தொடரும் தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி ! இலங்கை – இந்திய கூட்டு ரோந்து சற்லைற்கள்…?
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்கள் நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட கடல்த்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
தொடரும் இப்பிரச்சினையைக் கட்டுப்படுத்த இந்திய – இலங்கைக் கடற்படையினரின் கூட்டு ரோந்து பற்றி இருநாட்டு அரசுகளும் சிந்திக்க வேண்டும் என சில மீனவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர். சற்லைற்களைப் பயன்படுத்தி தடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றனர் அம்மீனவர்கள்.
இதேவேளை மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் கிராமத்தில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கறுப்பு கிறிஸ்துமஸ் ஆக மாறி விட்டதாக சோகத்துடன் கூறும் மீனவர்களின் உறவினர்கள், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியாவிற்கு விஜயம் செய்து பிரதமர் மோடியை சந்தித்திருந்த போது மீனவர் பிரச்சினை முக்கிய பேசுபொருளாக இருந்தது. குறிப்பாக மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் செயற்பட பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி இடம்பெற்றுக் கொண்டு இருக்கிறது. தென்னிந்தியாவில் இருந்து ரோலர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களால், இலங்கையின் வடக்கு கடல்வளம் சீரழிந்து வருவதுடன் மீன்வளமும் மீனின் இனப்பெருக்க வட்டமும் சிதைந்து வருவதாக சூழலியலாளர்களும், இலங்கை மீனவர்களும் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
