புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து புலிகளின் மிகப்பெரிய படகு மற்றும் சித்திரவதை முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் புதுக்குடியிருப்புக்கு வடமேற்கே உள்ள தேவபுரம் பிரதேசத்திலிருந்து புலிகளின் மிகப் பெரியபடகையும், புதுக்குடியிருப்புக்கு மேற்கு பகுதியிலிருந்து சித்திரவதை முகாமையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினரால் இதுவரை கைப்பற்றப்பட்ட புலிகளின் படகுகளில் இதுவே மிகப்பெரியதாகும். இந்தப் படகின் இயந்திரமும், ஏனைய உபகரணங்களும் அகற்றப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். 60 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்ட இந்த படகை புலிகள் இழுத்துச் செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி பயனளிக்காத நிலையில் படையினரின் பிரவேசத்தை அடுத்து கைவிட்ட நிலையில் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, புதுக்குடியிருப்புக்கு மேற்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் சித்திரவதை முகாம் ஒன்றையும் இராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளனர். இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த பல சித்திரவதை கூடங்களும் இங்கு அமைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சபேந்திர சில்வா தலைமையிலான படையினர் இந்த முகாமைக் கைப்பற்றியுள்ளனர்.