முகவரியற்ற மனிதர்களாக பெரும்தோட்ட மக்களை வைத்திருந்தனர் – கொந்தளிக்கும் என்.பி.பி !
குடியுரிமை தொடங்கி போசாக்கான உணவு எதுவுமே பெருந்தோட்ட மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என பெருதோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தொடர்ந்தும் உரையாற்றுகையில், “இதுவரை ஆய்வுகளின் தரவுகளுக்கு அமைய, அதிக போசனை குறைபாடு பெருந்தோட்ட மக்களுக்கே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த அளவிற்கு அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போயுள்ளன. பெருந்தோட்ட வீதிகள் மாத்திரம் அவர்களுக்கான பிரச்சினையில்லை. பெருந்தோட்ட மக்களுக்கான குடியுரிமை உரிய முறையில் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்களுக்கான முகவரியேனும் இதுவரையில் வழங்கப்படாத நிலைமை காணப்படுகிறது. எனவே பெருந்தோட்ட மக்களுக்கான சகல உரிமைகளையும் வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இவ்வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் கடல்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட ஜீவன் தொண்டமான், மலையகத் தமிழர்கள் விடயம் பற்றி பேச முற்பட்டபோது, காலம் காலமாக மலையகத் தமிழர்களை கைவிட்ட உங்களுக்கு மலையகத் தமிழர்களைப்பற்றி பேசுவதற்கெ உரிமையில்லை என்ற தொனியில் இறுக்கமாகவும் கடும் கோபத்துடனும் பேசி ஜீவன் தொண்டமானை வாயடைத்து உட்காரச் செய்தார் அமைச்சர் சந்திரசேகர்.
இதேவேளை சாதாரண ஒரு பிரஜைக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப்பெறாத சமூகமாவே மலையக மக்கள் காணப்படுவதாக என்.பி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் நாடாளுமன்றத்தில் வருத்தம் வெளியிட்டுள்ளார். இதுவரை இருந்தவர்கள் தமக்கு கீழ் அமைச்சுகளை வைத்திருந்தாலும் எதனையும் செய்யவில்லை எனவும் வெறுமனே பாரபட்சம் மட்டுமே காட்டியதாகவும் அம்பிகா சுட்டிக்காட்டினார்.

