இலங்கை ஜனாதிபதிகள்

இலங்கை ஜனாதிபதிகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுக்காப்புக்காக 1100 மில்லியன் ரூபா வரை செலவு – பகிரங்கப்படுத்தியது என்.பி.பி !

சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மருந்து வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அதிகம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நூற்றுக்கும் அதிகமான பொலிஸ் மற்றும் படை அதிகாரிகள் அதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சில ஜனாதிபதிகளுக்கு 180 வரையான பாதுகாப்பு அதிகாரிகள் கடமையாற்றுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அதிகாரிகள் மாத்திரமன்றி பாதுகாப்பு வாகனங்கள், பஸ், டிபன்டர் ரக வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், அம்பியூலன்ஸ் வண்டி என சகலதும் வழங்கப்பட்டுள்ளதுடன் சராசரியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் ஏனைய பராமரிப்பு செயற்பாடுகளுக்காக 1100 மில்லியன் ரூபா வரை செலவிடப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு செலவாகும் இந்த செலவு பொலிஸ் வைத்தியசாலையின் ஒரு வருடத்திற்கான செலவை விட அதிகம் என குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறான செயற்பாடுகளை மாற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளளார்.

இதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் சிபாரிசுக்கு இணங்க எதிர்காலத்தில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அந்த அமைச்சரவை பத்திரத்திற்கு இணங்க சகல முன்னாள் ஜனாதிபதிகளுக்குமான சலுகை முறைகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விசேட பாதுகாப்பு தேவைப்பாடு உள்ள முன்னாள் ஜனாதிபதிகளுக்காக விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் விபரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நீக்கப்படவில்லை என்றும், அவருக்கு ஏற்கனவே 57 பாதுகாப்பு அதிகாரிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீக்கப்படும் முன்னாள் அமைச்சர்கள், ஜனாதிபதிகளின் சலுகைகள் – மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து !

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் எம்.பிக்களின் பாதுகாப்பு மற்றும் இதர அரச சேவைகள் நிறுத்தப்பபடும் என அநுர தலைமையிலான அரசாங்கம் தெரிவித்து அதனை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் இந்த பாதுகாப்பு சேவை நீக்கப்படுவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்துள்ளார்.

தாம் பிரமுகர்களின் பாதுகாப்பை விரும்பும் நபர் அல்ல எனவும், பிரமுகர்களின் பாதுகாப்பை நீக்கினால் பிரச்சினையில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (30) தெரிவித்துள்ளார்.

தான் எந்த தவறும் செய்யாத காரணத்தினால் எவரும் தம்மை கொல்லவோ அடிக்கவோ முயற்சிக்க மாட்டார்கள் என நம்பிக்கையுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவர் மனநலம் குன்றியவர்போல நடந்து கொண்டால் மட்டுமே இதுபோன்ற வன்முறைகள் சாத்தியமாகும் என்றார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளே மீள அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை திணைக்களம் நேற்று முன்தினம்(29) தெளிவுபடுத்தியுள்ளது.

இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைக்காக மூன்று வருடங்களில் பல கோடி ரூபாய்கள் – அம்பலப்படுத்தப்பட்ட பகீர் தகவல்கள்!

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் பராமரிப்புக்காக மூன்று வருடங்களில் (2022-2024) சுமார் 27 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

இவர்களின் பராமரிப்புக்காக கடந்த 2022ம் ஆண்டு செலவிடப்பட்ட தொகை ஏழு கோடி ரூபாய். 2023-ம் ஆண்டு எட்டு கோடிக்கும் அதிகமாகவும், இந்த ஆண்டு 11 கோடிக்கும் அதிகமாக அந்த தொகை வளர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தின் அளவு சுமார் 45 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாகவும் பேராசிரியர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு இவ்வருடம் ஒரு கோடியே ஐம்பத்தாறு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு தலா இரண்டு கோடியே தொண்ணூற்றொரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவை ஒதுக்கியதாக கூறும் பேராசிரியர், இந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கு இருபத்தி எட்டு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 273 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகக் கூறும் அத்துகோரள, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ஐம்பத்து நான்கு வீதமும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்ட தொகையானது 329 சதவீதம் ஆகவும் அதிகரித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவுக்கு ஒதுக்கப்பட்ட பணமானது 101 வீத வளர்ச்சியைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் அவரது ஊழியர்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 660 கோடி ரூபாவாகும்.

2022 ஆம் ஆண்டில், செலவு 273 கோடியாக பதிவு செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை 660 கோடியாக அதிகரித்துள்ளது. ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையும் 142 வீத அதிகரிப்பைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.