தையிட்டி மடாலயம்

தையிட்டி மடாலயம்

தையிட்டியில் புதிய கட்டிடம் பிக்குகளின் மடாலயம் ! 

தையிட்டியில் புதிய கட்டிடம் பிக்குகளின் மடாலயம் !

 

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரை காணியில் மேலுமொரு சட்டவிரோத கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடம் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு விகாரதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த கட்டடத்தில் பௌத்த மத வழிபாடுகள் இடம்பெற்றன.

இதற்கு வழமை போலவே எதிர்ப்பு தெரிவித்து தையிட்டி காணி உரிமையாளர்கள், அரசியல் தரப்புக்கள், பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் உண்மையிலேயே இது சட்ட விரோதமானது என்பதை சட்டப்படி நிரூபிக்கும் வகையில் வழக்குகளைப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாரில்லாமல் உள்ளனர். தேர்தல் காலங்களுக்கான கோஸமாக தையிட்டியும், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டங்களும் மாறியுள்ளது. சட்டம்பிக் கட்சிகள் கூட ஒரு வழக்கைப் பதிவு செய்யத் தயாரில்லை.

நேற்றைய போராட்டத்தின் போது பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. பொலிஸார் கைவிலங்குகளுடனும் துப்பாக்கிகளுடனும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்துவது போல் செயற்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

திஸ்ஸ விகாரைப் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும் என்று பௌத்தசாசன அமைச்சர் சுனில் செனவி அறிவித்திருந்த நிலையில், விகாரை வளாகத்தில் மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம் கட்டப்பட்டுள்ளமை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கட்டடம் புதிதாக தான் கட்டப்பட்டதா? அல்லது ஏற்கனவே விகாரை கட்டும் போதே பிக்குகளுக்கு என கட்டிய மடமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தையே தடுத்து நிறுத்துவதற்குத் திராணியற்ற இந்த அரசாங்கம், எவ்வாறு திஸ்ஸ விகாரையை அப்புறப்படுத்தி, மக்களின் காணிகளை மக்களுக்கு உரியதாக்கும் என்ற பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.