அரசியல் கைதிகள்

அரசியல் கைதிகள்

அரசியல் கைதிகள்: பெயர்பட்டியலைத் தாருங்கள் ஒரு வாரத்தில் பதில் தருகிறேன் நீதி அமைச்சர் !

அரசியல் கைதிகள்: பெயர்பட்டியலைத் தாருங்கள் ஒரு வாரத்தில் பதில் தருகிறேன் நீதி அமைச்சர் !

அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலைத் தாருங்கள் அவர்களை விடுவிப்பது பற்றி ஒரு வாரத்தில் பதில் தருகிறேன் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளை எப்போது விடுதலை செய்வீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் பேசிய சிவஞானம் சிறீதரன், “தமிழ் இளைஞர்கள் பலர் இலங்கையின் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக அரசியற் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்களின் கண்ணீருடனம் கவலையுடனும் அவர்களின் வரவுக்காக காத்திருக்கின்றார்கள். தாயை இழந்த நிலையில் தந்தை பல ஆண்டுகளாக சிறையில் இருக்க தாய், தந்தையின் அரவணைப்பு இல்லாமலே பல பிள்ளைகள் தமது பெற்றோரின் விடுதலைக்காக தவமிருக்கின்றார்கள்.

இந்த நாட்டின் இன ஒற்றுமை, மாற்றம் வேண்டிய புதிய சிந்தனை, சுத்தமான இலங்கை உள்ளிட்ட மகுட வாசகங்கள் சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற மகுட வாசக்ததை மனதில் வைத்தாவது பல ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியற் கைதிளை விடுவிக்குமாறு அவர் தம் உறவுகள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர்” என குறிப்பிட்டு, இது தொடர்பில் 4 கேள்விகளை எழுப்பிய பா.உ சிறிதரன், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் பெயர்களையும் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர், ஒரு வார காலத்திற்குள் இதற்குப் பூரணமான பதிலை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் என உறுதியளித்தார். மேற் குறிப்பிட்ட பெயர்களை இன்றைய தினம் எனக்கு வழங்கினால் நான் விசேட கவனம் செலுத்துவதுடன் இதற்குரிய பதிலையும் வழங்குவேன் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

அண்மையில் பா உ சிறிதரனின் வலதுகரமான கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் வேழமாளிதன் புலம்பெயர்ந்த கணவனது அரசியல் தஞ்ச வழக்கிற்கு கடிதம் கேட்கச் சென்ற போது அவரை படுக்கையறைக்கு அழைத்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. பாதிக்கப்பட்ட பெண்ணை பா உ சிறிதரனின் அலுவலகத்தில் வைத்தே வேழமாளிதன் சீண்டியும் உள்ளார். இவ்விடயங்கள் தொடர்பில் பா உ சிறிதரனது பெயரையும் பாதிக்கப்பட்ட பெண் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சம்பவங்களால் பா உ சிறிதரன் பாராளுமன்றத்தில் காட்டும் தமிழ் தேசிய முகக்காடு காற்றில் பறக்கின்றது.

 

இலங்கையில் உள்ள சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் இல்லை – அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

இலங்கையில் உள்ள சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, “ நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்றொருவரும் இல்லை என்பதை நான் முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன். பயங்கரவாத தடைச்சட்டம்

ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளார்கள். அந்த வகையில், நாடாளவிய ரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பட்டியலை விரைவாக தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக இன,மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நியாயமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றது.”என ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிய கையெழுத்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கையெழுத்து போராட்டம்!

அரசியல் கைதிகள் விடுதலை கோரி கையெழுத்து வேட்டை

முன்னாள் போராளிகள் நலன்புரிசங்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான கோரிக்கை மகஜருக்கு மக்களிடம் கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. அப்போது சர்வ மதத் தலைவர்களும் , சமூக அமைப்புக்களும் மற்றும் பொதுமக்களும் கையொப்பம் இட்டனர். ஆளும் அநுர தலைமையிலான அரசு தன்னுடய தேர்தலில் வாக்குறுதியாக வழங்கிய அ்ரசியல் கைதிகளை விடுதலையை உத்வேகப்படுத்தும்படியாகவே இப்போராட்டம் நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்தில் இயங்குகின்ற முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவரான செ. அரவிந்தன் இந்த வருடம் மார்ச் 26 இல் பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப்பிரிவால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறைகளில் இன்னும் 14 அரசியல் கைதிகளே விடுதலை செய்யப்படாமல் உள்ளனர் – வவுனியாவில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ!

கந்தக்காடு முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (17) வவுனியாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

 

வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் செய்த நீதி அமைச்சர், பிரபா மற்றும் கௌதமன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஆலய பரிபாலனசபை மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பு என்பவற்றின் ஒழுங்கமைப்பில் திவாகரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் ஊடகங்க சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

 

“கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அங்கு புனர்வாழ்வு பெறுபவர்கள்,போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மற்றும் யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் போன்றோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

 

இந்த கந்தக்காடு முகாமானது இவ்வாறு மூன்று பிரிவுகளாக இயங்கி வருகின்ற நிலையில், அண்மையில் அங்கு இடம்பெற்ற சம்பவங்களையடுத்து அதன் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை காரணமாக இளம் சமுதாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

இதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக யுக்திய நடவடிக்கை மூலம் போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் மாபியாக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தவிரவும் யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேலும், அரசியல் கைதிகள் விடயத்தில் 5 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் 14 அரசியல் கைதிகளே விடுதலை செய்யப்படாமல் உள்ளனர், அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகளும் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.

 

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேசப்படுகிறது, யாருக்கு ஆதரவு என கட்சி இன்னும் முடிவு எடுக்காத நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும் தமக்குள் பேசுகிறார்கள், இன்னும் யார் வேட்பாளர் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை, கட்சியுடன் கலந்துரையாடியே அது தொடர்பில் முடிவு எடுக்க முடியும்.”என்றார்.

66 வயது தமிழ் அரசியல் கைதி கனகசபை தேவதாசன் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை !

இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் நீண்ட காலமாக புதிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதியுமான 66 வயதுடைய கனகசபை தேவதாசன் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்.

புறக்கோட்டை தொடருந்து நிலையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் போது விடுதலைப்புகளின் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கிய குற்றசாட்டில் கைதாகினர்.

இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் இவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கனகசபை தேவதாசன் தன்னை விடுவிக்குமாறு கோரியும், தனது வழக்கிற்கான ஆதாரங்களை திரட்ட தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரியும் பல உண்ணாவிரத போராட்டங்களையும் நடத்தியிருந்தார்.

அதேவேளை, தனக்காக தானே சில வழக்கு தவணைகளில் வாதாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முனைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 21 அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை !

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முனைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் 21 பேர் நிபந்தனைகளின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வடமாகாணத்திலும் கொழும்பிலும் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் மற்றும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

குறித்த 21 நபர்களும் 2014 ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வவுனியா, கிளிநொச்சி, பூசா ஆகிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் சில மாதங்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டதுடன், அவர்களது உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் நாடளாவிய ரீதியில் பல சாத்வீக போரட்டங்களை மேற்கொண்ட நிலையில், கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த 21 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் 21 பேரையும் எந்த நிபந்தனைகளும் இன்றி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வீதி நாடகம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் இணைந்து குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இணைந்து வீதி நாடகமொன்றினை யாழ். பல்கலைக்கழகத்தினுள் முன்னெடுத்தனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடக வளாகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த வீதி விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், இந்த முறை தைப்பொங்கலிற்கு எமது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்பிய பொழுதும் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.

இதனை மையப்படுத்தியே இவ்வாறு சிறைக்கூண்டு அமைக்கப்பட்டு சிறையிலுள்ள கைதிகளை போல உருவகித்து பொங்கல் பொருட்கள் வீடுகளில் தயார் நிலையில் உள்ள போதும் இம்முறையும் எமது உறவுகள் இன்றி பொங்கலை பொங்கமுடியாத சூழலை வெளிப்படுத்துமுகமாக இதனை நாம் நாடகமாக நிகழ்த்திகாட்டியிருந்தோம்.

மேலும் அரசியல் கைதிகள் விடுதலையின்றி வாழும் சூழலில் இங்கு நடைபெற இருக்கின்ற தேசிய பொங்கல் விழாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரும் பொழுது எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் பிரிதிநிதிகள் குறித்த நிகழ்வை முற்றாக நிராகரிக்கவேண்டும்.

இதே நேரம் எங்களுடை எஞ்சிய சிறைகைதிகளும் விடுதலை செய்யபடவேண்டும் என வலியுறுத்தினார்.

அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் – எம்.ஏ சுமந்திரன்

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொது இணக்கப்பாட்டுக்கு வரும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 14 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டை கூட்டியிருந்தார்.

ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் 08 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை !

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நான்கு கைதிகள், கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என்றும் மேலும் மூன்று பேர் நாளை சிறையிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டாவது கைதி விடுவிக்கப்படுவதற்கு முன் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தங்களின் தண்டனைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தமையினால் மூன்று கைதிகளின் விடுதலை காலதாமதமானது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகள் திரும்பப் பெறப்பட்டவுடன், அவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சட்டமாஅதிபர் மற்றும் நீதி அமைச்சின் பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான ஆவணங்களில் கடந்த புதன்கிழமை கையொப்பமிட்டார்.

“அரசியல் கைதிகளைவிடுவிக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் நாம் முயற்சி எடுத்துள்ளோம்.” – கே. கே. மஸ்தான்

பல அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் நாம் முயற்சி எடுத்துள்ளோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத்தீவு அபிவிருத்தி குழு தலைவருமான கே. கே. மஸ்தான் தெரிவித்தார்.

இன்று (05) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் கொரோனா தொற்று இருந்தாலும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக கிராம சேவகர் ரீதியில் 30 இலட்சம் மற்றும் வட்டார ரீதியில் 40 இலட்சம் எனவும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு 100 கோடி என நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் 100 வீதம் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்காக செலவு செய்யக்கூடியதாக உள்ளது. ஏனைய வேலைத்திட்டங்களுக்கு 40 வீதமளவில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு பெரும் விமர்சனம் வந்த போதிலும் நாம் குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.

வவுனியாவில் பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் அது தொய்வு நிலையில் காணப்பட்டது. எனினும் பின்நாட்களில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கதைத்து விரைவாக எமது மாவட்ட மக்களுக்கான கல்வி வளத்தினை நான் உருவாக்கியுள்ளேன் என்பதனையிட்டு நான் பெருமையடைகின்றேன். இதேபோல் ஓமந்தையில் உள்ள அரச வீட்டுத்திட்டத்திற்கான காணி ஆவணங்கள் அவர்களுக்கு கிடைக்காத நிலை காணப்பட்டது. அவர்கள் வீடுகளை அமைத்து வசிக்கின்ற போதிலும் காணி ஆவணம் இல்லாத நிலையில் அமைச்சருடன் கதைத்து தற்போது அமைச்சரவை பத்திரம் போட்டு மிக விரைவில் ஆவணங்கள் வழங்கப்பட்டவுள்ளது.

இந்நிலையில் தற்போதைய சூழலில் இரண்டு வருடங்களுக்கு புதிய கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை என அரசாங்கம் கொள்கையாக கொண்டுள்ளது. எனினும் நாம் இங்குள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுடன் கதைத்து எமது பகுதியில் பாடசாலைகளில் வகுப்பறை கட்டிடம் குறைவு என்பதனால் அதனை அமைப்பற்காக மூன்று பாடசாலைகளில் 50 மில்லியன் பெறுமதியான கட்டிட வேலைகள் இடம்பெறுகின்றது. அத்துடன் அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக கல்வி வளர்ச்சிக்காக பாடசாலைகளில் பல கட்டிட பணிகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

நல்லாட்சி காலத்தில் எத்தனை அரசியல் கைதிகளை விடுவித்தார்கள். எனினும் தற்போதைய ஜனாதிபதி பொறுப்பேற்றவுடன் அரசியல் கைதிகளின் விடுதலை இடம்பெற்றுள்ளது. அது மாத்திரமின்றி அரசியல் நோக்கத்திற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விரைவாக விடுதலை செய்வதற்கான முனைப்பினை சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் ஜனாதிபதியுடன் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் பேசி தொடர் முயற்சிகளை எடுத்துள்ளோம்.

அத்துடன் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் அவ்வப்போது விளக்கம் கொடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்யலாம் என்ற முழு நம்பிக்கையில் இருக்கின்றோம். இந்தியாவில் இருந்து வரும் மீனவர்கள் எமது மீனவர்கள் பாதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றனர். எனவே இரண்டு நாடுகளுக்கிடையில் முரண்பாடு வராத வகையில் ஒரே மொழி பேசும் சமூகம் என்பதனை உணர்ந்து இந்தியாவில் இருந்து வரும் மீன்வர்கள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்காத வகையில் அவர்களது எல்லையில் இருந்து மீன்களை பிடிக்க வேண்டும் என்பதனை ஒரு கோரிக்கையாக வைக்கின்றேன் என தெரிவித்தார்.