எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் என்பிபியினர் – சஜித் காட்டம்! 

போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் என்பிபியினர் – சஜித் காட்டம்!

வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் சிற்பிகளாக இருந்தவர்கள் இன்று, ஆட்சிக்கு வந்த பிறகு போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார். கல்வியமைச்சின் முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அபிவிருத்தி அதிகாரிகள் தாக்கப்பட்டதை குறிப்பிட்ட சஜித் மக்கள் ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுப்பது குற்றமாகிவிட்டது என்கிறார்.

கேகாலை மாவட்ட உள்ளூராட்ச்சி சபை வேட்பாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மின்வெட்டுக்கு குரங்குகள் காரணம் என்றும் , அரிசித் தட்டுப்பாட்டுக்கு நாய் சோறு சாப்பிடுவது காரணம் என கதைகளை கூறி அரசாங்கம் மக்களை திசை திருப்புவதாகவும் குறிப்பிட்டார். வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டு விட்டனர். வரிச்சுமை அதிகரித்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காட்டுச் சட்டம் நிலவுகிறது. பாதாளக் குழுக்கள், கொலைகாரர்கள் மற்றும் ஊழல்வாதிகளின் செல்வாக்கு சமூகத்தை ஆக்கிரமித்துள்ளது. என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

நான் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கற்ற மாணவன் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச !

நான் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கற்ற மாணவன் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச !

தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை நாடாளுமன்றத்தில் 18.12.2024 சமர்ப்பித்து கருத்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பேசிய விடயங்கள் பேசுபொருளாகியுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, எனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன்.தாம் ஒருபோதும் பொய்யான சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. அவ்வாறு சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக எவரேனும் நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன்.

தனது கல்வித் தகுதி உண்மையா பொய்யா என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் விசாரித்து உறுதி செய்ய முடியும். தனது வெளிநாட்டுப் படிப்பிற்குப் பிறகு 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் திறந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.

அங்கு சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். அப்போது விரிவுரையாளராக இருந்த தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வகுப்புகளில் கூட கலந்து கொண்டேன்” என்றார்.

பௌத்த மதத்தை பாதுகாப்பதோடு ஏனைய மதங்களுக்கும் உரிய அந்தஸ்தை வழங்கி செயற்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

புத்தசாசனத்தை பாதுகாத்து சுபிட்சமான நாட்டிற்குள் அறநெறிப் பண்புள்ள சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டும். அறநெறி பாடசாலைகளின் போட்டிகளுக்கேனும் அனுசரணையை வழங்க முடியாத அரசாங்கம் ஒன்று காணப்படுகின்றது. இது மிகவும் கவலைக்குரிய விடயம் என்பதோடு அறநெறி கல்வியை பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விகாரைகளில் மகா சங்கத்தினர் முன்னெடுக்கின்ற மத சாசன செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். மதங்களுக்கு இடையிலும் இனங்களுக்கு இடையிலும் காணப்படுகின்ற ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மிகப்பெரிய பலமாக கொண்டு, வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பௌத்த மதத்தை பாதுகாப்பதோடு ஏனைய மதங்களுக்கும் உரிய அந்தஸ்தை வழங்கி செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் ஆலோசனை பேரவையின் தேசிய மாநாடு மூன்று பீடங்களையும் சேர்ந்த சங்கைக்குரிய மகா சங்கத்தினர் தலைமையிலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடனும் இன்று (11) கொழும்பில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

மூன்று பீடங்களையும் சேர்ந்த பெருந்திரளான சங்கைக்குரிய மகா சங்கத்தினர் இதில் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிராமங்களிலும் நகரங்களிலும் அமையப் பெற்றுள்ள விகாரைகளிலே இருக்கின்ற மகா சங்கத்தினர் எமது நாட்டின் சமாதானம், சுபீட்சம், அபிவிருத்தி போன்றவற்றிற்காகவும், சிறந்த தார்மீக சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க சேவையை முன்னெடுக்கின்றனர்.

மகா சங்கத்தினருதும் ஏனைய மதத் தலைவர்களினும் ஆலோசனைகளினதும் அறிவுரைகளினதும் ஊடாக அரசாட்சி ஒன்று இடம்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று எமது நாடு பலவிதமான சவால்களை எதிர்கொள்கின்றது. கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் செயலிழந்து மக்களுடைய வாழ்க்கை தரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

நாட்டிற்கான சவால்கள் வருகின்ற போது வரலாறு நெடுகிலும் மகா சங்கத்தினரே ஆலோசனை வழங்கி இருக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்திலும் மகா சங்கத்தினரின் தேவை மிகவும் முக்கியமாக இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் எமது நாட்டில் மனிதப் பண்புகள் குறைவடைந்து வருகின்றன. மத தலைமைத்துவங்களின் ஊடாக சிறந்த சமூகத்துக்குள் பிரவேசித்து வீழ்ச்சி அடைந்த நாட்டை அறநெறித் தன்மையுடன் சிறந்த பண்புகளின் பக்கம் விட்டுச் செல்ல வேண்டும்.

அறநெறி கல்வியை மையப்படுத்திய சிறந்த சமூகக் கட்டமைப்புக்கான அடித்தளம் இடப்பட வேண்டும்.

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சகல வசதிகளையும் கொண்ட கல்வியை வழங்குகின்ற நிலையமாக மத ஸ்தலங்கள் மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு விகாரை கட்டமைப்புக்குள் நாட்டிற்கான சிறந்த விடயங்கள் இடம் பெறுவது மழுங்கடிக்கப்பட்டு, மத ஸ்தானங்கள் மூடப்படுகின்றமையினால் அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சாதி, மதம், குலம், கோத்திரம், கட்சிப் பிரிவினைகளில் இருந்து விலகி, ஒரு நாட்டு மக்களாக ஒன்றிணைய வேண்டும் – யாழில் சஜித் பிரேமதாச!

கடந்த காலத்திலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்க வேண்டும் என்றும், கடந்த காலத்தில் இனிப்பும் கசப்பும் இருப்பதாகவும், சாதி, மதம், குலம், கோத்திரம், கட்சிப் பிரிவினைகளில் இருந்தும் விலகி, ஒரு நாட்டு மக்களாக ஒன்றிணைய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

மேலும், கடந்த காலத்திலிருந்து பாடம் கற்று, அது இனிப்பாக இருந்தாலும் கசப்பாக இருந்தாலும் கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்காமல், புதிய பயணத்தை மேற்கொள்ள ஒன்றிணையுமாறும், மற்ற அரசியல்வாதிகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாக இருந்து நாட்டிற்காக உழைத்த தன்னை நம்புமாறும், இதுவரை மாற்றாந்தாய் அரவணைப்பைப் பெற்றுள்ள வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களுக்கான விடியலுக்கு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியின் புதல்வனாக தான் வாக்குறுதி அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (10) யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, அளவெட்டி அருணோதயம் வித்தியாலயத்துக்கு பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் 230 ஆவது கட்டத்தின் கீழ் 1,177,000 ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டே இவ்வாறு தெரிவித்தார்.

 

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி வரலாற்றில் ஒரு புதிய பயணமும், புதிய புரட்சியும், திருப்புமுனையுடன் ஆரம்பிக்கப்படும் எனவும், உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட மக்களின் அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தத் தேவையான பலத்தை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

அத்துடன், யாழ். மாவட்ட மட்டத்தில் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் கைத்தொழில் குடியேற்றங்கள் நிறுவப்பட்டு, ஒவ்வொரு பிரதேச செயலக எல்லையிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, யாழ். மாவட்டம் அபிவிருத்தி மையமாகவும் அறிவு மையமாகவும் மற்றும் அறிஞர்கள், புத்திஜீவிகள் மையமாகவும் மாற்றப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனது ஆட்சியில் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவேன் – கிளிநொச்சியில் சஜித் பிரேமதாச !

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி – பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக வகுப்பறை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

அதன்படி நீங்கள் சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும், பேகராக இருந்தாலும் ஒரு தாயின் பிள்ளைகளாக கைகோர்த்து நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும்.

இதேவேளை 13வது திருத்தம் குறித்து பேசும் போது பல்வேறு தலைவர்கள் பயப்படுவதாகவும் அவர்கள் அரசியல் சந்தர்ப்பவாதிகளாக இருந்தாலும் தான் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவேன் என எதிர்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பேணுவதற்கான காணி பயன்பாட்டுப் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பேணுவதற்கான காணி பயன்பாட்டுப் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது. குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பெரும்பாலான இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வர்த்தமானி வெளியிடப்பட்டிருத்தல் இதற்கு காரணமாகும். அவ்வாறே மக்களுக்கான காணிகளை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் பல பிரச்சினைகள் காணப்படுவதும் இதற்கு காரணமாக அமைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் பாராளுமன்றத்தில் இன்று (06) வடக்கு கிழக்கு காணி விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1985 ஆம் ஆண்டு நில அளவீட்டு வரைபடத்தின் படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் எஞ்சிய காடுகள் விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள அல்லது பிரதேச செயலாளர்களினால் விடுவிக்கக் கோரப்பட்டுள்ள காணியின் அளவு என்னவென எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

அம்பாறை, மொனராகலை, திருகோணமலை மாவட்டங்களுக்கு, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அண்மையில் விஜயம் செய்த போது அவர்களது பாரம்பரிய விவசாய நிலங்கள் பறிபோயுள்ளமை தெரிய வந்தது. இந்நிலையில் மீண்டும் தரப்படும் என அரசு கூறினாலும் அது இன்றுவரை வார்த்தையோடு சுருங்கிப்போயுள்ளது. அரசாங்கம் வழங்கிய இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் திகதியை அறிய விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

2383/5 வர்த்தமானி மூலம், வனவுயிர் மற்றும் விருட்சங்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாகவும் உத்தேச நீர்வாழ் உயிரின வளர்ப்பு பேட்டையை தாபிக்கும் பொருட்டும் அல்லது கடல் பாதுகாப்பு என இனங்காணப்பட்டுள்ள நிலப்பிரதேசத்தை விடத்தல் தீவு இயற்கை ஒதுக்கத்தின் எல்லையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே இதன் உண்மையை நிலை என்னவென எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் விவசாயிகள் பாரம்பரியமாக விவசாயத்தை மேற்கொண்டு வரும் விளைநிலங்களை பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவளத்தைப் போன்று விவசாயமும் பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

பாரம்பரிய விவசாய நிலங்கள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி பல்வேறு மாவட்டங்களுக்கான தனது விஜயத்தின் போது உறுதியளித்துள்ள போதிலும் அது பேச்சளவில் மட்டுமே இருந்து வருகிறது. பதவி ஸ்ரீபுர, கோமரங்கடவல, மொரவெவ, கந்தளாய், சேருவில, வெருகல், அம்பாறை, மொனராகலை மாவட்டங்களிலும் வடக்கிலும் இந்தப் பிரச்சினை நிலவி வருகிறது. அவர்களின் விவசாய நிலங்கள் விடுவிக்கப்படும் வரை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

நமது ஆட்சியில் விவசாயிகள் நாட்டின் அரசர்களாக மாற்றப்படுவார்கள் – சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தேசிய விவசாயக் கொள்கை உருவாக்கப்பட்டு, விவசாயிகள் நாட்டின் அரசர்களாக மாற்றப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயப் பிரகடனத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நம்பகமான நீர்ப்பாசன கட்டமைப்பொன்று இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், காணி, காணி அபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி போன்ற அமைச்சுக்களை ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், புதிய தொழில்நுட்பம் மற்றும் இணையதள வசதிகளை பயன்படுத்தி அனைத்து விவசாய மையங்களும் சந்தையையும் உற்பத்தியாளரையும் இணைக்கும் திட்டத்தை ஆரம்பிப்போம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அதேநேரம், பங்களிப்பு ஓய்வூதிய முறையின் மூலம் விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை தமது ஆட்சியில் செயல்படுத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

விசா வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்து வருமானம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இலங்கையில் நடைமுறையில் இருந்து வந்த விசா வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்ததன் மூலம், 18.50 டொலர்களை அறவிட்டு, அந்த வருமானம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார்.

எமது நாட்டுக்கு கிடைக்கும் அதிக அளவிலான டொலர்களில் இழப்பு ஏற்படுவதுடன் இவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்துவதன் அடிப்படையும், நோக்கமும் என்னவென சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

பொல்லேகல மகா வித்தியாலத்தில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ”தரவுகளை மையப்படுத்திய அறிவியல் ரீதியிலான பகுப்பாய்வுகளின் அடிப்படையிலயே இத்தகைய முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

நாட்டிற்கு நன்மை பயப்பதாக இது அமைய வேண்டும். இதன் சாதக, பாதகங்கள் குறித்தும், நன்மை தீமைகள் குறித்தும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். இது பிணைமுறி மோசடியை விட பாரதூரமான நிதி மோசடி என பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், இது தொடர்பில் உண்மை நிலையை நாடு அறிய வேண்டும்.

நாட்டை ஆள்பவன் ஒரு தற்காலிக பொறுப்பாளனே. எனவே முட்டாள்தனமான கொள்கைகளில் இருந்து விலகி யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். யாரேனும் நல்லது செய்தால் நல்லது என்று கூற வேண்டும்.

எதிர்க்கட்சியோ அல்லது வேறு யாரேனும் நாட்டுக்கு நல்லது செய்தால் அதைப் பாராட்ட வேண்டும். தான் பேசும் விவாதங்களுக்கும் போலவே செயலிலான விவாதங்களுக்கும் தயார். நாட்டுக்கு தேவையான பணிகள், தீர்வுகள், பதில்கள் மற்றும் வேலைத்திட்டங்களை நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழு, தலைவர்கள் எந்த நேரத்திலும் விவாதத்திற்கு தயாராக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மூன்றாவது விவாதமாக பேசுவதோடு மாத்திரமல்லாது செயல் ரீதியிலான விவாதத்திற்கும் தாம் தயார்.

மதுவிலக்கு கொள்கையை கடைப்பிடிப்பவன் என்ற முறையில் மது, போதைப்பொருள், சிகரெட் என்பவற்றை நான் பகிர்ந்து வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் உண்மையைப் பேசுவதால் தான் அதிகமாக சேறு பூசப்படுகின்றது. நாட்டை வங்குரோத்து நிலைமையிலிருந்து விடுவித்து, மீண்டும் வங்குரோத்து நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்கான மூலோபாயங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை.

தோல்வி கண்ட கம்யூனிஸ, மார்க்சிஸ சித்தாந்தங்களால் எமது நாட்டை கட்டியெழுப்ப முடியாது. தீவிர சோசலிஸவாதிகளின் பிள்ளைகள் கூட பணம் செலுத்தி படிக்கும் தனியார் பாடசாலைகளுக்கே செல்கின்றனர். எந்த சூழ்நிலையிலும் நாம் அரச பாடசாலைகளை தனியார் மயமாக்க மாட்டோம்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

பெறுமதி சேர் VAT வரிகாரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் – சஜித் பிரேமதாச

புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) மக்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும், இதனால் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத குடும்பங்கள் காரணமாக தற்கொலை சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்களின் அவலத்தை மேலும் கூட்டி வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய VAT வரியை அமுல்படுத்துவது அத்தகைய நடவடிக்கையாகும் என்றார்.

அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கு VAT வரியை அதிகரிப்பது மாத்திரம் அல்ல என சுட்டிக்காட்டிய அவர், நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தை மீள்குடியேற்றுவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதே மற்றுமொரு வழியாகும் எனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் திருடர்களை நம்பி ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை பெற்றுக் கொண்டமையினால் இதனைச் செய்ய முடியாதுள்ளது.

திருடர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக அவர்களைப் பாதுகாப்பதற்காகவே தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கம்பஹாவிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்

பல கோடி கடன் பெற்றவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு மனித உடல்களை அடக்கம் செய்வதற்கு வரி அறவிடுகிறது – சஜித் பிரேமதாச விசனம் !

அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்று , கடனை செலுத்தாத 150 பேருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் மனித உடல்களை அடக்கம் செய்வதற்கு வரி அறவிடுதல் எந்தளவுக்கு நியாயமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் உள்ள  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டை தோற்கடித்துள்ளோம். வற் வரியில் புதிதாக இணைக்கப்படும் 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலை  சபைக்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம்.

வற் வரி சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அதிக அக்கறை கொண்ட அரசாங்கம்  வரி தொடர்பான தகவல்களை சபைக்கு சமர்ப்பிக்கவில்லை. 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலையும் சமர்ப்பிக்கவில்லை.

வற் வரி அதிகரிப்பதை காட்டிலும் அதனை செயற்படுத்துவதற்கு ஏதுவாக அமைய காரணிகள் தொடர்பில் ஆராய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் குறுகிய காலத்துக்குள் 600 பில்லியன் ரூபா முதல் 700 பில்லியன் ரூபா வரையிலான வரி வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளது.

வரி வருமானம் இழப்பை தொடர்ந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் புத்திஜீவிகள் நாட்டை விட்டு நாளாந்தம் வெளியேறுகிறார்கள். பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டு மக்கள் மீது சுமையையும் அரசாங்கம் திணித்துள்ளது.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி, பொருளாதார படுகொலையாளிகள் என்று  உயர்நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கோட்டபய ராஜபக்ஷ, கோட்டபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால்,டப்ள்யூ.டி லக்ஷமன்.எஸ்.ஆர்.ஆட்டிகல,பி.பி.ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள்.

பொருளாதார படுகொலையாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்களின் குடியுரிமையை பறித்து,அவர்கள் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும். இதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்ற 150 பேரின் பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறு  நிதியமைச்சரிடம்  பலமுறை கோரிக்கை விடுத்தேன். ஆனால் இதுவரை அது தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை. இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள  மக்களை அடக்கம் செய்வதற்கும் வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு நியாயமானது என்றார்.