இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம் இறுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என இலங்கை சனத்தொகையில் 28% மட்டுமே நம்புவதாக வெரிட்டி ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெரிட்டி ரிசர்ச் கடந்த ஜூன் மாதம் 1008 இலங்கைப் பிரஜைகளை உள்ளடக்கிய கணக்கெடுப்பை நடத்தியது. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 45% பேர் சர்வதேச நாணய நிதியத்துடனான பயணம் நல்லதல்ல என்று கூறியுள்ளனர்.
ஐஎம்எஃப் உடனான இந்த ஒப்பந்தம் நல்லதாக இருக்குமா இல்லையா என்பது குறித்து தங்களால் திட்டவட்டமான கருத்தை தெரிவிக்க முடியாது என்று கணக்கெடுப்பில் பங்கேற்ற 27% பேர் கூறியுள்ளனர். 28 வீதம் பேர் மட்டுமே IMF ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என நம்புகின்றனர்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்லவில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கான அடிப்படைத் தேவையாக இருந்த உள்நாட்டுக் கடன் உகப்பாக்கம் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், எனவே வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துவதையும் விரைவில் முடிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
