இரத்தின புரியில் உள்ள நிவித்திகல குக்குலெகம தோட்டத்திலிருந்து தாக்குதல் அச்சம் காரணமாக வெளியேறியுள்ள மக்கள் இன்னமும் தங்களின் இடங்களுக்குச் செல்லாமல் நண்பர்கள் உறவினர் வீடுகளிலேயே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மக்கள் தற்போது எங்கிருக்கின்றார்கள் எனத் தெரியவில்லை எனவும் அவர்கள் இருக்கும் இடத்தைத் தெரிவித்தால் அவர்களுக்கான நிவாரணத்தைப பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அச்சம் காரணமாக வெளியெறியுள்ள இம்மக்கள் தமது அலுவலகத்துடனோ, அல்லது தமது தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொண்டால் அவர்களுக்கான நிவாரண உதவிகளை மேற்nகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் குக்குலெகம தோட்டத்தில் சிங்கள காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து சில சிங்களவர்கள் இரவு வேளையில் தமிழர்களின் குடியிருப்புக்குள் புகுந்து அவர்களின் வீடுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள் உட்பட அவர்களின் அனைத்து ஆவணங்களையும் தீக்கிரையாக்கினர். இதனையடுத்து தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தேயிலைச் செடிகளுக்குள்ளும், காடுகளுக்குள்ளும் மறைந்திருந்து விட்டு விடிந்ததும் உறவினர், நண்பர்கள் விடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்தனர்.
இது இவ்வாறிருக்க மலையக அரசியல்வாதிகள் இச்சம்பவம் குறித்தும், இம்மக்களின் பாதுகாப்பு குறித்தும் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எவையும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி தோட்டமொன்றில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மக்கள் அச்சத்தினால் இடம்பெயர்ந்தனர்.
இரத்தினபுரி தோட்டமொன்றில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மக்கள் அச்சத்தினால் இடம்பெயர்ந்தனர். இரத்தினபுரி தோட்டம் ஒன்றில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி நிவித்திகல பொலிஸ் பிரிவிலுள்ள குக்குலகல தோட்டத்தைச்சேர்ந்த சிங்கள தோட்டக் காவல் தொழிலாளி ஒருவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போய் பின்னர் அவர் சடலமாக மீட்க்கப்பட்டதையடுத்து சிலரால் அப்பகுதியிலுள்ள இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பத்திற்கும் மேற்பட்ட வீடுகளிலுள்ள பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இத்தோட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து இரு பிரிவினருக்கிடையில் சில இடங்களில் கைகலப்புச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது. குறித்த பகுதிகளில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.