மரபுத் திங்களாக அறிவிக்கப்பட்ட தை மாதம் 28இல் நோத் ஹரோவில் “மாறிவரும் உலக ஒழுங்கில் ஈழத்தமிழர்களும் இந்தியாவும் மேற்குலகமும்” என்ற தலைப்பிலான சந்திப்பை சிறு துளிகள் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. சிறு துளிகள் மற்றும் மள்ளர் மீட்புக் களம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. சிறு துளிகள் ஒரு உதவி அமைப்பாக தன்னை முன்னிலைப்படுத்தினாலும் அதன் செயற்பாடுகள் அது ஒரு அரசியல் அமைப்புப் போலவே உள்ளது. இக்கூட்டத்திற்கு இவர்கள் விடுத்துள்ள அழைப்பிதழில் ஒரு கையேட்டை இணைத்துள்ளனர். அதனை வாசித்துவிட்டு வரும்படியும் கோரியுள்ளனர். இக்கையேடானது ஏற்பாட்டாளர்களின் அரசியல் முகத்தை வெளிப்படுத்தி நிக்கின்றது. இலங்கையில் 1970களின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் அதன் உச்ச கட்டத்தை அது எட்டிய 1980களின் நடுப்பகுதி வரை முக்கியமான ஐந்து விடுதலை இயக்கங்கள் உட்பட 40 விடுதலை இயக்கங்கள் உருவாகி இருந்தன. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் துப்பாக்கியின் நிழலில் ஓரளவு கட்டுக்கோப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, அவரும் ஆயதங்களும் மௌனிக்கப்பட்ட பின் எண்ணற்ற பிரிவுகளாகின. இப்பிரிவுகள் நாட்டுக்கு நாடு வெவ்வேறு குழுக்களாக செயற்படுகின்றன. அவ்வாறான குழக்களில் ஒன்று தலைவர் இருக்கின்றார் என்று சொல்லியும் தங்கை துவாரகா உயிர்த்தெழுந்து வந்துவிட்டார் என்று சொல்லியும் எழுச்சி கொண்டுள்ளனர். இன்னும் சில பிரிவுகள் இலங்கை, இந்திய புலனாய்வுப் பிரிவுகளுடன் தங்களை இணைத்துக்கொண்டு செயற்படுகின்றனர்.
இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்க்ஐ கிளிக் செய்யுங்கள்..
