நடராஜா குருபரன்

நடராஜா குருபரன்

லைக்கா உடன்பாட்டில் இருப்பது என்ன ? லைக்கா – தமிழ் அரசியல் கட்சிகளின் டீலின் பின்னால் ஆதவன் தொலைக்காட்சி இயக்குநர் !

லைக்கா உடன்பாட்டில் இருப்பது என்ன ? லைக்கா – தமிழ் அரசியல் கட்சிகளின் டீலின் பின்னால் ஆதவன் தொலைக்காட்சி இயக்குநர் !

தமிழ் தரப்பில் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பே லைக்காவின் வலையில் முதலில் வீழ்ந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்த டீலைப் போடுவதற்குப் பொறுப்பாக இருந்தவர் முன்னாள் புளொட் உறுப்பினராகவும் தற்போது ஆதவன் தொலைக்காட்சியின் இயக்குநராகவும் உள்ள நடராஜா குருபரன் என முன்னாள் புளொட் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றன. நடராஜா குருபரன் 2006இல் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்தாக ஒரு கதையுண்டு. அதனைத் தொடர்ந்து அரசியல் தஞ்சம்பெற்று புலம்பெயர்ந்து தற்போது பிரித்தானியாவில் வாழ்கின்றார்.

ஆதவன் தொலைக்காட்சி லைக்கா ஊடகக் குழமத்தின் ஒரு அங்கம். அதன் இயக்குநராக இருக்கும் நடராஜா குருபரன் முன்னாள் புளொட் உறுப்பினரும் ஊடகவியலாளரும் ஆகையால் புளொட் உறுப்பினர்களையும் அவர்களுடாக அவர்கள் அங்கம் வகித்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைபினர்களையும் இந்த டீலக்குள் கொண்டுவர முயற்சிகள் எடுத்ததாகவும் அவரே லைக்காவின் பிரதிநிதியாகச் செயற்பட்டதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கதைகள் ஜனவரி முற்பகுதியில் நடைபெற்ற ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநாட்டிலும் கிளறப்பட்டிருந்தது.

லைக்கா நிறுவனம் தமிழ் அரசியல் தலைவர்களை, கட்சிகளை வாங்க முற்பட்டது ஒன்றும் இரகசியமல்ல. அவர்கள் தமிழ் அரசியல் கட்சிகளை ஏன் வாங்க முயன்றார்கள் என்பதும் ஒரளவு ஊகிக்கக் கூடியதே. லைக்காவால் வாங்கப்பட்ட கட்சியில் ஒலிவாங்கியில் ஐக்கிய ஜனநாயகக் குரலின் தலைவர் நடிகர் ரஞ்சன் ராமநாயக்க தென்பகுதியில் போட்டியிட்டமை அனைவரும் அறிந்ததே.

லைக்கா நிறுவனம் தமிழ் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் வாங்கத் திட்டமிட்டிருந்ததை தேசம்நெற் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. தற்போது லைக்கா நிறுவனம் அல்லது அதன் பினாமி அமைப்பு ஒன்றுடன் சில அரசியல் தலைவர்கள் ஒரு உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளனர் எனவும் தெரிவருகின்றது. அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட பின்னரேயே அதன் அரசியல் தலைவவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டு ஒரு கோடியைப் பெற்றுக்கொண்டவர்கள் பட்டியலில் ரெலோ செல்வம் அடைக்கலநாதன், குருசாமி சுரேன், கோவிந்தன் கருணாகரன், ஈபிஆர்எல்எப் சுரெஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அடங்குவதாக் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றன.

இந்த லைக்கா டீலை புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஏற்றுக்கொள்ள மறுத்த போதும் நடராஜா குருபரன் மற்றவர்களைத் தொடர்புபடுத்தி விடக் கேட்டதை அடுத்து கூட்டணியின் ஏனையவர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

அரசியல் கைதிகள் விடுதலையை உறுதிப்படுத்தியதுடன் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு 25 லட்சம் நிதியையும் லைக்கா வழங்கியது. லைக்காவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருந்த உறவைப் பயன்படுத்தி இது சாத்தியமாக்கப்பட்டது. இதில் ரெலோ முக்கிய பங்கெடுத்திருந்தது. ரெலோவின் குருசாமி சுரேனும் லைக்காவின் துணைத் தலைவர் சிவசாமி பிரேம்குமாரும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள், செல்வம் அடைக்கலநாதன் லண்டன் வருகின்ற போது லைக்காவில் சந்திப்பது வழமையென, அவருக்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர். இருந்தலும் இந்த டீலை வெளியே இருந்து வருவது போன்ற ஏற்பாட்டில் நடராஜா குருபரன் டீல்மேக்கராக மற்றவர்களை சம்மதிக்க வைக்க அனுப்பட்டதாகத் தெரியவருகின்றது.

இந்த டீலை புளொட் தலைவர் முன்னாள் பா உ தர்மலிங்கம் சித்தார்த்தனும்,  ரெலோ எம் கெ சிவாஜிலிங்கமும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் லைக்காவின் உடன்பாட்டில் கையெழுத்திடவும் இல்லை. ஒரு கோடியைப் பெறவுமில்லை. இதுவொரு அரசியல் தற்கொலைக்கு ஒப்பான செயல் என புளொட் சித்தார்த்தன் குறிப்பிட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

இந்த ஒரு கோடி முன்னாள் ஈபிஆர்எல்எப் பா உ துரைரணட்னத்திற்கும் தேர்தலில் போட்டியிட்ட ரவிராஜின் துணைவி சசிகலாவுக்கும் வழங்கப்பட்டதாக இவர்களுடன் நெருங்கிச் செயற்படும் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் இதுதொடர்பில் தமது நிலைப்பாடுகளை வெளியிட்டால் அதனை தேசம்நெற் நிச்சயமாக வெளியிடும். மேலும் லைக்கா உடன்பாட்டை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிட வேண்டும். அதன் உள்ளடக்கத்தை அறிகின்ற சகல உரிமையும் தமிழ் மக்களுக்கு உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் செல்வம் அடைக்கலநாதன் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.