ஹெலிகாப்டர் இருக்குது எதற்காக ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழிக்க வேண்டும்? – எம்.பி ரவி கருணாநாயக்க
யாழ்ப்பாண விஜயத்தின்போது எதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க 12 மணிநேரத்தை வீதியில் வீணாக்கினார் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (07.02.25) கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி என்பவர் ஒட்டுமொத்த நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். ஹெலிகாப்டர் இருக்கும்போது எதற்காக அவர் ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழிக்க வேண்டும்? இது நவீன உலகம். நான் பிரதமருக்கும் அதையே பரிந்துரைக்கின்றேன். தனிப்பட்ட ரீதியில் ஹரிணி அமரசூரிய என்று இல்லாமல் நாட்டின் பிரதமர் என்ற பதவியில் இருக்கும் போது ஏன் நீங்கள் இதை பாவிக்கின்றீர்கள் இல்லை? இது ஒரு இழப்பு இல்லை. நீங்கள் ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழித்து இழக்கும் பணமே நாட்டுக்கு வீண்விரயமானது. எதிர்க்கட்சியாக நான் இதை முன்மொழிகிறேன். இவ்வாறானவை தேவையற்ற செலவீனங்கள் இல்லை. இதுதான் நீங்கள் நாட்டை முன்னேற்றும் வழி” என்றார்.
ரவி கருணாநாயக்கவின் கருத்தை பலரும் சமூகவலைத்தளங்களில் வரவேற்றுள்ளனர். ஜனாதிபதி உட்பட்ட முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள் தம்முடைய நேரம் தொடர்பில் அதீத கவனம் எடுக்க வேண்டும் என அவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேவேளை இன்னொரு சாரார் வான்வழியால் பயணித்தால் நாட்டின் தலைவரால் மக்களின் நிறைகுறைகளை அறியமுடியாது என்றும், இவ்வாறான பயணங்களின் ஊடாக அனுர சாமான்ய மக்களின் நிலையை அவதானிக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.
