சிவராம் யார் ? இரட்டை உளவாளியா ? நம்பிக்கைத் துரோகியா ? மாமனிதனா ?
ஏப்ரல் 28, சிவராம் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஆனால் சிவராம் யார் என்ற கேள்விக்கான விடை மிகக் குழப்பகரமானதாகவே உள்ளது. புளொட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே சிவராமைப் படுகொலை செய்ததாக பலமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. சிவராமின் கொலையாளிகள் முன்னாள் பா உ தர்மலிங்கம் சித்தார்த்தனின் வாகனத்தில் சென்று தான் சிவராமைக் கடத்தி கொலை செய்ததாக செய்திகள் கசகின்றது. இது தொடர்பில் முன்னாள் பா உ சித்தார்த்தன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவராம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினராக இருந்தவர். அதன் பின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தவர். கருணா பிரிவின் போது கிழக்குத் தேசியத்தை கருணாவுக்கு ஊட்டியதன் பின்னணயில் சிவராம் இருந்துள்ளார். அதன் பின் வன்னிக்கு சிவராமை அழைத்த புலிகள் கருணாவின் பிரிவுக்கு எதிராக கட்டுரையொன்றை வெளியிட மிரட்டியதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் கருணாவுக்கு எதிரான கட்டுரையை வெளியிட்டதாகவும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சிவராம், இரட்டை உளவாளியாக புலிகளுக்கும் கருணாவுக்கும் இடையே இருந்ததாக புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முல்லைமதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார். சிவராம் தமிழ் தேசியத்துக்காக புலிகளுக்காகச் செயற்பட்ட மாமனிதர் என்றார். அதற்காகவே அந்தப் பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டதாக முல்லைமதி ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
நோர்வேயைச் சேர்ந்த எழுத்தாளரும் சிவராமின் நண்பருமான என் சரவணன் தன்னுடைய முகநூல் பதிவில் வருமாறு குறிப்பிடுகின்றார்: “சிவராமிடம் இருந்து தள்ளியே நிற்கும்படியும், அதிக நெருக்கமான நட்பைப் பேண வேண்டாம் என்றும் எனக்கு தமிழீழ மக்கள் கட்சியினால் கட்டளை இடப்பட்டிருந்தது. அந்தளவு நம்பகம் இல்லாத ஒருவராக அவர் இருந்தார். கூடப் பழகிய எம் சக நண்பர்கள் பலரும் அதை அறிவார்கள். எனக்கே சிவராமுடனான அப்படிப்பட்ட தனிப்பட்ட அனுபவங்கள் உள்ளன.
தனிப்பட்ட சிவராமின் மீது ஏராளமான வெறுப்பும், விமர்சனங்களும் உள்ளன. ஆனால் அதே காரணத்துக்காக சிவராமின் படைப்புகளை கழித்திவிடவோ, நிராகரித்துவிடவோ, புறக்கணித்துவிடவோ முடியாது. சிவராமின் எழுத்துக்களில் உள்ள ஆழமும், கனதியும் அவ்வளவுக்கு நிலைத்து நிற்பவை.
சிவராமை களையெடுத்தவர்கள் வெறுமனே சிவராமின் எழுத்துக்காக மட்டும் அதை செய்யவில்லை. சிவராமின் அரசியல், சிவராமின் நம்பிக்கைத் துரோகம் என்பவற்றையும் கூறி நியாயப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள்.
மூன்று தசாப்த யுத்த காலத்தில் கொல்லப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட அத்தனை ஊடகவியலாளர்களின் சாவுக்கும் நீதி கிடைத்தாக வேண்டும்” என்று சொல்வி தன்னுடைய நண்பன் தராக்கி எனப் பின்னாளில் அறியப்பட்ட சிவராம் பற்றிய குறிப்பை பதிவு செய்துள்ளார் என் சரவணன்.
