சி.வி.விக்கினேஸ்வரன்

சி.வி.விக்கினேஸ்வரன்

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சி.வி.விக்கினேஸ்வரன் !

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பர் 14 ம் திகதியன்று நாடாளுமன்ற தேர்தல் நடாத்தப்படவுள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சியினரிடையே நடைபெற்ற கூட்டத்தில் குறித்த தகவலை விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் என அறிய முடிகிறது.

2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அரசியலில் பிரவேசித்து வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவான விக்னேஸ்வரன், 2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பொது வேட்பாளரை இழிவாகப் பேசுபவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் – சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழ் பொது வேட்பாளரை இழிவாகப் பேசுபவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக நீங்கள் ஒவ்வொரும் எதிர்வரும் 21ஆம் திகதி அரியநேத்திரனுக்கு வாக்களிக்க வேண்டும் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து இன்று (14) நெல்லியடியில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”ஜனாதிபதி தேர்தலில் பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) நீங்கள் வெகுவாக வாக்களித்தால் அதற்கு மதிப்புண்டு மாண்புண்டு. அதை வைத்து தமிழ் மக்களின் அடையாளமாக காட்டி எமக்கு நடந்து வரும் அநியாயங்கள் பற்றி நாடுகளுக்கு கூறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்து எமக்கு இழைக்கும் இன்னல்களை தடுக்கலாம். இவர் இத்தனை இலட்சம் வாக்குகளைப் பெறறவர் என அடையாளம் காட்டக் கூடியதாக இருக்கும்.

பெரும்பான்மை அரசியல் வாதிகளை ஆதரிப்பது தமிழ் பேசும் அரசியல் வாதிகளுக்கு தனிப்பட்ட நன்மையினைத தரும் ஆனால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது.

சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென தொடங்கிய பகிஷ்கரிப்பாளர்கள் இப்போது தமிழ் பொது வேட்பாளரையும் பகிஷ்கரிக்க சொல்கின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.

“விக்னேஸ்வரன் கூறுவதைத் தமிழர்களே பொருட்படுத்துவதில்லை. நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்” – அனுர குமார திசாநாயக்க

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்  சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பரப்புரைகளுக்காக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த அநுரகுமார திசாநாயக்க ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், ‘அநுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவானால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெறமுடியாது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்பாடும்.ஏற்கனவே நாடு சீனாவின் கடன்பொறிக்குகள் சிக்கியுள்ள நிலையில் நாட்டு மக்கள் அதனை விரும்ப மாட்டார்கள்’ என்று விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடியாகவே, “விக்னேஸ்வரன் கூறுவதைத் தமிழர்களே பொருட்படுத்துவதில்லை. நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்” என்று அநுர தெரிவித்துள்ளார்.

இன்றைய உலகில் எந்தவொரு நாட்டையும் சார்ந்திருக்காமல் ஒன்றும் செய்ய முடியாது. அரசுகள் இன்னொரு அரசுகளுக்குத்தான் ஆதரவை வழங்குகின்றன. தனி நபருக்கு அல்ல. ஆதலால், இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் இந்தியாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன்.

சீனாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் சீனாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன் என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

ஏன் ஜனாதிபதி பொதுவேட்பாளரை நிறுத்தினோம் ..? – விளக்குகிறார் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான விக்கினேஸ்வரன்!

மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை தெரிவிக்கும் நோக்கில் தான் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் கருத்தை வெளிப்படுத்துவதே ஜனாதிபதித் தேர்தலின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முழுவதுமாக தமிழ் மக்களுக்காக ஒரு வேட்பாளரை முன்வைத்து இத்தனை நாட்களாக தமிழ் மக்களுக்கு காணப்படக்கூடிய பிரச்சினைகளை அந்த வேட்பாளர் மூலம் புரிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறது.

சர்வதேசமும் அவை தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டும். எங்களுக்கான உரிமைகளை நாங்கள் முன்வைக்க தீர்மானித்துள்ளோம் என சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா. அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வடக்குக் கிழக்கின் 07 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவதற்கு மூன்று பேரின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் பா. அரியநேத்திரன் தமிழ்ப் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 07 கூட்டணிக் கட்சிகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உள்ளடக்கப்படவில்லை.

இக் கட்சிகளுடன் சிவில் சமூக அமைப்புகள் பேச்சு நடத்தியிருந்தன. ஆனாலும் இக் கட்சிகள் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிக்க மறுத்துவிட்டன.

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் பலமான விருப்பத்தின் பேரில் 07 கட்சிகளின் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுத் தமிழ் வேட்பாளரை முன்வைப்பது அவசியமற்றது என பல தமிழ் அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆனால் வெற்றி பெற முடியாவிட்டாலும் தமிழ் மக்களின் பலத்தை காட்ட இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் 1956 ஆம் ஆண்டு எங்கே இருந்தோமோ, இப்போதும் அங்கேயே இருக்கின்றோம். – சி.வி.விக்கினேஸ்வரன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது எனவும், மாறாக இதுவரை காலமும் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பர் எனவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தமிழ்மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்கி, தமிழர் வாக்குகளைப் பிரிக்கக்கூடாது என ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன கூறியிருப்பது பற்றி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கும் விக்கினேஸ்வரன், இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:

 

எனது நண்பரான வஜிர அபேவர்தன ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளராவார். எனவே பதவியில் உள்ள ஜனாதிபதியை வெற்றியடையச்செய்வதற்கு அவரால் வேறு எதைக் கூறமுடியும்? ஆனால் அவர் தமிழர்கள் என்ற கோணத்திலிருந்து நாம் முகங்கொடுக்கும் பிரச்சினையைப் பார்த்தால், இவ்வாறு கூறமாட்டார்.

 

தமிழர்களாகிய நாம் இதுவரையில் பெரும்பான்மையின சமூகத்தைச்சேர்ந்த வேட்பாளருக்கே வாக்களித்திருக்கின்றோம். அவர்கள் அனைவரும் எமது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்தனர்.

 

ஆனால் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் அவர்களுக்கு எம்மைத் தெரியவே இல்லை. அவர்கள் வெகு இலகுவாக எம்மைப் புறக்கணித்துவிட்டனர். நாங்கள் 1956 ஆம் ஆண்டு எங்கே இருந்தோமோ, இப்போதும் அங்கேயே இருக்கின்றோம். வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை.

 

இலங்கையில் இன்றளவிலே இனத்துவப்போக்கு நிலவுகின்றது. சிங்களவர்களால் தெரிவுசெய்யப்படும் சிங்களவர்களுக்கான சிங்கள அரசாங்கமே இயங்குகின்றது.

 

தமிழர்கள் இந்த மண்ணில், அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகின்றனர் என்ற உண்மை சிங்களவர்களால் ஏற்கப்படவில்லை. பிரித்தானியர்கள் நிர்வாகத்தேவைகளுக்காக நாட்டை ஒன்றிணைத்தனர்.

 

இருப்பினும் அவர்கள் வெளியேறும்போது எமக்கு சமஷ்டி அரசியலமைப்பை வழங்கியிருக்கவேண்டும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வியை நிறைவுசெய்துகொண்டு 1926 ஆம் ஆண்டு நாடு திரும்பிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சமஷ்டி அரசியலமைப்பையே வலியுறுத்தினார். கண்டிய சிங்களவர்கள் டொனமூர் ஆணைக்குழுவிடம் சமஷ்டி அரசியலமைப்பையே கோரினர். ஏனெனில் கண்டிய சிங்களவர்கள் தம்மைத்தாமே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமைக்கான சட்டபூர்வ அதிகாரம் தமக்கு வேண்டுமெனக் கருதினர்.

இவ்வாறானதொரு பின்னிணயில் வட, கிழக்குவாழ் தமிழ்பேசும் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறங்கினால் அவர் ஜனாதிபதியாகத் தெரிவாகமாட்டார் என்பது உண்மையே. தமிழ் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்குவது தமிழர்களின் வாக்குகளைப் பிளவுபடுத்தும் என்ற தர்க்கம் முன்வைக்கப்படுகின்றது.

 

ஆனால் மிகப்பொருத்தமான தமிழ் வேட்பாளரொருவர் களமிறக்கப்பட்டால், தமிழ்மக்கள் அனைவரும் பெரும்பான்மையின வேட்பாளருக்கு வாக்களிப்பதற்குப் பதிலாக, அத்தமிழ் பொதுவேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். தமிழர்கள் மிகநீண்டகாலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

 

எனவே இதுவரை காலமும் சிங்கள அரசியல்வாதிகளால் தமிழ்மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள் என்பதை உலகுக்கு எடுத்துரைப்பதற்கு இது மிகச்சிறந்ததொரு சந்தர்ப்பமாகும். அதிகாரம் மிக்க இடத்திலிருந்து தமிழர்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கு தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது மிகமுக்கியமானதாகும்.

“தாராளமாக வாருங்கள்! கொல்ல வேண்டும் என்றாலும் வாருங்கள்!” – சிங்கள இளைஞரை அழைத்த விக்னேஸ்வரன் !

என்னை கொலை செய்ய கொலை வெறியில் இருந்த சிங்கள இளைஞன் தன் தவறை உணர்ந்து மனம்மாறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதிலிலேயே இவ்விடயத்தை தெரிவித்தார்.

 

அந்த கேள்வி பதிலில்,என்னுடைய சில கேள்வி பதில்களை வாசித்துவிட்டு ஒரு படித்த சிங்கள இளைஞர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். பேச்சு கிட்டதட்ட பின்வருமாறு அமைந்தது.

 

இளைஞர் – “சேர்! உங்களைக் கொல்ல வேண்டும் என்ற கொலை வெறியில் இருந்தேன். என்றாலும் நீங்கள் குறிப்பிட்ட பேராசிரியர் ஆரியரட்ணவின் சிங்கள நூலான “தெமள பௌத்தயா”வை (தமிழ் பௌத்தர்கள்) வாசித்த பின்னர்தான் உங்கள் கூற்றுக்களின் உண்மையைப் புரிந்து கொண்டேன். உங்களை வந்து சந்திக்க விரும்புகின்றேன்.”

 

நான் – “தாராளமாக வாருங்கள்! கொல்ல வேண்டும் என்றாலும் வாருங்கள்! எனக்கு இப்பொழுது 83 வயது (அப்போதைய வயது). தொடர்ந்து இந்த உலகத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை எதுவும் எனக்கில்லை.”

 

இளைஞர் – :“இல்லை சேர்! நான் வெறும் பேச்சுக்கே அவ்வாறு சொன்னேன்.” இன்றுவரை அவர் என்னை வந்து சந்திக்கவில்லை. ஆனால் அவர் தமது மனமாற்றத்தை வெளியிட்டமை தான் இந்தக் கேள்வி – பதிலுக்கு முக்கியமானது.

 

சிங்கள மக்களுக்கு எம்மைப் பற்றிய போதிய அறிவு இல்லாமையே தமிழ் -சிங்கள உறவானது இன்றும் மேம்படாமல் இருப்பதற்குக் காரணம் – என்றுள்ளது

“மாகாண சபை தேர்தல் தேவையில்லை என ஜனாதிபதியிடம் சி.வி.விக்கினேஸ்வரன் கூறினார்.” – சுமந்திரன் குற்றச்சாட்டு!

மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்

“நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக உரையாடுவதற்கு என்று கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வல் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள் அந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன்.

 

இந்த கூட்டத்தில் அதிகாரப்பகிர்வு என்று சொன்னது பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 ஆம் திருத்தத்தை அமுல்ப்படுத்துவது பற்றி அவர் பேசியிருந்தார்.

 

இதன்போது நான் ”தற்போது கொண்டு வந்திருக்கின்ற தனிநபர் சட்டமூலத்திற்கு அமைவாக மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என சுட்டிக்காட்டினேன். எனினும் தேர்தல் இப்போது தேவையில்லை அதிகார பகிர்வு எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் பேசுவோம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

 

மேலும் நீங்கள் இந்த இரண்டிலே ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் ஒன்று தேர்தல் அல்லது அதிகாரங்கள் பகிர்வது இரண்டையும் ஒரே நேரத்தில் கேற்க முடியாது என திட்டவட்டமாகக் கூறினார்.

 

இது ஒரு முரண்பட்ட கருத்து அல்ல இரண்டும் ஒரே திசையில் தான் இருக்கிறது அப்படி இருக்கின்ற போது நீங்கள் ஏன் ஒன்று மட்டும் தான் கேட்க வேண்டும் என சொல்கிறீர்கள் என்று நான் அவரோடு வாக்குவாதப்பட்ட போது முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொன்னார் தேர்தல் தேவையில்லை அதிகார பகிர்வு பற்றி பேசுவது தான் முக்கியம் என்றும் கூறினார்.

 

அந்தக் கருத்தோடு நாங்கள் உடன்படவில்லை ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பாக மூன்று கட்சித் தலைவர்களும் அங்கே இருக்கின்ற போது அவர்களின் அனுமதியோடு நான் விக்னேஸ்வரன் ஐயா சொன்னதை மறுத்துரைத்தேன்.பல வருடங்களாக கால தாமதமாகி இருக்கிறது மாகாண சபைத் தேர்தல், ஆகவே அது உடன் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடாத்துவதால் அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக கதைக்க கூடாது என்று எங்கேயும் இல்லை, ஆகவே ஜனாதிபதி தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

நாங்கள் இரண்டையும் கேட்கின்றோம் எனக் கூறியபோது ”அப்படியானால் நாங்கள் கூட்டத்தை முடித்துக் கொள்வோம்” எனக் கூறிவிட்டு ஜனாதிபதி சென்றுவிட்டார். ஆகவே கூட்டம் நேற்று அரைகுறையுடன் நிறைவடைந்திருக்கிறது”இவ்வாறு தெரிவித்தார்.

மார்ஷல் சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் – சி.வி.விக்கினேஸ்வரன்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அண்மையில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் நேற்றையதினம் (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர், எங்களை லண்டனுக்கு போகச் சொன்னால் அவரை நாங்கள் போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும்.

பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல – தமிழ் பெயருமல்ல. அவரை போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும்.

சமஷ்டி கோருபவர்களை லண்டன் போகச் சொன்னால் நாங்கள் அவரை போர்த்துக்கல்லுக்கு போகுமாறு கோர வேண்டி வரும் என அவர் தெரிவித்தார்.

 

“ஆங்கிலத்தை அரச கரும மொழியாக மாற்றுவதே இனப்பிரச்சினைக்கு தீர்வு.”- இராஜாங்க  அமைச்சர் டயனா கமகே

“நாட்டில் சிங்கள-தமிழ் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமாயின்  ஆங்கில மொழியை அரச கரும  மொழியாக அறிவிக்க வேண்டும்.” என  சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10)  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முன்னிலைப்படுத்தி நாட்டில் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிப்பது வெறுக்கத்தக்கது. 13 அல்லது 13 பிளஸ் என்ற பிரச்சினைகள் எமது நாட்டுக்கு வேண்டாம். நாம் அனைவரும் இலங்கையர்களாக வாழ வேண்டும்.

விக்னேஸ்வரன் சண்டித்தன  கதைகளை கைவிட வேண்டும். விமல் வீரவன்ச போன்றோர் இனவாதத்தை தூண்டுவதனை நிறுத்த வேண்டும். சண்டித்தனமான பேச்சுக்களினாலும், இனவாத செயற்பாடுகளினாலும் 30 வருட கால யுத்தம் தோற்றம் பெற்றது.

அதன் தாக்கமே இன்று பொருளாதார பாதிப்பாக உருவெடுத்துள்ளது. பொருளாதார தாக்கம் அனைத்து இன மகக்ளையும் ஆட்டிப்படைக்கிறது. வடக்கில் அரச கரும மொழியாக தமிழ் மொழி அமுலாக்கப்படுவதாக விமல் வீரவன்ச கூறுகின்றார்.

இலங்கையில் சிங்கள-தமிழ் பிரச்சினைக்கு தீர்வுகாண இருக்கும் ஒரே வழி அரச கரும  மொழியாக ஆங்கில மொழியை அறிவிப்பதே. அனைத்து நாடுகளிலும் அனைத்து இடங்களிலும் இன்று ஆங்கில மொழியே உள்ளது. எனவே இலங்கையின் அரச கரும மொழியாக ஆங்கில மொழியை அறிவிக்க வேண்டும்.

இலங்கையின் அரச கரும  மொழியாக ஆங்கில மொழியை அறிவித்தால் சிங்கள, தமிழ் பிரச்சினையும் தீர்ந்து விடும். நாடும் அனைத்து வழிகளிலும் முன்னேறும்.எவரும் மொழியுரிமை என குறிப்பிட்டுக் கொண்டு முரண்பட்டுக் கொள்ள மாட்டார்கள்.

அதேவேளை தனது நாட்டுக்காக உயிரைக்கொடுத்து போராடும் உக்ரைன் நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கியாகவே நான் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்க்கின்றேன்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்ட போது அரசாங்கத்தை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு பலமுறை அழைப்பு விடுத்தார். ஆசை ஆனால் பயம் என்பதால் அவர் அரசாங்கத்தை ஏற்கவில்லை.

நெருக்கடியான சூழலில் நாட்டு மக்களை பாதுகாப்பவரே உண்மையான தலைவர், சந்தர்ப்பாதிகள் உண்மையான தலைவர் அல்ல, நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

“75 ஆவது சுதந்திர தினம் தமிழருக்கு கரிநாள்.” – ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய சி.வி. விக்கி!

“நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள்.”  என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வட கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு சுதந்திரமற்ற, உரிமைகள் அற்ற, அடிமைப்பட்டிருக்கும் ஒரு நாளாகவே இதனை அவர்கள் பார்க்கின்றார்கள்.

மாணவ ஒன்றியமும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்து குறித்த நாளை கரிநாளாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறு குறித்த நாளைப் பிரகடனப்படுத்த முன் அவர்கள் மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், மதத் தலைவர்கள் போன்றோருடன் கலந்துரையாடிய பிறகே இந்தத் தீர்மானத்தை எடுத்துக்கொண்டுள்ளனர்.

பெப்ரவரி 4ஆம் திகதியன்று வடக்கு கிழக்கு தழுவிய வர்த்தக சமூகத்தினர், கடற்றொழிலாளர்கள், தனியார் மற்றும் அரச பேரூந்து உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் தொழில் புறக்கணிப்பிலும் முழுமையான கடையடைப்பிலும் ஈடுபட உள்ளனர்.

எமது மனோநிலையை மன ஏக்கத்தை உலகுக்கு வெளிப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

பிரித்தானியாவின் ஆதிக்கத்தினுள் இருந்து பெரும்பான்மையின ஆதிக்கத்தினுள் இந்நாடு 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியன்று சென்றமையை சுட்டிக்காட்டும் நாளாக இந்த நாள் அமைகின்றது.

ஒற்றையாட்சி மூலம் சிங்களப் பெரும்பான்மையினர் பெற்ற அரசியல் ஆதிக்கத்தை கடந்த 75 ஆண்டுகளாக சிங்கள அரசியல்வாதிகள் கட்டிக்காத்து வருகின்றனர்.

தந்திரமாக அவர்கள் பெற்றுக்கொண்ட ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள்.

அதுவரையில் வருடந்தோறும் பெப்ரவரி நான்காம் திகதி என்ற கரிநாள் வந்து போய்க்கொண்டிருக்கும். நாமும் அன்றைய தினம் எமது மனோநிலையை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்போம்” – என்றார்.

இதேநேரம் கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற மக்கள் புரட்சியின் விளைவாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய போது இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ராஜபக்சர்களால் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் அமர்த்தபட்டார். எதிர்க்கட்சி உட்பட பல சிங்கள தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை எதிர்த்தனர். குறிப்பாக மக்கள் ஆணையை பெற்று பாராளுமன்றத்திற்கு கூட நேரடியாக தெரிவு செய்யப்படாத ஐக்கிய தேசியக் கட்சியினுடைய உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி கொடுப்பது என்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டி இருந்தது. இப்படியான நிலையில் சில பேச்சுவார்த்தைகள் அடிப்படையில் சி.வி. விக்னேஸ்வரன் , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தன்னுடைய முழுமையான ஆதரவையும் வழங்கியிருந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர் பிரச்சனைக்கு இலங்கை 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்பு முழுமையான தீர்வு தருவதாக கூறி வந்த நிலையில் இதுவரையிலும் எந்த தீர்வும் அவரால் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிப்பதாக சிவி விக்னேஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.