சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது – ரஷ்ய ஜனாதிபதி புடின்

ரஷ்யா – உக்ரைன் போரில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்திருக்கிறார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் 3 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இதுகுறித்து புடின் கூறும்போது,

“சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறது. இவ்விவகாரத்தில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா இருக்கிறது. உக்ரைனுடனான எங்கள் மோதலில் சீனா பாரபட்சமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது ஆனால் போரை நிறுத்த உக்ரைனும், ஐரோப்பாவும் தயாராக இல்லை. ரஷ்யாவின் முக்கிய வர்த்தக நாடாக சீனா உள்ளது” என்று தெரிவித்தார்.

முன்னதாக ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் மரியுபோல் பகுதிக்கு புடின் திடீரென பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தில் மரியபோலில் மறுசீரமைப்பு செய்வது குறித்து ஆலோசனையை அவர் நடத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

 

தொடர்ச்சியாக 3வது தடவையாக மீண்டும் சீனாவின் ஜனாதிபதியாக ஜின்பிங் !

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கடந்த 2012ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஜின்பிங் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டார்.

அதன்பிறகு 2வது முறையாக அவர் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக 3வது தடவையாக மீண்டும் அவர் சீன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

சீனா கம்யூனிஸ்டு கட்சி விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத அளவில் கடந்த அக்டோபர் மாதம் மூன்றாம் முறையாக ஜின்பிங் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் அனைத்து உயர் மட்ட குழுவினரும் சேர்ந்து அவரை தேர்ந்தெடுத்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று சீனா பாராளுமன்றத்தில் நடந்த 14வது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 2,952 உறுப்பினர்கள் மீண்டும் ஜின்பிங்கை அதிபராக தேர்வு செய்துள்ளனர். எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டு உள்ளார். மேலும் அவர் சீன ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்க உள்ளார். சீன வரலாற்றில் இதுவரை யாரும் தொடர்ந்து 3 முறை அதிபராக பதவி வகிக்கவில்லை. அந்த சாதனையை ஜின்பிங் பெற்று இருக்கிறார். இன்னும் 5 ஆண்டு காலம் அவர் சீன அதிபராக பதவி வகிப்பார்.

தற்போது 69 வயதாகும் அவர் கொரோனா காலகட்டத்தின்போது கட்டுப்பாடுகள் விதித்ததில் பொதுமக்களின் எதிர்ப்புகளை சம்பாதித்தார். அவருக்கு எதிராக போராட்டங்களும் நடந்தது. ஆனால் அதையெல்லாம் மறந்து இப்போது ஜின்பிங் மீண்டும் சீன அதிபராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

“ரஷ்யாவும், உக்ரைனும் விரைவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.” – சீனா

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும், உக்ரைனும் விரைவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், அனைத்து நாடுகளும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக சீனா 12 அம்ச செயல் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: ”அனைத்து நாடுகளின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். (NATO) கூட்டு ராணுவத்தை வலுப்படுத்துவதன் மூலமோ விரிவுபடுத்துவதன் மூலமோ ஒரு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது.

மோதலோ போரோ ஒருவருக்கும் நன்மையை அளிக்காது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ரஷ்யாவும் உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரே திசையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும். இதன்மூலம் படிப்படியாக பதற்றம் குறைந்து போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வழிவகைகளைக் காண வேண்டும்.

பேச்சுவார்த்தையும் விட்டுக் கொடுத்தலுமே உக்ரைன் பிரச்சினைக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு சீனாவின் உறுதியான ஆதரவு தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சீனாவின் இந்த செயல்திட்டத்தை அமெரிக்கா விமர்சித்துள்ளது. ”உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவியதற்கு மேற்கத்திய நாடுகளும் நேட்டோ அமைப்புமே மறைமுக காரணம்; அவைதான் போரை தூண்டின என மேற்கத்திய நாடுகளுக்கும் நேட்டோவுக்கும் எதிராக கருத்துக்களைக் கூறி வந்த நாடு சீனா. இதன்மூலம், சீனா ஒரு சார்பான நிலைப்பாட்டை ஏற்கெனவே எடுத்துவிட்டது” என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

 

பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வரும் நிலையில், அந்த நிலைப்பாட்டுக்கு ஒத்த நிலைப்பாட்டை சீனா வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

“நட்புறவு இனிமேல் நேர்மையானதும் உண்மையானதுமாக இருக்காது.” – சீன ஜனாதிபதிக்கு விஜேதாச ராஜபக்ஷ கடிதம் !

“சீனாவுடனான நட்புறவு இனிமேல் நேர்மையானதும் உண்மையானதுமாக இருக்காது.” என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

45 விடயங்களை சுட்டிக்காட்டி சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே விஜேதாச ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதன் படி ,

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவு இனி நேர்மையானதும் உண்மையானதுமாக இருக்காது எனவும் உலக வல்லரசாக மாறுவதற்கான சீனாவின் பயணத்தில் இலங்கையும் போர்க்களங்களில் ஒன்றாக மாறியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமே 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் அதிக வட்டி விகிதத்தில் இருந்து சீனாவுக்கு பலனளித்த ஒரேயொரு திட்டம். ஏனைய திட்டங்கள் அனைத்தும் வெறும் வீண்செலவுகள் எனவும், சீனா இலங்கையை பாரிய கடன் வலையில் சிக்க வைத்துள்ளதாகவும் விஜேதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஜனநாயக முறைமையின் கீழ் நீக்கப்படும் என்றும் இதன்போது கடந்த 15 வருட காலத்தில் சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை மீண்டும் ஆராயப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நடைபெறும் தேர்தல்கள் மக்களின் கருத்துக்கணிப்புடனேயே நடைபெறும் என்றும் இதன் போது ஊழல் மோசடிகள் காணப்படும் அனைத்து உடன்படிக்கைகளும் இரத்துச் செய்யப்படும் என்றும் அவர் சீன ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.