உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் – நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் !
உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான வசதிகள் நீதிமன்றத்துக்கு வழங்கப்படுமென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார நேற்றையதினம் பாராளுமன்ற அமர்வின் போது தெரிவித்தார்.
அங்கு நீதியமைச்சர் ஹர்ஷண மேலும் உரையாற்றிய போது,
சட்டத்தின் ஆட்சிக்கு அமைய நாட்டை நிர்வகிப்பது எமது பிரதான இலக்காகும். சட்டத்தின் ஆட்சி மலினப்படுத்தப்படுகின்ற நிலையில் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. ஆகவே நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகும்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்ட நீதிமன்ற கட்டட அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்படும். நீதிதுறை சுயாதீனமான முறையில் செயற்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியும் என்றார்.
