யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

போட்டியிடாமலேயே மண் கவ்விய ஊசி, சங்கு , மான் குறூப் – யாழ் உட்பட வடக்கு கிழக்கில் வீடா ? திசைகாட்டியா ?

போட்டியிடாமலேயே மண் கவ்விய ஊசி, சங்கு , மான் குறூப் – யாழ் உட்பட வடக்கு கிழக்கில் வீடா ? திசைகாட்டியா ?

 

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பல முன்னணி தமிழ்தேசிய மற்றும் அரசியல்வாதிகளின் கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமலேயே மண் கவ்வியுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் ஊசி கட்சி சார்பாக களமிறங்கிய சுயேட்சைக்குழுவின் வேட்பு மனுக்கள் பருத்தித்துறை நகரசபை தவிர்ந்த யாழ்ப்பாணத்தின் அனைத்து சபைகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகர சபையில் முதல்வர் வேட்பாளர் கௌசல்யா நரேன் வேட்புமனுவில் கையெழுத்திடாமையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்த பணம் அனுப்புமாறு அர்ச்சுனா கோரியதையடுத்து புலம்பெயர் தமிழர்கள் பலர் அவருக்கு பணம் அனுப்பியிருந்தனர். வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்களின் கட்டுப்பணம் மீள அவர்களிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில் அர்சுனா அவற்றை புலம்பெயர் தமிழர்களுக்கு திருப்பி அனுப்புவாரா எனவும் பலர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனு யாழ்.மாநகர சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மணிவண்ணனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. வலிகாமம் தெற்கு, பருத்தித்துறை பிரதேச சபையிலும் அவர்களுடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சங்குச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் வேட்புமனுக்கள் யாழ் மாநகர சபை உட்பட பெருமளவான இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி நகர சபை, காரைநகர் பிரதேச சபை, ஊர்காவற்றுறை பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வலி.மேற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை ஆகிய இடங்களிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே நிராகரிப்பு தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உயர் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ள அதேவேளை தமிழ்க் கட்சிகள் சார்பாக நான் நீதிமன்றில் ஆஜராக மாட்டேன் என சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்புமனுக்கள் பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் களமிறக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்கள் வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தி, தமிழரசு கட்சி ஆகிய இரு கட்சிகளினது வேட்பு மனுக்கள் மட்டுமே அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனவே யாழில் திசைக்காட்டியா..? வீடா என்ற போட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படிப்பிக்க மாட்டோம்’ யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ! ‘வேலையில்லாமல் இருக்க இவர்களும் தான் காரணம்’ வேலையற்ற பட்டதாரிகள் 

படிப்பிக்க மாட்டோம்’ யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ! ‘வேலையில்லாமல் இருக்க இவர்களும் தான் காரணம்’ வேலையற்ற பட்டதாரிகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணித்து மாணவர்களுக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பேராசிரியர் ரகுராம் மீள கலைப்பீடாதிபதி பதவியை ஏற்க வேண்டும், விதிமுறை மீறல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கடந்த காலத்திலே உறுதியான நடவடிக்கைகளை எடுக்க தவறியமை குறித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பெருமளவான வேலையில்லா பட்டதாரிகளை தொழில் உலகிற்கு ஏற்ற திறன்கள் இல்லாமைக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் இந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பேராசிரியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வடக்கு கிழக்கில் உள்ள பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குமாறு கோரிய போராட்டங்களில் ஈடுபட்ட பட்டதாரி ஒருவர் தேசம்நெட்க்கு தெரிவிக்கையில், இறுதியாக வழங்கப்பட்ட அரச நியமனங்களில் எமது வயது ஒத்த – பிரிவை சேர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்களில் கற்றவர்களுக்கு நியமனம் கிடைத்த போதும் என்னுடன் கிட்டத்தட்ட 400ற்கும் அதிகமானோருக்கு நியமனம் வழங்கப்படவில்லை. காரணம் பல்கலைக்கழக கல்வியை முடிக்க காலதாமதமானதே காரணம். இதற்கான காரணம் விரிவுரையாளர்களின் சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள், வினாத்தாள் திருத்தங்களுக்காக மூன்று அல்லது நான்கு மாதங்கள் எடுக்கும் விரிவுரையாளர்களின் சோம்பேறித்தனம், தேவையற்ற வகுப்புத் தடைகள் போன்றனவே காரணம் என விசனம் வெளியிட்டிருந்தார்.

விரிவுரையாளர்கள் ஆடம்பரமான வாழ்க்கை கவர்ச்சிகரமான சம்பளம் என திளைக்கிறார்கள். ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு கற்க வரும் பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் – வறுமையான குடும்பங்கள் ஆகியவற்றை சேர்ந்தவர்கள். இவர்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் தமது இஷ்டத்துக்கு போராட்டங்கள் செய்து மாணவர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் விரிவுரையாளர்களுக்கு எதிராக பல மாணவர்களும் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

அதே நேரம் ஜனாதிபதி அனுரா யாழ் வருகையை மேற்கொள்கையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள யாழ் வேலையற்ற பெரும்பாலும் கலைப்பீடப் பட்டதாரிகள் ஈடுபடவுள்ளதாக அவர்களின் சார்பில் பேசவல்ல கெ டெனீஸன் தெரிவித்துள்ளார். இச்சங்கத்தினர் அரசாங்கம் எவ்வித போட்டிப் பரீட்சைகளும் இன்றி திறமைகள் பற்றிய நேர்காணல்களுமின்றி தங்களுடைய பட்டப்படிப்பு சான்றிதழுக்கு வேலை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். கடந்த கால அரசுகள் காலத்துக்கு காலம் தங்கள் வாக்கு வங்கியை நிரப்புவதற்கு அரச பணிகளில் லட்சக்கணக்காணோரை நியமித்து நாடு அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே தள்ளாடும் நிலையை ஏற்படுத்தி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு வேண்டுகோளை கிழக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் கிழக்கு ஆளுநரிடம் முன்வைத்த போது அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். புதிய ஆட்சேர்ப்புக்கள் வருகின்ற பட்சத்தில் துறைசார்ந்தே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தற்போது முன்வைத்துள்ள கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். வரப்போகும் வேலை வாய்ப்புகளுக்கு பலரும் ஆர்வம் காட்டுவதால் அரசு நியாயமான முறையில் நடந்துகொள்ளும் மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் எனவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.