இலங்கை மீனவர்கள் பிரச்சினை

இலங்கை மீனவர்கள் பிரச்சினை

சட்டவிரோத மீன்பிடியில் உள்நாட்டு மீனவர்கள் – அமைச்சர் சந்திரசேகர் !

சட்டவிரோத மீன்பிடியில் உள்நாட்டு மீனவர்கள் – அமைச்சர் சந்திரசேகர் !

 

சட்டவிரோத மீன்பிடி தடுத்து நிறுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் எமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதுபோல, உள்நாட்டிலுள்ள சிலரும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிக்கின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழிலை நவீனமயமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆழ்கடல் மீன்பிடிக்காக கப்பல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு வெளிநாடுகள் முன்வந்துள்ளன. அதனூடாக ஆழ்கடல் மீன்பிடி ஊக்குவிக்கப்படும் என்றார்.

எமது நாட்டின் கடல் வளத்தை அழித்து விட்டு தொப்புள் கொடி உறவுகள் என்று வேறு சொல்கிறார்கள் – அமைச்சர் சந்திரசேகர் கவலை !

எமது நாட்டின் கடல் வளத்தை அழித்து விட்டு தொப்புள் கொடி உறவுகள் என்று வேறு சொல்கிறார்கள் – அமைச்சர் சந்திரசேகர் கவலை !

 

இலங்கையின் கடல் வளத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ‘தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள். தற்போது ஏழு நாட்களுக்கும் வருவதற்கு முற்படுகின்றார்கள். எமது நாட்டு மீன்களை பிடிப்பது மட்டுமல்ல கடல் வளத்தையே நாசம் செய்கின்றனர். இதனால் நாளைய தலைமுறையினருக்குரிய கடல் வளம் இல்லாமல் போகின்றது.

எனவே, இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க வேண்டாம் என தமிழக கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது. எமது நாட்டு கடல் எல்லைக்குள் வந்து மீன்களை பிடித்துக்கொண்டு செல்லும் வழியில் எங்களை தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயன் இல்லை’ எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

“இலங்கைக் கடல் எல்லையை அத்துமீற வேண்டாம் !” இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு இலங்கை அமைச்சர்கள் பதில் !

“இலங்கைக் கடல் எல்லையை அத்துமீற வேண்டாம் !” இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு இலங்கை அமைச்சர்கள் பதில் !

இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் காயப்பட்டதற்கு, இந்திய வெளிவவாகார அமைச்சு, டெல்லியில் உள்ள இலங்கைத் தூதுவரை அழைத்து எச்சரித்திருந்தது. அதன் பின் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்சல் சம்பத் துய்யகொந்தா, இலங்கை கடற்பரப்புக்குள் வரும் எந்தவொரு படகுக்கும் இடமளிக்க முடியாது. இந்திய படகாக இருந்தாலும் சரி வேறு நாட்டின் படகாக இருந்தாலும் சரி அவை கட்டாயம் கண்காணிக்கப்படும். அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவதே அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக வடமராட்சிக் கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கடற்றொழில் நீர்வளத்துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதுடன் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழித்து வருகின்றனர். இந்திய மீனவர்களை கைது செய்ய முனைந்த இலங்கைக் கடற்படை வீரர் ஒருவர் கடந்த ஆண்டு இந்திய மீனவர்களால் கொல்லப்பட்ட சம்பவம் தெரிந்ததே. தென்பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரரின் இறுதி நிகழ்வில் யாழில் சில ஆயிரம் மீனவர்கள் கடற்படை வீரரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

காயப்பட்ட மீனவர்களை பார்வையிடச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இறைமையுள்ள நாடு, அதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனர். இந்திய அத்துமீறிய மீன்பிடி விவகாரம். இன்று நேற்று உருவான விடயம் அல்ல. பல வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு எமது ஆட்சியில் தீர்வைக் காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களை தொடர்ச்சியாக கண்ணீர் விட வைக்க முடியாது. அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடாதீர்கள். எமது மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் என்று நாங்கள் பலமுறை இந்திய கடற்றொழிலாளர்களை தயவாகக் கேட்டுள்ளோம் என்றார்.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது ! சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும் ! அபராதமும் அதிகரிக்கப்பட வேண்டும் !

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது ! சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும் ! அபராதமும் அதிகரிக்கப்பட வேண்டும் !

இலங்கை கடல் எல்லையின் தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதற்கு முன் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய மீனவர்களுக்கு உச்ச அபராதத்தை கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கியருந்தது. எதிர்காலத்தில் இந்த அபராதத் தொகையை அதிகரிப்பதன் மூலம் மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதைக் கட்டுப்டுத்த முடியும். கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எல்லை தாண்டும் மீன்பிடி தொடர்பில் புதிய சட்டமூலங்களையும் தண்டனைகளையும் அபராதங்களையும் அதிகரிப்பதினூடாக எல்லைதாண்டி வந்து மீன்பிடிப்பது ஒரு லாபமற்ற செயல் என்பதை எல்லைதாண்டி வரும் மீனவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குழுவையும் அவர்களது படகுகளையும் கரைக்கு கொண்டு வந்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் வடக்கின் கடல் மற்றும் மீன் வளத்தை முழுமையாக சூறையாடும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் ரோலர் படகுகள் மீன்களின் இயக்க சமநிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதையும் கடல் வள நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதேவேளை விரைவில் வெளி நாட்டிலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என கைத்தொழில் அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.