சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை

“பெண் பிணத்துடன் புணர்ந்தார் திடீர் மரண விசாரணை அதிகாரி உதயசிறி” மருத்துவ மாபியாக்கள் சோடித்த குற்றச்சாட்டு! “வைத்தியர்கள் பணிக்குச் செல்லாமல் ஊதியம் பெற்று மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டினர்!” சாவகச்சேரி நீதி மன்றில் சட்டத்தரணி செலஸ்ரின்

யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவத் தவறுகளால் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி உதயசிறி, தன் மீது “பெண் பிணத்துடன் புணர்ந்தேன்;” என மருத்துவ மாபியாக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என ஓகஸ்ட் முதலாம் திகதி தெரிவித்துள்ளார். மருத்துவ மாபியாக்கள் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சியான தகவல்கள் தொடர்ந்தும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதற்கிடையே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் நீதி மன்றத்துக்கு முன் யூலை 31 அன்று சென்றுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகராக கடமையாற்றிய ராமநாதன் அர்ச்சுனா தங்களது கடமையைச் செய்யவிடவில்லை, அச்சுறுத்தல்களை விடுத்தார், மிரட்டினார், விடுதியைத் தொடர்ந்தும் மீள ஒப்படைக்க மறுக்கின்றார் போன்ற குற்றச்சாட்டுக்களை வைத்தியர்கள் ராஜீவ், பிரணவன், கமலா, மதிவாணன், மயூரன் ஆகியோர் முன்வைத்திருந்தனர்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் வைத்தியர்களாக இருப்பதால், அவர்களுடைய பெறுமதியான நேரத்தையும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் ராமநாதன் அர்ச்சுனாவினதும் நீதிமன்றத்தினதும் பெறுமதியான நேரத்தையும் கருத்தில் எடுத்து இவ்வழக்கை இணக்க சபையூடாக தீர்க்குமாறு பிரதிவாதி ராமநாதன் அர்ச்சுனாவைப் பிரதிநிதித்துவம் செய்த சட்டத்தரணி செலஸ்ரியன் நீதிமன்றைக் கேட்டுக்கொண்டார். அதனை வாதிகளான மருத்துவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குமாரவடிவேல் திருக்குமரன் மறுத்துவிட்டார். ராமநாதன் அர்ச்சுனாவை வழக்கிலிருந்து தப்பிக்கொள்ள அனுமதிக்க முடியாது என திருக்குமரன் வாதிட்டார். அர்ச்சுனாவுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் எனவும் திருக்குமரன் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த ராமநாதன் அர்ச்சுனாவின் சட்டத்தரணி செலஸ்ரியன், அப்படியானால் “வேலை நேரத்தில் பணியில் இல்லாது, தனியார் வைத்தியசாலைக்குச் சென்று பணிபுரியும் இம்மருத்துவர்கள் ஒவ்வொருவர் மீதும் பப்ளிக் சேர்விஸ் கொமிஸன் விதிகளை மீறியதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடும்போம்” எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் நீதிமன்றில் தனது வாதத்தை வைத்த போது இந்த வைத்தியர்கள் பணிநேரத்தில் பணியில் ஈடுபடாமல் வைத்தியசாலையில் ஒவர்ரைமையும் பதிந்துபெற்றுவிட்டு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி உள்ளனர். மக்களின் வரிப்பணத்தை இந்த வைத்தியர்கள் சுரண்டி உள்ளனர் என்றும் சட்டத்தரணி செலஸ்ரியன் சாவகச்சேரி நீதிமன்றில் தெரிவித்தார்.

வழக்கை விசாரணை செய்த நிதிவான் அ யூட்சன் ‘இதுவொரு மிரட்டல் எனத் தெரிவித்தார்’. ‘அவர்கள் தான் பிரதிநிதித்துவப் படுத்துபவர் மீது மேலதிக நடவடிக்கை எடுப்போம் என மிரட்டியாதால் தான், தான் அவ்வாறு கூறவேண்டியேற்பட்டதை சட்டத்தரணி செலஸ்ரியன் சுட்டிக்காட்டினார். வைத்தியர் பிரவணனுடைய பிரபல்யமான மேற்கோளாக மாறிய ‘கோள் மீ ஆஸ் சேர்’ என்பது பற்றி குறிப்பிடுகையில் ‘கோள் மீ அண்ணா’ என்பது எப்படி மிரட்டலாகும் எனக் கேட்டார் சட்டத்தரணி செலஸ்ரியன். ‘எதிர்தரப்பு சட்டத்தரணி சயந்தனை எனக்குத் தெரியும். அவருடன் சட்டவிடயங்கள் பற்றி பேச இருந்தது. அதற்காக நான் அவருக்கு போன் பண்ணிணேன். மசேஜ் விட்டேன். அதற்கு என் மீது மிரட்டல் வழக்குப் பதிவு செய்ய முடியுமா’ எனக் கேள்வி எழுப்பினார் சட்டத்தரணி செலஸ்ரியன். மேலும் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு வழங்கப்பட்ட விடுதியில் அர்ச்சுனாவிற்கு தேவையான ஆதாரங்கள் பல உள்ளது. அதனை விட்டால் ஆதாரங்கள் காணாமல் போய்விடும் என்றும் சட்டத்தரணி செலஸ்ரியன் அங்கு சுட்டிக்காட்டினார்.

காலை ஒன்பது மணியளவில் நீதிமன்றம் வந்த வாதிகளான மருத்துவர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தின் இடதுபுறம் சுவரோடு ஒட்டியவாறு இருந்த வாங்கில் அமர்ந்து கொண்டனர். பல்வேறு வழக்குகளுக்காக வந்திருந்தவர்கள் மத்தியில் இந்த வைத்தியர்களும் அங்கு வந்து காத்திருந்தனர். பிரதிவாதியான ராமநாதன் அர்ச்சுனா பார்வையாளர்களின் இருக்கையில் நடுவே போடப்பட்ட இருக்கையில் இருந்தார். இந்த வழக்கு மேலதிக தகவல்கள், விசாரணைகளுக்காக செப்ரம்பர் 11க்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதே போல் வைத்தியர்களுக்கு எதிராக அர்ச்சுனாவால் கொண்டுவரப்பட்ட, தன்னைத் தாக்கியது, தனது மொபைல் போனை பணத்தைப் பறித்தது சம்பந்தப்பட்ட வழக்கில் மேலதிக சாட்சியங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால் இவ்வழக்கும் செப்ரம்பர் 11 க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சாவகச்சேரி நீதி மன்றில் வைத்தியர்களால் தொடரப்பட்ட இந்த வழக்கு வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா தங்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்திவிட்டார் அதற்கான ஆதாரங்களையோ மான நஸ்டத்தையோ கோரும் வழக்குகளாக இருக்கவில்லை. வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மிரட்டுகிறார், பயப்படுத்துகின்றார், கடமையைச் செய்யவிடவில்லை, விடுதியை வைத்திருக்கின்றார் போன்றவற்றுக்காகவே வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது. தற்போது இணக்கசபையூடாக தீர்ப்பதற்கு வைத்தியர்கள் மறுத்துள்ளதால் இவ்வழக்கு எதிர்காலத்தில் தீவிரமடையும் என்றும் மேலதிக வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டி வரலாம் என்றும் சட்டத்தரணி செலஸ்ரியன் தெரிவித்தார்.

அடுத்து, யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ அசட்டையீனம் காரணமாக நிகழ்ந்த பல உயிரிழப்புகளை அம்பலப்படுத்தியதற்கு பழிவாங்கும் வகையில் 2018இல் தன்னுடைய பதவியை பறித்ததாக திடீர் மரண விசாரணை அதிகாரி உதயசிறி குற்றம்சாட்டியுள்ளார். 15 வரையான குழந்தைகளின் உயிரிழப்புக்கு மருத்துவ அசட்டையீனமே காரணம் எனத் தெரிவித்த உதயசிறி, இக்குழந்தைகள் வாட் அருகில் சுவாசத் தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவு இருந்துள்ளது. அதிலிருந்து வந்த வைரஸ் கிருமிகளே குழந்தைகளில் தொற்றை ஏற்படுத்தி மரணத்தைச் சம்பவித்ததாக அவர் தெரிவித்தார். இதனை ஆரம்பத்திலேயே ஆபத்து கணிப்பீடு செய்து தடுத்திருக்க முடியும் என்றும் அதிகாரி உதயசிறி தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் துர்க்கா இல்லத்தில் வளர்ந்து மணம் முடித்த பெண் தனது மூன்றாவது குழந்தைப் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு 28 நாட்கள் இருந்த நிலையில் திடீரென நடுநிசியில் சிசேரியன் ஒப்பிரேசன் செய்யப்பட்டதில் தாயும் சேயும் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். இவ்வாறான தவிர்க்கக் கூடிய மரணங்களைச் சுட்டிக்காட்டி அவற்றை வெளிக்கொண்டு வந்ததற்காக தனது பதவி பறிக்கப்பட்டதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரியாக இருந்த உதயசிறி தெரிவிக்கின்றார்.

தன்னுடைய பதவி பறிக்கப்பட்டதற்கான காரணத்தை தனது தேடலினூடாகக் கண்டுபிடித்ததாகக் கூறும் உதயசிறி, யாழ் போதனா வைத்தியசாலை வழங்கிய குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடிப்படையிலேயே 2018இல் தனது பதவி பறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றார். தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் அடிப்படையில் தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக சுகாதார அமைச்சு அவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. அண்மையில் உதயசிறி அமைச்சில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரூடாக தன்மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றிய ஆவணத்தை பார்த்தபோது அதிர்ச்சியான குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டு இருந்தது.

இறந்த பெண்ணின் உடலோடு உதயசிறி உறவு கொண்டதாகவும் பாலியல் லஞ்சம் பெற்றார் என்றும் இது போன்ற 37 வரையான குற்றச்சாட்டுக்கள் திடீர் மரண விசாரணை அதிகாரியாக இருந்த உதயசிறி மீது சுமத்தப்பட்டு இருந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதுவுமே உதயசிறிக்கு தெரிவிக்கப்படவும் இல்லை. அவை தொடர்பான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் தண்டணை வழங்கப்பட்டு விட்டது. அவருடைய பதவி பறிக்கப்பட்டு விட்டது. மீண்டும் தன்னுடைய பதவியை மீளப் பெறுவதற்கான போராட்டம் தொடர்கின்றது.

வைத்தியர் ஜெயக்குமரன், வைத்தியர் நாகநாதன், வைத்தியர் கெங்காதரன், உதயசிறி என யாழ் போதனா வைத்தியசாலையில் பலர் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்தியமூர்த்தி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இவரின் கரங்களில் புலம்பெயர் தேசங்களின் நிதிப்பங்களிப்பு வலைப்பின்னல் இருப்பதாகவும், மத்திய அரசின் கீழ் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்து கொண்டே மாகாண சுகாதாரப் பணிப்பாளராகவும் இருக்கும் அளவுக்கு மாகாணத்திலும் மத்தியிலும் அரசியல் அதிகாரங்களோடு நெருக்கமாக இருக்கின்றார் என்றும் ஜிஎம்ஓஏ உடன் செயற்படுவதாகவும் ஜிஎம்ஓஏ இன் மருத்துவ மாபியாவின் பங்காளிகளில் இவரும் ஒருவர் என்ற குற்றச்சாட்டு நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது.

தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்காக அவர்களைப் பாதுகாப்பதற்காக தனியார் மருத்துவமனைகளில் நிகழும் மருத்துவத் தவறுகளை மூடிமறைப்பதிலும் யாழ் போதனா வைத்தியசாலை பயன்படுத்தப்படுவதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரியாகச் செயற்பட்ட உதயசிறி தெரிவிக்கின்றார். மருத்துவத் தவறுகள் மற்றும் சிக்கலான காரணங்களால் உயிரிழந்தவர்கள் கூட அவசர சிகிச்சைக்கு அனுப்பப்படுவது என்ற பெயரில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு உயிருடன் இருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் எவ்வித மருத்துவக் குறிப்புகளும் இல்லாமல் அனுப்பி வைக்கப்படுவதாக உதயசிறி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் வைத்தியர் அர்ச்சுனாவைக் காட்டிலும் தீவிரமாக மோசடிகளை வெளிக்கொண்டுவந்த டொக்டர் சிவரூபன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தற்போது காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரியாக இருந்து போலியான காரணங்களால் விசாரணையின்றிப் பணி நீக்கம் செய்யப்பட்ட உதயசிறி, கபிடல் தொலைக்காட்சியின் அதிகாரம் நிகழ்ச்சியில் யூலை 1 இல் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக சமூக வலைத் தளங்களில் மருத்துவர்கள் த சத்தியமூர்த்தி, பிரணவன் ஆகியோரை கடுமையாக விமர்சித்து வந்த தன்னை, முல்லைத்தீவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மனித உரிமைக்காப்பாளர் த கிருஷ்ணா தேசம்நெற்க்கு இன்று யூலை 2இல் அனுப்பி வைத்த ஒலி வடிவமான குறும்செய்தியில் தெரிவித்துள்ளார். மருத்துவமனை தனக்கு உயிராபத்தான இடமாக மாறி இருப்பதாக அவர் குற்றம்சாட்டுகின்றார். த கிருஷ்ணா தேசம்நெற்க்கும் சில நேர்காணலைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மாபியாக்கள் பற்றி ராமநாதன் அர்ச்சுனா கொழுத்திப் போட்ட தீ இன்று அர்ச்சனாவை மீறியும் சுவாலை விட்டு எரிந்துகொண்டு உள்ளது. இத்தீயைப் பரப்பி இந்த மருத்துவ மாபியாக்களையும் ஏனைய துறைகளில் உள்ள மாபியாக்களையும் சுட்டெரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒருங்கிணைய வேண்டும் என்ற கோசங்கள் பரவலாக எழுந்துள்ளது.

“பிரச்சினை இருக்கு ஆனா இல்ல. அவை விசயம் தெரியாம (தென்மராட்சியாருக்கு கொஞ்சம் அறிவு குறைவு) பெரிசாக்கி கதைக்கினம்” புளொட் தலைவர் த சித்தார்த்தன்

 

வடக்கின் சுகாதார நிலைகள் பற்றிக் கேட்டறிய நேற்று யூலை 18 சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண யாழ் விஜயம் மேற்கொண்டிருந்தார் அங்கு அவரைச் சந்தித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சி சார்பில் எஸ் சிறிதரன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ராமநாதன் அங்கஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால் இவர்கள் வடக்கில் மக்களுக்கு சுகாதாரப் பிரச்சினைகளோ, பாதிப்போ இருப்பதாக எதுவும் குறிப்பிடவில்லை.

 

மாறாக புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்ற போது ரமேஸ் பத்திரணவின் தந்தைக்கு புகழாரம் சூட்டியதோடு தங்களுடைய பிரதேசத்துக்கு வந்ததற்கும் நன்றியும் தெரிவித்தார். தென்மராட்சி மக்களும் மற்றவர்களும் ஏதோ விசயம் தெரியாமல் கொஞ்சம் எல்லாத்தையும் பெருப்பித்துப் போட்டினம். பிரச்சினை இருக்குத் தான். ஆனா பிரச்சினை இல்லை” என்று மிகத் தெளிவாக மிக உறுதியாக சிரித்து சில்லெடுத்தார். இலங்கையில் உள்ள முதகெலும்பற்ற பிரயோசனமற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று பெயரெடுத்த சித்தார்த்தனுக்கு ஊன்றுகொலாக பா உ சிறிதரனும் அங்கு வந்திருந்தார். பக்கத்தில் உள்ள தென்மராட்சி மக்களின் குரலுக்கு செவிமடுக்காத எஸ் சிறிதரன், லண்டனில் தனது மகனை படிப்பிக்கும் கோயில்காரரின் தேருக்கு லண்டனுக்கு காவடி எடுக்கின்றார். பா உ எஸ் சிறிதரன் லண்டன் வந்தால் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டம் ஒன்றை நடத்த லண்டனில் வாழும் தென்மராட்சி மக்களும் அவர்களின் நண்பர்களும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிபேதமில்லாமல் தென்மராட்சி மக்களதும் தமிழ் மக்களதும் முதகில் குத்திவிட்டதாக கிளிநொச்சியில் வாழும் மனிதஉரிமைப் பாதுகாவலர், செயற்பாட்டாளர் த கிருஷ்ணன் தேசம்நெற்க்கு யூலை 18 வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். பா உ க்கள் எஸ் சிறிதரன், எம் சுமந்திரன், த சித்தார்த்தன், ராமநாதன் அங்கஜன், செல்வம் அடைக்கலநாதன், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் அவர்களது கட்சிகளும் தாங்களுக்கு தமிழ் மக்களது அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அக்கறையில்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டிவிட்டார்கள் என த கிருஷ்ணன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண வைத்தியசாலை ஐரோப்பிய வைத்தியசாலைகளின் தரத்தில் இருப்பதாக ரமேஸ் பத்திரண தெரிவித்ததை வேடிக்கையாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அவர்களது குடும்பத்தினருக்கோ இனிமேல் வயிற்றுவலி வந்தால், பாம்பு கடித்தால், பல்லுக் கொதித்தால், நெஞ்சு நொந்தால், பிள்ளைப்பேறு என்றால் அருகில் உள்ள ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும். அந்த டொக்டர் கையெழுத்துப் போட்டுவிட்டு ப்ரைவேட்டுக்கு போயிருந்தால், அவர் வரும்வரை இவர்கள் காத்திருக்க வேண்டும். அப்படி வந்து பார்த்து சரிவராது என்று சொன்னால் நீங்கள் யாழ்ப்பாணம் போதனா வைதியசாலைக்கு கொண்டு போய் உயிர் தப்பி வந்து சொல்லுங்கோ. “பிரச்சினை இருக்கு ஆனா இல்ல. தென்மராட்சியாருக்கு கொஞ்சம் அறிவு குறைவு அவை விசயம் தெரியாம கதைக்கினம்” என்று புளொட் சித்தார்த்தனும் சிறிதரனும் அங்கஜனும் சொல்றதை நாங்களும் ஏற்றுக்கொள்வோம்.

முதல்ல பென்ஸ்காரை குவிச்சு வைத்துக்கொண்டு சைக்கிள் சின்னத்தில தமிழ் தேசியம் பேசிய பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை ஐரோப்பிய தரத்தில் இருக்கிற யாழ் தேசிய மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளியுங்கள். இனிமேல் வடக்கில இருக்கின்ற ஒரு பாரளுமன்ற உறுப்பினரும் அரசாங்க வைத்தியசாலையைத் தவிர வேறு தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லக்கூடாது. உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதற்கு உரிமை இருக்கிறதோ அதுதான் உங்களுக்கும்.

Well Done – வெல் டன் தென்மராட்சி ! மருத்துவர்களே நீங்கள் மக்கள் பக்கமா? மருத்துவ மாபியாக்களின் பக்கமா?

இலங்கையில் யாரும் கடமையைச் சரிவரச் செய்தால் கைது செய்யப்படலாம், விரட்டப்படலாம் என்ற நிலை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் மூலம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 15 வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருந்த மோசடி, ஊழல் என்பவற்றை வெளிக்கொண்டுவந்த டொக்டர் ராமநாதன் அர்ச்சுனாவைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது இலங்கை அரசு. அவரை உடனடியாக இடமாற்றி விரட்டி அடிக்குமாறு ஐக்கிய தேசிய மக்கள் முன்னணித் தலைவர்களில் ஒருவரான செல்வராஜா கஜேந்திரன் ஆளுநரைக் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை அரசும் தமிழ் தேசியமும் யாழ் மெடிக்கல் மாபியாக்களும் கூட்டாக இணைந்து மக்களுக்காகச் சேவையாற்றிய டொக்டர் அர்ச்சுனாவை கைது செய்ய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை நோக்கிப் படையெடுக்க தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு வைத்தியசாலையை முற்றுகையிட்டு, டொக்டர் அர்ச்சுனா கைது செய்யவிடமாட்டோம் என்று போராடி வருகின்றனர்.

‘We want Dr Archuna’ என்று சிங்களப் பொலிஸாருக்கும் தமிழ் தேசிய முன்னணி சட்டத்தரணிக்கும் விளங்கும் வகையில் உரத்துக் கோசம் எழும்பினார்கள் எழுச்சிகொண்ட தென்மராட்சி மக்கள். மேலும் ஆங்கிலத்தில் பொலிஸாருக்கு நிலைமையைச் சொல்லிய ஒருவர், “நீங்கள் ஏன் மக்களுக்கு சேவை செய்யும் ஒருவரை கைது செய்யப்பட்டாளமாக வந்திருக்கிறீர்கள். நீங்கள் கைது செய்ய வேண்டியது மக்களுக்குச் சேரவேண்டிய பொதுச் சொத்துக்களை சேவைகளை கொள்ளையடிக்கும் மருத்துவ மாபியாக்களைத் தான். அவர்களைப் போய் கைது செய்யுங்கள்’’ என்று தெரிவித்தார். அப்போராட்டத்திற்கு வந்திருந்த இன்னுமொருவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் “எங்கள் பணத்தில் படித்து டொக்டரானவர்கள் எங்களையே கொள்ளையடிக்கின்றனர்” என்று குறிப்பிட்டதோடு “இவ்வாறான கொள்ளையர்கள் நாடுபூராவும் இருக்கின்றனர். மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். டொக்டர் அர்ச்சுனா உண்மையிலேயே ஒரு மக்கள் போராளி. அவரைக் கைது செய்ய அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார். இச்செய்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது இலங்கை நேரம் அதிகாலை இரண்டு மணி அப்போது வைத்தியசாலையில் 1000 பேருக்கு மேற்பட்ட பொதுமக்கள் கூடி டொக்டர் அர்ச்சுனாவை கைது செய்ய முடியாதவாறு தடுத்து நின்றனர்.

விடிந்தால் தென்மராட்சி பொது மக்கள், வர்த்தக சங்கம் உட்பட்ட 30 வரையான பொது அமைப்புகள் டொக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாகவும் யாழ் மெடிக்கல் மாபியாக்களுக்கு எதிராகவும் கண்டனக் கடையடைப்புப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் போராட்டம் திட்டமிடப்பட்டதற்கு மாறாக முதல்நாள் யூலை 7 இரவே ஆரம்பமாகிவிட்டது. விடிவதற்குள் டொக்டர் அர்ச்சுனாவைக் கைது செய்து அவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றத் திட்டமிட்டனர். தனியார் மருத்துவமனைகளை நடத்துகின்ற அதில் பணியாற்றுகின்ற மருத்துவ மாபியாக்கள் அரச படைகளோடு கூட்டாக இணைந்து இரவோடு இரவாக டொக்டர் அர்ச்சுனாவைக் கைது செய்து விரட்டியடிக்க எடுத்த முயற்சியை தென்மாராட்சி மக்கள் வெற்றிகரமாகத் தடுத்துள்ளனர். ஆனால் அவர்களால் இந்த மாபியாக்களின் அதிகாரப் பலம் பொலிஸ்பலம் என்பவற்றுக்கு முன்னால் தொடர்ந்து போராட முடியுமா என்பது கேள்விக்குறியே.

காலிமுகத்திடலில் எழுந்த மேல்தட்டு மக்களின் போராட்டத்துக்கு மாறாக சாவகச்சேரி தென்மராட்சியில் அரச அதிகாரம், பொலிஸ், மெடிக்கல் மாபியாக்களுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியோடு இரவோடு இரவாக வீறுகொண்டெழுந்துள்ளனர். காலையில் தென்மராட்சி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைப் போராட்டத்தில் பங்கெடுப்பது நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜையின் கடமை எனப் போராட்டகார்கள் சமூக வலைத்தளங்களினூடாக அழைப்பு விட்டு வருகின்றனர்.

இந்த மெடிக்கல் மாபியாக்களுக்கும் கைது செய்ய வந்திருக்கும் பொலிஸாருக்கும் ஆதரவாக தமிழ் தேசிய முன்னணியின் முன்னணித் தலைவர் செல்வராஜா கஜேந்திரன் கருத்து வெளியிட்டது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் அங்கு வந்திருந்த தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் சுபாசை சொற்கற்களால் தாக்கினர். ‘எங்கள் போராட்டத்தை குழப்புவதற்காக இங்கு வந்தீர்கள், உங்களுக்கு இங்கு என்ன வேலை என்று அவரை வார்த்தைகளால் நையப்புடைத்து திருப்பி அனுப்பினர்.

தென்மராட்சி மக்களின் இந்தத் தன்னெழுச்சி தமிழ், சிங்கள அதிகாரத் தலைமையையும் அரசியல் கட்சிகளையும் உலுப்பியுள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்த மெடிக்கல் மாபியாக்கள் செய்த மோசடி ஊழல் மற்றும் மௌ;ளமாரித் தனங்களால் பல நோயாளர்கள் அநீயாயமாக இறந்துள்ளனர். அல்ல கொல்லப்பட்டுள்ளனர். இதன் உண்மைப் புள்ளிவிபரங்கள் வெளிவந்தால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சீராக இயங்காததால் பல பத்து நோயாளர்கள் இறந்திருக்கலாம் என்ற உண்மை வெளிவரும் என்றும் மேலும் இவர்கள் யாழ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு பல கோடிகளைத் தாண்டும் எனவும் தன்னுடைய பெயரைக் குறிப்பிட விரும்பாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நெருங்கிய ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்த நேற்று யூலை 7 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குச் சென்றிருந்த போது உறுதியான எந்தக் கருத்துக்களையும் தெரிவித்திருக்கவில்லை.

ஏனைய வடக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கள்ள மௌனம் சாதித்து வருகின்றனர். தமிழ் தேசியம் பேசியவர்கள் பெரும்பாலும் மெடிக்கல் மாபியாக்களின் பக்கம் நிற்கின்றனர். கள்ள மௌனம் காக்கின்றனர். தமிழ் தேசிய முன்னணி செல்வராஜா கஜேந்திரன் மட்டும் டொக்டர் அர்ச்சுனாவுக்கு எதிராகவும் தென்மாராட்சி மக்களுக்கு எதிராகவும் வெளிப்படையாகப் பேசி தன் விசுவாசத்தை மெடிக்கல் மாபியாக்களுக்கும் பொலிஸாருக்கும் வழங்கி இருந்தார். அங்கஜன் ராமநாதன் சில சமயம் இளைஞர் என்றளவில் டொக்டர் அர்ச்சுனாவுக்கு சாதகமாக ஊழல்கள் மோசடிகள் இடம்பெறுதைச் சுட்டிக்காட்டி இருந்தார்.

டொக்டர் என்றும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும் மதிப்பளித்த மக்களுக்கு யாழ் மெடிக்கல் மாபியாக்கள் செய்த அநியாயங்கள், மோசடிகள் பலருடைய மரணத்துக்கு காரணமாக இருந்ததுள்ளது. அவ்வாறு மரணித்தவர்களின் உடலையும் வைத்து பிழைப்பு நடத்திய மக்கள் பணத்தில் படித்துப் பட்டம் பெற்றவர்களின் ஈனத்தனம் தற்போது டொக்டர் அர்ச்சுனா என்ற ஒரு மக்கள் போராளியால் வெளிவந்துள்ளது. தங்களை டொக்டர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் அநாகரிகமான உரையாடல்கள், சண்டித்தனம், அவர்கள் முழப் புசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மூட எடுக்கும் முயற்சிகள் இந்த தொழிற்துறையினர் மீதிருந்த நன்மதிப்பை அவர்களே அம்மணமாவதை வெளிப்படுத்தி நிற்கின்றது. ஆனால் டொக்டர் அர்ச்சுனா போன்று இலைமறை காயாக, மக்கள் சேவையை மகேசன் சேவையாக செய்பவர்களும் உள்ளனர். இந்த மெடிக்கல் மபியாக்கள் எமது சமூகத்தின் புற்றுநோய். இவர்களைப் போன்ற மாபியாக்கள் அனைத்துத் துறைகளிலும் உள்ளனர். இவர்கள் வேரறுக்கப்பட வேண்டும். இல்லாவிடடில் இவர்கள் சமூகத்தைச் சீரழித்துவிடுவார்கள்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விடயம் தொடர்பில் பெரும்பாலான மருத்துவர்கள் மௌனம் காக்கின்றனர். பேசுபவர்கள் பெரும்பாலும் டொக்டர் அர்ச்சுனாவுக்கு எதிரான பொது மக்களுக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கின்றனர். இது கிட்டத்தட்ட இறுதியுத்தத்தில் இராணுவம் யுத்தக் குற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்று இலங்கை இராணுவமும் அரசும் ஒற்றைக்காலில் நிற்பது போன்ற செயலே. மருத்துவத்தை மக்கள் சேவையாக எண்ணுபவர்கள் டொக்டர் அர்ச்சுனாவின் பக்கம் மக்களின் பக்கம் நிற்க வேண்டும்.

யாரும் தனியார் மருத்துவத்துறையில் பணியாற்ற வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பெறும் சம்பளத்துக்கான கடமையை உங்கள் கடமை நேரத்தில் சரியானபடி செய்யுங்கள் என்று தான் கேட்கின்றார்கள் மக்கள். ஆனால் அரச மருத்துவத்தைச் சீரழித்து உங்கள் பிரைவேட் கிளினிக்குக்கு பலாத்காரமாகச் செல்ல வைப்பதையே மக்கள் எதிர்க்கின்றனர். வயிற்றுக் குத்து என்று வருபவர்களிடமே எல்லா ஸ்கானையும் எடுக்கச் சொல்கிறீர்கள் எல்லா ரிப்போட்டும் எடுக்கச் சொல்லி லட்சக்கணக்கில் கொள்ளை அடிக்க வேண்டாம் என்று தான் மக்கள் கேட்கிறார்கள். பிணத்தை வைத்துக் கொண்டு சொந்த மக்களிடமே பணம் பறிக்கும் ஈனத்தனம் மிக அருவருப்பானது. மருத்துவர்களே நீங்கள் எந்தப் பக்கள் நிற்கப் போகின்றீர்கள்? மக்களின் மக்கமா மாபியாக்களின் பக்கமா?

மக்களை வழிநடத்த வேண்டியவர்கள் அரசியல் கட்சிகள். ஆனால் வடக்கில் எந்தவொரு அரசியல் கட்சியும் மக்கள் நலன்சார்;ந்து இயங்கவில்லை என்பதை தென்மராட்சி மக்கள் நிரூபித்துள்ளனர். தற்போது மக்கள் புரட்சிகரப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர், ஆனால் அவர்களுக்கு தலைமை தாங்கும் தகுதியுள்ள ஒரு கட்சி தமிழ் பிரதேசத்தில் இல்லை. வடக்கில் உள்ள அரசியல் கட்சிகளிலும் பார்க்க தெளிவான அரசியலை மக்கள் முன்னெடுக்கின்றனர். தென்மாராட்சி மக்களை முன்னுதாரணமாகக் கொண்டு சகலதுறைகளிலும் உள்ள மோசடிகள், ஊழல்களைக் களைந்து புதிய அரசியல் மாற்றத்திற்காக மக்கள் இவ்வாறான தன்னெழுச்சிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தத்தம் பிரதேசங்களில் உள்ள அரசியல் வாதிகளுக்கும் தங்கள் பலத்தைக் காட்டவேண்டும். தமிழ் தேசியம் பேசிக் கொண்டு மக்கள் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அரச இயந்திரத்தை யார் மக்களுக்கு எதிராகத் திருப்பினாலும் மக்கள் போராடத் தயாராக வேண்டும். வெல் டன் தென்மாராட்சி !