இலங்கை – பங்களாதேஷ்

இலங்கை – பங்களாதேஷ்

பங்களாதேஷிடமிருந்து இலங்கை பெற்ற கடன் – 6 மாத கால அவகாசம் !

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அடுத்து கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கடன்களை மீளச்செலுத்துவதற்கு வழங்கிய கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களால் நீடிப்பதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது.

இலங்கை கடந்த 2021 ஆம் ஆண்டு மேமாதம் பங்களாதேஷிடமிருந்து 200 மில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றது. அதனைக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீளச்செலுத்தவேண்டியிருந்த போதிலும், சுமார்  51 பில்லியன் டொலர் வெளியகக்கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலையில் இருப்பதாகக் கடந்த ஆண்டு ஏப்ரலில் இலங்கை அறிவித்தது.

அதனையடுத்து அந்த 200 மில்லியன் டொலர் கடனை இலங்கை மீளச்செலுத்துவதற்கு இவ்வாண்டு மார்ச் மாதம் வரை பங்களாதேஷ் கால அவகாசம் வழங்கியது. இருப்பினும் இன்னமும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை முழுமையாகப் பூர்த்தியடையவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் ‘கடன்களை மீளச்செலுத்துவதற்கு இலங்கை மேலும் 6 மாத காலஅவகாசத்தைக் கோரியிருக்கின்றது. அதன்படி முதற்கட்டமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் கட்டமாக எதிர்வரும் செப்டம்பர் மாதத்திலும் கடன்தொகையை மீளச்செலுத்துவதாக இலங்கை தெரிவித்துள்ளது’ என்று பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தாலுக்டர் குறிப்பிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி இதன்பின்னர் மேலும் கால அவகாசம் கோரப்போவதில்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உறுதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடன்களை மீளச்செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்கும்போது, அது ‘இலவசமாக’ வழங்கப்படுவதில்லை என்றும் மாறாக அக்காலப்பகுதிக்குரிய வட்டி அறவிடப்படும் என்றும் ஆளுநர் அப்துர் ரவூப் தாலுக்டர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வழங்கிய கடனை இலங்கை செலுத்த வேண்டும் – பங்களாதேஷ்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செலுத்த வேண்டிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்தும் என நம்புவதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான பதில்கள் தெரிவிக்கப்பட்டதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தலுக்தர் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களுடன் இணைந்து பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அந்நியச் செலாவணி ஒப்பந்தத்தின் கீழ் பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த நேரத்தில் வழங்க முடியாத நிலையில் இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக இரண்டு தடவைகள் காலத்தை நீடிக்க பங்களாதேஷ் இணக்கம் தெரிவித்திருந்தது.

இதன்படி அடுத்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உரிய கடன் தொகையை செலுத்துவதற்கு இலங்கை இணங்கியுள்ளதாகவும், உடன்படிக்கையின் பிரகாரம் உரிய நேரத்தில் உரிய பணம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தலுக்தர் தெரிவித்துள்ளார்.