லெபனான்

லெபனான்

கடுமையான பொருளாதார நெருக்கடி  – வங்கிகளை கொள்ளையடிக்கும் மக்கள் !

லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடி  நிலவிவருகின்றது.

குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து லெபனான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு  முகம் கொடுத்து வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கமும், மத்திய வங்கியும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இதனால் பொதுமக்களின் வங்கி சேமிப்புகளை எடுக்க முடியாத சூழல் அங்கு நிலவுகின்றது. இந்நிலையில்  வங்கிகளின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது  ”பலரின் வாழ்வாதார சேமிப்புகள் அழிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டும் போராட்டக்காரர்கள், தங்கள் பணத்தை திரும்ப கேட்டும், இந்த நெருக்கடிக்கு மத்திய வங்கி ஆளுநர் ரியாத் சலாமே உட்பட ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் பொறுப்பெற்க வேண்டும் ”என  வலியுறுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில்  அங்குள்ள வங்கிக் கட்டிடங்கள் பலவற்றையும் போராட்டக்காரர்கள் சூறையாடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட் வெடி விபத்து காரணமாக 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடற்றவர்களாகியுள்ளனர்!

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக சுமார் 3 லட்சம் பேர் வரை வீடற்றவர்கள் ஆகியுள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெய்ரூட் நகர ஆளுநர் அப்பவுட் கூறும்போது, “பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடற்றவர்களாகியுள்ளனர். மேலும் இந்த வெடி விபத்து காரணமாக 3.5 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் பல  பேர் உயிரிழந்துள்ளனர், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வெடி விபத்தால் தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்து காட்சியளிக்கின்றன.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த வெடி விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் மாயமாகி இருப்பதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

லெபனான் ஏற்கெனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. இந்த நிலையில் கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மருத்துவ உதவிகளை லெபனானுக்கு வழங்கியுள்ளன.