அஸ்வெசும

அஸ்வெசும

நாட்டினை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வெலிமடை அம்பகஸ்தோவ பொது விளையாட்டரங்கில் இன்று (21) இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி நிவாரணம் வழங்கும் 2024 தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், முழு நாட்டையும் உள்ளடக்கிய குறைந்த வருமானம் பெறும் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் பத்து கிலோ அரிசி வழங்கப்படும்.

பதுளை மாவட்டத்தின் பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 191,548 பயனாளி குடும்பங்கள் அரிசி மானியம் பெறத் தகுதி பெற்றுள்ளன. ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வின் அடையாளமாக இன்று 25 பயனாளிகளுக்கு ஜனாதிபதியின் கைகளால் அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“இன்று இந்நாட்டு மக்கள் தமிழ், சிங்கள புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் புத்தாண்டை கொண்டாடுவது பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாத சூழ்நிலையில் நாடு இருந்தது. கடந்த காலங்களில் தேவையான எரிபொருள், எரிவாயு, உரம் போன்றவற்றை வழங்க முடியாமல் மிகவும் கடினமான சூழலுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

நான் 2022 தமிழ், சிங்கள புத்தாண்டை கம்புருகமுவ பிரதேசத்தில் கழித்தேன். அங்குள்ள எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக மக்கள் இரவு வரை காத்திருப்பதைக் கண்டேன். ஆட்சியாளர்களை மக்கள் கடுமையாக குற்றம் சாட்டினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து இன்று நாடு அடைந்திருக்கும் முன்னேற்றத்தை சிலருக்கு நினைத்துக்கூட பார்ப்பது கடினமாக உள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அந்த முடிவுகள் மக்கள் விரும்பாத முடிவுகள் என்றே சொல்ல வேண்டும்.

முன்னர் இந்த நாட்டின் அரசாங்கங்கள் ஒரு கட்சிக்கு உரிதானதாகவே இருந்தன. இது தவிர இரண்டு அல்லது மூன்று கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்கும். ஆனால் இந்த அரசு அப்படியானதல்ல. ஐக்கிய தேசியக் கட்சியில் நான் மட்டுமே இருந்தேன். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி என அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்தனர். அந்த அரசாங்கம் நாட்டின் தேவைக்காகவே உருவாக்கப்பட்டது. இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சிலர் கூறினர்.

எப்படியிருந்தாலும், நாட்டு நலனுக்கான நோக்கங்களை வெற்றிகரமாக செயல்படுத்தினோம். அதற்காக பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு ஆளுநர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பெரும் சேவை செய்துள்ளனர். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டதால்தான் இன்று இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று, சுற்றுலா வணிகம் எதிர்பாராத வகையில் வளர்ச்சியடைந்து வருகிறது. அதன் மூலம் மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. மேலும், கிராமப்புற பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான விரிவான திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். அந்த பணம் இன்று அரச மற்றும் தனியார் துறைகளில் சம்பள உயர்வு மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி நாம் அனைவரும் கடினமான காலங்களில் கஷ்டப்பட்டோம். இன்று நாடு அபிவிருத்தியடைந்து வருகின்ற போதிலும் ஒரு பிரிவினர் இன்னமும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி , தொழிற்துறை வீழ்ச்சி, வேலை இழப்பு போன்ற காரணங்களால் இன்னும் பலர் சிரமத்தில் உள்ளனர்.

நாட்டின் வளர்ச்சியின் பயனை அனைவரும் பெற வேண்டும். எனவே, அஸ்வெசும திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பலனை மூன்று மடங்காக உயர்த்த நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அத்துடன் தமிழ், சிங்கள, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு தலா 10 கிலோ அரிசியை இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த அரிசியை பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து வாங்கவில்லை. சிறு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருந்து. இவற்றை வாங்கும் போது சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். அப்போது அந்த சிறு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் கட்டியெழுப்புவதில் யாரையும் கடந்து செல்வதற்கோ அல்லது விட்டு விடவோ நாம் தயாரில்லை. எனவே, நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகிறது. இன்று, சுற்றுலாத்துறை மூலம் கிராமங்களுக்கு பணம் கிடைக்கிறது. மேலும், விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. வலுவான ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று சொல்ல வேண்டும்.

மேலும், பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 இலட்சம் பேருக்கு இலவச காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பில் உள்ள 50,000 குடியிருப்புகளின் உரிமையை அந்த மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேளையில் நாம் அரசியல் ரீதியாக பிளவுபடக்கூடாது. நாம் பிரிந்திருந்தால் இன்று நாட்டில் இந்த முன்னேற்றத்தை காண முடியாது. கட்சி அரசியலை மறந்து முன்னேற வேண்டும். அத்துடன், இந்த ஊவா பிரதேசத்தின் அபிவிருத்திக்காக சில பாரிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இன்று வழங்கப்படும் இருபது கிலோ அரிசியின் பலன் இந்த மக்களுக்கு மிகவும் பெறுமதியானது. ஆனால் இந்த பலன்களை நீண்ட கால அடிப்படையில் மக்களுக்கு வழங்கக்கூடாது. ஜனாதிபதியின் பொருளாதாரத் திட்டத்தின்படி, மக்கள் மீண்டும் எழுந்து நிற்பதற்கு அதிக காலம் எடுக்காது.

மக்களின் கைகளுக்கு அதிக வருமானத்தை கொண்டு வரும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி தற்போது செயற்பட்டு வருகின்றார். அதனை உலகில் யதார்த்தமாக்கி வருகிறார்.

இதன் விளைவாக, இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் வங்குரோத்தடைந்த நாட்டை மீட்டெடுக்க முடிந்தது. மேலும், மக்களின் சிரமமான வாழ்க்கைச் சூழலிலிருந்து காப்பாற்ற 15,000 ரூபாய் “அஸ்வெசும” மூலம் வழங்கப்பட்டது. மேலும், மக்களுக்குத் தேவையான காணிகள் “உறுமய” திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இவை வாய்ப்பேச்சிற்கு வழங்கிய வாக்குறுதிகள் அல்ல. கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி விதைத்த யதார்த்தம் இதுதான்.” என்று தெரிவித்தார்.

மூன்று லட்சம் மேன்முறையீடுகள் – “அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட ஏழைகளும் உள்வாங்கப்பட்ட செல்வந்தர்களும் !

இலங்கையின் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து இலங்கை மக்களிடையேயான ஏழ்மை நிலை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் சாதாரண ஏழை மக்களிடையே காணப்படக்கூடிய ஏழ்மை நிலையை போக்குவதற்காக ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தில் தகுதியானவர்கள் உள்வாங்கப்படவில்லை என இலங்கையின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் அதிருப்தி வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
‘அஸ்வெசும’ நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் முதியோர்கள், விதவைகள் , தேவையுடைய ஏழ்மையான குடும்பங்கள் என வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாத நிலையில் இது தொடர்பான அதிருப்தி பல பகுதிகளில் மக்களைப் எதிர்ப்பு போராட்ட களத்திற்கும் தள்ளி உள்ளது.
பெயர்ப்பட்டியல் வெளியானமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு வரும் மக்கள் 26.06.2023 அன்று மலையகம் குறிப்பாக நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் எதிர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதே வேளை 27.06.2023 அன்று வடக்கின் சில பகுதிகளிலும் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வவுனியாவில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றி தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர். வவுனியாவின் ஆசி குளம் பகுதியில் சுமார் 12 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமக்கு நீதி வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டு 27.06.2023 அன்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த சமூக ஆர்வலர் ஒருவர் பேசிய போது ” அஸ்வெசும பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு எமது கிராமத்தில் பலர் வாழ்கின்றோம். எமது பகுதியில் தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் பெயர் விபரங்கள் சமர்ப்பித்தும் தங்களுடைய விபரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அதிகமாக ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தேவை உள்ள குடும்பங்கள் பல நிராகரிக்கப்பட்டு வசதி வாய்ப்புள்ள குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் அறிவிக்கப்பட்டுள்ளமை ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கும் – தெரிந்தவர்களுக்கும் இந்த அஸ்வெசும நலன்புரி உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கின் பல பகுதிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து உள்ளவர்களின் குடும்பங்களுக்கு இந்த உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை வீட்டுப் பணிகளுக்காக மத்திய கிழக்காசிய நாடுகளுக்கு தொழில் தேடி சென்ற வறுமை கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்கள் பல இந்த உதவி திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுஜன பெரமுனவின்நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார் சுமித்ராராச்சி அவர்கள் இது தொடர்பில் குறிப்பிட்ட போது” அஸ்வெசும நிவாரண செயற் திட்டம் சமூக கட்டடைப்பில் பாரிய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் . ஏழ்மையில் நிலையில் உள்ளவர்கள் இந்த செயற்திட்டத்தில் உள்வாங்கப்ப டவில்லை . ஆகவே முறையான மதிப்பீட்டை மேற்கொள்ளும் வரை அஸ்வெசும செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதை இடைநிறுத்த வேண்டும். சமூக கட்டமைப்பில் தீவிரம டைந்துள்ள ஏழ்மை நிலையை இல்லாதொழிக்க அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வெசும செயற்திட்டம் சமூகக் கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிக் கும் வகையில் உள்ளது . தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரண தொகை வழங்கப்பட வேண் டும் என குறிப்பிடப்பட்டது . அஸ்வெசும நிவாரண செயற்திட்டத்தில் நிவாரணம் பெறுவதற்குத் தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள் ளார்கள் . தகுதியற்ற செல்வந்தர்கள் நிவார ணத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட் டுள்ளார்கள் . ஆகவே இந்தத் திட்டத்தில் உண்மையான தரப்பினர் அடை யாளப்படுத்தப்படவில்லை.”என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .
இது தொடர்பில் பேசியுள்ள திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மகரூப் “, நாடு முழுவதும் இலட்சக்கணக்கான ஏழை மக்கள் சமூர்த்திக் கொடுப்பனவு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும், சில அதிகார பின்புலத்திலுள்ளவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே இந்த பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.
நாடு இன்று பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில் அப்பாவி ஏழை மக்களும் வயிற்றுப் பசியை போக்க பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர். அவர்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவு ஆறுதலாக இருந்தது.
எனினும், சிலர் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இவர்களின் சமுர்த்திக் கொடுப்பனவை நிறுத்துவதற்கு பின்புலத்திலிருக்கின்றனர். இது பெரும் அநீதி எனவும் மக்களை கஷ்டத்துக்குள் தள்ளிவிடும் இந்த மோசமான செயலை செய்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் கரிசனையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களை கொண்டுள்ள வடக்கு – கிழக்கு பகுதிகளின் தமிழ் அரசியல் தலைவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. புலி அரசியலுக்கும் – போலித் தேசியம் பேசவும் முண்டியடித்துக் கொண்டு வரும் எந்த அரசியல்வாதிகளும் இது தொடர்பில் எதுவித எதிர்ப்பையும் இந்த செய்தி உருவாக்கப்படும்வரை வெளியிடப்படவில்லை என்பது வேதனையான விடயம்.
இதேவேளை அஸ்வெசும’ சமூக நலன்புரி திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி “எவரையும் கைவிடாத வகையில் ‘அஸ்வெசும’ சமூக நலன்புரி திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு  ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் குறித்த நலன் குறித்த திட்டம் தேவையுடைய ஏழ்மையான குடும்பப் பின்னணி உள்ளவர்களுக்கு மட்டுமே சென்றடையும் எனவும் ஏழ்மை நிலையிலிருந்து குறித்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத குடும்பத்தினர்கள் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை தங்களுடைய பிரதேச செயலகங்களுக்கு சென்று மேல்முறையீடு செய்து குறித்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள முடியும் என அரசு தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ‘அஸ்வெசும’ எனும் ஆறுதல் நலன்புரி திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக இதுவரை 383,232 மேன்முறையீடுகளும் 5,045 ஆட்சேபனைகளும் பெறப்பட்டுள்ளன என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். மேலதிக விசாரணைகளுக்கு, பொது மக்கள், வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயற்படும் ‘1924’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.
மேலும் யாழ்ப்பாணத்திலும் இது தொடர்பில் அதிக ஏழை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு 10 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் – இரண்டு லட்சம் மேன்முறையீடுகள் – புறக்கணிக்கப்பட்ட ஏழைகள் !

‘அஸ்வெசும’ எனும் ஆறுதல் நலன்புரி திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை 190,000 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதன்படி, இதுவரை 188,794 முறையீடுகளும் 3,304 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்கு, பொது மக்கள், வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயற்படும் ‘1924’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

 

‘அஸ்வெசும’ னும் ஆறுதல் நலன்புரி திட்டத்தின் கீழ் மக்கள் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் தனிப்பட்ட முறையில் கையளிப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.

இன்று (27)  காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் அவ் வீதியுடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.