யாழ். மாநகரசபை

யாழ். மாநகரசபை

இளகிய இரும்பை கண்டால் துள்ளி துள்ளி அடிக்கும் யாழ் மாநகரசபை அதிகாரிகள் – பண முதலைகளிடம் மண்டியிட்டு விடுகிறார்கள் !

இளகிய இரும்பை கண்டால் துள்ளி துள்ளி அடிக்கும் யாழ் மாநகரசபை அதிகாரிகள் – பண முதலைகளிடம் மண்டியிட்டு விடுகிறார்கள் !

 

யாழ்ப்பாணத்தில், வீதியில் பழக்கடை வைத்திருந்த சிறுவன் ஒருவரிடம் சில அதிகாரிகள் அடாவடித்தனமாக செயற்படும் வகையிலான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த சிறுவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு அதிகாரிகள் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, குறித்த அதிகாரிகள் அந்த சிறுவன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதிகாரியொருவர் பணம் செலுத்தாமல் பழங்களை வாங்கிச் செல்வதாகவும் சிறுவனால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

அண்மையில் கிளீன் சிறீலங்கா திட்டத்தின் ஒரு கட்டம் என கூறப்பட்டு யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பிரதான பேரூந்து நிலையத்தை அண்மித்த வீதியோர கடைகளை மூடுவதற்காக மாநகர சபை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டமையை எதிர்த்து வியாபாரிகள் கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தின் அரச அதிகாரிகளிடையே மலிந்து போயுள்ள ஊழல் தொடர்பாக பலரும் சமூக வலைத்தளங்களில் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். சட்டத்திற்கு விரோதமாக கட்டிடங்கள் கட்டும் ஹோட்டேலியர்கள், நோர்தேன் வைத்தியசாலை உள்ளிட்ட பல முதலாளிகளுக்கு வளைந்து கொடுக்கும் அரச அதிகாரிகள் பணம் படைத்தவர்களின் சட்ட விரோத செயல்கள் காணி ஆக்கிரமிப்புக்கள் பற்றி வாய் திறக்காமல் சாதாரண வீதியோர வியாபாரிகளிடமும், கச்சான் விற்கும் பாட்டியிடமும் தான் தமது வீராப்பையும் கடமை உணர்வையும் காட்டுவதாக பலரும் அதிருப்திவெளியிடுகின்றனர்.

இச்சிறுவன் போன்ற நலிந்த பிரிவினருக்கு இவர்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும். மாற்று வழியைக் காட்ட வேண்டும். அதிகாரிகளிடம் கொஞ்சம் மனிதாபிமானமும் இருக்க வேண்டும்