இனப்படுகொலைக்கு பூகோள அரசியல் போட்டிகளே காரணம் : எம். பி. கஜேந்திரகுமார் – கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் !
வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலால் ஈழத் தமிழர்கள் பாதிக்கப்படுவதாக நோர்வேயின் இரகசிய புலனாய்வாளர் என அதாவது சிலிப்பர் ஷெல் என்றும் குற்றம்சாட்டப்படும் நியூட்டன் மரியநாயகத்தின் புத்தக வெளியீட்டில் எம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புலம்பியுள்ளார்.
‘பூகோள அரசியலில் வல்லரசுகளின் போட்டி உச்ச நிலையிலிருந்த போதே ஈழத் தமிழர்கள் இனப் படுகொலையானவர்கள். இந்த வல்லரசுப் போட்டியால் தான் தமிழர்கள் உரிமைகளை பெறுவதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். யுத்தம் முடிந்தும் வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலை கையாள திராணியில்லாத நிலையில் ஈழத் தமிழர்கள் இருப்பதாகவும்’ கஜேந்திரகுமார் விரக்தியாக உரையாற்றியுள்ளார்.
புலிகள் அமைப்பிலிருந்து கருணாவை பிரிக்கும் சதிக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடக்கி வைத்தவரே நியூட்டன் மரியநாயகம் எனக் கூறப்படுகிறது. அவர் எழுதிய “காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்” நூல் வெளியீட்டு விழாவிற்குப் போய் கஜேந்திரகுமார் தன்னையறியாமலேயே வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலில் தாமும் இயங்குவதை தன்னையறியாமலே வெளிப்படுத்தியுள்ளார்.
2009 ஈழப்போரின் முடிவின் பின்னரான ஈழத்தமிழர்களின் அரசறிவியல் அறிஞர்களான மு. திருநாவுக்கரசு குழுவினரின் சீனபூச்சாண்டியை காட்டி இந்தியாவை வைத்து தமிழீழம் எடுக்கலாம் என்ற ஈழத் தமிழர்களின் வெளிவிவகார கொள்கையிலிருந்து சற்று விலகி, நோர்வையின் புதிய வெளிவிவகார கொள்கையை கஜேந்திரகுமார் விதந்துரைத்துள்ளார்.
அதாவது இந்தியாவின் உள்ளக தேசிய பாதுகாப்பிற்கு, இலங்கை அரசியலில் இந்தியாவின் நலனுக்கு முன்னுரிமையுள்ளது. அதேநேரம் இந்தியாவின் போட்டி நாடான சீனா ஈழத்தமிழர்களுக்கு பொருளாதார உதவி வழங்கும் போது தமிழர்கள் அதனை ஏற்க வேண்டும். நாங்கள் யாரையும் பகைக்க கூடாது. ஆனாலும் வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலால் தமிழர்கள் பாதிக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது எனவும் மீசையை முறுக்கியுள்ளார்.
எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் இலங்கைத் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறும் கஜேந்திரகுமார், அதற்காக இந்தியாவை பகைக்க முடியாதென்றும் கூறுகிறார். அதேநேரம் சீனாவும் கடலட்டை பண்ணைகள் மூலம் இலங்கை கடற்பரப்பில் இந்தியாவுக்கு போட்டியாக செயற்படுகின்றது என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். சொல்லப் போனால் மரியநாயகம் நியூட்டன் மற்றும் மேட்டுக்குடி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரும் அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற வல்லரசுகளின் ஏஜன்ட்களே என்கின்றனர் இராணுவ மற்றும் அரசியல் புலனாய்வு ஆய்வாளர்கள்.
