யாழில் பிரதமர் ஹரிணி

யாழில் பிரதமர் ஹரிணி

யாழில் பிரதமர் ஹரிணியின் சூறாவளிப் பயணம் !

யாழில் பிரதமர் ஹரிணியின் சூறாவளிப் பயணம் !

மே ஆறாம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், வடக்கிற்கு படையெடுக்கும் என்பிபியின் முக்கிய அமைச்சர்கள் என யாழ்ப்பாணம் களைகட்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு என்பிபி கொடுத்த வாக்குகளான காணி விடுவிப்பு, பாதை திறப்பு, அபிவிருத்தி என படிப்படியாக பகுதியளவாகவோ அல்லது முழுமையாகவோ நிறைவேற்றி வருகின்றது.

அந்த வகையில் ஏப்பிரல் 11 ஆம் திகதி மாவிட்டபுரம் கந்தாசுவாமி கோயிலுக்கு வருகை தந்த இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இலங்கையின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவொரு பிரதமர் வடக்கில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டமை முதல் தடவை எனக் கூறப்படுகிறது. அப்போது கருத்து தெரிவித்த ஹரிணி வடக்கினதும் தெற்கினதும் காலாச்சாரம் மற்றும் ஆன்மீக அமைப்புகளை சமமாக பாதுகாக்கும் பொறுப்பை தாம் மறக்க மாட்டோம் என கூறியுள்ளார்.

எப்படியாயினும் கடந்த அரசாங்கங்களில் இந்து மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சுக்கள் பெயரளவிற்குத்தானும் இருந்துள்ளன. ஆனால் என்பிபி அரசாங்கத்தில் பௌத்த விவகார அமைச்சு மட்டுமே உள்ளதாக சுட்டிக்காட்டப்படுவதையும் பிரதமர் ஹரிணி கருத்தில் கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

“வளமான மற்றும் ஒன்றுபட்ட நாட்டில் மதம் மற்றும் கலாச்சார சுதந்திரத்தை உறுதி செய்வதும், பன்முகத் தன்மை கொண்ட எமது நாட்டில் இவ்வாறான ஆன்மீக இடங்களில் எவ்வித அடக்குமுறையும் இன்றி பாதுகாப்பதும் நமது கடமை“ என ஹரிணி மாவிட்டபுரத்தில் குறிப்பிட்டார். பிரதமரின் வருகையால் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் யாழ் வந்த பிரதமர் நீர்வேலி மற்றும் காரைநகர் என இரு இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பங்கேற்றிருந்தார். மேலும் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பேச்சை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்ததிலும் குழறுபடிகள் காணப்பட்டன. மொழி பெயர்ப்பாளர் ஒரு சில விடயங்களைத் தவிர பிரமரின் உரையைத் தவறாக மொழி பெயர்த்திருந்தார். இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பரிகசிப்புக்குள்ளாகியுள்ளது.

அத்துடன் உள்ளூராட்ச்சித் தேர்தல்ப் பிரச்சாரங்களில் கலந்து கொள்ள இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் யாழ் வருகின்றார் என என்பிபி செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மாதம் 19 ஆம் திகதியில் ஜனாதிபதியும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.