ஆளுநர் நா.வேதநாயகன்

ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு உதவி செய்யும் பொலிஸார் – ஆளுநர் நா.வேதநாயகன் அதிருப்தி !

வடக்கில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு உதவி செய்யும் பொலிஸார் – ஆளுநர் நா.வேதநாயகன் அதிருப்தி !

சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் பொலிஸாருடன் நட்பாக இருப்பதால் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். அத்துடன், இது ஆபத்தான நிலைமையை உருவாக்கியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “ 2003ஆம் ஆண்டிலிருந்து இறுதிப்போர் வரையில் இந்த மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலராகவும், மாவட்டச் செயலராகவும் பணியாற்றியிருக்கின்றேன். கடந்த போர்ச் சூழலிலும் கல்விக்கான வசதிகள் உள்ளிட்ட சகல சேவைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. வளங்கள் குறைவாக இருந்தாலும் மக்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்தோம். இன்று வளங்களும், தொடர்பாடலும் பெருகிவிட்டாலும் மக்களுக்கான சேவைகள் என்பது அருகிவிட்டது. அன்றைய எமது சேவைகளுக்கும் இன்றைய காலத்துச் சேவைகளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது” எனத் தெரிவித்தார்.

ஆளுநர் வேதநாயகன் மேலும் கூறுகையில், “கடந்த காலங்களில் அரசியலுக்காக ஒரு சில அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன. தொழிலுக்காக சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் வழங்கவேண்டும் என்பதற்காக அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன. இதனால் உருவாகிய அரசாங்க அதிகாரிகள் பலர் தங்கள் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கின்றார்கள் இல்லை. ஏழையைக் கண்டால் உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் இயல்பாக மனதில் எழவேண்டும். அப்படிச் சிந்திப்பவர்கள் இன்று குறைவு. ஏழைக்குச் செய்யும் சேவையும், பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யும் சேவையும்தான் மிகப்பெரிய சேவை” என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (09) காலை நடைபெற்றது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலர்  சாரதாஞ்சலி மனோகரன் கலந்துகொண்டு, ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கியதுடன், அரசாங்க அலுவலர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அதன் பின்னர் உரையாற்றிய வட மாகாண ஆளுநர், ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டம் கௌரவ ஜனாதிபதியால் தொடக்கி வைக்கப்பட்டது என்பதையும் இந்த அரசாங்கத்தின் அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும் குறிப்பிட்டார்.

மக்களின் சேவைகளை விரைவாகவும் தரமாகவும் அன்பாகவும் வழங்குவது அரச பணியாளர்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அந்த மாற்றத்தை அரச பணியாளர்களின் நடத்தையில் ஏற்படுத்துவதன் ஊடாக செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த நடத்தை மாற்றங்கள் உடனடியாக செய்யக்கூடியவை எனக் குறிப்பிட்ட ஆளுநர், 2025ஆம் ஆண்டினை வட மாகாணத்தில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக மாற்றுவோம் என்றார்.

பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக பல லட்சம் டொலர் நாட்டுக்கு வருமானமாக கிடைத்துள்ளது – ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மாகாண பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக பல லட்சம் டொலர் நாட்டுக்கு வருமானமாக கிடைத்துள்ளது என கூட்டுறவுத் திணைக்களத்தால் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் மீளாய்வுக்கூட்டம் ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை 22.11.2024 இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்தில் சில கிராமங்கள் அரசியல் ரீதியாகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் புறக்கணிக்கப்படுகின்றன. அவற்றை அடையாளம் கண்டு முன்னேற்றவேண்டும்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளிட்ட தேவையுடைய மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கும்போது அவர்களுக்கு காணி இல்லை என்பதைக் காரணம் காட்டி வீடுகளை வழங்காமல் விடவேண்டாம். காணிகளை அவர்களுக்கு கண்டறிவதற்குரிய ஒழுங்குகளை நாங்கள் முன்னெடுப்போம்.

கடந்த காலங்களைப்போன்று பனைசார் உற்பத்திப் பொருட்களின் உற்பத்திகளை அதிகரிக்கவேண்டும். குறிப்பாக சில ஆலயங்களில் பின்பற்றப்படுவதைப்போன்று பனைஓலையிலான அர்ச்சனைப் பெட்டிகளை ஊக்குவிக்கவேண்டும், என்றார்.

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் ந.திருலிங்கநாதன், வடக்கு மாகாண பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கங்கள் கள்ளை உற்பத்தி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கும், உற்பத்தி வரியாகவும் அரசாங்கத்துக்கு பல மில்லியன் ரூபாவைச் செலுத்தியுள்ளன.

அதேபோன்று 2 தனியார் நிறுவனங்கள், பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து போத்தல் கள்ளை கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் ஊடாக பல லட்சம் டொலரை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளன.

கூட்டுறவுத் திணைக்களம் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக சங்கங்களுக்கு 6 சதவீத வட்டிக்கு கடனை வழங்குகின்றன. அதனை அவர்கள் மக்களுக்கு ஆகக்கூடியது 15 சதவீதம் வரைக்கும் வழங்க முடியும்.

ஆனால் வடக்கில் சில சங்கங்கள் வேறு சமாசங்களிடமிருந்து 15 சதவீத வட்டிக்கு கடனைப் பெற்று அவற்றை மக்களுக்கு 21 சதவீதம் வரைக்கும் வழங்குகின்றன. இது வடக்கு கூட்டுறவுத்துறைக்கு சவாலாக இருக்கின்றது, என்றார்.

இதன்போது வடக்கு ஆளுநர், அவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனவும் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் பணித்தார்.

சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா, திணைக்களத்தின் பல்வேறு வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தெரிவித்தார். மேலும் பணிப்பாளர், தம்மிடம் பல்வேறு உதவிகளைக்கோரி மக்கள் வருவதாகவும், ஆனால் தமது எல்லைக்குட்பட்டு அவர்களுக்குரிய உதவிகளைச் செய்ய முடியாத நிலைமை இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவ்வாறானவர்களுக்கு நன்கொடையாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுத்து உதவிகளைச் செய்யமுடியும் எனவும் அவ்வாறு உதவிகோரி வருபவர்களின் விவரங்களை வழங்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், நலனோம்பு மன்றம் (welfare forum) ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக உதவிகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண பிரதம செயலர் தெரிவித்ததுடன் அதற்கு கௌரவ ஆளுநர் அனுமதி வழங்கினார்.