சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி

cricket_sl_won_itest_pakistan.jpgபாகிஸ் தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.  நான்கு நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் 168 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸக்காகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இலங்கை வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து வெற்றியைப் பறிகொடுத்தது.

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இந்த முதலாவது டெஸ்ட் போட்டி காலி, சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமானது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்ட இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய தரங்க பரணவிதான 72 ஓட்டங்களைப் பெற்றார். தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பரணவிதான இப்போட்டியில் தனது முதலாவது அரைச் சதத்தைப் பெற்றதோடு அதிகூடிய ஓட்டத்தையும் பதிவு செய்துகொண்டார்.

தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 342 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணிக்காக யூசுப் யொஹானா 112 ஓட்டங்களையும் மிஸ்பாஉல் ஹக் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவன் குலசேகர 71 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சுக்காக ஆடிய இலங்கை அணி 217 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக முதலாவது இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றிருந்த பரணவிதானவே இரண்டாவது இன்னிங்ஸிலும் கூடிய எண்ணிக்கையாக 49 ஓட்டங்களைப் பெற்றார்.

50 ஓட்டங்கள் மேலதிகமாகப் பெற்ற நிலையில் 168 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி இன்றைய நான்காவது நாளின் பகற்போசன இடைவேளைக்கு முன்னதாகவே சகல விக்கட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இலங்கை அணி சார்பாக அபாரமாகப் பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

இலங்கை அணி அதன் புதிய தலைவரான குமார் சங்கக்கார தலைமையில் தனது முதலாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக்கொண்டதோடு இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணியின் ரங்கன ஹேரத் தெரிவானார்.
இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

பிரபல குத்துச் சண்டை வீரர் அலெக்ஸிஸ் அர்கில்லோ மரணம்

_arguello.jpgதென் அமெரிக்க நாடானா நிகராகுவாவைச் சேர்ந்த பிரபலமான குத்துச் சண்டை வீரர் அலெக்ஸிஸ் அர்கில்லோ தனது வீட்டில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அலெக்ஸிஸ் மூன்று முறை உலக குத்துச் சண்டை பட்டத்தை வென்றவர். 1995 ஆம் ஆண்டு குத்துச் சண்டை போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர் உலகளவில் 82 வெற்றிகளை பெற்றுளார். அதில் 65 முறை எதிரிகளை முழுதாக வீழ்த்தியும் உள்ளார்.

மூன்று பிரிவுகளில் உலகப் பட்டத்தை வென்றுள்ள ஆறு பேரில் அலெக்ஸிஸும் ஒருவர் என்பது குறிப்பிட்த்தக்கது.1968 ஆம் ஆண்டு தொழில்முறை ரீதியில் போட்டியிட தொடங்கிய இவர் உலகப் போட்டிகளில் ஃபெதர் வெயிட், சூப்பர் ஃபெதர் வெயிட் மற்றும் லைட் வெயிட் பட்டங்களை வென்றவர்.

பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்கள்

yusuf.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முன்றாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக ஆடிய இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணியின் சார்பாக பரணவித்தான 49 ஓட்டங்கள் பெற்றதே அதி கூடிய ஓட்டமாக இருந்தது. பந்து வீச்சில் அமீர், சஹிட் அஜ்மல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைப் பெற்றனர். கான் 2 விக்கெட்டையும் அப்துர் ரவுப், உமர் குல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதே வேளை 168 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்று பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 71 ஓட்டங்கக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணி சார்பாக மெண்டிஸ், மெத்திவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடரும்.

2011ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியை இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து நடத்தும்

icc-world-cup-2011.jpgஇந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து 2011ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட மாட்டாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது ஐசிசி.

லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தப் போட்டியை கூட்டாக நடத்தவிருந்த பொருப்பிலிருந்து பாகிஸ்தானை விலக்கியது ஐசிசி என்பது நினைவிருக்கலாம். பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட 14 போட்டிகளையும் இந்தியா, இலங்கை, வங்கதேசத்திற்கு பிரித்துக் கொடுத்து விட்டது ஐசிசி.

ஆனால் இதை எதிர்த்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தனது நிலையில் எந்த மாறறமும் இல்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி தலைவர் டேவிட் மார்கன் கூறுகையில், பாகிஸ்தான் எடுக்கும் எந்த நடவடிக்கையும் போட்டியை, இந்தியா, வங்கதேசம், இலங்கை இணைந்து நடத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

தெற்காசியாவை விட்டு போட்டித் தொடரை மாற்றும் எண்ணமே இல்லை. அதற்கான தேவையும் இருப்பதாக நான் கருதவில்லை. இந்தியா, இலங்கை, வங்கதேசமே போட்டித் தொடரை நடத்தும் என்றார் மார்கன்.

மூன்றாவது முறையாக செரீனா சாம்பியன்

shereena.jpgவிம்பிள் டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் தனது சகோதரி வீனஸை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடந்தது. வில்லியம்ஸ் சகோதரிகளான அமெரிக்காவின் செரீனாவும், வீனஸும் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடன் 5 முறை சாம்பியனான வீனஸ் தனது தாக்குதலை தொடங்கினார். முதல் செட்டில் இருவரின் செயல்பாடும் சம பலத்துடன் தெரிந்தது. அதாவது தாங்கள் “செர்வ்’ செய்யும் கேமை மட்டுமே வென்றபடி வந்தனர். இதனால் கடைசி வரை (66) சமநிலை நீடித்தது. இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்க கொண்டு வரப்பட்ட டைபிரேக்கரில் செரீனா, வீனஸின் சவாலை முறியடித்து, அந்த செட்டை தனதாக்கினார்.  ஆனால் 2ஆவது செட்டில் கடுமையான போட்டி இல்லை. இந்த செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி தனது கட்டுக்குள் கொண்டு வந்த செரீனா, அதனை எளிதாக வென்று விம்பிள்டன் பட்டத்துக்கும் சொந்தக்காரியானார்.

மொத்தம் 12 “ஏஸ்’ சர்வீஸ்களை வீசியது அவரது இலக்கை சுலபமாக்கியது. 85 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் செரீனா 7-6, (7-3), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து, விம்பிள்டன் பட்டத்தை 3 ஆவது முறையாக கைப்பற்றினார். முன்னதாக 2002, 2003 ஆம் ஆண்டுகளிலும் அவர் விம்பிள்டனை முகர்ந்து உள்ளார்.

ஆனால், இந்த மூன்று முறையும் அவர் தனது சகோதரி வீனஸையே வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தத்தில் இது செரீனாவின் 11 ஆவது கிராண்ட்ஸ்லாம் (விம்பிள்டன் 3, அவுஸ்திரேலிய ஓபன் 4, அமெரிக்க ஓபன் 3, பிரெஞ்ச் ஓபன் 1) பட்டமாக அமைந்துள்ளது.

வெற்றி பெற்ற செரீனாவுக்கு ரூபா 6 கோடியே 75 இலட்சமும், 2 ஆவது இடம் பிடித்த வீனஸுக்கு ரூபா 3 கோடியே 37 இலட்சமும் பரிசுத் தொகையாக கிடைத்தது. அமெரிக்காவில் நேற்று முன்தினம் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதே தினத்தில் பெற்ற வெற்றியை செரீனா மேலும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார். இது தவிர, வில்லியம்ஸ் சகோதரிகள் விம்பிள்டன் இரட்டையர் பட்டத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது பாகிஸ்தான்

yusuf.jpgமொஹம் மட் யூசுப்பின் அபார சதத்தின் மூலம் இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 50 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியின் இரண்டாவது நாளான நேற்றைய தினத்தில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் 5 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த யூசுப், மிஸ்பா உல் ஹக் ஜோடி 139 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது. இதில் சிறப்பாக ஆடிய மிஸ்பா உல் ஹக் 128 பந்துகளுக்கு 9 பௌண்டரிகளுடன் 56 ஓட்டங்களை பெற்றார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய மொஹம்மட் யூசுப் தனது 24 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்தார். 185 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 10 பௌண்டரிகளுடன் 114 ஓட்டங்களை பெற்றார். இறுதியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸுக்காக 94 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 342 ஓட்டங்களை பெற்றது.

இதன்மூலம் அது முதல் இன்னிங்ஸில் இலங்கை பெற்ற 292 ஓட்டங்களை விடவும் 50 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.

காத்தான்குடி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள்

kattankudy_arms.gifஅரசாங் கத்தின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று பெருந்தொகையான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டன. முஸ்லிம் இளைஞர்கள் நேற்று நண்பகல் 12 மணி முதல் 3.30 வரை ஆயுதங்களைக் கையளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேற்படி பள்ளிவாசலில் நடந்த நிகழ்வில் மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் அதிபர் எடி சன் குணதிலக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி பால, ஆரையம்பதி பொலிஸ் பொறுப்பதிகாரி கப்டன் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களின் விபரம் வருமாறு; ரீ-56 ரக துப்பாக்கி -17, எஸ்.எம்.ஜீ. 01, சொட்கன்-01, 03 ரக துப்பாக்கி-04, ஜே.ஆர். ரக கைக்குண்டு-03, எஸ்.எம்.ஜீ. கைக்குண்டு-10, 38 ரக குண்டு-01, ரீ-56 ரக ரவைகள்-1076, ரீ-56 ரக மகkன்-25, ல்கட்டாஸ்-01, 9 எம்.எம்.பிஸ்டல்-01, 9எம்.எம்.மகkன்-07

மேற்படி ஆயுத ஒப்படைப்பின் பின்னர் கூட்டம் இடம்பெற்றது. கிழக்கு மாகாணங்களுக்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் எடிசன் குணதிலக உரையாற்றினார்

இலங்கை பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி தமிழில் நேர்முக வர்ணனை

cricket20-20.jpgகாலியில் நேற்று ஆரம்பமாகிய இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர்பான தமிழ் நேர்முக வர்ணனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் முழு நேரமாக ஒலிபரப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் தொடர்பாக 30 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ஏ.எம்.எச். அஸ்வர் தமிழ் மொழியில் நேர்முக வர்ணனையை செய்கிறார்.
இதுவரை காலமும் கிரிக்கெட் போட்டி நேர்முக வர்ணனை முழு நேரமாக சிங்கள மொழியிலும் இடையிடையே ஆங்கில, தமிழ் மொழிகளிலும் நடத்தப்பட்டு வந்தன. இனிமேல் தமிழ் மொழியிலும் முழுநேரமாக நேர்முக வர்ணனை இடம்பெறுமெனவும் அஸ்வர் தெரிவித்தார்.

காலியில் நேற்று காலை 10 மணிக்கு இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது. நேற்று ஆட்டமுடிவின் போது இலங்கை அணி முதலாவது இனிங்சில் சகல விக்கட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. முதலாவது இனிங்சில் பாகிஸ்தான் அணி 2 விக்கட் இழப்புக்கு 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

மைக்கேல் ஜக்சனின் பெயரில் மின்னஞ்சலில் பரவும் வைரஸ் – கணினி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை

மைக்கேல் ஜக்சனின் பெயரைப் பயன்படுத்தி மின்னஞ்சல் மூலம் வைரஸ் பரவி வருகிறது. எனவே ஜக்சன் என்ற பெயரில் ஈமெயில் வந்தால் திறந்து பார்க்காமல் அழித்து விடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜக்சனின் நினைவாக என்ற பொருளில் அனுப்பப்படும் அந்த மின்னஞ்சலில் ஜிப் பைல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் மைக்கேல் ஜக்சனின் இசை வடிவங்கள், இதுவரை பார்த்திராத படங்கள் உள்ளிட்டவை உள்ளதாக அந்த மின்னஞ்சல் கூறுகிறது. அடடா என்று ஆச்சரியப்பட்டுத் திறந்து பார்த்தால் அவ்வளவுதான் கணினி காலியாகி விடுகிறதாம்.

இந்த மின்னஞ்சலைத் திறந்து பார்த்தால் நமது கணினி மட்டுமல்லாது, யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக்கையும் இது பாதிக்கிறதாம். அதேபோல, மைக்கேல் ஜக்சனின் கடைசிப் படைப்பு வீடியோ என்ற பெயரில் இன்னொரு வைரஸும் பரவுகிறதாம்.

வட கொரியா 4 ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதனை

north-korea.jpgவட கொரியா நாடு கடந்த சில மாதங்களாக ஏவுகனைகளை விண்ணில ஏவி சோதனை நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அந்த நாடு சுமார் 3 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை ஏவி உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியது. கடந்த மே மாதம் 25ம் திகதி வடகொரியா அணு ஆயுத ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதை கண்டு கொள்ளாத வட கொரியா அடுத்தடுத்து 4 தடவை அணு ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி சோதித்துப் பார்த்தது.  இதையடுத்து அணு ஏவுகணைகளை சோதித்துப் பார்க்க வடகொரியாவுக்கு தடை விதித்து ஐ. நா. சபை தீர்மானம் கொண்டு வந்தது.

இதையும் வடகொரியா கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து ஏவுகணை ஆய்வில் அந்த நாடு ஈடு பட்டுள்ளது. நேற்று முன்தினம் திடீரென 4 குறுகிய தூர ஏவுகணைகளை வடகொரியா விண்ணில் ஏவியது. இந்த ஏவுகணைகள் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் சக்தி கொண்டவை.

இந்த சோதனை அண்டை நாடான தென்கொரியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அடுத்து நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா சோதித்துப் பார்க்க தயாராகி வருவதாக ஜப்பான் உளவுத் துறை கூறி யுள்ளது. தற்போது வட கொரியாவிடம் உள்ள ஏவுகணைகள் சுமார் 6,700 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடியவை. அடுத்த கட்டமாக 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் அதி நவீன ஏவுகணையை வட கொரியா தயாரித்துள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களை இந்த ஏவுகணைகளால் தகர்க்க முடியும்.