மியன்மார்

மியன்மார்

இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு – பாடசாலை சிறுவர்கள் உட்பட 133 பேரை படுகொலை செய்த இராணுவம் !

மியன்மாரில் பெண்கள் மற்றும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடசாலை சிறுவர்கள் உட்பட 133 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மத்திய சகைன் பிராந்தியத்தில் உள்ள சமூகக் கூடம் ஒன்றின் மீது வான் தாக்குதல் நடத்தியதை மியன்மார் இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

பா சி கியி கிராமத்தில் உள்ள இராணுவ ஆட்சியை எதிர்க்கும் ஆயுதக் குழு ஒன்றின் அலுவலகம் திறக்கப்படும் விழா மீது பாதுகாப்புப் படை கடந்த செவ்வாய்க்கிழமை (11) தாக்குதல் நடத்தியதாக இராணுவ பேச்சாளர் சோ மின் டுன் குறிப்பிட்டுள்ளார்.

இதில் கொல்லப்பட்ட சிலர் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான போராளிகள் என்றும் சிவில் உடை அணிந்த சிலரும் பலியாகி இருப்பதாகவும் அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

சமூகக் கூடத்தின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை காலை போர் விமானங்கள் குண்டுகளை வீசியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவீச்சுக்குப் பின்னர் உயிர் தப்பியவர்கள் மீது ஹெலியில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருக்கும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், “இதனைச் செய்தவர்கள் பொறுப்புக் கூற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

இதனை ஒரு பயங்கரச் சம்பவம் என்று வர்ணித்திருக்கும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டுர்க், சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் 2021 பெப்ரவரியில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் அதன் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வான் தாக்குதல்களை பயன்படுத்துவதை அதிகரித்துள்ளது.

இராணுவ சதிப்புரட்சிக்கு சகைன் பிராந்தியத்தில் எதிர்ப்பு வலுத்ததோடு அந்த சமூகத்தினர் சொந்த ஆயுதக் குழுவை உருவாக்கி செயற்படுவதோடு சொந்தமாக பாடசாலை மற்றும் மருத்துவ நிலையங்களையும் நடத்தி வருகின்றனர்.

கிராம மக்கள் 11 பேரை உயிரோடு கொளுத்திய மியன்மார் இராணுவம் – வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சர்வதேசம் !

மியான்மரில் கிராம மக்கள் 11 பேரை இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மரின் வடமேற்கு பகுதியில் உள்ள மோனிவா நகரில் அணிவகுத்துச் சென்ற இராணுவ வாகனங்கள் மீது சிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதை தொடர்ந்து, இராணுவ வீரர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தினர் 11 பேரை பிடித்து இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவம் மியான்மரில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது குறித்து இராணுவம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதேவேளை, கடந்த 5ஆம் திகதி யாங்கூன் நகரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி அந்நாட்டு இராணுவம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வரும் இராணுவம், இதுவரை 1,300 இற்கும் அதிகமான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் !

மியன்மாரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் திகதி அந்நாட்டு இராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இராணுவம் கைது செய்தது.

அப்போது முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்திய மியன்மார் நீதிமன்றம், ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அதிபர் வின் மைன்டுக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

ஆனால், ஆங் சான் சூகி எப்போது சிறையில் அடைக்கப்படுவார் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு !

மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் 1-ந்திகதி அந்த நாட்டு இராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இராணுவம் கைது செய்தது.

அப்போது முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். ஆங் சான் சூகி, மட்டுமின்றி முன்னாள் அதிபர் வின் மைன்ட் மற்றும் மியான்மர் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆகியோர் மீதும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றி பெற்றதும், இதனை ஏற்க மறுத்த ராணுவம் புரட்சி செய்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

“சிரியா மற்றும் பிற இடங்களில் கடந்த காலங்களில் நடந்த கொடிய தவறுகளை மியன்மாரிலும் செய்ய சர்வதேச சமூகம் மீண்டும் அனுமதிக்கக்கூடாது.” – ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட்

“சிரியா மற்றும் பிற இடங்களில் கடந்த காலங்களில் நடந்த கொடிய தவறுகளை மியன்மாரிலும் செய்ய சர்வதேச சமூகம் மீண்டும் அனுமதிக்கக்கூடாது.” என ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் திகதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு இராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை இராணுவம் ஆயுதபலம் கொண்டு ஒடுக்கி வருகிறது. இராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை 600-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் இராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மியன்மாரில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில் மியன்மாரின் தற்போதைய நிலைமை 2011-ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதை எதிரொலிப்பதாக சர்வதேச மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறையால் அடக்கப்பட்டதால் அங்கு உள்நாட்டு போர் வெடித்ததை சுட்டிக்காட்டி மைக்கேல் பேச்லெட் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “சிரியாவில் 2011-ம் ஆண்டு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது சில தனிநபர்கள் ஆயுதங்களை எடுக்க வழி வகுத்தது. பின்னர் அது நாடு முழுவதும் விரிவடைந்து உள்நாட்டு போராக மாறியது. அப்போது சர்வதேச சமூகம் முறையான பதிலை வழங்காதது சிரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது மியன்மாரின் நிலைமை ஒரு முழுமையான மோதலை நோக்கி நகர்கிறது. சிரியா மற்றும் பிற இடங்களில் கடந்த காலங்களில் நடந்த கொடிய தவறுகளை செய்ய சர்வதேச சமூகம் மீண்டும் அனுமதிக்கக்கூடாது” என கூறினார்.