ரில்வின் சில்வா

ரில்வின் சில்வா

. ‘தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் புதிய தீர்வு புகுவதும் பழைய தீர்வு – மாகாண சபை 13வது திருத்தம் கழிவதும் இயல்பானது!’ ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா

. ‘தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் புதிய தீர்வு புகுவதும் பழைய தீர்வு – மாகாண சபை 13வது திருத்தம் கழிவதும் இயல்பானது!’ ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா

“அதிகாரப் பரவலாக்கத்தை மக்களுக்குக் கிட்டவாக கீழ் மட்டம்வரை கொண்டு செல்ல முயற்சிக்கின்றோம். தமிழ் மக்களோடு கலந்துரையாடி தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வு வரும்வரை மாகாணசபை இயங்கும். தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்ட புதிய தீர்வு வந்தால் பழையது இல்லாமல் போகும் தானே” என ஜேவிப் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, ஹிசாம்ஸ் இன்சைட் என்ற சிங்கள காணொலிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். “இனவாதம், மதவாதம் மிகவும் ஆபத்தானது அதனை இல்லாமல் செய்ய, அதனை எதிர்கொள்ள சட்டம் முழுவீச்சுடன், அதன் உச்ச பலத்துடன் பிரயோகிக்கப்படும்” என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்த ஜேவிபின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அதனால் தான் ‘இனவாதத்தைத் தூண்டும் வகையில் சில சமூகவலைப் பதிவுகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாக நடவடிக்கை எடுத்தோம்’ எனத் தெரிவித்தார். ‘இந்த இனவாதம், மதவாம் என்பது கொலைகளிலும் மோசமானது எனத் தெரிவித்த அவர் அதனை முளையிலேயே கிள்ளியெறியாவிட்டால் கடந்த காலங்களில் இலங்கையில் நடந்தது போலாகி விடும். நாங்கள் தூரநோக்கோடு இந்த நாட்டை இனவாதம், மதவாதம் இல்லாமல் கட்டி எழுப்புகின்றோம். அதனைப் பலவீனப்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம்’ என்றார் ரில்வின் சில்வா.

“தமிழ் ஊடகங்கள் நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களை நாங்கள் சொன்னதன் உள்ளடக்கத்துக்குப் புறம்பாகத் திரித்து வெளியிட்டு வருகின்றனர்” எனவும் ரில்வின் சில்வா தனது நேர்காணலில் குற்றம்சாட்டியிருந்தார். “எங்களுக்கு வாக்களித்த மக்கள், தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள், மலையக மக்கள், சிங்கள மக்கள் எங்களைப் புரிந்துகொள்கிறார்கள்” எனத் தெரிவித்த ரில்வின் சில்வா, எங்களுடைய வெற்றியை விரும்பாத சிலர், இவ்வாறு உண்மையில்லாத விடயங்களைப் பரப்புகின்றனர் எனத் தெரிவித்தார். வீரகேசரிப் பத்திரிகையில் வெளியான ரில்வின் சில்வாவின் பேட்டி தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதனை ரில்வின் சில்வாவே தன்னுடைய மொழியில் தெரிவிக்கின்றார்:

நேர்காணலை மேற்கொண்டவர், “நீங்கள் ஒரு நீண்ட காலப் போராளி, கட்சியின் பொதுச்செயலாளராக நீண்டகாலம் இருக்கின்றீர்கள். தற்போது உங்களுடைய கட்சி மிகப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. நீங்கள் ஏன் பாராளுமன்றம் செல்லவில்லை, அமைச்சராகவில்லை” எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த ரில்வின் சில்வா, “எனக்கு கட்சிக்குள் பெரிய பொறுப்புகள் இருக்கின்றது, அனுர தோழரின் பொறுப்பு ஜனாதிபதியாக நாட்டை கொண்டு நடத்துவது, பாராளுமன்ற பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளைச் செய்கின்றார்கள். நான் மட்டும்மல்ல உங்களுக்கு யார் என்று கூடத் தெரியாத பெரும் தொகையானவர்கள் மாவட்டங்களிலும் கிராம மட்டங்களிலும் சந்தோசமாக தங்கள் கடமையைச் செய்து வருகின்றார்கள். பாராளுமன்றம் வந்துதான் அதனைச் செய்ய வேண்டும் என்று யாரும் கருதவில்லை. தேசிய மக்கள் சக்தி புதிய அரசியல் கலாச்சாரத்தை கொண்டுவந்துள்ளது. எங்கள் கட்சியில் யாரும் அமைச்சுப் பதவி கேட்கவில்லை. தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் செல்லவும் கேட்டகவில்லை” எனவும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

அனுர ஆட்சியில் மீளவும் இனவாதம் தலைதூக்கவுள்ளது – எச்சரிக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய அரசமைப்பு வரைபை அநுர அரசு மீளக் கொண்டு வரப் போவதாகவும், தான் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் அந்தச் செயற்பாட்டைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையாளுவார் என்றும் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அந்த வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (16) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தேசியம் சார்ந்த அரசியலுக்கும் கொள்கை சார்ந்த தமிழ் மக்களுடைய இருப்பு சார்ந்த விடயங்களுக்கும் எதிர்காலம் மிகவும் சவாலுக்குரிய ஒன்றாகவே நாங்கள் பார்க்கின்றோம்.இதில் வரப் போகின்ற ஐந்து வருடங்களில் மிக முக்கியமானது முதலாவது வருடம்தான்.

தேர்தல் முடிவுக்குப் பிற்பாடு கூட ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தங்களது கட்சிக்கு வடக்கில் ஆசனங்கள் கிடைத்துள்ளன எனவும், இனவாதத்தை மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். அந்தக் கருத்திலேயே தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய ஆபத்துக்கள் மிகத் தெளிவாக அம்பலமாகியுள்ளன.

மேலும், புதிய அரசமைப்பு வரைபுக்கு எதிராக, அதை நாங்கள் தடுத்து இது எமது மக்களின் இணைப்புக்கு முரணானது என்ற பலமான செய்தியைக் கொடுப்பதன் ஊடாக அவர்கள் சரியான ஒரு வரைபைத் தயாரிப்பதற்கும், அவர்களது செயற்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும்தான் எங்களுடைய முயற்சிகளை முன்னெடுக்கப் போகின்றோம்.

 

அதற்குத் தமிழரசுக் கட்சியாக இருக்கலாம், ஏனைய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம், நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருக்கக் கூடிய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களாக இருக்கலாம், அனைவரையும் ஒன்றிணைத்து அந்த விடயங்களை முன்கொண்டு செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

இராஜபக்சக்களின் பின்வாங்கலும் ரில்வின் சில்வாவின் நேர்காணலும்  – இதயச்சந்திரன்

இராஜபக்சக்களின் பின்வாங்கலும் ரில்வின் சில்வாவின் நேர்காணலும்

இதயச்சந்திரன்

…………………….

ஐநாவின் அபிவிருத்திக்குழுவின் வருகையோடு தேர்தல்  திருவிழா சூடு பிடித்துள்ளது.

 

இந்த ஜனநாயகச் சடங்கில் வசைபாடலும், குழிபறித்தலும், அணி சேர்தலும், கோட்பாட்டு மோதலும் முதன்மை பெறுவதைக் காண்கிறோம்.

 

தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற வேண்டுமென்கிற முழக்கம் சகல மேடைகளிலும் எதிரொலிக்கிறது. ஒட்டாத குழுக்கள் அனைத்தும் தேச விடுதலை பற்றி பேசாமல். தேர்தலில் எத்தனை ஆசனங்களை கைப்பற்றுவது என்கின்ற இலட்சியத்தோடு இயங்குகின்றன.

 

தற்போதைய சூழலில் தேர்தல் வெற்றிக் கணக்குகள், விருப்புவாக்கு தெரிவுகள் குறித்தே பரவலாக ஆராயப்படுகிறது.

 

தமிழர் தாயக கணிப்புகள் பல, வன்னி மாவட்டத்தில் செல்வமும் ,காதர் மஸ்தானும் வெற்றி பெறுவார்கள் என கட்டியம் கூறுகின்றன. ஏனைய மாவட்டங்களில் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாதென்கிறார்கள்.

 

மலையகத்தில் அனுஷா சந்திரசேகரன் , வடிவேல் சுரேஷ் , ஜீவன் தொண்டைமான் மற்றும் திகாம்பரம் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது.

 

வடக்கு -கிழக்கு தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை திருக்கோணமலையிலும் அம்பாறையிலும் ‘மோதல் தவிர்ப்பு’ உடன்பாடு காணப்பட்டு தமிழரசுக் கட்சி போட்டியிடுகிறது.

சங்கின் உறுப்பினர்களும் திருக்கோணமலை வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திராவும் திசைகாட்டிச் சின்னத்தில் இறங்குவதால் போட்டி பலமான இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

இவ்விரண்டு உணர்திறன் மிக்க இடங்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற முன்னிற்கும் தமிழ்த் தேசியவாதிகள், ஏனைய மாவட்டங்களில் ஏன் ஒன்றிணையவில்லை என்கிற ஆதங்கம் மக்களிடம் உண்டு.

 

இனி தமிழர் தாயக அரசியலுக்கும் தென்னிலங்கை அரசியலுக்குமான மோதல்கள் ,முரண்பாடுகள் குறித்து பார்ப்போம்.

 

இளையோர் பார்வையானது அநுராவின் ‘ தேசிய மக்கள் சக்தியின் மீது குவிவதை தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் எச்சரிக்கை உணர்வோடு அவதானிக்கின்றன.

 

இதன் எதிர்வினை அரசியலாக, ‘வடக்கு கிழக்கு ஊழல் அரசியல்வாதிகளை அநுராவால் அம்பலப்படுத்த முடியுமா?’ என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ‘ ‘மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியலை (பார் லைஸென்ஸ்) அநுர வெளியிடுவாரா ? ‘ என்று சுமந்திரனும் கூறத் தொடங்கியுள்ளனர்.

 

உண்மையிலேயே சகல மட்ட ஊழல்களையும் அநுர அரசு அம்பலப்படுத்த வேண்டுமென்பதே மக்களின் பெருவிருப்பாகும்.

 

2015 இல் உருவாக்கப்பட்ட ‘நல்லாட்சி’ அரசின் மத்திய வங்கி கடன் முறி ஊழல் பற்றிய விசாரணைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பெறுமதி சேர் வரி (வாட் வரி)3.5 பில்லியன் ரூபாவை செலுத்தாத மூவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

 

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதைப் போல, அநுர அரசிற்கு சவால் விடுத்த உதய கம்மன்பிலவிடமே , அதற்கான ஆதாரங்களை வெளியிடச் சொல்லி விஜித ஹெரத் எச்சரித்துள்ளார். திங்களன்று வருமென்கிறார் கம்மன்பில. பார்ப்போம் .

 

இராஜபக்சக்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தாலும், அக்குழுவின் இணை அனுசரணையாளர்களான கம்மன்பிலவும், விமல் வீரவன்சவும் தமது அரசியல் கருத்துக்களை உதிர்த்தவண்ணமுள்ளனர்.

 

இருப்பினும் இராஜபக்சக்களின் ‘ஈரடி பின்னால்’ நகர்வில் ஒரு அரசியல் தந்திரம் மறைந்திருப்பதாக ஊடக நண்பர் ஒருவர் தனது ஆய்வு நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார் .

 

சனாதிபதி தேர்தலில் அநுர தரப்பினரால் கட்டமைக்கப்பட்ட ‘ இராஜபக்ச எதிர்ப்பு’ பிம்பத்தை நாடாளுமன்றத் தேர்தலில் வலுவிழக்கச் செய்ய, இராஜபக்சக்கள் போட்டியிடவில்லை என்பதே நண்பரின் வாதம்.

 

குறைக்கப்படும் வாக்குகள் சஜித் பக்கம் கணிசமான அளவில் திரும்பும் என நண்பர் எதிர்பார்க்கின்றார். இது அநுராவின் வாக்குகளை உடைக்கும் மஹிந்தரின் தந்திரமாக இருக்கலாம்.

 

ஆனாலும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வருவதன் ஊடாக, கடந்த ஆட்சியாளர்களை அரசியல் ஊடக வெளியில் முக்கிய பேசுபொருளாக வைத்திருக்கிறது தேசிய மக்கள் சக்தி.

 

ஆகவே இராஜபக்சக்கள் தற்காலிகமாக ஒதுங்கினாலும் அநுராவின் கிடுக்கிப்பிடி, தேர்தலின் பின்னரும் தொடரும் வாய்ப்புகள் அதிகம் போல் தெரிகிறது .

 

அடுத்ததாக ஜே. வி .பி இன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்கள் வழங்கிய நேர்காணலொன்று, தமிழ் ஊடகப் பரப்பில் பலத்த விவாதமொன்றினை ஏற்படுத்தியுள்ளது .

 

அதுபற்றி பேசாமல் கடந்து செல்ல முடியாது.

 

‘ அடித்தட்டு தமிழ் மக்களின் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையே’ என்று கூறும் சில்வா , ‘ அம்மக்களுக்கு 13 அல்லது அதிகார பகிர்வு என்ற பிரச்சினை இல்லை ‘ என்கிறார்.

 

ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சி வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களையும் பாதிக்குமென்பது உண்மை.

தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினையை அவர் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார் என்பதை அந் நேர்காணலே எடுத்தியம்புகிறது.

 

ஆனாலும் இடதுசாரி கருத்தியலை வரித்துக்கொண்ட தோழர் டில்வின் சில்வா அவர்கள், ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமையினை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார் ?.

 

அரசியல் உரிமை மட்டுமல்ல…. பொருளாதாரத்தை பங்கிடும் இறைமையுடன் கூடிய உரிமையும் மக்களின் பிரச்சினைதான்.

 

இவர்களுக்கும் நம்மவர்களுக்கும், இந்த இரண்டையும் இணைத்து முன்னெடுக்கும் அரசியல் புரிய வேண்டும்.

 

இனப்படுகொலையை எதிர்கொண்ட தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமையைப் புறந்தள்ளி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

 

வல்லரசுக் கழுகுகள் வட்டமிடுகின்றன.

அவதானம் தேவை.

 

மக்களோடு பேசுங்கள். அவர்களே தமக்கான அரசியல் தீர்வு எதுவென்று சொல்வார்கள்.

வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும் அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை – ரில்வின் சில்வா

வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும் அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 

தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றன என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள போதிலும் கிளிநொச்சி, வவுனியா அல்லது முல்லைத்தீவில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டமான வாழ்கையையே வாழ்கின்றனர்.

இங்குள்ளவர்கள் கல்வி முதல் அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இந்த மக்கள் மிகவும் வறுமைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். அங்குள்ள மக்களின் வாழ்கை முள்ளின் மேல் உள்ளது. பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி தேடுவதே அவசியமாக உள்ளது.

காணி முரண்பாடுகள் நீண்டகாலமாக உள்ளன. யுத்தக்காலத்தில் தமது காணியை கைவிட்டு வெளியேறி மக்கள் யுத்தம் நிறைவடைந்து சென்ற போது அந்த காணிகளை வேறு நபர்கள் கைப்பற்றி குடியேறியுள்ளனர்.

அரசாங்கம் தலையீடு செய்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. பிரச்சினைகள் அவ்வாறுள்ளன.

ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காத வடக்கின் தமிழ் அரசியல் தலைவர்கள், தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அதிகாரப்பகிர்வு போன்ற வசனங்களை பயன்படுத்திக்கொண்டனர்.

ஆனால், வடக்கின் அடித்தட்டு மக்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டம் அவசியமில்லை. அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமில்லை.

 

அவர்களுக்கு விசாயத்தை மேற்கொள்ள நீர் வசதிகளும், அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், கல்வியும், நல்ல வைத்தியசாலைகளுமே அவசியமாக உள்ளன. எமது நாட்டில் ஒருவர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் கொழும்புக்கு கட்டாயம் வரவேண்டிய தேவையுள்ளது.

கண் பரிசோதனைகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரவேண்டியுள்ளது. அனைத்தும் கொழும்பை மையப்படுத்தியுள்ளன. இவ்வாறு கொழும்பை மைப்படுத்தியுள்ள அனைத்து விடயங்களும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் செல்லும் போது மக்களின் பிரச்சினைகள் தீரும்.

குறிப்பாக எமது நாட்டில் உற்பத்தி பொருளாதார முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும். அந்தப் பொருளாதாரத்தின் பங்காளிகளாக அனைத்து பிரதேச மக்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதுடன், அந்த பொருளாதாரத்தின் பிரதிபலன்களும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

 

உற்பத்தி பொருளாதார்ததின் பயன்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் போது நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானவைக்கு தீர்வு கிடைத்துவிடும். அதன் ஊடாக அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.