வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி

வடக்கில் இளைஞர்களிடையே வேகமெடுக்கும் வெளிநாட்டு மோகம் – கோடிகளை குவிக்கும் மோசடியாளர்கள் !

வடக்கில் இளைஞர்களிடையே வேகமெடுக்கும் வெளிநாட்டு மோகம் – கோடிகளை குவிக்கும் மோசடியாளர்கள் !

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி, ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் , மானிப்பாய், கிளிநொச்சி உள்ளிட்ட பொலிஸ்நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. வெளிநாடு செல்வதற்கு வங்கி கணக்கில் பெருந்தொகை பணம் வங்கி கணக்கில் இருப்பில் இருக்க வேண்டும் என கூறி, வங்கி கணக்கு இலக்கங்களை பெற்று , அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று , வங்கியில் உள்ள பணத்தை மோசடியாக கும்பல் பெற்றுக்கொண்டு தலைமறைவாகி வருகிறது.

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இளையோர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முகவர்கள் ஊடாக பயண ஏற்பாடுகளை செய்து சட்ட ரீதியான முறையில் செல்ல வேண்டும்.

இது தொடர்பில் இளையோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இவ்வாறான மோசடி சம்பவங்களில் இருந்து அவர்கள் தப்பிக்கொள்ள முடியும். இல்லையெனில் பெருந்தொகை பணத்தினை இழக்க நேரிடும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

இலங்கையை விட்டு அதிகமாக வெளியேறும் இளைஞர்கள்!

2023 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 செப்டெம்பர் மாதத்தில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2024 செப்டெம்பர் மாதத்தில் 28,344 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர் மற்றும் 2023 செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 25,716 ஆக பதிவாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், வெளிநாடுகளில் வேலை தேடிச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 240,109 ஆகும்.இதில் 99,939 பெண் தொழிலாளர்கள் மற்றும் 142,170 ஆண் தொழிலாளர்கள் உள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 17,649 தொழிலாளர்கள் தொழில்சார் வேலைகளுக்காக (Professional employment) வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர், அதேவேளை, அரை திறன் (Semi-skilled jobs) கொண்ட வேலைகளுக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3,704 ஆகும்.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் சவூதி அரேபியாவிற்கு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளனர், அந்த எண்ணிக்கை 38,133 ஆக பதிவாகியுள்ளது.

இந்த காலப்பகுதியில், 6391 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு வேலைக்காக சென்றுள்ளனர், மேலும் 6295 இலங்கையர்கள் ஜப்பானுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.

மேலும், 5870 பேர் தென் கொரியாவிலும், 5677 பேர் குவைத்திலும், 3995 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் வேலைக்காக வெளியேறியுள்ளனர்.