விஸ்வா

விஸ்வா

தற்போது பெய்து வரும் மழையினால் வன்னியில் மீள்குடியமர்த்தபட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக வடக்கில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி. முல்லைத்தீவுப் பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்கள் தற்காலிகமாக தங்கியிருக்கும் கூடாரங்கள் மழை வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளது. கடும் காற்றுடன் மழை பெய்து வருவதால் தறப்பாள் கூடாரங்கள் பலவும் கிழிந்து சேதமாகியுள்ளன.

கூரைகள் திருத்தப்படாத வீடுகளில் வசிக்கும் மக்களும் இம்மழையினால் பாதிப்படைந்துள்ளனர். சில பகுதிகளில் வீடமைப்பு கட்டுமான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக தயாரிக்கப்பட்டு வந்த சிமெந்து கற்கள் இம்மழையினால் கரைந்து சேதமாகிப் போனதையும் அவதானிக்க முடிந்தது.

எதிர்வரும் பருவமழைக் காலத்திற்கு முன்னர் வீடமைப்பு பணிகள் முடிவுறாவிட்டால் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு பெரும் பாதிப்புகள் எற்படும் என்பதை கடந்த சில நாட்கள் பெய்த மழையினால் மக்கள் படும் சிரமங்களை வைத்து உணர்ந்து கொள்ளக் கூடியதாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வீட்டுத்திட்டம் குறித்து ஆராய இந்தியப் பிரதிநிதிகள் குழு யாழ்.விஜயம்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளது. நேற்று மாலை இக்குழுவினர் யாழப்பாணம் வந்து சேர்ந்தனர். இந்திய அரசாங்கத்தினால் வடக்கில் அமைக்கப்படவுள்ள வீடமைப்புத்திட்டம் தொடர்பாக ஆராயவே இக்குழுவினர் யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளடங்கிய இக்குழுவினரோடு ஐ.ஓ.எம் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் வந்துள்ளனர். இக்குழுவினர் யாழ்ப்பாணம் வருவதற்கு முன்பாக கிளிநொச்சிக்குச் சென்று அங்கு அமைக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்.மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள விட்டுத்திட்டம் தொடர்பாக ஆராய்வர் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும்

Lessons_Learnt_And_Reconciliation_Commissionகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 18,19,20ஆம் திகதிகளில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்த அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் இவ்வறிக்கைகள் அவரிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சாட்சியங்களையும் விசாரணைகளையும் பதிவு செய்த நல்லிணக்க ஆணைக்குழு கடந்த 18.19.20 ஆம் திகதிகளில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சாட்சியங்களையும் விசாரணைகளையும் பதிவு செய்தது.

Lessons_Learnt_And_Reconciliation_Commissionஎதிர்வரும் மாதம் 9.10,11ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இவ்வாணைக்குழுவினர் சாட்சியங்களையும் பதிவுகளையும் மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் சாட்சியங்கள் விசாரணைகள் குறித்த அறிக்கைகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டு பின்னர் அனைத்தையும் ஒன்றிணைத்து இறுதி அறிக்கை ஒன்று தயாரிக்கப்படும் எனவும், அது ஊடகங்களுக்கும் வழங்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

”வன்னியில் படையினர் பயன்படுத்திய பொதுமக்களின் வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு” இராணுவப் பேச்சாளர்

வன்னியில் பொதுமக்களின் வீடுகளை தமது தேவைக்காகப் பயன்படுத்தி வந்த படையினர் அவற்றைக் கட்டம் கட்டமாக பொது மக்களிடம் ஒப்படைத்து வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல வீடுகளிலிருந்து படையினர் வெளியேறி அவற்றை அதன் உரிமையாளர்களிடம்  கையளித்து விட்டதாகவும். தொடர்ந்தும் படையினரின் வசமிருந்த விடுகள் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படையினர் இருந்து வரும் விட்டு உரிமையாளர்களுக்கு வாடகை வழங்கி வருவதாகவும் விடுகள் சம்பந்தப்பட்ட பிரிச்சினைகளை குறிப்பிட்ட பிராந்தியத்தின் சிவில் இணைப்பதிகாரியிடம் அல்லது, பொதுநிர்வாகப்பிரிவிடம் தொடர்பு கொண்டு பொது மக்கள் திர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாரதிப் பயிற்சிபெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இ.போ.ச.வில் வேலை வாய்ப்பு!

CTB_Logoபுனர் வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் சாரதிப் பயிற்சி பெற்றவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையில் நியமனம் வழங்கவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட சுமார் நூறு விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்களுக்கு யாழ். கோண்டாவில் இலங்கைப் போக்குவரத்து டிப்போவில் சாரதிப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் உரிய சாரதி அனுமதிப்பத்திரங்களும் பெற்றிருப்பதால் இவர்களுக்கான நியமனங்களை வழங்குமாறு யாழ். டிப்போவினால் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் இவர்களுக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத்  தெரிவித்துள்ளார். இலங்கைப் போக்கவரத்து சபையில் வடமாகாணத்தில் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

”கிராம அலுவலர்கள் மக்களை அலைக்கழிக்காமல் கடமை புரிய வேண்டும்” யாழ் அரசஅதிபர்

Imelda_Sugumar_GA_Jaffnaகிராம அலுவலர்கள் மக்களை அலைக்கழிக்காது அவர்களுக்கான கடமைகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். கிராம அலுவலர்களுடன் நடைபெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”கிராம அலுவலர்கள் தங்கள் கடமைகளை புறந்தள்ளாமல் மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கு பரிகாரம் காண முயற்சிக்க வேண்டும். யாழ்.குடாநாட்டில் தற்போது அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான பங்களிப்பினை கிராம அலவலர்கள் வழங்க வேண்டும. மது போதை, இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.  கிராம அலுவலர்கள் குறித்து நாளொன்றிற்கு ஐம்பது முறைப்பாடுகள் வருகின்றன. சில சமயங்களில் பாராட்டியும் கடிதங்கள் வருகின்றன. பொதுச்சேவை அலுவலர்களாகவம் அரசாங்க உழியராகவும் கிராம அலுவலர்கள் இருப்பதால் கவனமாக பொறுப்புணர்வுடன் அவர்கள் செயற்பட வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்புதின வைபவத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

fawzi_minister.jpgஎதிர்வரும் டிசெம்பர் மாதம் 26ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்புதின நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புதின நிகழ்வு முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தை நினைவு கூர்ந்து தேசிய பாதுகாப்பு தினம் அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டது. இது இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.

இந்நிகழ்வகளை ஒழுங்குபடுத்தும் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக கடந்த வாரம் அனர்த்தமுகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாநகரசபைக்கு இலங்கை இந்திய நட்புறவுச் சங்கத்தால் பஸ்கள் அன்பளிப்பு.

India_Donated_Busesஇலங்கை இந்திய நட்புறவுச் சங்கத்தினால் யாழ். மாநகரசபைக்கு வழங்கபபட்டுள்ள பஸ்களை நேற்று திங்கள்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாநகர சபையின் சாரதிகளிடம் கையளித்தார்.

India_Donated_Busesஇந்த பஸ்கள் ஒவ்வொன்றும் 17 இலட்சரூபா பெறுமதியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள ஐந்து பஸ்கள் இலங்கைப் போக்குரத்துச் சபையின் பஸ்கள் சேவையிலீடுபடாத யாழ். நகரத்தை அண்டிய பகுதிகளில் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ். நாவலர் வீதி, அரியாலை, கோவில் வீதி. போன்ற வேறு பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடாத சிறு பாதைகள் ஊடாக இந்த பஸ்கள் பாடசாலை மாணவர்கள் பொது மக்களின் நன்மை கருதி சேவையிலீடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த இரத்தினபுரி குக்குலேகம மக்கள் இன்னும் குடியிருப்புக்குத் திரும்பவில்லை!

Vasudeva Nanayakaraஇரத்தின புரியில் உள்ள நிவித்திகல குக்குலெகம தோட்டத்திலிருந்து தாக்குதல் அச்சம் காரணமாக வெளியேறியுள்ள மக்கள் இன்னமும் தங்களின் இடங்களுக்குச் செல்லாமல் நண்பர்கள் உறவினர் வீடுகளிலேயே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மக்கள் தற்போது எங்கிருக்கின்றார்கள் எனத் தெரியவில்லை எனவும் அவர்கள் இருக்கும் இடத்தைத் தெரிவித்தால் அவர்களுக்கான நிவாரணத்தைப பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அச்சம் காரணமாக வெளியெறியுள்ள இம்மக்கள் தமது அலுவலகத்துடனோ, அல்லது தமது தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொண்டால் அவர்களுக்கான நிவாரண உதவிகளை மேற்nகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் குக்குலெகம தோட்டத்தில் சிங்கள காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து சில சிங்களவர்கள் இரவு வேளையில் தமிழர்களின் குடியிருப்புக்குள் புகுந்து அவர்களின் வீடுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள் உட்பட அவர்களின் அனைத்து ஆவணங்களையும் தீக்கிரையாக்கினர். இதனையடுத்து தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தேயிலைச் செடிகளுக்குள்ளும், காடுகளுக்குள்ளும் மறைந்திருந்து விட்டு விடிந்ததும் உறவினர், நண்பர்கள் விடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்தனர்.

இது இவ்வாறிருக்க மலையக அரசியல்வாதிகள் இச்சம்பவம் குறித்தும், இம்மக்களின் பாதுகாப்பு குறித்தும் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எவையும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 இரத்தினபுரி தோட்டமொன்றில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மக்கள் அச்சத்தினால் இடம்பெயர்ந்தனர்.

Ratnapuri_Map_of_SLஇரத்தினபுரி தோட்டமொன்றில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மக்கள் அச்சத்தினால் இடம்பெயர்ந்தனர். இரத்தினபுரி தோட்டம் ஒன்றில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி நிவித்திகல பொலிஸ் பிரிவிலுள்ள குக்குலகல தோட்டத்தைச்சேர்ந்த சிங்கள தோட்டக் காவல் தொழிலாளி ஒருவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போய் பின்னர் அவர் சடலமாக மீட்க்கப்பட்டதையடுத்து சிலரால் அப்பகுதியிலுள்ள இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பத்திற்கும் மேற்பட்ட வீடுகளிலுள்ள பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இத்தோட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து இரு பிரிவினருக்கிடையில் சில இடங்களில் கைகலப்புச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது. குறித்த பகுதிகளில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் அனைவரும் பருவ மழைக்கு முன்னர் மீள்குடியமர்த்தப்படுவர் என அரசாங்கம் அறிவிப்பு.

milroy_fernando.bmpபருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னதாக இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வடக்கில் போரினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் தொகை தற்போது 25 ஆயிரம் மட்டுமே எனவும் இவர்கள் அனைவரும் வெடிபொருட்கள் அகற்றப்பட்டவுடன் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் எனவும் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். பருவமழைக்கு முன்பு இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னர் வடபகுதியின் அபிவிருத்திப்பணிகளை துரிதப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.