வசந்தா

வசந்தா

பாலியல் தொழிலாளிகள் இல்லாவிட்டால் வீதிகளில் வன்புணர்வுகள் அதிகரிக்கும் !

பாலியல் தொழிலாளிகள் இல்லாவிட்டால் வீதிகளில் வன்புணர்வுகள் அதிகரிக்கும் !

 

ஊழல் ஒழிப்பு வன்னி அணியின் அடுத்த இலக்கு பாலியல் சேவை வழங்கும் பெண் வசந்தா. அவருடைய தொழில் தொடர்பிலும் கருத்துச் சொல்ல சட்டத்திற்கு தான் அதிகாரம் உண்டு. இலங்கையைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள், பாலியல் தொழிலை தடை செய்துள்ளது. ஆனால் மேற்குநாடுகள் மற்றும் பல ஆசிய நாடுகள் கூட பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கியுள்ளன.

இந்தத் தொழிலுக்கு சட்டபூர்வமான அனுமதி அளிப்பதன் மூலம் விபச்சாரத்தை ஒழுங்குபடுத்த முயற்சித்துள்ளன. பாலியல் தொழிலாளர்களுக்கு உடல்நலம் மற்றும் சமூக நலன்களை வழங்குகின்றன. இந்த விடயங்கள் ஒன்றும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு தெரியாது என்று சொல்வதிற்கில்லை. கிட்டத்தட்ட வெளிநாட்டில் உறவினர்கள் இல்லாத குடும்பங்களே இல்லை. அவர்கள் எல்லோரும் தங்களுடைய உறவினர்கள் வழியாக வெளிநாடுகளில் ஆண்-பெண் பாலியல் சமத்துவம் மற்றும் பாலியல் சுதந்திரம் தொடர்பான உரிமைகள் தொடர்பில் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதைவிட இணையத்துடன் கூடிய கையடக்கத் தொலைபேசிக்குள்ளேயே சகலதையும் அறியலாம்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க வசந்தா பற்றிய அவதூறுகள் பாரதுரமானவையாக காணப்படுகின்றது. வசந்தாவிடம் பணத்தை கொடுத்து பாலியல் சேவை பெறச் செல்லும் ஆண்களை ஏன் ஊழல் ஒழிப்பு அணி வன்னி வசை பாடவில்லை. அவர்கள் தானே இந்த தொழிலை ஊக்குவிக்கிறார்கள். வசந்தா 18 வயதிற்குட்பட்ட சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருந்தால் அந்த விடயம் கண்டிக்கத்தக்கது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் அவருடைய பிள்ளைகளை தண்டிப்பது. அந்தப் பிள்ளைகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதும் குற்றம். வசந்தா போன்ற விளிம்பு நிலையில் உள்ள பெண்கள் இவ்வாறான தொழில்களை தேர்தெடுக்க காரணமான சமூகச் சூழ்நிலைகள் மாற்றமடையாத வரை இந்நிலை மாறாது.

அதேநேரம் முற்போக்கு அரசாங்கம் “பாலியல் தொழிலை” சட்டபூர்வமாக்குவதன் மூலம் பல சமூக பொருளாதார சீரழிவுகளை தடுக்கலாம். இத் தொழிலில் சட்டவிரோதமாக ஈடுபடும் போது எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் பரவும் ஆபத்துக்கள் அதிகம். தமிழர்களின் வரலாற்றில் பாலியல் தொழிலே இருக்கவில்லை என யாரும் வாதிட முடியாது. ஈழத்தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் சோழப்பேரரசில் மன்னர்களின் அந்தப்புரங்களில் பெண்கள் பாலியல் அடிமைகளாக இருந்த வரலாறுகள் தெரிந்ததே. யாழ் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை அந்தப்புரமாக வைத்திருக்கின்ற விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் பற்றி இந்தக் கலாச்சாரக் காவலர்களான தமிழ் தலிபான்களுக்கு தெரியாதா ? பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஏன் கேடுகெட்ட ஆண்களைக் காப்பாற்றுவதில் இவர்களின் ஆணாதிக்க சிந்தனை மிகத் துல்லியமாகத் தெரிகின்றது.

அதுமட்டுமன்றி தமிழ்நாட்டில் கடவுளுக்கு பொட்டுக்கட்டி விடுதல் எனக் கூறி “ தேவதாசி” முறை மூலம் பெண்கள் கட்டாயமாக பாலியல்த் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரே தமிழ்நாட்டில் 1947 ஒக்டோபரில் தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு இம்முறை ஒழிக்கப்பட்டுள்ளது.

பாலியல் சேவை வழங்கும் வசந்தா, அவருடைய உறவினர்கள் மற்றும் கிராம சேவகருக்கும் இடையே நடந்த முறுகலில் கிராமசேவகர் தாக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இந்த விடயத்தில் வசந்தாவினுடைய வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் வன்முறை அவரது சமூக பிறழ்வான வாழ்வியலை வெளிப்படுத்தி நிற்கின்றது. மறைமுகமாக வசந்தா அவர் வாழும் சமூகம் அவரை நடத்தும் விதத்திற்கான எதிர்வினையாகவும் பார்க்க முடியும். உண்மையில் பாலியல் தொழிலில் விரும்பியோ விரும்பாமலோ ஈடுபடும் பெண்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்கள் மறைமுகமாக பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள். பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு முகம் கொடுக்குகிறார்கள். இத்தொழிலில் ஈடுபடும் பெண்களை பாதுகாக்கும் வகையிலான சட்டங்கள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முகநூலில் அம்பலப்படுத்தியோ அல்லது அவமானப்படுத்தியோ விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. இப்படியான தான் தோற்றித்தனமான நடவடிக்கைகள் விபச்சாரத்தின் பின்னாலுள்ள சமூகப் பொருளாதார காரணிகளை இல்லாதொழிக்காது.

மேலும் வசந்தா போன்ற பெண்கள் இல்லாவிட்டால் இந்தப் பாலியல் வக்கிரம் கொண்ட ஆண்களின் சமூகத்தில் சாதாரண பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாது. அனுராதபுரத்தில் அந்த மருத்துவப் பெண்ணுக்கு நடந்தது வித்தியாவுக்கு நடந்தது தான் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பெண்களுக்கு நடக்கும். ஒருவகையில் வசந்தா போன்ற பாலியல் சேவையை வழங்குபவர்கள் வீதிகளில் சென்றும் சமூக வலைத்தளங்களிலும் பாலியல் வன்புணர்வையும் பாலியல் வக்கிரத்தையும் கொட்டாமலிருக்க சில வசந்தாக்கள் பலிக்கடாவாக வேண்டியுள்ளது. தமிழ் தலிபான்களான ஊழல் ஒழிப்பு வன்னி அணி, ஊசி அர்ச்சுனா லண்டன் தமிழ் அடியான், வம்பன் டொட்கொம், எஸ் கே கிருஷ்ணா போன்றோரின் எழுத்துக்கள் கருத்துக்கள் பாலியல் வக்கிரத்தின் வெளிப்பாடே. அதனை மறைக்க இவர்கள் ஓழுக்க சீலர்களாக வேடம் போடுகின்றனர்.

இதே நிலை தான் சுஜூகூல் உடன் இரவுகளில் சல்லாபித்தவர்கள், பொழுது புலர்ந்ததும் பெரிய ஒழுக்க சீலர்களாகி ஆனையிறவுத் தாக்குதல் பாட்டையும் போட்டுக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு லாச்சப்பலில் 30 கடையர்கள் சேர்ந்து ஒரு பெண்ணைத் தாக்கி அதனை விடியோபதிவாகப் போட்டு வெற்றிக் களிப்பில் திளைத்தனர். இவர்கள் இப்போது மீண்டும் சுஜூகூலுடன் இப்போது பொழுதுபட்டதும் ரிக்ரொக்கில் சல்லாபிக்கின்றனர்.