ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்

தனிச் சிங்களச்சட்டம் என்பது எஸ்ஜேவி செல்வநாயகம் கிளப்பிய மாயயை ! முன்னாள் ராஜதந்திரி தர்மா

தனிச் சிங்களச்சட்டம் என்பது எஸ்ஜேவி செல்வநாயகம் கிளப்பிய மாயயை ! முன்னாள் ராஜதந்திரி தர்மா

தனிச் சிங்களச் சட்டம் என்பது ஆங்கிலம் மட்டும் தெரிந்த எஸ்ஜேவி செல்வநாயகம் கிளப்பிய மாயயை என்கிறார் முன்னாள் இலங்கை ராஜதந்திரியும் இலங்கை நிர்வாக சேவைத்துறை பயிற்றுவிப்பாளரும் பத்தி எழுத்தாளருமான அய்யம்பிள்ளை தர்மகுலசிங்கம். இவர் தேசம்நெற்றுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமிழ் தலைமைகளால் தவறாக வழிநடத்தப்பட்டு வந்ததாகச் சுட்டிக்காட்டி, தனிச் சிங்களச்சட்டம் என்பது அப்படியான ஒரு மாயயை தான் எனத் தெரிவித்தார். தமிழ் தெரியாத ஆங்கிலம் மட்டுமே தெரிந்த எஸ்ஜேவி செல்வநாயகம், The Official Language Act (No. 33 of 1956), என்பதை ஆங்கில மொழி நீக்கப்பட்டதால் ஏற்பட்ட வெப்பிகாரத்திலேயே, ‘தனிச் சிங்களச் சட்டம்’ என முத்திரை குத்தினார் என்ற அடிப்படையில் தர்மகுலசிங்கம் தன் கருத்தை முன்வைத்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் 1956இல் மொழிக்கொள்கை கொண்டுவரப்பட்டிருக்காவிடில் இன்றுள்ள நிலைக்குத் தமிழ் மொழி வளர்ச்சியடைந்திருக்க மாட்டாது எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நன்மதிப்பிற்குரியவராக இருந்த பேராசிரியரர் நந்தி 1956 ஆம் ஆண்டு மொழிக்கொள்கையால் தமிழ் மொழியடைந்த வளர்ச்சியைப் பெருமிதமாகக் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தரப்படுத்தல் கூட எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல எனத் தெரிவித்த தர்மகுலசிங்கம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் மட்டும் இருந்து பல்கலைக்கழகப் பட்டதாரிகள் உருவான நிலையை மாற்றி, இலங்கையின் சகல மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பல்கலைக்கழகங்கள் செல்கின்ற நிலையை ஏற்படுத்தியது இந்தத் தரப்படுத்தல் தான் எனவும் அவர் தெரிவித்தார். அதனால் தான் தற்போது எல்லா மாவட்டங்களிலும் ஓரளவுக்காவது ஒரு சில வைத்தியர்கள், ஆசிரியர்கள், மற்றும் பணியாளர்கள் உள்ளனர் என்பதையும் தர்மகுலசிங்கம் சுட்டிக்காட்டினார்.

நாங்கள் தமிழர்களுடைய பிரச்சினையை இந்த அரசாங்கத்துடனேயே பேசித் தீர்ப்பதற்கான நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த தர்மகுலசிங்கம், அதனால் தமிழ் தலைமைகள் விவேகமாகச் செயற்பட்டு ஜனாதிபதி அனுரவின் தலைமையிலான இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்தார். இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் சகோதரங்கள். நாங்கள் இந்தியாவிடம் போய் நிக்கவேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.