த எவருக்கும் இடம் கிடைக்காது என்றும், ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் சமாதான நாட்டை உருவாக்கவும், மீண்டும் வடக் கில் மக்கள் அழிவுக்கு உள்ளாகும் யுகத்துக்கு இட்டுச் செல்லப் போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அதற்கு தேவைப்படுவதாகவும், அனைத்துத் தீர்வுகளும் அனைத்து மக்களுடனும் சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும் என்றும், அவசரமாக தீர்வை பெற்றுத் தருவது பிரச்சினைகளை தோற்றுவிக்கும். இதனால், கிரமமாக திட்டமிடப்பட்ட வகையில் செயலாற்றுவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இங்கு பேசிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் பிரதேசங்களில் சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்பிடி, மத தலங்க ளின் அபிவிருத்தி ஆகியவை பற்றி அவ தானம் செலுத்தப்படுமென குறிப்பிட்டார். இதன்படி 75 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைக ளுக்கு விவசாய திணைக்களம் மாகாண சபைகளுக்கு 100 உழவு இயந்திரங்களை வழங்கியுள்ளது. அத்துடன் மேலும் 500 இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

எமது முழுமையான ஒத்துழைப்பை தங்களுக்கு வழங்குவோம். தாங்கள் சர்வகட்சி கூட்டமொன்றை கூட்டி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல்வேறு செயற்பாடுகள் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கிaர்கள். தமிழ் மக்களுக்கு சமமாக வாழும் உரிமையை பெற்றுத் தரவும், சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். தங்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எமது விருப்பமாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவருமான ஆர். சம்பந்தன் இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

TNA_Government_08June10தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஜனாதிபதியுடனான இன்றைய பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.இப்பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் , அகதி முகாம்களில் வசித்து வரும் மக்களின் சுகாதரம் மற்றும் கல்வி, மீளகுடியமர்த்தப்படும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் தமிழர் விடுதலை கூட்டமைப்பின் சார்பில் ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஏ. விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், என். சிவசக்தி ஆனந்தன், பொன். செல்வராஜ், பி. அரியனேந்திரன், யோகேஷ்வரன், பி. பியசேன, சரவணபவன், எஸ். ஸ்ரீதரன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோரும் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேன, பசில் ராஜபக்ஷ, ஜீ. எல். பீரிஸ், நிமல் சிரிபால டி சில்வா, டலஸ் அலஹப்பெரும, மற்றும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, சரத் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

படங்கள்: ஏசியன் ரிபியூன் – நன்றி

இலங்கை அதிகாரிகளுக்கு ஜப்பான் புலமைப் பரிசில்

இலங்கை அரசின் பொதுத்துறையைச் சேர்ந்த 60 இளம் அதிகாரிகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் ஐந்து ஆண்டு புலமைப்பரிசில் திட்டமொன்றை அமுல் செய்யவுள்ளது.  இதற்காக இரண்டாயிரத்து 290 இலட்சம் ஜப்பானிய யென் நிதியை நன்கொடையாக ஜப்பான் ஒதக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நான்கு அமைச்சுக்களில் இருந்து முதல் தொகுதியாக 15 இளம் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஜப்பானில் முதுமாணிப் பட்டப்படிப்பினை ஜப்பான் சர்வதேச பல்கலைக்கழகம், கிறிஸ்ரியன் பல்கலைக்கழகம், ஹிரோசிமா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மேற்கொள்வர். பொதுக்கொள்கை, பொது நிதி, பொது நிர்வாகம், பிராந்திய அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு, பொருளாதார அபிவிருத்தி ஆகிய துறைகளில் இந்த முதுமாணிப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

வவனியா நகரில் உள்ள விடுதி ஒன்று ‘சீல்’ வைக்கப்பட்டது!

வவுனியா நகரிலுள்ள தனியார் விடுதி ஒன்று நேற்று நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ளது. இவ்விடுதியில் விபசார நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரியவந்ததையடுத்தே மூடப்பட்டது. இவ்விடுதியில் விபசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வவுனியா மாவட்ட நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து நீதித்துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. இதன்படி அவ்விடுதி உரிமையாளர் உட்பட அங்கு பணிபுரிந்த அனைவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு. விடுதி ‘சீல்’ வைத்து மூடப்பட்டது.