அருட்தந்தை மா.சத்திவேல்

அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி என்.பி.பி அரசு செயற்படுகிறது – அருட்தந்தை மா.சத்திவேல் விசனம் !

தமிழர்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி என்.பி.பி அரசு செயற்படுகிறது – அருட்தந்தை மா.சத்திவேல் விசனம் !

அரசியல் கைதிகள் என எவரும் சிறையில் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் தமிழர்களின் மிக நீண்டகால அரசியல் கோரிக்கை. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாம் பதவிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம். இதற்கு தெற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்தார்.

அதன் ஈரம் காயும் முன்னரே அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அரசியல் கைதிகள் என்று சிறைகளில் எவரும் இல்லை குறிப்பிட்டுள்ளமை அவர்களின் அரசியல் அநாகரிகத்தை அம்பலப்படுத்தி உள்ளது. என்.பி.பி வாக்களித்த தமிழர்களையும் ஏமாற்றி தமிழர்களின் அரசியலை அவமானப்படுத்தி உள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம் – என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்றொருவரும் இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார் என வீரகேசரி செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மிகுந்த கரிசனை வெளிப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஹர்ஷண நாணயக்காரவின் கருத்து தமிழ் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைத்துள்ளது.

அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார சிறைகளில் அரசியல் கைதிகள் இல்லை என்ற விடயத்தைத் தெளிவுபடுத்தியிருந்தாரே அல்லாமல் தமிழ் கைதிகள் இல்லை என்று குறிப்பிடவில்லை என்கிறார் ஆய்வாளர் வி சிவலிங்கம். தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார் வி சிவலிங்கம். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுகளில் மட்டும் செயற்பட்டவர்கள் அல்ல அப்படி ஒரு கட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளில் இருக்கவில்லை என்கிறார் சமூக செயற்பாட்டாளர் மயில்வாகனம் சூரியசேகரம். முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் ஆகியோருடைய கொலைகளிலும் வேறு படுகொலைகளிலும் சம்பந்தப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய பத்துக்கும் குறைவானவர்களே தற்போது சிறையில் இருப்பதாகவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இவர்கள் நாட்டின் சுதந்திர தினம் போன்ற காலங்களில் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வமைப்பின் ஆதரவாளரான சுடர்மணி கேதீஸ்வரன் தெரிவிக்கின்றார். பத்துக்கும் உட்பட்ட இக்கைதிகளை வைத்து அரசியல் செய்ய முற்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பை இல்லாமால் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் தெரிவித்தார்.

யுத்த குற்றங்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு பேரினவாத கருத்தியல் கொண்ட எந்தவொரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் துணிய மாட்டார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

சமஷ்டியை அங்கீகரிக்குமாறு தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வலியுறுத்த சர்வதேச காணாமலாக்கப்பட்டோருக்கான தினத்தில் ஒன்று திரள்வோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவரால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

 

நாட்டில் நிலவிய தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு யுத்த காலப்பகுதியில் இலங்கை அரச படைகளால் புரியப்பட்ட மனித குலம் ஏற்காத யுத்த குற்றங்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு பேரினவாத கருத்தியல் கொண்ட எந்தவொரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் துணிய மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.

 

ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15 வருட காலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தமது அன்புக்குரியவர்களை தேடி கிடைக்காத நிலையில் 2500 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் இவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி அதாவது நாளை சர்வதேச காணாமலாக்கப்பட்டோருக்கான தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்துவதற்கு ஆயத்தங்களை செய்துள்ளனர்.

 

இப் போராட்டத்திற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தமது முழுமையான ஆதரவை தெரிவிப்பதோடு வடகிழக்கு வாழ் அனைவரும் அப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றது.

 

தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நிற்கும் பிரதான வேட்பாளர்களும் அவர்களின் பின்புலத்தில் இயங்கும் கட்சிகளும் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு யுத்தத்திற்கும் இனப்படுகொலைக்கும் ஆதரவு தெரிவித்தவர்களே.அத்தோடு தமது ஆதரவாளர்களை யுத்த வெற்றி கொண்டாட தூண்டியவர்களுமாவர்.

இவர்கள் இனி மேலும் தமிழர்களுக்கு யுத்தக்குற்றங்களுக்கான நீதியையோ, அரசியல் நீதியையோ பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. இவர்களின் உண்மையை கண்டறிவதற்கான வழிமுறைகள் எல்லாம் மாயமானே. அதில் தமிழர்களுக்கு இனியும் நம்பிக்கை இல்லை.

 

அதுமட்டுமல்ல இவர்கள் எதிர்நோக்கி இருக்கும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் அனைத்து தேர்தல்களிலும் பேரினவாத வாக்குகளையே நம்பி இருக்கின்றனர்.பேரினவாத பௌத்த துறவிகளையே கவசமாகவும் கொண்டுள்ளனர்.இவர்களை எதிர்த்து தமிழர்களுக்கு எத்தகைய நீதியையும் உறுதி செய்யப்போவதுமில்லை.

 

இவர்கள் வடகிழக்கில் மக்கள் சந்திப்புகளை நடத்தும் போதும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் போதும் யுத்தக்குற்றங்கள் காணாமல், ஆக்கப்பட்டோர் விடயமாக எத்தகைய கருத்துகளையும் கூறுவதும் கிடையாது.

 

இவர்களுக்கு சாமரை வீசுகின்ற தமிழ் அரசியல்வாதிகளும் இவ் விடயம் சம்பந்தமாக பிரதான வேட்பாளர்களிடம் கேள்வி கேட்பதற்கோ; பொது மேடைகளில் கருத்து கூறுவதற்கோ தயங்குவது தமிழர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

 

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் என்பது வெறுமனே தமது உறவுகளைத் தேடும் போராட்டம் மட்டுமல்ல.அது தமிழர் தேசத்தின் அரசியல் நீதிக்கான போராட்டத்தின் அடையாளமாகவும் உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுவோரில் நூற்றுக்கும் அதிகமானோர் தீர்வு கிட்டாத நிலையில் வேதனையில் மரணத்தை தழுவியுள்ளனர். இதனை சாதாரண மரணம் என நாம் கடந்து செல்ல முடியாது.நீதி நிலை நாட்டப்படாது நடத்தப்பட்ட திட்டமிட்ட மறைமுக கொலை எனவே அடையாளப்படுத்தல் வேண்டும்.

 

இவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்தும் போராட்டம் மரணிக்காது உள்ளமைக்கு போராட்ட அமைப்புக்களின் மனத்திடமே காரணம் எனலாம்.அப்போராட்தினை உயிரோட்டமுள்ளதாக்க தமிழர் தேசமாக எம் பங்களிப்பை செய்து எம் குரலை சர்வதேசத்திற்கு கேட்கச் செய்வோம்.

மேலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தினம் தினம் சிந்தும் அறிந்தும் எமது உறவுகளும் மாவீரர்களுமாக இலட்சங்களை தாண்டியோர் இரத்தம் சிந்திய நிலத்தில் நின்றும் பேரினவாத அரசுக்கும் இனப்படுகொலை சூத்திரதாரிகளுக்கும் கொடி பிடித்துக் கொண்டு திரியும் தமிழர் தேச அரசியல் நரிகளுக்கு எதிராக குரல் எழுப்பவும் ஒன்று திரள்வோம்.

 

இந்தியா இன்றும் எமக்கான அரசியல் தீர்வாக 13 மே திணிக்க முயல்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் யுத்தக் குற்றங்களுக்கு காணாமல் சர்வதேச விசாரணையோடு காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது அரசியல் நீதி என்பதை மையப்படுத்தி சுயநிர்ணய உரிமையை உறுதி செய்து சமஸ்ட்டியை அங்கீகரிக்குமாறு தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வலியுறுத்தவும் ஒன்று திரள்வோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.