தமிழ் மக்கள் மத்தியில் தேசியக் கொடியும் கறுப்புக் கொடியும் – யாழில் சுதந்திர தின ஊர்வலமும் ! எதிர்ப்பு ஊர்வலமும் !
யாழில் நேற்று சுதந்திர தினம் எதிரும் புதிருமாக கொண்டாடப்பட்டது. சுதந்திரதினத்தையொட்டி நூற்றுக்கணக்கானவர்கள் தேசியக் கொடியைத் தாங்கியவாறு ஊர்வவலம் சென்றனர். கிளிநொச்சியில் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து அதற்கு எதிரான ஊர்வலம் நடைபெற்றது.
சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று நடாத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெருமையுடன் ஊர்வலத்தில் தேசியக் கொடியை ஏந்திச் சென்றிருந்தனர்.
ஐக்கிய இளைஞர் இயக்கத்தினால் இந்தப் பேரணி ஒழுங்குசெய்யப்பட்ட இந்தப் பேரணி பண்ணையிலிருந்து யாழ் நகரத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கின் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழர் மீதான இனப்படுகொலைக்கு நீதி கோரியும், சுயநிர்ணய உரிமை கோரியும், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கருப்புக் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தி வீதிகளில் இறங்கினர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றது. இந்தப்போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கரிநாள் ஊர்வலத்தில் கலந்தகொண்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவாக தன்னை வெளிப்படுத்தும் ஒரு தாயார் பா உ அர்ச்சுனா மீது கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினார்.
கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. செங்கலடி சித்தி விநாயகர் ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி கொம்மாதுறை பிள்ளையார் ஆலய முன்றலைச் சென்றடைந்து, அங்கு போராட்டம் தொடர்ந்தது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்றக் குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்களென பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் பறந்த இலங்கைத் தேசியக் கொடி பல்கலைக்கழ மாணவர்களால் இறக்கப்பட்டு பின்னர் கறுப்புக் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தின் பல பாகங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்ட நிலையில் பிரதான வாயிலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதேவேளை, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கறுப்புக்கொடி ஏந்திய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சிவகுரு ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட இளையோர் பங்கேற்றிருந்தனர்.
காலம் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இரா சம்பந்தன் யாழில் வைத்து தேசியக் கொடியை ஏந்திய போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்காக இரா சம்பந்தன், எம் ஏ சுமந்திரன் ஆகியோர் துரோகிககளாக்கப்பட்டனர். ஆனால் இன்று யாழ் மக்கள் நூற்றுக் கணக்கில் திரண்டு தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் சென்றுள்ளனர். தமிழ் தேசியத்தின் மீது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை இது வெளிப்படுத்தி நிற்கின்றது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலவசக் கல்வியயில் கல்வி கற்று சுதந்திர தினத்தை கரிநாளாக கொண்டாடுகின்றனர். பின்னர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும் அரசாங்க வேலை மட்டும் தான் செய்வோம் என்று போராடுகின்றனர் எனத் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் நித்தியானந்தன் உங்கள் தோழன். இவர்கள் ஏன் கொள்கைக்காக அரச வேலை வேண்டாம் என்று சொல்லலாமே என அவர் தனது முகநூல் பதிவில் ஆலோசணை வழங்கியுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுதந்திர தினத்தை கரிநாளாக கொண்டாடுவது பற்றி கருத்து வெளியிட்ட பா உ இராமநாதன் அர்ச்சுனா இவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக வாழ விரும்புவதையே வெளிப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
