யாழ்ப்பல்கலைக்கழகம்

யாழ்ப்பல்கலைக்கழகம்

யாழ்ப்பல்கலைக்கழகத்தின் தில்லுமுல்லுகளும் திருகுதாளங்களும்

யாழ்ப்பல்கலைக்கழகத்தின் தில்லுமுல்லுகளும் திருகுதாளங்களும்..

பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியான பட்டப்படிப்பை வழங்கும் உயரிய கல்வி நிறுவனம். அதுமட்டுமல்லாமல் ஆய்வுகளை மேற்கொண்டு சமூகத்தின் தேவைக்கான அறிவியல் வழிகாட்டலை வழங்குகிறது. அப்படியான ஒரு நிறுவனம் வினைத்திறனற்று சரியாக இயங்காவிடில் அது சமூகத்திற்கு பெரும் கேடாகும். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பில் சமீப காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பாக புதிய புதிய சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மக்களின் வரிப்பணமான 16 கோடி 60 இலட்சத்தை பிணையாக கட்டி புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சார்பில் சென்ற கல்வியாளர்கள் நாடும் திரும்பவில்லை மற்றும் கட்டிய பிணைப்பணமும் மீள வசூலிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
வழமையாகவே பல்கலைக்கழகங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு புலமைப் பரிசில் பெற்றுச் செல்லும் கல்வியாளர்களும் மற்றும் கல்வித்துறை சாரா பல்கலைக்கழக ஊழியர்களும் குறிப்பிட்ட செயல்த்திட்டங்கள் முடிந்த பின்னர் பணிக்கு திரும்ப வேண்டும். அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் செயல்த்திட்டங்கள் முடிவடைந்த பின்னரும் நாடு திரும்பி கடமைக்கு சமூகமளிக்கவில்லை.

இந்த விடயத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 2023 வருடாந்த அறிக்கையில் கணக்காளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அறிக்கையின் படி 80 கல்விமான்களும் 21 கல்வித்துறை சாரா அலுவலர்களும் என 101 பேர் புலமைப் பரிசில் செயல்த்திட்டங்களின் ஊடாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் யாரும் இதுவரை நாடு திரும்பவும் இல்லை. கடமைகளைப் பொறுப்பேற்கவும் இல்லை. 1980 தொடக்கம் 2023 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறான புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் வெளிநாடு சென்று , நாடு திரும்பாது உள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களுக்கு செலுத்திய பிணைப்பணம் 16 கோடி 62 இலட்சத்து 98 ஆயிரத்து 684 ரூபாய் மீள அறவிடப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீளப்பெற யாழ்ப் பல்கலைக்கழகம் எந்த பிரயத்தனமும் செய்யவில்லை. மேலும் திரும்பப் பெறப்பட்ட 6 கோடி 17 இலட்சத்திற்கு அதிகமான பிணைப்பணம் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்றும் கணக்காளர் நாயகம் கண்டுபிடித்துள்ளார்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் இலவசமாக உயர்கல்வியை பெற்றுக் கொண்டவர்கள், நாட்டில் பணி புரியாமல் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அப்படியிருக்க அதே மக்களின் வரிப்பணத்தை பிணையாக வைத்து வெளிநாடு சென்றவர்கள் நாடு திரும்பாலும் குறைந்தபட்சம் பிணைப் பணத்தையாவது திரும்ப செலுத்தாமலும் இருப்பது மோசடி. இவ்வாறான ஊழலுக்கு யாழ்ப் பல்கலைக்கழகம் துணை போய்யுள்ளமை வெட்கக்கேடானது.

  • பரீட்சை முடிவுகளில் தாமதம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அடுத்த திருகுதாளம் பரீட்சை முடிவுகள் மிகத் தாமதமாக வெளியிடப்பட்டு வந்திருக்கின்றது. இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

பொதுவாக பல்கலைக்கழகத்தில் நடாத்தப்படும் பரீட்சைப் பெறுபேறுகள் மூன்று மாதத்திற்குள்ளாக வெளியிடப்பட வேண்டும். ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2019 முதல் 2023 காலப்பகுதிகளில் மொத்தமாக 11 பீடங்களில் பரீட்சை முடிவுகளில் நான்கு மாதங்கள் தொடக்கம் 27 மாதங்கள் வரை தாமதிக்கப்பட்டே வெளியிடப்பட்டதாகவும் மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை கூறுகின்றது.

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் யாழ்ப்பல்கலைக்கழ நிர்வாகம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய காலம் கனிந்து வருகின்றது. பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்தி பெறுபேறுகளை அறிவிப்பதையே பல்கலைக்கழகங்கள் தமது தலையாய பணியாக செய்ய வேண்டும் . பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தனிப்பட்ட சுயநலன்களுக்கு மாணவர் சமூகத்தை பிழையாக வழி நடத்துதல் தவிர்க்கப்பட வேண்டும். பெரும்பாலும் யாழ் பல்கலைக்கழகம் தற்போது மூவின சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால் இன்னும் பொறுப்புடன் நடுநிலமையுடன் செயற்பட வேண்டும்.

  • யாழ்ப்பல்கலைக்கழகத்தில் தொடரும் பகிடிவதை

1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறுவகையான வன்செயல்களையும் தடை செய்தல் சட்டத்தின் மூலம் பகிடிவதை செய்வதானது இலங்கையில் மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்றாகவும், பிணை வழங்கப்படாத குற்றமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன்படி பகிடிவதை செய்யும் அல்லது ஊக்குவிக்கும் எந்தவொரு நபரும் பிடியாணை இல்லாமல் கைது செய்யப்படலாம் எனவும் ஏற்பாடுகளை கொண்டுள்ளது.

பகிடிவதைக் குற்றத்திற்கு பிணை வழங்கப்படாது. அப்படியிருக்க யாழ்ப்பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர் ஒருவர் மீது சில சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதை என்ற சாட்டில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான நாத்தாண்டியா மாணவர் கேட்கும் திறனை இழந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும், பொலிஸ்க்கும் மற்றும் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடு அளித்துள்ளார்.

சம்பவ தினம் அன்று விரிவுரைக்கு சென்று கொண்டிருந்த சம்பந்தப்பட்ட மாணவரை சில சிரேஷ்ட மாணவர்கள் வழிமறித்து , மோட்டார் சைக்கிளில் ஏற்றி தனியார் மாணவர் தங்கும் விடுத்திக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து ஏனைய சில புதுமுக மாணவர்களையும் பகிடிவதை என்ற பெயரில் ஹெல்மெட்டாலும் மற்றும் பலவாறும் தாக்கியுள்ளனர். அப்போது நாத்தாண்டியாவைச் சேர்ந்த மாணவர் மயக்கமுற்று விழுந்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த மாணவனுக்கு வலி நிவாரணியான பனடோலைப் கொடுத்து வெளியோ போக விட்டுள்ளார்கள். கூகுள் வரைபட உதவியுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதியை அடைந்த நாத்தாண்டியா மாணவர் அம்புலன்ஸ்ஸில் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.. இவ்வாறு உடல் மற்றும் உளரீதியாக மோசமாக பாதிப்படைந்துள்ள தனது மகனுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு தந்தை நீதி கேட்டு பொலிஸ் சென்றுள்ளமை யாழ்ப் பல்கலைக்கழகம் எவ்வளவு தூரம் மாணவர்களுக்கு ஆபத்தானதாக மாறியியுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது.

யாழ்ப்பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமே வன்முறையை கையிலெடுக்கின்ற போது , அவரைப் போன்ற பேராசிரியர்களால் வழிநடத்தப்படும் மாணவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதில் ஆச்சரியம் இல்லை. சமீபத்தில் பேராசிரியர் சி . ரகுராம் கலைப்பீடத்தில் மாணவர்கள் பயன்பாட்டுக்கு அமைத்திருந்த கல்லாசனங்களை உடைத்து எறிந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் புதுமுகப் பெண் மாணவிகளை பகிடிவதையின் போது சிரேஷ்ட மாணவர்கள் தூசண வார்த்தைகள் கொண்டு வசைபாடுவது தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடுகள் வந்துள்ளன. ஆண்புதுமுக மாணவர்கள் உடலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் அறிந்ததே. அதேநேரம் பகிடிவதையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 4 இரண்டாம் வருட மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விடயத்தில் யாழ்ப் பல்கலைக்கழகம் விசாரணைகளை செய்யும் என்றும் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிரஜன் தெரிவித்துள்ளார். மேலும் சட்ட நடவடிக்கைகளுக்குப் யாழ்ப்பல்கலைக்கழகம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பல்கலைக்கழகம் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்கின்றது என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் பாலியல் சுரண்டல், பாலியல் இலஞ்சம் , ஊழல் , வன்முறை , போதைப்பொருள் கலாச்சாரத்துடன் பகிடிவதையும் சேர்ந்து பல்கலைக்கழக பெருமையை உலகறியச் செய்துள்ளது. விவகாரம் மானியங்கள் ஆணைக்குழு வரை சென்றுள்ளதால் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பில் தனியானவொரு சுயாதீனமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். யாழ்ப்பல்கலைக்கழகம் கிளீன் செய்யப்பட வேண்டும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கட்டியவனே உடைத்த கல்லாசனங்கள் – கலைப் பீடாதிபதி ரகுராமிற்கு எதிராக கலைப்பீட மாணவர்கள் போராட்டம் !

கட்டியவனே உடைத்த கல்லாசனங்கள் – கலைப் பீடாதிபதி ரகுராமிற்கு எதிராக கலைப்பீட மாணவர்கள் போராட்டம் !

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அடக்குமுறையை பிரயோகிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக பல்கலைக்கழக முன்றலில் நேற்றைய தினம் ஜனவரி 24 மாணவர் ஒன்றியத்தினால் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கலைப்பீடாதிபதி ரகுராமிற்கும் அவருக்கு வாக்களித்த காமுக விரிவுரையாளர்களுக்கும் எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் 4 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். குறிப்பாக கேள்வி கேட்டதற்காக 9 மாணவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் என்பதும் அதில் உள்ளடங்கும்.

இப்போராட்டத்தின் பின்னணி தொடர்பில் ஊடகங்களுக்கு மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் விளக்கங்களை கொடுத்துள்ளனர். அதன்படி கடந்த வருடம் மேமாதம் விஞ்ஞான பீடமாணவர்கள் விரிவுரை மண்டபத்தில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது வேண்டுமென்றே விரிவுரையாளர் ஒருவர் மண்டபத்தை வெளியிலிருந்து பூட்டியுள்ளார். பின்னர் விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் பூட்டை உடைத்து மாணவர்களை மீட்க வேண்டியேற்பட்டது. விரிவுரையாளர் மண்டபத்தை பூட்டிய சமயம் தீவிபத்து ஏற்பட்டிருந்தால் எவ்வளவு ஒரு பெரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை விசாரணைக்கு உட்படுத்துவதற்குப் பதில் பூட்டை உடைத்து காப்பாற்றிய மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் புதுமுக மாணவர்களுடைய வட்ஸ் அப் குழு உரையாடல்களை சட்டத்திற்குப் புறம்பாக ஒட்டுக் கேட்டதோடு நிற்காமல் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுமுக மாணவர்கள் தாம் கற்க விரும்பும் பாடங்களை கற்க பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்காதபட்சத்தில் போராட்டங்கள் மூலம் தமது கோரிக்கைளை முன்வைப்போம் என்று தமக்கிடையே வட்ஸ் அப் குழுவில் கலந்துரையாடியுள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் போராட்டங்கள் ஒன்றும் புதிதல்ல. பேராசிரியர் கணேசலிங்கம் போன்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவர்களை தமது அரசியல் சுயலாபங்களுக்கு பொங்கு தமிழ் போன்ற போராட்டங்களுக்கு அணிதிரட்டியவர்கள் . அப்படியிருக்க கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமான முதல் நாள் விரிவுரைகளுக்கு சமூகமளிக்காதபடி மாணவர்களுக்கு தடை விதிப்பது அதிகார துஸ்பிரயோகம்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் பல்கலைக்கழகத்தினுள் இருந்த 5 கல்லாசனங்களை கலைப்பீடாதிபதி ரகுராம் உடைத்தெறிந்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ரகுராம் தரப்பில் கூறப்படுவதாவது அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவர்கள் சிலர் இரவில் போதையில் கல்லாசனத்திலிருந்து வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவ்வேளை அங்கு வந்த கலைப்பீடாதி ரகுராம் மாணவர்களின் செயலால் கோபமடைந்து சினிமா பாணியில் கல்லாசனத்தை உடைத்துள்ளார். இது தொடர்பில் கலைப்பீட பீடாதிபதியிடம் கேள்வி எழுப்பிய மாணவர்கள் ஐவருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களாக நீடிக்கும் இப்பிரச்சினைகளில் மாணவர்கள் நலன்சார்ந்து பேச வேண்டிய மூத்தவை மற்றும் பேரவை என்பன மௌனமாகவுள்ளன. ஊழலும், முறைகேடுகளும் மலிந்து போயுள்ள வினைத்திறன் அற்ற யாழ்ப்பல்கலைக்கழக நிர்வாகத்தை தட்டிக் கேட்கவே மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் எனக் கூறுகின்றனர். கடந்த வருடம் ஒக்டோபரிலேயே 10 கல்லாசனங்கள் கலைப்பீடாதிபதியின் அனுசரனையில் பொருத்தப்பட்டதாக கலைப்பீட மாணவர்கள் ஒன்றிய முகநூலில் பதியப்பட்டுள்ளது.

அந்தவகையில் பின்வரும் நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓன்று: விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்த வேண்டும்.
இரண்டு: போராடுதல் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மூன்று: விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகள் பாரபட்சமின்றி விசாரணை செய்யப்பட வேண்டும்
நான்கு: மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்யப்பட வேண்டும்.