அனுர குமார திசாநாயக்க

அனுர குமார திசாநாயக்க

அனுர அலை அடித்துக் கொண்டே இருக்கிறது – எச்சரிக்கிறார் சுமந்திரன் 

அனுர அலை அடித்துக் கொண்டே இருக்கிறது – எச்சரிக்கிறார் சுமந்திரன்

 

அனுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அங்கு எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு மாவட்டங்களின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். இம்முறை நாடு அனுர அலையில் உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. திருகோணமலையில், மட்டக்களப்பில் நாம் பெரும்பான்மை பெற முடியாது. வடக்கில் நாம் தான் பெரும்பான்மை. எனினும் மக்கள அநுர அலையில் சிக்கி ஜனாதிபதி தேர்தலைக் காட்டிலும் பாராளுன்ற தேர்தலில் அதிக வாக்குளை வழங்கியிருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச அவர்களே வடக்கு – கிழக்கில் பெரும்பான்மை பெற்றார்.

ஆனால் பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலை மாறியது. தற்போது அநுர அலை குறைந்து விட்டது என்கிறார்கள் சிலர். அப்படி கூற முடியாது. அநுர அலை தற்போதும் இருக்கிறது. அது குறைவடைய சில காலம் செல்லலாம். நாம் கவனமாக தேர்தலை கவனமாக அணுக வேண்டும் . நாமும் அநுர அலையோடு அள்ளுண்டு போக கூடாது. “ நாடு அநுரவோடு இருக்கட்டும். நமது ஊர் நம்மோடு. நாம் வீட்டோடு என செயற்பட வேண்டும்.” என்றார்.

வடக்குக்கு ஹெலிகாப்டரில் பயணியுங்கள் – ரவி கருணாநாயக்க மீண்டும் அட்வைஸ்

வடக்குக்கு ஹெலிகாப்டரில் பயணியுங்கள் – ரவி கருணாநாயக்க மீண்டும் அட்வைஸ்

 

நாடு முழுவதும் பயணம் செய்யும் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 

“அவர் வடக்கு நோக்கி சாலை வழியாக குறைந்தது ஏழு மணிநேரம் பயணம் செய்கிறார். வடக்குக்கு சாலை வழியாக பயணம் செய்வதன் மூலம் முக்கியமான முடிவுகளை எடுக்க அவர் செலவிடக்கூடிய மதிப்புமிக்க நேரத்தை வீணாக்குகிறார். ஹெலிகாப்டரில் பயணம் செய்தால் ஜனாதிபதி முக்கியமான முடிவுகளை எடுக்க அதிக நேரம் கிடைக்கும்,” என்று கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் போது பேசினார்.

ஜனாதிபதியும் அரசாங்கமும் எம்.பி.க்களுக்கு உரிமையுள்ள சலுகைகளை விட்டுக்கொடுக்கும் முடிவுகளிலிருந்து இலங்கை விரும்பிய நன்மைகளைப் பெறத் தவறிவிட்டது என்று அவர் கூறினார்.

“சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் எனது இல்லத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. அது தற்போது மூடப்பட்டுள்ளது, உத்தியோகபூர்வ இல்லத்தை மூடி வைத்திருப்பதன் மூலம் நாடு என்ன நன்மையை அனுபவிக்க முடியும்? அவற்றை மூடி வைத்திருப்பதன் மூலம் நீங்கள் சில மில்லியன்களை மட்டுமே சேமிக்க முடியும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

அர்ச்சுனாவின் முதலமைச்சர் கனவு ! போராட்டங்களுக்குத் தடை ! ஜனாதிபதி யாழ் வருகின்றார் ! – குடி நீர் பிரச்சினை பேசப்படுமா ?

அர்ச்சுனாவின் முதலமைச்சர் கனவு ! போராட்டங்களுக்குத் தடை ! ஜனாதிபதி யாழ் வருகின்றார் ! – குடி நீர் பிரச்சினை பேசப்படுமா ?

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாளை வருகை தரவுள்ளார். இதன்போது யாழ் மாவட்டத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கின்ற குடி தண்ணீர் பிரச்சினை பேசப்படுமா என யாழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். என்பிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் இது தொடர்பில் உறுதியான தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும். மேலும் இந்தக் குடி தண்ணீர் மோசடி மற்றும் யாழ் நகரின் மத்திய கழிவகற்றல் பொறிமுறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மோசடிகள் பற்றியும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட வேண்டும்.

ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.

இந்த நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர், ஆர்ப்பாட்டக் குழுவின் யாழ் மாவட்ட தலைவர், தற்காலிக சுகாதார உத்தியோகத்தர் சங்க தலைவர், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆகிய ஐவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்புவதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே அனுராதபுரம் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு நேற்று இரவு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த கைதானது அநுராதபுரம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை தனக்கு எதிரான விடயங்களை முன்நிறுத்தி முதலமைச்சராகிவிடலாம் என்ற எண்ணத்தில் சிறகடித்துப் பறக்கின்றார் பா உ அர்ச்சுனா. தான் முதலமைச்சரானால் முதலாவது வேலையாக கலாச்சார மண்டபத்தின் பெயரை ‘யாழ்ப்பாணத் தமிழர் கலாச்சார மையம்’ எனப் பெயர்மாற்றுவேன் எனச் சூளுரைத்துள்ளார். ரென்ட்டுக்கு ஏற்றமாதிரி கொள்கை விளக்கம் வைக்கின்ற பா உ அர்ச்சுனா முதலமைச்சர் என்பது யாழ் குடாநாட்டுக்குள் என்பது போலவும் யாழ்ப்பாணத் தமிழனுக்கு மட்டும்தான் கலாச்சாரம் இருப்பது போலவும் கருத்துக்களை முன்வைத்த வருகின்றார். மேலும் புலித்தோல் போர்த்திய தமிழ் தேசியவாதிகள் போல் தன்னுடைய வாக்கு வங்கியை நிரப்ப ‘தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் துணைக்கு அழைக்கின்றார். இதில் எந்தப் புலிக்குட்டி உண்மையான புலிக்குட்டி என்ற குழப்பத்தில் மக்கள் 2009 முதல் இருக்கின்றனர். இப்ப இன்னுமொரு புலிக்குட்டியும் முதலமைச்சர் கனவோடு களமிறங்கி உள்ளது. ‘அப்ப தலைவர் கனவில வந்து எலெக்சனும் மண்ணாங்கட்டியும் எல்லோரும் பகிஸ்கரியுங்கோ என்று சொன்னா கேட்பினமோ?’

ஜனாதிபதி அனுராவின் வருகையைத் தொடர்ந்து, பாதை திறப்புக்கள், காணி விடுவிப்புக்கள், யாழ் குடிநீர்ப் பிரச்சினை, மீனவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நல்ல செய்திகளை யாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பத்து ஆண்டுகள் நீடிக்கும் அநுர ஆட்சி முன்னாள் யுஎன்பி எம்பி ஆருடம்

பத்து ஆண்டுகள் நீடிக்கும் அநுர ஆட்சி முன்னாள் யுஎன்பி எம்பி ஆருடம்

அநுர தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் நற்பணிகளை ஆதரிப்பதாக முன்னாள் யுஎன்பி எம்பி டொக்டர் ஆஷூ மாரசிங்க கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், எந்த கொமிஷனும் இல்லாமல் பாதுகாப்பாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு10 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்பளித்தால், அவர்களைப் பார்த்து 100 பேர் வருவார்கள் என்கிறார். இதுவரையான என்பிபியின் ஆட்சிக் காலத்தில் எத்த தவறுகளும் நடக்கவில்லை என கூறும் மாரசிங்க அநுர இன்னும் 10 வருடங்கள் இலங்கையை ஆளுவார் என கட்டியம் கூறுகிறார்.

 

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு செலவுகளுக்காக வருடாந்தம் 1100 மில்லியன் ரூபாய் – உடன் நடவடிக்கை எடுத்த அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு செலவுகளுக்காக வருடாந்தம் 1100 மில்லியன் ரூபாய் – உடன் நடவடிக்கை எடுத்த அரசாங்கம்!

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அதிகப்படியான பணம் ஒதுக்கப்படுவது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கடந்த கால தேர்தல் பிரச்சாரங்களின் போது குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தி மக்கள் மீதான வரிச் சுமையை குறைப்பதில் தமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக தனியான குழு ஒன்று நியமிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளின் படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக சுமார் 60 பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் போதுமானது எனவும் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

மேலும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில் 326 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக வருடாந்தம் சுமார் 1100 மில்லியன் ரூபா செலவிடப்படும் நிலையில் மகிந்த ராஜபக்சவுக்காக அதில் 326 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக சுமார் 60 பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் போதுமானது என, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளின் படி, பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதன் மூலம் அவரின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஏக்கிய ராஜ்யே எப்பா’ அப்பிட ஓன சமஷ்டி ராஜ்யே’ என சில தமிழ் கட்சிகள் இணக்கத்துக்கு வந்துள்ளன!

‘ஏக்கிய ராஜ்யே எப்பா’ அப்பிட ஓன சமஷ்டி ராஜ்யே’ என சில தமிழ் கட்சிகள் இணக்கத்துக்கு வந்துள்ளன!

அநுரா தலைமையிலான அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது சமஷ்டிக் கோரிக்கையை முன்வைக்க ஒரு பகுதி தமிழ்க் கட்சிகள் தமக்குள் இணங்கிக் கொண்டனர்.

என்பிபியின் ‘’ஏக்கிய ராஜ்ய ஒற்றையாட்சி அரசியல் யாப்பை முழுமையாக நிராகரிக்கும் இவர்கள்’’ ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு சமஷ்டி ஆட்சி அடிப்படையிலான அரசியலமைப்பை கோருகின்றனர். அந்த வகையில் தமிழ் வெகுஜன அமைப்புக்களை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை 2016 இல் முன்னாள் எம்எபி பார்பெமிட் புகழ் சிசி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்ட முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டு கலந்துரையாடல்களை தொடங்கப் போவதாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். இந்த முன்னெடுப்புக்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியே செய்து வருகின்றது. சமீப வாரங்களில் கஜேந்திரகுமார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாதிரித் தலைவர் சிவஞானம் சிறிதரனுடனும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கடைசி நம்பிக்கை நட்சத்திரமும் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனையும் சந்தித்து தமிழ்மக்களுக்கு சமஷ்டியை கொண்டுவரும் ஆயத்தங்களில் ஈடுபடுகிறார்கள்.

என்பிபி ஆட்சியை ஆட்டிப்படைக்க சர்வதேச சக்திகள் தமிழ் அரசியல் கட்சிகளை மீண்டும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வருவதாகவும் சில அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். குறிப்பாக இந்திய, அமெரிக்க தூதரகங்கள் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு தமிழ் தரப்புக்களை காலத்திற்குக் காலம் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தமிழ் தரப்புக்களிடையே ஒற்றுமை வேண்டும் என்ற அழுத்தங்கள் சர்வதேசத்திடம் இருந்து வருவதால் இப்போது இவர்கள் பெயரளவில் இணைய முற்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் தேர்தலுக்கு முன் இணைந்து செயல்படுங்கள் என்று கேட்ட போது தங்கள் தங்கள் கட்சிகளுக்கு பத்து ஆசனங்கள் கிடைக்கும் என்று திரிந்தவர்கள் இப்போது மண் கவ்வியுள்ளனர். ‘மாட்டுக்கு ஊர் மாடு சொனால் கேட்காது டெல்லி மாடுகளும் வோஷிங்டன் மாடுகளும் சொன்னால் தான் கேட்கும் போல’ என்கிறார் அரசியல் விமர்சகர் த ஜெயபாலன்.

இச்சந்திப்புக்களின் போது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கோரும் வடக்கு – கிழக்கு இணைந்த சமஷ்டி முறைமைக்கான பொது வாக்கெடுப்பில் தமிழ் மக்களின் வாக்குகள் எவ்வளவு முக்கியம் எனும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

அரசு காணி விடுவிப்புகள், பாதை திறப்புகள் என்பனவற்றை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்காமலேயே தன்னிச்சையாக மேற்கொண்டு வருகின்றது தேசிய மக்கள் சக்தி. அரசியல் கைதிகள் விடுதலையும், பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கமும் அவ்வாறே நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தை வடக்கோடு இணைப்பது தொடர்பில் கிழக்கில் பாரிய அளவில் ஆதரவு கிடையாது. வன்னியில் உள்ள மலையகத் தமிழர்களோ, வடக்கில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கோ பெண்களுக்கோ யாழ் சைவ வேளாள ஆணதிக்க அரசியலில் இடமில்லை. இதற்குள் மட்டக்களப்பாரை கொண்டு வந்து அடிமையாக்குவதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா? என்ற கேள்வியும் உள்ளது. இது எல்லாவற்றுக்கும் காஸாவிலும் லெபனானிலும் இனப்படுகொலை புரியும் அமெரிக்கா பிளஸ் நாடுகளையும் இந்தியாவையும் மத்தியஸ்துக்கு அழைப்பது இந்த ஆண்டிகள் மடம் கட்டுகின்ற கதையாகத்தான் முடியும் எனவும் த ஜெயபாலன் குறிப்பிட்டார்

அநுர குமார திஸாநாயக்கவின் சத்தியப்பிரமாணத்திற்கு பயன்படுத்தப்படாத 200 மில்லியன் ரூபா பணம் மக்களின் கணக்கில் !

இலங்கையின் புதிய மிக எளிமையாக ஆடம்பரங்களின்றி பதவியேற்ற நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சத்தியப்பிரமாணத்திற்கு பயன்படுத்தப்படாத 200 மில்லியன் ரூபா பணம் மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அண்மையில் ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது சுமார் 200 மில்லியன் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

மேலும், தமது அரசாங்கத்தின் அமைச்சர்கள் பெற்றுக்கொண்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் இனி மக்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

இதேவேளை அனுர தலைமையிலான என்.பி.பி அரசாங்கம் அரச தலைவர்களின்  முழுமையான செலவுகளையும் கட்டுப்படுத்தி மக்கள் மேல் விழுகின்ற பொருளாதார சுமையை தடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் ஜனாதிபதிகள் கடந்த மூன்று வருடங்களில் 27 கோடி(270 மில்லியன்) ரூபாவிற்கும் அதிக தொகையை செலவிட்டுள்ளதாக மத்திய வங்கி பதிவுகள் தெரிவித்திருந்தமையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

அனுர அரசால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதா முஸ்லீம் ஒருவருக்கான அமைச்சு பதவி..?

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் அமைச்சரவை முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லாமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம் அளித்துள்ளார்.

எமது அரசாங்கம் இலங்கையர்களை உள்ளடக்கிய ஒரு அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மத ரீதியான அடையாளங்களை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

76 ஆண்டுகளில் அனைத்து சமூகங்களும் தங்களது மத, கலாசார வேறுபாடுகளை மறந்து ஒரே நாடாக வாக்களித்து பெரும்பான்மை ஆட்சியைத் தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

தேசிய மக்கள் அரசாங்கம் எந்தவொரு சமூகத்தையும் அவர்களின் மத அல்லது கலாச்சார நடைமுறைகளின் அடிப்படையில் ஒருபோதும் பாகுபாடு காட்டாது. அரசாங்கத்தின் கொள்கையில் அது இல்லையென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இன மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே எமது கட்சியில் உள்ளனர்.

இங்கு பாரபட்சம் காட்டுவதற்கு எதுவும் இல்லை. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே அமைச்சு பதவிகள் வழங்கப்படுவதாக அமைச்சர் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்

IMFஉடன் ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார தெரிவிப்பு !

சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அமைச்சர்கள் குழுவை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணையுடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தினார்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர், தீர்மானகரமான தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி மற்றும் அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தனர்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் வெற்றியானது தற்போதுள்ள ஆட்சியின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது என வலியுறுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்கள் ஆணைக்கு அமைய செயற்படுவது தமது ஆட்சியின் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார்.

 

மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்தார். தனது தலைமையின் கீழ், சிறுவர் வறுமை மற்றும் போசாக்கின்மை போன்ற அத்தியாவசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும் சமூக சேவைகளுக்கான ஒதுக்கீடுகள் திறம்பட பயன்படுத்தப்படுவதையும் உறுதிசெய்தார்.

 

அத்துடன் கடந்த காலங்களில் சமூக சேவை செலவினங்களுக்கான ஒதுக்கீடுகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டதுடன், வளங்களை வினைத்திறனான ஒதுக்கீடு மற்றும் பாவனையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர்.

 

நாட்டை ஆட்சி செய்வது மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவது குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. மக்கள் வழங்கிய ஆணையின் முக்கிய அம்சமான ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தானும் தனது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

 

அந்த செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில், சட்டமியற்றும் மற்றும் ஏனைய நிறுவனரீதியான கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு தமது அரசாங்கம் கடுமையான ஒழுங்குவிதிகளை அமுல்படுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,சர்வதேச நாணய நிதிய குழுவிடம் தெரிவித்தார்.

 

இந்த சந்திப்பு அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பில் ஒரு சாதகமான முன்னேற்றத்தைக் குறிப்பதோடு அதன் ஊடாக பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கான அடித்தளத்தை அமைக்கிறது.

 

இதில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நிதியமைச்சின் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டிருந்தனர்.

இந்நாட்டில் சாதாரண மக்களை கொலை செய்த அனைத்து குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவேன் – அனுர குமார திசாநாயக்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னும் சில தினங்களில் நல்ல செய்தி வெளியாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி தம்புள்ளையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்நாட்டில் சாதாரண மக்களை கொலை செய்த அனைத்து குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும் சாதாரண மக்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

அரசியல்வாதிகள் எப்பொழுதும் தமது உயிர் மாத்திரமே சிறப்பானது என்றும் சாதாரண மக்களின் உயிர்கள் மதிப்பற்றது என்றும் எவ்வாறெல்லாம் எண்ணுகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டிய ஜனாதிபதி, இக் கொலைகளுக்கு இந்த மனநிலையே முதன்மையான காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

தாஜுதீனின் கொலைக்கு காரணமானவர்கள் எவரும் இல்லை, லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட விதம் இன்னும் தெரியவில்லை, எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இந்தக் குற்றங்கள் அனைத்தையும் தான் ஆராய்ந்து வருவதாகவும் வலியுறுத்தியுள்ளதுடன் அக்குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வோம் அதனை நினைவில் கொள்ளுங்கள். யாரும் கவலைப்பட வேண்டாம். நாளை அல்லது நாளை மறுநாள் அதைப் பற்றி உங்களுக்கு ஓரிரு நல்ல செய்திகள் கிடைக்கும் – என்றார். (ச)